புதன், 4 ஜனவரி, 2012

2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.



மனித மனம் எப்போதும் இன்பத்தையே விரும்புகிறது. துக்கத்தை வெறுக்கிறது. இது இயற்கை. ஆனாலும் இன்பம் துன்பம் இரண்டமே கலந்துதான் வாழ்க்கை அமைகின்றது. இதில் துன்பத்தை விலக்கி இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது என்று எனது பதிவுலக வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யாரோ ஒருவன் சொன்னானாம். “என் உயிரே போவதாக இருந்தாலும் சரி, நான் இந்த சுகத்தை பூரணமாக அனுபவிக்கப்போகிறேன்.”

நான் அப்படியெல்லாம் உயிரை விடுவதாக இல்லை. ஆனாலும் உயிரை விடாமலேயே இன்பமாக இருக்க பல வழிகள் இருக்கும்போது எதற்காக வீணாக உயிரை விடுவானேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்கிற பரந்த மனப்பான்மையின் காரணமாக அந்த வழிகளை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.  

   1.   வம்பு பேசுதல்.

இரண்டு நண்பர்கள் பேசினால் அவர்கள் பேசுவது மூன்றாவது நண்பனைப்பற்றித்தான் என்று ஒரு பொன்மொழி உண்டு. காரணம் இந்த மாதிரி வம்பு பேசுதில் உள்ள இன்பம் வேறு எதைப் பற்றி பேசுவதிலும் இல்லை. அந்த மூன்றாவது நண்பன் உண்மையான நண்பனாக இருந்தால், மற்ற இருவரும் அவனைப்பற்றி பேசி இன்புற்றார்கள் என்று தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படவேண்டும்.

இந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எங்காவது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் அங்கு தவறாது ஆஜர் ஆகி விடவேண்டும். இல்லையென்றால் அன்றைய தாளிப்புக்கு நீங்கள்தான் கருவேப்பிலை.

   2.   அடுத்தவர் சண்டையை வேடிக்கை பார்த்தல்.

இதில் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெறும் இன்பம் மட்டுமே. அதிலும் நிஜ உலகத்தில் நடப்பவைகளை விட பதிவுலகத்தில் நடக்கும் சண்டைகளே அதிக சுவாரஸ்யமும் பரபரப்பும் உள்ளவை. நமக்கு எந்த விதமான ரிஸ்க்கும் கிடையாது. இதில் ஒரே வருத்தம் என்னவென்றால் தற்சமயம் பழைய மாதிரி சண்டைகள் அடிக்கடி நடப்பதில்லை. முற்போக்கு பதிவர்கள் இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

   3.   டெம்ப்ளேட்/எமோடிகான் பின்னூட்டங்கள் போடுதல்.

ஆஹா, இதில் இருக்கும் த்ரில் + இன்பம் வேறு எதிலும் கிடையாது. இந்த கமென்ட்டுகளைப் பார்க்கும் பதிவர்கள் உடனே கயிற்றை எடுத்துக்கொண்டு புளியமரத்தை தேடிக்கொண்டு ஓடவேண்டும்.

   4.   மொக்கைப் பதிவுகள் போடுதல்.

அந்தப் பதிவுகளைப் படிக்கும் வாசகர் அதன் பிறகு பதிவுலகையை திரும்பிப் பார்க்கக் கூடாது. எவ்வளவுக் கெவ்வளவு மொக்கை போடுகிறாரோ அந்த அளவு அவர் பிரபலமாவார். அதனால் வரக்கூடிய இன்பமே இன்பம். (அடுத்த பதிவர் சங்கமத்தில் அதிக மொக்கை போட்டவர்களுக்கு ஒரு விருது கொடுக்குமாறு அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் மொக்கைகள் அதிகரிக்கும்). அப்படி கொடுக்காவிட்டால் மொக்கைப் பதிவர்கள் சங்கமம் என்று தனியாக ஆரம்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

   5.   பதிவர்கள் சந்திப்பு.

இவை நடந்தால் எல்லோருக்கும் ஆனந்தமே. கலந்து கொண்டால் நல்ல விருந்து சாப்பிடலாம். கலந்து கொண்டாலும்  கொள்ளாவிட்டாலும் நாலைந்து பதிவுகளுக்கு மேட்டர் தேத்தி விடலாம். என்ன ஒரு இன்பமான நிகழ்வு. வம்பு பேசுவதற்கும் நல்ல, நல்ல ஆட்களின் அறிமுகம் கிடைக்கும். ஏன் ஈரோட்டிலும் நெல்லையிலும் மட்டும் இந்த சந்திப்பு நடக்கவேண்டும். மற்ற ஊர்க்காரர்களுக்கு மானம் ரோஷம் இல்லையா? மற்ற இடங்களிலும் நடந்தால் அப்புறம் பதிவர்களுக்கு எழுத விஷயத் தட்டுப்பாடே இருக்காது. இதுதான் டாப் இன்பமான சமாசாரம்.

   6.   ஓசியில் சினிமா பார்த்தல்.

பிரிவியூ ஷோவிற்கு அழைப்பிதழ் கிடைத்து பஜ்ஜி காப்பியுடன் சினிமா பார்க்கும் இன்பமே இன்பம். என்ன ஒரே பின்விளைவு என்றால் அதைப் பற்றி உயர்வாக ஒரு விமர்சனம் நம் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எழுதி பதிவில் போடவேண்டும்.

2013 ம் வருடத்திற்கான இன்பமாக இருப்பது பற்றிய வழிகள் அடுத்த வருடப் பிறப்பு அன்று பதிவிடப்படும்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நான் பதிவுலகில் சாதித்தது என்ன?


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



இது என்னுடைய 300 வது பதிவு.

மூன்று வருடத்தில் இதைப் பெரிய சாதனை என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. ஒரு வருடத்திலேயே இதைவிட அதிக பதிவுகள் போட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். தான் பதிவராக இருப்பதால் தனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள் என்று பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள். எனக்கும் அப்படி ஓரிரண்டு நண்பர்களும், பல அறிமுகங்களும் கிடைத்துள்ளன. பதிவுலகத்திலுள்ள சில பேருக்கு என் பதிவு பரிச்சயமாகி இருக்கிறது. இதைத் தவிர நான் பதிவுகள் எழுதி என்ன சாதித்தேன் என்று இந்தப் புதுவருடத்தன்று யோசித்தால், ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் பல பதிவர்கள், பதிவு போடுவதால் தனி மனித, சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். தங்களுக்கும் தனிப்பட்ட முறையில் பல உதவிகள் கிட்டியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இது அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.

இன்னும் ஒரு விஷயம். பதிவுலகில் எல்லோரும் ஆசைப்படுவது என்னவென்றால் தங்கள் பதிவுகளுக்கு நிறைய பின்னூட்டம் வரவேண்டும், நிறைய ஹிட்ஸ் வரவேண்டும். தமிழ்மணம் திரட்டியில் நல்ல ரேங்க் வரவேண்டும். இந்த ஆசைகளில் தவறு ஒன்றும் கிடையாது. நானும் இந்த ஆசையில் சிக்குண்டவன்தான். ஆனால் இந்தப் புது வருட தினத்தன்று  யோசித்தால் இந்த ஆசைக்காக நான் இழந்தது, இழந்துகொண்டிருப்பது மிகவும் அதிகம். இது தவிர்க்கப்பட வேண்டியது என்று உணர்கிறேன்.

பதிவுலகம் ஒரு மாயா உலகம். நிஜ உலகத்தில் பெயர் வாங்கினாலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது. மாயா லோகத்தில் பெயர் வாங்கி என்ன செய்யப் போகிறோம். நிஜ உலகில் எனக்குத் தெரிந்தவர்களில், நான் பதிவு எழுதுவதைத் தெரிந்தவர்களை, ஒரு கை விரல்களை மட்டும் விட்டு எண்ணி விடலாம். இப்படிப்பட்ட ஒரு மாயைக்காக நான் எவ்வளவு சமரசங்கள் செய்திருக்கிறேன் என்று பார்த்தால், நான் தேவைக்கதிகமாக விலை கொடுத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்த விலை கொடுப்பது அவசியமா என்றும் சிந்திக்கிறேன்.

புது வருடத்தில் உங்களுக்கு ஒரு கதை சொல்லலாம் என்று ஆசைப் படுகிறேன். பழைய, எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

வால் அறுந்த நரியின் கதையை எல்லோரும் கேட்டிருக்கிறோம். எங்கோ ஒரு இயந்திர பொறியில் சிக்கி ஒரு நரியின் வால் அறுந்து போய்விட்டது. இது ஒரு பெரிய அவமானம். ஆனால் நரிகள் இயற்கையாகவே புத்திசாலிகளல்லவா? அதனால் அந்த நரி யோசித்து ஒரு திட்டம் போட்டது. மற்ற நரிகள் வரும் வழியில் போய் நின்றுகொண்டது. நரிகள் வருவது தெரிந்தால் உடனே வானத்தைப் பார்த்து நின்று கொள்ளும். வானத்தில் எதையோ பார்த்து பரவசமடைவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கும்.

சக நரிகள் பக்கத்தில் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்டால் வாலறுந்த நரி, ஏதோ மயக்கத்திலிருந்து விழித்த மாதிரி பாவனை செய்து “என்ன, ஏதாவது கேட்டீர்களா” என்று கேட்கும். அப்போது மற்ற நரிகள் “ஆமாம், ஏதோ ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாயே, அதுதான் என்னவென்று கேட்டோம்” என்று சொல்லின. அதற்கு வாலறுந்த நரி சொல்லியது: “எனக்கு வால் அறுந்த பிறகு ஆகாயத்தில் கடவுள் தெரிகிறார்” என்றது. இப்படியே பல நாடகள் ஆகின. மற்ற நரிகள் இந்த வாலறுந்த நரி சொல்வது உண்மையாக இருக்கலாமோ என்று நினைக்கத் தொடங்கின. இரண்டொரு நரிகள் வாலை அறுத்துக்கொண்டன. பிறகு அவைகள் வானைப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை.

அப்போதுதான் அவைகளுக்கு மண்டையில் உறைத்தது. ஞானம் பிறந்தது. ஆஹா, இந்த வாலறுந்த நரி நம்மை ஏமாற்றிவிட்டது பார் என்று கோபமடைந்தன. தாம் ஏமாந்துவிட்டோம் என்று தெரிந்தது. ஆனால் இதை வெளியில் சொன்னால் மானம் போகும். ஆகவே நாங்களும் கடவுளைக் கண்டோம் என்று சொல்லுவோம் என்று நினைத்து, புதிதாக வாலறுத்துக்கொண்ட நரிகளும் கடவுளைக் கண்டோம் என்று சொல்ல ஆரம்பித்தன. இவ்வாறாக அந்தக் காட்டிலுள்ள அனைத்து நரிகளும் வாலறுத்துக் கொண்டன.

பதிவுலகத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அது உங்கள் பொறுப்பு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புது வருடப் பிறப்பன்று ஏதாவது புது வருடத் தீர்மானங்கள் போடாவிட்டால் நன்றாக இருக்காது. அதற்காக இரண்டு தீர்மானங்கள்.

    1.   பதிவர்கள் தங்கள் பதிவுகளைப் பற்றி ஈ.மெயில் அனுப்பினால் அந்தப் பதிவுகள் புறக்கணிக்கப்படும்.

    2.   பின்னூட்டங்களில் தங்கள் பதிவுகளின் சுட்டிகள் இருந்தால் அவை பிரசுரிக்கப்பட மாட்டாது.

                 வணக்கம், நன்றி.


செவ்வாய், 27 டிசம்பர், 2011

சாவக்கட்டு என்னும் சூதாட்டம்



சாவக்கட்டு என்று கொங்கு நாட்டில் அழைக்கப்படும் சேவல் சண்டை தென் மாநிலங்களில் அதிக அளவில் நடக்கிறது. போலீஸ் கெடுபிடி இருந்தாலும் எப்படியோ அவர்களைச் சரிக்கட்டி இந்த திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நான் நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தபடியால் என் எண்ணங்கள் கிராமத்தில் வளர்ந்தவர்களிடமிருந்து வேறாக இருப்பதில் ஆச்சரியமில்லை. நான் நினைத்துக் கொண்டிருந்தது, “சாவல்கட்டு” என்பது கிராமங்களில் வேலை வெட்டியில்லாமல் திரிந்து கொண்டிருப்பவர்களின் பொழுதுபோக்கு என்பதுதான். ஆனால் சமீபத்தில் ஈமு பண்ணையைப் பார்க்கப் போனபோது அங்கு நிறைய சேவல்கள் கட்டி வைக்கப் பட்டிருந்தன. அவைகளைப் பற்றி விசாரித்ததில் பல புது விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.  

இந்த சாவல்கட்டு ஏறக்குறைய குதிரைப் பந்தய விளையாட்டு போன்றது. பந்தயக்குதிரைகள் போலவே சேவல்களும்  பல்லாயிரக்கணக்கில் விலை மதிப்புள்ளவை. சேவல் வளர்க்கிறவர்களுக்கு இது ஒரு முழு நேரத் தொழில். ஜல்லிக்கட்டு போல் இது சாதாரண கிராம மக்களுக்கு ஒரு வீர விளையாட்டு. ஆனால் குதிரைப் பந்தயத்தைப் போல இதில் லட்சக்கணக்கான ரூபாய்கள் பந்தயமாக புரள்கிறது. குதிரைப் பந்தயம் மேல்தட்டு மக்களின் சூதாட்டம். சாவக்கட்டு சாதாரண மக்களின் சூதாட்டம்.

இந்த பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் இரண்டு வகை. முதல் வகை --- சொந்தமாகப் பணம் போட்டு சேவல்கள் வாங்கி வளர்த்து பந்தயத்திற்கு கொண்டுபோகும் முதலாளிகள். சண்டைக்கு லாயக்கான சேவல்களைக் கண்டால் என்ன விலையானாலும் இவர்கள் அதை வாங்கி விடுகிறார்கள். இதோ இந்தச் சேவல் 20000 ரூபாயாம்.


இவைகளை வளர்ப்பதும் சண்டைக்குத் தயார் செய்வதும் ஒரு தனிக்கலை. ஆகாரத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். எங்காவது சாவல்கட்டு நடக்கிறதென்றால் இவர்களுக்கு தகவல் வந்துவிடும். மிகவும் தூரத்தில் உள்ள ஊர்களுக்குப் போகமாட்டார்கள். காரணம் அங்குள்ள மக்களின் மனோபாவம் தெரியாது. வீண் கஷ்டங்கள் ஏற்படும். சாவல்கட்டுக்கு புறப்படுவது என்பது ராஜாக்கள் போருக்குப் புறப்படுவது போல்தான். ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்யவேண்டும். குறைந்தது பத்து சகாக்கள் வேண்டும். சண்டைப் பயிற்சி கொடுத்தவர் கண்டிப்பாக வேண்டும்.

இப்படி போனால்தான் ஏதாவது தகராறு என்ற வந்தால் சமாளிக்க முடியும். இதற்கெல்லாம் செலவை சேவல் சொந்தக்காரர்தான் செய்யவேண்டும். சேவல் சண்டையில் ஜெயித்தால் வருமானம் வரும். இல்லையென்றால் கைக்காசைத்தான் செலவழிக்கவேண்டி வரும். அது தவிர பல ஆயிரம் கொடுத்து வாங்கின சேவலும் கை விட்டுப் போய்விடும். ஆக மொத்தம் சாவக்கட்டு என்பது சூதாட்டம்தான்.

சேவல் சொந்தக்காரன் கட்டாயம் பந்தயம் வைத்துத்தான் ஆகவேண்டும். அது தவிர பார்வையாளர்களும் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்வார்கள். இப்படி சாவக்கட்டு நடக்கும் இடங்களில் லட்சக்கணக்கில் பணம் புரளும். சூதாட்டம் என்பதினால் அது குறித்து வரும் சண்டை சச்சரவுகளும் வரத்தான் செய்யும். அதனால்தான் இதை அரசு அனுமதிப்பதில்லை. இருந்தாலும் இது ஒரு வீர விளையாட்டு என்று கூறி நீதி மன்றங்கள் மூலமாக அனுமதி வாங்கி சாவக்கட்டுகள் நடந்து வருகின்றன.

ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களில் சாவக்கட்டு மிகவும் பிரசித்தியுடன் நடக்கிறது. அமெரிக்காவிலும் கூட சாவக்கட்டு நடக்கிறதென்று கூகுள் தேடலில் தெரிந்தது. வரும் பொங்கல் சமயத்தில் பல இடங்களில் சாவக்கட்டு நடக்கலாம்.




ஞாயிறு, 25 டிசம்பர், 2011

Happy Chritsmas



எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லால் வேறோன்றறியேன் பராபரமே.


வெள்ளி, 23 டிசம்பர், 2011

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் - ஈமு வளர்ப்பு


எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்

இந்தப் பழமொழி பிடிக்கலைன்னா இதைப் பாருங்க.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

இதுவும் வேண்டாமா? அப்ப இங்கிலீசுக்குப் போலாமா?

Make hay while sun shines.

இத்தனை பீடிகை எதுக்குன்னா, எல்லாம் நம்ம ஈமு கோழிக்காகத்தான்.

இன்றைய நிலவரப்படி ஈமு கோழிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்று வியாபாரக் கம்பெனிகள் சொல்லும் தகவல்களை கீழே கொடுத்திருக்கிறேன். முக்கியமான பாய்ன்ட் என்னவென்றால் அவர்கள் சொல்வது அனைத்தும் இன்றைய தேதியில் 100 சதம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை. அப்படியானால் அதில் என்ன தவறு கண்டேன் என்று கேட்கிறீர்களா? அதுதான் பெரிய சிதம்பர ரகசியம். தொடர்ந்து படியுங்கள்.

  1.   ஈமு கோழிகள் வளர்க்க சுலபமானவை.
  2.   அவை மூன்று வருடத்தில் முட்டை இட ஆரம்பிக்கும்.
  3.   முட்டைகள் சுலபமாக, ஒரு முட்டை ரூ.1250 வீதம் விற்பனையாகின்றன. உங்கள் பண்ணைக்கே வந்து கொள்முதல் செய்யப்படும்.
  4.   ஈமு கோழிகளின் இறைச்சி கிலோ 400 ரூபாய்க்கு விலைக்குப் போகும்.
  5.   அவைகளின் தோலிலிருந்து விலை உயர்ந்த கைப்பைகள், அலங்காரப் பொருள்கள் செய்யலாம். அதனால் தோலுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
  6.   அவைகளின் இறகுகளிலிருந்து பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
  7.   அவைகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது.
  8.   இப்படி ஈமு கோழியின் ஒவ்வொரு பாகமும் பல உபயோகங்களுக்கு மூலப் பொருளாகப் பயன்படுவதால் அவைகளிலிருந்து நல்ல பலன் உண்டு.
  9.   உங்கள் முதலீட்டுக்கு வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்க முடியாத அளவு நல்ல லாபம் எடுக்கலாம்.
 10. எப்போது வேண்டுமானாலும் பண்ணையைக் கலைத்துவிட்டு நீங்கள் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விளம்பரங்களைப் பார்க்கும் எந்த விவசாயிக்கும் ஆசை வருவது இயற்கையே. அவர்கள் உடனே இந்தக் கம்பெனிகளைப் படையெடுக்கிறார்கள். இந்தக் கம்பெனிக்காரர்கள் கில்லாடிகள். முதலில் சொன்ன பழமொழிகள் எல்லாம் இவர்களை மனதில் வைத்துத்தான் சொல்லப்பட்டவை. வசீகரமான, நல்ல விற்பனைத் திறமை கொண்டவர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் திட்டம் விவசாயிகளின் காதில் தேன் பாய்வது போல் இருக்கும். உடனே கடன் வாங்கியாவது அவர்கள் கேட்கும் டெபாசிட் தொகையைக் கட்டி விடுவார்கள்.

அவர்களின் திட்டம் என்னவென்று முன்பே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் இன்னொரு முறை சொல்கிறேன்.

  1.   விவசாயிகள் ஒன்றரை லட்சம் ரூபாய் இந்தக் கம்பெனிகளிடம் டெபாசிட்டாகக் கொடுக்கவேண்டும்.
  2.   கம்பெனி, விவசாயிகளுக்கு மூன்று ஜோடி, மூன்று மாதமான ஈமுக் குஞ்சுகள் கொடுக்கும்.
  3.   அந்தக் குஞ்சுகளுக்கு வேண்டிய கம்பி வேலி கம்பெனி சிலவில் அமைத்துக் கொடுக்கப்படும்.
  4.   குஞ்சுகளுக்குத் தேவையான தீனி அவ்வப்போது தேவைக்கேற்ப கொடுக்கப்படும்.
  5.   இந்தக் குஞ்சுகளைப் பராமரிப்பதற்காக அந்த விவசாயிக்கு மாதம் ஆறு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். சில கம்பெனிகள் எட்டாயிரம் வரை கொடுப்பதாகச் சொல்லுகின்றன.
  6.   டாக்டர், இன்சூரன்ஸ் ஆகியவைகளைக் கம்பெனி கவனித்துக்கொள்ளும்.

இதில் கோழிகள் முட்டை வைக்க ஆரம்பித்த பின்னர் என்ன கண்டிஷன் என்பதைப் பற்றிய விவரங்கள் ஒன்றும் சொல்லப் படவில்லை. அவர்கள் போடும் பத்திரத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்.

பிறகு நடப்பவைகளைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை. இதைப் பற்றி ஒரு சர்வே எடுக்க வேண்டும். பிறகு அதைப்பற்றி எழுதுகிறேன். இதற்கு முன் இதைப்போல் பல கம்பெனிகள் தேக்கு மரம் வளர்க்கிறேன், அரிசி தருகிறேன், சர்க்கரை தருகிறேன் என்றெல்லாம் சொல்லி மக்களை மொட்டை போட்ட வரலாறு மறந்திருக்காது என்று நம்புகிறேன்.

ஈமு வளர்ப்பில் இருக்கும் இன்னொரு சிதம்பர ரகசியம் என்னவென்றால், இந்த மார்க்கெட் நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதுதான். இப்பொது எல்லோரும் ஈமு பண்ணை வைப்பதில் மும்முரமாக இருப்பதால் முட்டைகளும் கோழிகளும் இந்த விலைக்கு விற்கின்றன. எதிர்காலத்தில் பண்ணை வைக்க முடிபவர்கள் எல்லாம் பண்ணை வைத்தான பிறகு, இதே விலை நிலவரம் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. எல்லாப் பண்ணைகளிலிருந்தும் வரும் முட்டைகளை யார் வாங்குவார்கள்? கோழியை கறிக்காக விற்க முடியுமா? முட்டைகளின் விலையும் கறியின் விலையும் எவ்வளவு இருக்கும்? அவைகளுக்கு எவ்வளவு தேவை இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் கண்டு பிடிப்பது கடினம். காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஆனாலும் தற்போதைய மார்க்கெட் நிலை இன்னும் பத்து வருட காலத்திற்கு நீடிக்கலாம். அது வரை கம்பெனிகள் விவசாயிகளை ஏமாற்றலாம். புத்திசாலி விவசாயிகள் சொந்தமாக பேங்கில் கடன் வாங்கியோ அல்லது சொந்த சேமிப்பில் இருந்தோ ஈமு பண்ணை அமைத்தால் ஓரளவு பணம் ஈட்டலாம்.