புதன், 5 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்-2


சென்னையிலிருந்து முதலில் ஹைதராபாத் போனோம். அங்கு ஹைதராபாத் ஸ்டேஷனில் எங்கள் கோச்சை நிறுத்தினார்கள். அது ஒரு சின்ன ஸ்டேஷன். அங்கு நிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அங்கிருந்து மும்பை விக்டோரியா ஸ்டேஷனுக்குப் போகும் ரயிலில் இந்தக் கோச்சைச் சேர்க்கவேண்டும். அதற்கு ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் ஆர்டர் வேண்டும் என்றார்கள்.

நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருப்பது என்னவென்றால், இன்ஜினும், டிரைவரும், கோச்சுகளும் இருந்தால் ரயில் ஓடும் என்றுதானே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது எவ்வளவு தவறான கருத்து என்பது எனக்கு அங்குதான் தெரிந்தது. ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் என்பது வழக்கமாக எல்லா ஊர்களிலும், ஸ்டேஷன் சப்தம் கேட்காமல், ஸ்டேஷன் நாற்றங்கள் எட்டாமல், ஐந்து கி.மீ. தூரத்தில் வைத்திருக்கிறார்கள்.   

இந்த ஜெனரல் மேனேஜர் ஆபீஸில் ஒரு மூலையில்அசிஸ்டன்ட் கமெர்ஷியல் கிளார்க்என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் அனைத்து ரயில்களையும் ஓட்டுபவர். ரயில் இன்ஜினில் அவர் தன் ஆயுளில் ஒரு நாள்கூட ஏறிப் பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் அவர் ஆர்டர் போடாவிட்டால் ஒரு ரயிலும் ஓடாது. இது நடைமுறை உண்மை. அவர்தான் அந்த ஸ்டேஷனில் இருக்கும் எல்லா கோச்சுகளுக்கும், (எல்லா ரயில் கோச்சுகளுக்கும் நெம்பர் உண்டு, பார்த்திருப்பீர்கள்). இன்ஜின்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அந்த ஸ்டேஷனிலிருந்து என்னென்ன ரயில்கள், எந்தெந்த ஊர்களுக்கு, எந்தெந்த நேரங்களில் புறப்படுகின்றன என்பது அவருக்கு மனப்பாடம். அந்த ரயில்களுக்கு எந்த கோச்சுகள், எந்த வரிசையில் இணைக்கப்படவேண்டும், எத்தனை மணிக்கு பிளாட்பாரத்திற்கு அனுப்பவேண்டும் என்று ஆர்டர் போட்டு, ஷண்டிங்க் யார்டுக்கு அனுப்பினால்தான் அந்த ரயில் குறித்த நேரத்திற்கு புறப்படும். அவர் ஏதாவது சொதப்பி விட்டால் அவ்வளவுதான், அன்று அந்த ரயில் புறப்படாது. ஜெனரல் மேனேஜர் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இவரிடம் போய், நாங்கள் இந்த ஊரிலிருந்து, இன்ன ரயிலில், ஸ்பெஷல் கோச்சில், இன்று வந்திருக்கிறோம். இத்தனாம் தேதி, இன்ன ரயிலில் இன்ன ஊருக்குப் போக வேண்டுமென்று சொன்னால், அது பற்றிய ஆர்டர் வந்திருக்கிறதா என்று பார்ப்பார். நாம் டூர் புரொக்ராம் போட்டு, ரயில்வே அப்ரூவல் வாங்கியிருக்கும் ஊரிலுள்ள ரயில்வே ஜெனரல் மேனேஜர் ஆபீசில் இருந்து, நம் டூர் முழுவதற்கும் உள்ள எல்லா விபரங்களையும் சம்பந்தப்பட்ட எல்லா ஸடேஷன்களுக்கும் (அதாவது அந்தந்த ஜெனரல் மேனேஜர் ஆபீசுக்கு) அனுப்பியிருப்பார்கள். இந்த ஆர்டரை அந்த கிளார்க் வைத்திருப்பார்

அதைப் பார்த்து, நாம் சொலும் விபரங்களும், அந்த ஆர்டரில் இருக்கும் விபரங்களும் ஒத்துப் போனால், சரி அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்கள் என்பார். நம் கல்லூரி லெட்டர் பேடில் அப்ளிகேஷன் எழுதி, அதற்குண்டான காணிக்கையுடன் கொடுத்து விட்டால் நம் வேலை முடிந்தது. சரி, நீங்கள் போகலாம், நான் ஆர்டர் அனுப்பிவிடுகிறேன், என்பார். நம் கோச், நாம் போகவேண்டிய ரயிலில் சேர்ந்து விடும். இந்த நடைமுறையைச் சரியாக கடைப்பிடிக்காமல், எங்களுக்கு முன் சென்ற இரண்டு குழுக்களும் ஹௌரா ஸ்டேஷனில் பட்ட அனுபவம் ஒரு தனிக்கதை (பின்னால் சொல்லுகிறேன்)

இந்த நடைமுறையைக் கண்டுபிடிக்க, முதல் ஊரில் மிகவும் கஷ்டப்பட்டோம். பிறகு அடுத்த ஊர்களில் சுலபமாக இந்த வேலையைச் செய்து முடித்தோம். இப்படி நாங்கள் ஹைதராபாத்தில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து முடித்த பிறகு, பம்பாய் (அந்தக்காலத்தில் அது பம்பாயாகத்தான் இருந்தது. இப்போதுதான் மும்பை) புறப்பட்டோம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்.1


டூர் என்றாலே எல்லோருக்கும் குஷிதான். அதுவும் மாணவர்களுக்குச் சொல்லவேண்டுமா? 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். நான் மதுரை விவசாயக் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆல் இந்தியா டூர், இறுதி ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தார்கள். மாணவர்களுடன் மூன்று ஆசிரியர்களும் துணையாகப் போகவேண்டும். மொத்தம் 75 மாணவர்கள், இரண்டு அட்டெண்டர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள். ஆக மொத்தம் 80 பேர். நான்தான் இந்தக்குழுவிற்கு தலைமை.

ஆசிரியர்களும் இப்படி டூர் செல்வது ஒரு மாற்றத்திற்காகத்தான், ஆனால் பொறுப்பு மிக மிக அதிகம். மொத்த மாணவர்களின் நலனும் ஆசிரியர்களின் கையில்தான். அவர்களை பத்திரமாக திருப்பி ஊர் கொண்டு வந்து சேர்ப்பது வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பது போல்தான் இருக்கும்.

நான் பல டூர்கள் மாணவர்களுடன் போயிருக்கிறேன். என் அதிர்ஷ்டம், எந்த விதமான துர்ச்சம்பவங்களும் நிகழ்ந்ததில்லை. ஆனால் சோதனைகள் பல வந்தன. அவைகளை எப்படி சமாளித்தேன் என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கருவாகும்.

அந்தக் காலத்தில் ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் ரயில் கோச்சில் சரியாக 80 சீட்கள்தான். ஆகவே ஒரு முழு கோச்சுக்கான பர்மிஷன் ரயில்வே ஆபீசுக்கு எழுதி வாங்கினோம். இந்த மாதிரி ஒரு தனி கோச் புக் செய்வதில் என்ன சௌகரியம் என்றால் டூர் முடியும் வரை இந்தக் கோச் எங்கள் வசமே இருக்கும். மாணவர்கள் இந்தக்  கோச்சிலேயே தங்கிக்கொள்ளலாம். ஹோட்டல் ரூம் வாடகை மிச்சமாகும். இந்தக் கோச்சை ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே ஒரு தனி ட்ரேக் இருக்கும். அதில் விட்டு விடுவார்கள். வெளியில் போகவர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி தனிக்கோச்சுகளுக்கு சார்ஜ் மிகவும் குறைவு. இப்போது மிக அதிகமாக ஏற்றி விட்டார்கள் என்று கேள்வி.

ஆசிரியர்களான எங்களுக்கு முதல் வகுப்பு தகுதி இருந்தாலும் நாங்களும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்தக் கோச்சிலேயே பயணம் செய்தோம். ஆனால் தங்குவது மட்டும் ஹோட்டலில். அதற்கு காரணம் மாணவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும் என்பதுதான். தவிர, நாங்களும் சுதந்திரமாக இருக்கலாம் அல்லவா?

மதுரையிலிருந்து சென்னை வரையிலும் சாதா ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில்தான் பயணம் செய்தோம். சென்னையில்தான் எங்களுக்கு ஸ்பெஷல் கோச் கொடுப்பதாக ஏற்பாடு. ஏனென்றால் மதுரையிலிருந்து சென்னை வரை மீட்டர்கேஜ். (1978ல்) சென்னையிலிருந்துதான் பிராட்கேஜ் பாதை. நாங்கள் சென்னையிலிருந்து போகும் மற்ற ஊர்களுக்கெல்லாம் பிராட்கேஜ் பாதைதான். சென்னை சென்ட்ரல் நிலைய ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட், எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பரின் உறவினர். அவரிடம் முன்பே சொல்லி வைத்திருந்ததனால் எங்களுக்கு ஒரு புத்தம் புது கோச் அலாட் செய்திருந்தார்.

மாணவர்களுக்கு அந்தக் கோச்சைப் பார்த்தவுடன் ரொம்பக் குஷி. ஏனென்றால் அந்தக் கோச்சில்தான் ஏறக்குறைய இருபது நாள் அவர்கள் பயணம் செய்வதுடன் தங்கவும் வேண்டும். இப்படிப்பட்ட புது கோச் ஏற்பாடு பண்ணின ஆசிரியரான என் மதிப்பு பல மடங்கு கூடியது என்று சொல்லவும் வேண்டுமா? மும்பையில் இந்தக் கோச்சை ஏறக்குறைய கோட்டை விடப்பார்த்தேன். அதிலிருந்து தப்பித்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம். (அந்தக் கதை பின்னால் வருகிறது)