செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அவன், அவள், அது?


இவைகள் பிரதி பெயர்ச்சொற்கள் என்று சொல்லப்படும் Pronouns எனப்படுபவை. தமிழில் பெயர்ச்சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று இரண்டு வகைப்படும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால் என்று இரண்டு வகை உண்டு. அஃறிணையில் ஒரே திணைதான்.
ஆனால் சம்ஸ்கிருதத்திலும், ஜெர்மன் மொழி மற்றும் வேறு சில மொழிகளில் ஆண்பால், பெண்பால், உயிரில்லாதவை என்பவை சொற்களைப் பொருத்தே அமைகின்றன. பொருளைப்பொருத்து அமையவில்லை. உதாரணத்திற்கு கமலம் என்பது உயிரற்ற திணையில் அடங்கும். ராமா என்பது பெண்பாலாகும்.
அவன் என்பது வடமொழியில் =  ச:
அவள் என்பது வடமொழியில் =  சா
அது என்பது வடமொழியில்   = தத்
இந்த வேறுபாடுகள்தான் வடமொழியை மற்ற மொழிக்காரர்கள் கற்பதற்கு கஷ்டமாக இருப்பதற்கு காரணம்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ரோடு வெறி Road Rage


சாலைகளில் நடக்கும் பெரும்பான்மையான விபத்துக்கள், இந்த ரோடு வெறியினால்தான் நடக்கின்றன. நானும் ஒரு வாகனம் வைத்திருப்பதால் இந்த ரோடு வெறியை உணர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி நன்கு சிந்தித்து, தெளிவடைந்து இப்போது இந்த ரோடு வெறி என்னைப் பீடிக்காத மாதிரி மாற்றிக்கொண்டு விட்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சொல்லுக்கு இணங்க யாவரும் பயன்பெற என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.

மனிதன் ஒரு காலத்தில் மிருகமாக இருந்து காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று நாம் பார்க்கும் நிலையில் இருக்கிறான். ஆனாலும் அவ்வப்போது, அவனுடைய மரபணுக்களில் மிச்சமிருக்கும் மிருக குணங்களின் எச்சம் தலை தூக்கி விடுகிறது. அப்போது அவன் தன்னை இழந்து விடுகிறான். அந்த நிலையில் அவன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த இரு அவலங்களே இதற்கு சாட்சி
ஒன்று: சென்னையில் ஒரு மாணவன் தன் ஆசிரியையை கத்தியால் குத்தியது. அவன் அந்த ஆசிரியை இறந்து விடுவாரென்றோ அல்லது அப்படி நடந்தால் தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதையோ சிந்திக்கவில்லை.

இரண்டு: பஸ் டிரைவருக்கும் லாரி டிரைவருக்கும் நடந்த வாய்ச் சண்டையில் பஸ் டிரைவர்எங்கே என் மீது லாரியை ஏத்தி விடுவாயாஎன்று சவால் விட, லாரி டிரைவர் அவர் மீது லாரியை ஏத்தி விட்டான்.

சாதாரண சமயங்களில் நல்ல, சமுதாயப் பொறுப்புள்ள மனிதர்களே, தாங்கள் உணர்ச்சி வசப்படும்போது தங்களை இழந்து விடுகிறார்கள். தினந்தோறும் செய்தித் தாள்களில் வரும் கொலைச் செய்திகள் இந்த நிலையை நிரூபணம் செய்கின்றன.

நாம் இப்போது நமது தலைப்புக்கு வருவோம். ரோடு வெறி ஏன் உண்டாகிறது? சாதாரண சமயங்களிலேயே உணர்ச்சி வசப்படும் மனிதனுக்கு, தன்னிடம் அதிக பலம்/சக்தி இருக்கிறதென்று உணரும்போது இந்த மாதிரி உணர்ச்சி வசப்படும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. ஒவ்வொரு டிரைவரும் வாகனத்தில் ஏறி உட்கார்ந்தவுடன் அந்த வாகனத்தின் சக்தியெல்லாம் அவனுள் பாய்ந்துவிட்டதாக உணருகிறான்


அவன் வாகனத்தில் ஏறாதபோது இருக்கும் மனநிலைக்கும் வாகனத்தில் ஏறி ஸ்டீயரிங்க் வீலுக்கு முன் அமர்ந்தவுடன் இருக்கும் மனநிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. இந்த மாற்றம் ஏற்படாமல் மனதைக்  கட்டுப்படுத்தி வாகனம் ஓட்டும் டிரைவர்கள்தான் நல்ல டிரைவர்கள். அவர்கள்தான் ரோடுவெறியை கட்டுப்படுத்தியவர்கள்.

இந்த வெறியை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பாதையில் குறுக்கிடுபவர்களை எல்லாம் எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம் வந்துவிடுகிறது. தன்னுடைய வாகனத்திற்கு வழி கொடுக்காதவர்கள், தன் வாகனத்தை முந்திச் செல்ல ஹார்ன் அடிப்பவர்கள், தன் வாகனத்தை முந்திச்செல்பவர்கள், தன் வாகனத்தைக் கண்டு ஓரமாக ஒதுங்காதவர்கள் இப்படி எல்லோரையும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தண்டனை கொடுக்க விரும்புகிறார்கள்.

அவனுள் இருக்கும் அகம்பாவம் அவன் ஓட்டும் வாகனத்தின் சக்தியால் அதிகரித்து, விபத்துகளையும் கொலைகளையும் ஏற்படுத்துகிறது. இது தவிர அவன் வெகு தூரம் வாகனத்தை ஓட்டி வரும் நிலையில் ஏற்படும் உடல் சோர்வு இந்த சூழ்நிலையை இன்னும் மோசமாக்குகிறது. ஓய்வில்லாமல் உழைக்கும்போதும் இதே நிலைதான்.

சரியாக திட்டமிடல் மூலமாக இத்தகைய சூழ்நிலைகள் உருவாவதைத் தடுப்பவனே நல்ல டிரைவர். வாகனம் ஓட்டும் அனைவரும் உடல் சொர்ந்து விடும்போது ஏற்படும் மனமாற்றங்களைக் கவனித்து அவைகளைத் தவிர்க்கவேண்டும்.

வாகன ஒட்டும் லைசன்ஸ் கொடுக்கும் அதிகாரிகளும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல் அதிகாரிகளும் இந்த மனோதத்துவத்தை நன்கு ஆராய்ந்து, இந்த ரோடு வெறியை குறைக்கும் வழிகளைக் கண்டு நடைமுறைப் படுத்தினால்தான் விபத்துகள் குறையும்.

புதன், 15 பிப்ரவரி, 2012

நான் ஆங்கிலேயன் ஆனேன்!



நான் தமிழ் மீடியத்தில் படித்ததால் என் ஆங்கிலப் புலமையின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் எல்லாப் பாடங்களையும் (தமிழ் தவிர) ஆங்கிலத்தில் போதித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் அப்பாவுக்கு தமிழ்தான் படிக்கத்தெரியும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் என் சொந்தக்காரர்களிலேயே யாரும் இல்லை.

என்ன செய்வதென்று புரியாமல் என் ஆங்கிலப் பேராசிரியர் திரு.நரசிங்கராவ் அவர்களைப் போய்ப் பார்த்து என் பரிதாப நிலையைச் சொன்னேன். அவரும் இரக்கப்பட்டு சில ஆலோசனைகள் சொன்னார். முதலில் சில ஆங்கில கதைப்புத்தகங்கள் படிக்குமாறு கூறினார். அவர் முதன்முதலில் பரிந்துரைத்த புத்தகம் John Buniyan எழுதிய Pilgrims Progress என்ற புத்தகம். அந்த வார இறுதியில் அந்தப் புத்தகத்தை கல்லூரி லைப்ரரியிலிருந்து எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்தேன்.


புத்தகம் சரியான கனம். சுமார் 800 பக்கங்களுக்கு மேல் இருக்கும். இதை எப்படியும் படித்து விடுவது என்று அடுத்த நாள் சனிக்கிழமை அப்போதைய கோஷன் பார்க்குக்கு (இந்நாளில் அதை பாரதி பார்க் என்று பெயர் மாற்றிவிட்டார்கள்) சென்று அங்குள்ள பெஞ்சில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். காலை பத்து மணிக்கு ஆரம்பித்தவன் மாலை 6 மணிக்கு படித்து முடித்து விட்டேன்.

அத் ஒரு கிறிஸ்தவ வேதமான பைபிளைத் தழுவிய ஒரு கதை. ஒரு கிறிஸ்தவன் இறந்த பிறகு எவ்வாறு அவனுடைய பாவங்களைச் சுமந்து கொண்டு பரலோகம் செல்கிறான் என்பதைப் பற்றிய கதை. ஆங்கிலத்திலே பாண்டித்யம் பெற்றுவிடுவது என்ற வைராக்யத்தில் ஒரே மூச்சில் படித்தேன். இதை ஆங்கில ஆசிரியரிடம் சொல்லியதும் அவர் என்னைப் பாராட்டிவிட்டு இனி பிரெஞ்ச் ஆசிரியர் guy de Maupassant என்பவர் எழுதிய சிறுகதைகளின் ஆங்கில பொழி பெயர்ப்பு பல தொகுப்புகள் லைப்ரரியில் இருக்கின்றன, அவற்றைப் படி என்றார். இந்த ஆசிரியர் எழுதியஇரவல் நெக்லஸ்என்ற சிறுகதை உலகப்பிரசித்தி பெற்றது. அந்த தொகுப்புகள் ஒரு பத்துப் பனிரெண்டு இருந்தன. அவற்றை முழுவதும் படித்தேன்.

பிறகு சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் ட்வைன், கோனன் டாயில், ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், இப்படி கிடைத்தவைகளை எல்லாம் படித்து ஓரளவு ஆங்கிலத்தில் சுயமாக புரியும் அளவிற்கு தேர்ச்சி பெற்றேன்.

இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதுவது கடினகாகவே இருந்தது. எந்த மொழியிலும் வினைச் சொற்களின் சரியான பிரயோகம் தெரிந்து கொண்டால் அந்த மொழியில் பிழையில்லாமல் எழுதுவது மிகவும் சுலபம். ஹைஸ்கூலில் என் வாத்தியார் இந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்கவில்லை. அப்போது ஒரு ஆங்கில இலக்கணப் புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். அதை இப்போது எடுத்து தூசி தட்டி வினைச்சொற்கள் பகுதியைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது ஆங்கிலத்தில் வினைச்சொற்களில் நான்கு வகை இருக்கிறது என்று.

1.   Present imperfect           I eat
2.   Present perfect            I have eaten
3.   Present continuous          I am eating
4.   Present perfect continuous    I have been eating

இது நிகழ்காலத்துக்கு. இது போல் இறந்த காலம், எதிர் காலத்திற்கும் நாலு நாலு வகைகள் உண்டு. இது தவிர, ஆண்பால், பெண்பால், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை, செய்வினை, செயப்பாட்டு வினை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வினைச்சொல்.
தமிழில் எழுதி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, திரும்பத் திரும்ப பயிற்சி செய்ததில் ஓரளவு ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதக் கற்றேன். பிற்காலத்தில் மேற்படிப்பு படிக்கும்போதும், ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும், பல தலைமைப் பொறுப்புகள் வகித்த போதும் இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது.  

இந்தக் காலத்து இளைஞர்கள் புத்தகம் படிப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்று தோன்றுகிறது. காலம் மாறுகிறது. என்னை மாதிரி கிழடுகள் புலம்பத்தான் முடியும்.