புதன், 22 பிப்ரவரி, 2012

திருட்டு என்றால் என்ன?



என்ன, சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் கேள்வியை முன் வைக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? தெரிந்தேதான் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

அடுத்தவர்களின் பொருள்களை அதன் சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வது திருட்டு என்பதை சிறு குழந்தையும் அறியும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் திருட்டுகள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவருடைய பதிவை எடுத்து தங்களுடைய தளத்தில் பிரசுரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது திருட்டா இல்லையா? பொருளைத் திருடினால்தான் திருட்டு, கருத்தை அல்லது எழுத்தை திருடினால் அது திருட்டல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அது பொருளாக இருந்தாலும், கருத்தாக இருந்தாலும், அவைகளினுடைய சொந்தக் காரர்களுடைய அனுமதி இல்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தான் என்பது என் கருத்து. அது என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டாலும் சரியே, அது திருட்டுதான். சொந்தக்காரர் யாரென்று தெரியாத நிலையிலும் ஒரு பொருளை நம்முடைய உபயோகத்துக்காக எடுத்துக் கொண்டால் அதுவும் திருட்டே.

சில நாட்களுக்கு முன் ஒரு துப்புரவுத் தொழிலாளி, ரயில் கம்பார்ட்மென்டில் தான் பார்த்த பணப்பையை அதிகாரிகளிடம் கொடுத்ததை செய்தித் தாள்களில் படித்தோம். அதை அவர் வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்கு சொந்தமில்லாதவற்றை நாம் வைத்துக்கொள்வது திருட்டு என்று அவர் நினைத்ததால்தான் அவர் அதை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதுதான் மனச்சாட்சி.

நான் தினமும் வாக்கிங்க் போகும்போது பலர் (அவர்களும் வாக்கிங்க் செல்பவர்கள்தான்) கையில் ஒரு பையும் கோலும் வைத்துக் கொண்டு மற்றவர்கள் வீடுகளிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பூச்செடிகளிலிருந்து குச்சியால் இழுத்து பூக்களைப் பறித்துச் செல்லுகிறார்கள். இது அவர்கள் வீட்டிலிருக்கும் சாமிக்குப் போடுவதற்காக இருக்கும்.

இதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் கேள்விகள் இரண்டு.
   
   1. இது திருட்டா, அல்லவா. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல் இந்த வேலை நடைபெறுகிறது. அப்போது இதை திருட்டு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

   2.     இந்த மாதிரி பறித்த பூக்களைக் கொண்டு செய்யப்படும் வழிபாட்டினால் கடவுளுக்கு என்ன ப்ரீதி ஏற்படும்?

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அவன், அவள், அது?


இவைகள் பிரதி பெயர்ச்சொற்கள் என்று சொல்லப்படும் Pronouns எனப்படுபவை. தமிழில் பெயர்ச்சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று இரண்டு வகைப்படும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால் என்று இரண்டு வகை உண்டு. அஃறிணையில் ஒரே திணைதான்.
ஆனால் சம்ஸ்கிருதத்திலும், ஜெர்மன் மொழி மற்றும் வேறு சில மொழிகளில் ஆண்பால், பெண்பால், உயிரில்லாதவை என்பவை சொற்களைப் பொருத்தே அமைகின்றன. பொருளைப்பொருத்து அமையவில்லை. உதாரணத்திற்கு கமலம் என்பது உயிரற்ற திணையில் அடங்கும். ராமா என்பது பெண்பாலாகும்.
அவன் என்பது வடமொழியில் =  ச:
அவள் என்பது வடமொழியில் =  சா
அது என்பது வடமொழியில்   = தத்
இந்த வேறுபாடுகள்தான் வடமொழியை மற்ற மொழிக்காரர்கள் கற்பதற்கு கஷ்டமாக இருப்பதற்கு காரணம்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ரோடு வெறி Road Rage


சாலைகளில் நடக்கும் பெரும்பான்மையான விபத்துக்கள், இந்த ரோடு வெறியினால்தான் நடக்கின்றன. நானும் ஒரு வாகனம் வைத்திருப்பதால் இந்த ரோடு வெறியை உணர்ந்திருக்கிறேன். அதைப் பற்றி நன்கு சிந்தித்து, தெளிவடைந்து இப்போது இந்த ரோடு வெறி என்னைப் பீடிக்காத மாதிரி மாற்றிக்கொண்டு விட்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சொல்லுக்கு இணங்க யாவரும் பயன்பெற என் கருத்துக்களை இங்கு பதிகின்றேன்.

மனிதன் ஒரு காலத்தில் மிருகமாக இருந்து காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று நாம் பார்க்கும் நிலையில் இருக்கிறான். ஆனாலும் அவ்வப்போது, அவனுடைய மரபணுக்களில் மிச்சமிருக்கும் மிருக குணங்களின் எச்சம் தலை தூக்கி விடுகிறது. அப்போது அவன் தன்னை இழந்து விடுகிறான். அந்த நிலையில் அவன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த இரு அவலங்களே இதற்கு சாட்சி
ஒன்று: சென்னையில் ஒரு மாணவன் தன் ஆசிரியையை கத்தியால் குத்தியது. அவன் அந்த ஆசிரியை இறந்து விடுவாரென்றோ அல்லது அப்படி நடந்தால் தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதையோ சிந்திக்கவில்லை.

இரண்டு: பஸ் டிரைவருக்கும் லாரி டிரைவருக்கும் நடந்த வாய்ச் சண்டையில் பஸ் டிரைவர்எங்கே என் மீது லாரியை ஏத்தி விடுவாயாஎன்று சவால் விட, லாரி டிரைவர் அவர் மீது லாரியை ஏத்தி விட்டான்.

சாதாரண சமயங்களில் நல்ல, சமுதாயப் பொறுப்புள்ள மனிதர்களே, தாங்கள் உணர்ச்சி வசப்படும்போது தங்களை இழந்து விடுகிறார்கள். தினந்தோறும் செய்தித் தாள்களில் வரும் கொலைச் செய்திகள் இந்த நிலையை நிரூபணம் செய்கின்றன.

நாம் இப்போது நமது தலைப்புக்கு வருவோம். ரோடு வெறி ஏன் உண்டாகிறது? சாதாரண சமயங்களிலேயே உணர்ச்சி வசப்படும் மனிதனுக்கு, தன்னிடம் அதிக பலம்/சக்தி இருக்கிறதென்று உணரும்போது இந்த மாதிரி உணர்ச்சி வசப்படும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. ஒவ்வொரு டிரைவரும் வாகனத்தில் ஏறி உட்கார்ந்தவுடன் அந்த வாகனத்தின் சக்தியெல்லாம் அவனுள் பாய்ந்துவிட்டதாக உணருகிறான்


அவன் வாகனத்தில் ஏறாதபோது இருக்கும் மனநிலைக்கும் வாகனத்தில் ஏறி ஸ்டீயரிங்க் வீலுக்கு முன் அமர்ந்தவுடன் இருக்கும் மனநிலைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது. இந்த மாற்றம் ஏற்படாமல் மனதைக்  கட்டுப்படுத்தி வாகனம் ஓட்டும் டிரைவர்கள்தான் நல்ல டிரைவர்கள். அவர்கள்தான் ரோடுவெறியை கட்டுப்படுத்தியவர்கள்.

இந்த வெறியை கட்டுப்படுத்த முடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பாதையில் குறுக்கிடுபவர்களை எல்லாம் எதிரிகளாகப் பார்க்கும் மனோபாவம் வந்துவிடுகிறது. தன்னுடைய வாகனத்திற்கு வழி கொடுக்காதவர்கள், தன் வாகனத்தை முந்திச் செல்ல ஹார்ன் அடிப்பவர்கள், தன் வாகனத்தை முந்திச்செல்பவர்கள், தன் வாகனத்தைக் கண்டு ஓரமாக ஒதுங்காதவர்கள் இப்படி எல்லோரையும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தண்டனை கொடுக்க விரும்புகிறார்கள்.

அவனுள் இருக்கும் அகம்பாவம் அவன் ஓட்டும் வாகனத்தின் சக்தியால் அதிகரித்து, விபத்துகளையும் கொலைகளையும் ஏற்படுத்துகிறது. இது தவிர அவன் வெகு தூரம் வாகனத்தை ஓட்டி வரும் நிலையில் ஏற்படும் உடல் சோர்வு இந்த சூழ்நிலையை இன்னும் மோசமாக்குகிறது. ஓய்வில்லாமல் உழைக்கும்போதும் இதே நிலைதான்.

சரியாக திட்டமிடல் மூலமாக இத்தகைய சூழ்நிலைகள் உருவாவதைத் தடுப்பவனே நல்ல டிரைவர். வாகனம் ஓட்டும் அனைவரும் உடல் சொர்ந்து விடும்போது ஏற்படும் மனமாற்றங்களைக் கவனித்து அவைகளைத் தவிர்க்கவேண்டும்.

வாகன ஒட்டும் லைசன்ஸ் கொடுக்கும் அதிகாரிகளும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல் அதிகாரிகளும் இந்த மனோதத்துவத்தை நன்கு ஆராய்ந்து, இந்த ரோடு வெறியை குறைக்கும் வழிகளைக் கண்டு நடைமுறைப் படுத்தினால்தான் விபத்துகள் குறையும்.