சனி, 14 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கங்கள்.


நிஜமா நாளைக்குத்தான் பொங்கல். இன்றைக்கு போகி. இது தமிழர் பண்டிகையா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இன்று சங்கராந்திப் பொங்கல் என்று ஒன்று வைப்பார்கள். மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால் இன்று கிராமங்களில் ஊருக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்துவார்கள். இது என்னவோ சிறுவர்களின் விளையாட்டு என்று பலர் கருதினாலும் இதில் உள்ள தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.

சொக்கப்பனையில் வேண்டாத பொருட்களை எல்லாம் போட்டு எரிப்பார்கள். இது ஒருவகையில் வீட்டை சுத்தம் செய்யும் காரியம். இதனுடன் கூடவே மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும்.

என்னுடைய ஆசைக் கனவு இது.


வெள்ளி, 13 ஜனவரி, 2012

பாதி கிணறு தாண்டினால் போதுமா?



சிலரிடம் ஏதாவது ஒரு பொறுப்பான வேலையை ஒப்படைத்துவிட்டு சிலநாள் கழித்து அதைப் பற்றிக் கேட்டால்முக்கால்வாசி முடிஞ்சிட்டுதுங்கஎன்ற பதில் வரும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர் அந்த வேலையைப் பற்றி இதுவரையிலும் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்.

அந்த வேலை நடக்கவேண்டுமென்றால் அதை நீங்களே செய்து முடிப்பது உத்தமம். ஒரு வேலை செய்ய ஆரம்பித்தால் அதை முழுவதும் செய்து முடிப்பவனே செயல் வீரன். முக்கால்வாசி முடிந்தது, முக்காலே மூணு வீசம் முடிந்தது என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது.

கிணற்றை தாண்டுவதென்றால் முழுவதும் தாண்டினால்தான் கிணறு தாண்டியதாக அர்த்தம். 99 % தாண்டிவிட்டேன் என்றாலும் கூட அதனால் பலன் இல்லை. கிணற்றுக்குள்தான் விழவேண்டிவரும். ஆகவே எந்த வேலை செய்தாலும் அதை முழுமையாக செய்து முடித்தால்தான் விரும்பிய பலன் கிடைக்கும்


புதன், 11 ஜனவரி, 2012

குட்டையர்களே அழகானவர்கள்


மனிதர்களில் எப்படியோ, மரங்களில் குட்டை மரங்கள் எப்போதும் கவனத்தை ஈர்க்கும். இந்த மாதம் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக் கழக தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மலர்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த குட்டை மரங்களைப் பாருங்கள்.








































இந்த மாதிரி மரங்களை சித்திரவதை செய்யலாமா? அது 
கொடுமையல்லவா? என்று சிலர் சிந்திக்கக் கூடும்.


அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது.


1. பச்சிளம் பாலகர்களை படிப்பு என்கிற போர்வையில் சித்திரவதை 
நடக்கிறதல்லவா?


2. வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர்களை 
தனிமைப் படுத்துவது கொடுமையல்லவா?


3. ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு வந்த பிறகு
வரதட்சிணை, சீர் வரிசைகளுக்காக கொடுமைப் படுத்தவில்லையா?


4. நம் உணவிற்காக எத்தனை உயிர்களைக் கதறக் கதறக் 
கொல்லுகிறோம். அது சித்திரவதையல்லவா?


செடி கொடிகளுக்கு ஒரு உணர்வு மட்டுமே இருக்கிறது. அதனால்தான் 
அவைகளை நாம் நம் உணவுக்காக பயிர் செய்து பின்பு அவைகளைக் 
கொன்று உண்ணுகிறோம்.


இது வெறும் வீண் விவாதத்திற்காக சொல்வது என்று நீங்கள்
கருதினாலும் அதை நான் தவறென்று கொள்ளமாட்டேன். உங்கள் 
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  





செவ்வாய், 10 ஜனவரி, 2012

அதிசயம் ஆனால் உண்மை

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரூ. 5 1/2 கோடி பரிசு விழுந்ததாகக் கூறி நூதன மோசடி. என்ஜினீயரிங்க் மாணவர் ரூ.5 லட்சம் பறி கொடுத்தார். தினத்தந்தி செய்தி 10-1-2012.

இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு திட்டம். அதன் விளம்பரத்தை தொடர்ந்து பார்க்கவும்.

அதிசயம் ஆனால் உண்மை.

தமிழ் நாட்டின் செல்போன் உபயோகிப்பாளர்களே. அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை தட்டுகிறது. விட்டு விடாதீர்கள்.

ஒரு தென் ஆப்பிரிக்க வைர சுரங்க அதிபர் தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை தமிழ்நாட்டு செல்போன் உபயோகிப்பாளர்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

உங்கள் செல்பொன் நம்பரில் இரண்டு தடவை பூஜ்யம் இருக்கிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு 10 லட்சம் பரிசு காத்திருக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் மற்றும் உங்கள் ரேசன் கார்டு காப்பியுடன் வருகிற 11-1-11 ந் தேதி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வெயிட்டிங்க் ஹாலில் காத்திருக்கவும். உங்களை அடையாளம் காண்பதற்காக கருப்புச் சட்டையும் வெள்ளை பேன்ட்டும் போட்டுக்கொண்டு வரவும்.

உங்கள் பரிசுத்தொகை அங்கேயே ரொக்கமாக கொடுக்கப்படும். அதை கொண்டு போகத் தேவையான அளவு பைகளை நீங்களே கொண்டு வரவும். கம்பெனியின் நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு 10000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

முந்துங்கள். அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத் தட்டும். தவறவிடாதீர்கள்.

இந்தக் கம்பெனியில் கூட்டு சேர விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.



திங்கள், 9 ஜனவரி, 2012

நிறைவேற முடியாத இரண்டு கனவுகள்.



சிறு வயதிலிருந்தே புது இடங்களுக்கு டூர் போக எனக்கு மிகுந்த ஆசை இருந்து வந்திருக்கிறது. அப்போது வசதி இல்லை. பின்பு படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த பின், பல இடங்களைப் பார்த்தும் ஆகிவிட்டது. இருந்தாலும் ஊர் சுற்றும் ஆசை இன்னும் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன் மனைவியுடன் மலேசியா, சிங்கப்பூர் போய் வந்து ஒரு நாலைந்து பதிவுகள் தேத்தினேன்.

அப்போது சில சங்கடங்களை அனுபவித்தேன். அந்த அனுபவத்தினால்தான் இந்த இரண்டு கனவுகளும் (நிறைவேற வாய்ப்பு 100 % இல்லாத, இரண்டு ஆசைகள்) தோன்றின.

ஆசை ஒன்று
இரண்டு செட் காவி டிரெஸ். ஒன்று போட்டுக்கொள்ள. இரண்டாவது மாற்றிக்கொள்ள. தலையை மொட்டை அடித்து, அதற்கு ஒரு காவித்துணியை பித்துக்குளி முருகதாஸ் ஸ்டைலில் கட்டிக் கொள்ளவேண்டியது. தோளில் ஒரு ஜோல்னாப்பை. அதற்குள் மாற்று டிரெஸ். ஒரு போர்வை. வேறு பணம் காசு, ஒன்றும் எடுத்துக்கொள்ளக் கூடாது. பயணங்கள் முழுவதும் ஓசி. சாப்பாடும் ஓசி. திண்ணை கண்ட இடத்தில் தூக்கம். தண்ணி கண்ட இடத்தில் நித்திய கடமைகள்.
இப்படி ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் சுற்றி வரவேண்டியது. இந்த ஆசை எந்த ஜன்மத்திலாவது நிறைவேறும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது ஆசை
இதிலும் முதல் ஆசை போலவே கையில் காசு, பணம் ஒன்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு வித்தியாசம். ஒரு உதவியாளர் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்ளுவார். டூர் ஏற்பாடுகள் அனைத்தும் பக்காவாக முதலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். வீட்டு வாசலில் டாக்சி வந்து நின்றவுடன் ஐயா ஏறிக்கொள்வார். ஐயா ஒரு சாமானையும் கையில் தொடமாட்டார். எல்லாம் உதவியாளர் பார்த்துக்கொள்வார். ரயிலோ, பிளேனோ, உதவியாளர் பின்தொடர பயணம் நடக்கும்.

சேரவேண்டிய இடத்தில் வாகனவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஓட்டலுக்குப் போய் தினசரி கடமைகளை முடித்துவிட்டு, அன்று போடவேண்டிய டிரஸ்களை உதவியாளர் எடுத்துக் கொடுக்க, வெளிவேலைகள் தொடங்கும். இப்படியாக பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடித்து விட்டு, அடுத்த ஊர் போகவேண்டியது.
இந்த மாதிரி டூர் போக அம்பானி அளவு சொத்து இருந்தால் போதும் என்று கருதுகிறேன். அடுத்த ஜன்மத்திலாவது அந்த பாக்கியத்தை அருளுமாறு பரம்பொருளை வேண்டிக்கொள்கிறேன்



சனி, 7 ஜனவரி, 2012

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?

அவைநாயகன் எனும் நா.சபாபதி, போக்குவரத்துத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை செய்து வருகிறார். அவர் தன்னுடைய பதிவில் சக பதிவர்களுக்காக ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். இப்போது நடக்கும் சாலைப் பாதுகாப்பு வாரம் முடிவடையும் நாளான 7-1-2012 அன்று, அனைத்துப் பதிவர்களும் சாலைப் பாlதுகாப்பு பற்றி ஒரு பதிவு இட்டால் சாலை விபத்துகள் குறையலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதை திரு. தருமி அவர்களும் தன்னுடைய பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார். அவைநாயகன் அவர்களின் ஆதங்கத்தைப் பாருங்கள்.

"என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?
அவைநாயகன் எனும் நா.சபாபதி"  


சாலை விபத்துகளைப் பற்றி 13, ஜூன், 2011 ல் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தப் பதிவு இன்றும் பொருத்தமாகவே இருப்பதால் அதை இன்று மீள்பதிவு செய்கிறேன்.



சமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

   1.   அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது. சீக்கிரம் போகவேண்டுமென்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.

   2.   உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.

ஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்?

   3.   தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணருவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே ?
  
அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.

   4.   தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருப்பார். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.

திட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர், சனிக்கிழமை பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார்.

நிகழ்வதென்ன? விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.

   5.   வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.

இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தும்.

   6.   அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.

   7.   செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.


எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸ்ஸை ஓட்டுகிறார்கள். ஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது? 

   8.   ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ, பெரும்பாலான சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

   9.   சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில், நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.

சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.