திங்கள், 3 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்.1


டூர் என்றாலே எல்லோருக்கும் குஷிதான். அதுவும் மாணவர்களுக்குச் சொல்லவேண்டுமா? 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். நான் மதுரை விவசாயக் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆல் இந்தியா டூர், இறுதி ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தார்கள். மாணவர்களுடன் மூன்று ஆசிரியர்களும் துணையாகப் போகவேண்டும். மொத்தம் 75 மாணவர்கள், இரண்டு அட்டெண்டர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள். ஆக மொத்தம் 80 பேர். நான்தான் இந்தக்குழுவிற்கு தலைமை.

ஆசிரியர்களும் இப்படி டூர் செல்வது ஒரு மாற்றத்திற்காகத்தான், ஆனால் பொறுப்பு மிக மிக அதிகம். மொத்த மாணவர்களின் நலனும் ஆசிரியர்களின் கையில்தான். அவர்களை பத்திரமாக திருப்பி ஊர் கொண்டு வந்து சேர்ப்பது வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பது போல்தான் இருக்கும்.

நான் பல டூர்கள் மாணவர்களுடன் போயிருக்கிறேன். என் அதிர்ஷ்டம், எந்த விதமான துர்ச்சம்பவங்களும் நிகழ்ந்ததில்லை. ஆனால் சோதனைகள் பல வந்தன. அவைகளை எப்படி சமாளித்தேன் என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கருவாகும்.

அந்தக் காலத்தில் ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் ரயில் கோச்சில் சரியாக 80 சீட்கள்தான். ஆகவே ஒரு முழு கோச்சுக்கான பர்மிஷன் ரயில்வே ஆபீசுக்கு எழுதி வாங்கினோம். இந்த மாதிரி ஒரு தனி கோச் புக் செய்வதில் என்ன சௌகரியம் என்றால் டூர் முடியும் வரை இந்தக் கோச் எங்கள் வசமே இருக்கும். மாணவர்கள் இந்தக்  கோச்சிலேயே தங்கிக்கொள்ளலாம். ஹோட்டல் ரூம் வாடகை மிச்சமாகும். இந்தக் கோச்சை ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே ஒரு தனி ட்ரேக் இருக்கும். அதில் விட்டு விடுவார்கள். வெளியில் போகவர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி தனிக்கோச்சுகளுக்கு சார்ஜ் மிகவும் குறைவு. இப்போது மிக அதிகமாக ஏற்றி விட்டார்கள் என்று கேள்வி.

ஆசிரியர்களான எங்களுக்கு முதல் வகுப்பு தகுதி இருந்தாலும் நாங்களும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்தக் கோச்சிலேயே பயணம் செய்தோம். ஆனால் தங்குவது மட்டும் ஹோட்டலில். அதற்கு காரணம் மாணவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும் என்பதுதான். தவிர, நாங்களும் சுதந்திரமாக இருக்கலாம் அல்லவா?

மதுரையிலிருந்து சென்னை வரையிலும் சாதா ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில்தான் பயணம் செய்தோம். சென்னையில்தான் எங்களுக்கு ஸ்பெஷல் கோச் கொடுப்பதாக ஏற்பாடு. ஏனென்றால் மதுரையிலிருந்து சென்னை வரை மீட்டர்கேஜ். (1978ல்) சென்னையிலிருந்துதான் பிராட்கேஜ் பாதை. நாங்கள் சென்னையிலிருந்து போகும் மற்ற ஊர்களுக்கெல்லாம் பிராட்கேஜ் பாதைதான். சென்னை சென்ட்ரல் நிலைய ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட், எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பரின் உறவினர். அவரிடம் முன்பே சொல்லி வைத்திருந்ததனால் எங்களுக்கு ஒரு புத்தம் புது கோச் அலாட் செய்திருந்தார்.

மாணவர்களுக்கு அந்தக் கோச்சைப் பார்த்தவுடன் ரொம்பக் குஷி. ஏனென்றால் அந்தக் கோச்சில்தான் ஏறக்குறைய இருபது நாள் அவர்கள் பயணம் செய்வதுடன் தங்கவும் வேண்டும். இப்படிப்பட்ட புது கோச் ஏற்பாடு பண்ணின ஆசிரியரான என் மதிப்பு பல மடங்கு கூடியது என்று சொல்லவும் வேண்டுமா? மும்பையில் இந்தக் கோச்சை ஏறக்குறைய கோட்டை விடப்பார்த்தேன். அதிலிருந்து தப்பித்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம். (அந்தக் கதை பின்னால் வருகிறது)

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீலட்சுமி தேவி பிரசன்னமானாள்


              

சீக்கிரம் கோடிக்கணக்கில் பணம் பண்ணும் பலவிதமான வித்தைகளைப் பற்றிய செய்திகளை வாசித்து வாசித்து, இரவில் கொஞ்ச நாளாகவே அது சம்பந்தமான கனவுகளே வந்து கொண்டிருக்கின்றன. அது தவிர மனதிற்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமும் ஒரு நூறு, இருநூறு கோடி தேத்தியிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பும் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டு இருக்கையில், நேற்று இரவு சாட்சாத் ஸ்ரீலட்சுமிதேவி, என் கனவில் தரிசனம் தந்தாள். கையில் ஒரு பைரவரைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். மகனே, உன் அங்கலாய்ப்பைக் கேட்டேன். இன்னும் காலம் கெட்டுப் போய்விடவில்லைதமிழ்நாட்டு மக்கள் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் மொட்டை போட்டுக்கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். நீ கவலைப்படாதே. இந் பைரவரை வைத்துக்கொண்டு உன் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

ஆஹா, என்னே அம்மன் அருள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு இனிமேல் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு திட்டம் தயாரித்திருக்கிறேன். தமிழ் மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பைரவர் நாய்த்தோல் கம்பெனி பிரைவேட் லிமிடெட்

அதிர்ஷ்டம் அழைக்கிறது
நாய்த்தோல் மிகவும் மென்மையானது. இதனால் செய்யப்படும் தோல் பொருட்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பயங்கர டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவில் மேனகா காந்தி புண்ணியத்தினால் பெரும் அளவில் நாய்கள் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் ஒரு நாய்த்தோல் மற்றும் நாய்த்தோலினால் செய்த கைவினைப் பொருள்கள் செய்யும் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறோம். தோல் உரித்த பிறகு அந்த நாயின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு பிலிப்பைன்ஸ், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்த நாடுகளில் நாய் இறைச்சிக்கு மிகுந்த தேவை இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த தொழிற்சாலைக்கு தினந்தோறும் ஆயிரம் நாய்கள் தேவைப்படுகின்றன. ஒரு நாய்க்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரொக்கம் கொடுத்து வாங்கப்படும். நூறு நாய்கள் சப்ளை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸும், ஒரு தங்க நாணயமும் கொடுக்கப்படும்.

இந்தக் கம்பெனிக்கு நாய்கள் சப்ளை செய்ய விருப்பமுள்ளவர்கள் கம்பெனியில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவேண்டும். டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாய் கட்டி, அடையாள அட்டை வாங்கிக் கொள்ளவேண்டும். உங்கள் டெபாசிட் பணத்திற்கு 100 % காரன்டி கொடுக்கும் நிறுவனம் இது ஒன்றே. மற்ற கம்பெனிகளைப்போல் ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் அணுவளவு கூட வேண்டாம்.

குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே ரிஜிஸ்டர் செய்வதால் உங்கள் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு முந்துங்கள்.

இந்த விளம்பரம் முன்னணி செய்தித்தாள்களில் எல்லாம் நாளைக்கு வெளியாகும். பதிவுலக நண்பர்களுக்கு மட்டும் தனிச்சலுகையாக இன்றே ரிஜிஸ்டர் செய்யப்படும். முந்துங்கள்.

பின்குறிப்பு: ஈமு கோழி, வேலை வாய்ப்பு, நிதி நிறுவனங்கள் போன்ற கம்பெனிகளின் கேஸ்களை நடத்துவதிலும், முன் ஜாமீன் எடுப்பதிலும், முன் அனுபவமுள்ள, நல்ல வக்கீல்கள் தேவை. மாதக்கணக்கில் தலைமறைவாக இருக்க நல்ல பண்ணை வீடுகள் ஏற்பாடு செய்யவும் தெரிந்திருந்தால் நல்லது. நல்ல பீஸ் கொடுக்கப்படும். பதிவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உடனடியாக ஆபீஸுக்கு வரவும். – இந்த பின்குறிப்பு விளம்பரத்தில் வெளியாகாது.