புதன், 3 மே, 2017

1. நதிமூலம்-1

முதலில் பிரசுரித்த தேதி

Image result for spider solitaire

நான் இந்த வலைப்பதிவு விளையாட்டுகளுக்கு புதியவன். என்னுடைய மகள் தனக்கு ஒரு கணிணி புதிதாக வாங்கிக்கொண்டு தான் வைத்திருந்த பழைய கணிணியை எனக்கு தானம் கொடுத்தாள். எனக்கு கணிணியில் முன்பே சிறிது பழக்கம் உண்டு. ரொம்ப காலத்திற்கு முன்பு நான் வேலையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு கணிணி என்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். அது கணிணிகள் (குறிப்பாக மேஜை மாடல்கள்) வரத்தொடங்கிய காலம். என்னுடைய அறையில் இருந்த மாடலில் நிலையான சேமிப்பு சாதனம் இல்லை. இரண்டு தகடு அறைகள் இருந்தன. ஒன்றில் (A drive) மென்பொருள் தகட்டைப்போட்டுவிட்டு இன்னொன்றில் (B drive) நமக்கான தகட்டைப் போட்டுக்கொண்டு கணிணியில் நம் சித்து வேலைகளைக் காட்டவேண்டும்.

நான் வகித்த பதவி காரணமாக கணிணியை உபயோகிப்பது எப்படி என்று யாரிடமும் பாடம கேட்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் இதை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் விழுந்து விட்டது. மாலை 5 மணிக்கு மேல் கணிணி முன்பு உட்கார்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொரு படியாகப்படித்து முன்னேறி இன்று கணிணியைப்பிரித்து மேயும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.

இப்போது ஓய்வு பெற்று வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது இந்த கணிணி கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. கணிணி உபயோகிப்பது என்னைப்போன்ற இளைஞர்களுக்கு (அதாவது 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குழைந்தைகள், அதற்கு மேல் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். என்னுடைய வயது வெறும் 75 தான்) அதிகமாக பரிச்சயம் இல்லாததால் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து என்ன விளையாடலாம் என்று பார்த்தேன்.

கணிணிக்குள் பார்த்தபோது ஒரு சீட்டு விளையாட்டு கிடைத்தது. (Spider Solitaire). சில நாட்கள் விடாமுயற்சி செய்து இந்த விளையாட்டை கற்றேன். என்ன ஆயிற்று என்றால் இந்த விளையாட்டு என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரமெல்லாம் இதே பைத்தியமாக போய்விட்டது. என் மனைவி சாப்பிடுவதற்கு பல முறை கூப்பிட்டாலும் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு இந்த சீட்டு விளையாட்டில் மூழ்கியிருந்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் ...
(தொடரும்)

பின் குறிப்பு: நான் ஒரு மூன்று மாதங்களாக  புதிய பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் அன்பர்கள் ஒரு சிலர் இதனால்தான் பதிவுலகம் நசிந்து போய் விட்டது. அதனால் அதை    புனருத்தாரணம் செய்ய   நீங்கள் மீண்டும் எழுதவேண்டும். எழுதுவதை நிறுத்தின பிறகு மீண்டும் எழுத வேண்டுமென்றால் மிகுந்த சிரமம். அதனால் என்னுடைய பழைய பதிவுகளையே மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் போடுவது அவரவர்கள் விருப்பம். போடாமலிருப்பது உத்தமம். ஏனெனில் எனக்கு மனதிற்குப் பிடிக்காத பின்னூட்டங்களை நிராகரிப்பதாக முடிவு செய்துள்ளேன். பிறகு உங்கள் சௌகரியம்.

சனி, 25 பிப்ரவரி, 2017

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்!

Image result for lean manImage result for big man    ➨➨➨

காலம் மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகும்.

என்னுள் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தைப் பற்றி இங்கு விவரிக்கிறேன்.

நான் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது துப்பறியும் நாவல்களில் ஆர்வம் உண்டாயிற்று. என் ஒன்று விட்ட அண்ணன் இந்த ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தினான். இந்த ஆர்வம் ஒரு கட்டத்தில்   (கெரசின், பெட்ரோல் ஆகிய எதுவுமில்லாமலேயே) கொழுந்து விட்டு  எரிய ஆரம்பித்தது.

எப்படியென்றால் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்  கொண்டிருக்கும் போதே, டெஸ்க்குக்கு அடியில் இந்த நாவல்களை வைத்துப் படிக்கும் அளவிற்குப் போய்விட்டது. வீட்டில் இரவு என்னேரமானாலும் எடுத்த புத்தகத்தைப் படித்து முடிக்காமல் தூங்க மாட்டேன்.

ஒரு மணி நேரத்தில் தமிழ் புத்தகங்களானால் 130 பக்கங்கள் படிப்பேன். ஆங்கில புத்தகங்களானால் 90 பக்கங்கள் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் வாரப் பத்திரிகைகளை தவறாமல் வாங்கி அவைகளில் வரும் தொடர்கதைகளை தனியே பிரித்து வைத்து, அது முடிந்தவுடன் பைண்ட் செய்து வைப்பேன்.

இப்படியெல்லாம் படித்துக் கொண்டிருந்த நான் இப்போது ஆனந்த விகடன் குமுதம் பத்திரிக்கைகளைத் தொடுவதே இல்லை. அவைகள் முன் மாதிரி இல்லை என்பதுவும் ஒரு காரணம். மற்ற கதைகளைப் படிப்பதற்கு ஆர்வம் இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஒரு "டேப்" எனக்கு பரிசளித்தார். அதில் அமேசான்காரன் இலவசமாகவும் சலீசான விலையிலும் பல புத்தகங்களைக் கொடுத்தான். அவைகைள வாங்கி வைத்துள்ளேன். அதில் பல துப்பறியிம் கதைகள்

அவைகளைப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து பக்கங்கள் பிடித்தால் அதில் வரும் சஸ்பென்சைத் தாங்க முடிவதில்லை. நரம்புகள் புடைக்கின்றன. இரத்தம் சூடேறுகிறது. நெஞ்சு படபடக்கிறது. பிறகு அந்தக் கதையைத் தொடர முடிவதில்லை. மறு நாள் படிக்க ஆரம்பித்தால் இன்னும் ஒரு நான்கு பக்கங்களே படிக்க முடிகிறது.

இப்படியாக ஒரு கதையை முடிக்க பத்துப் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நினைத்துப் பார்த்தேன். ஒரு நானூறு பக்க நாவலை மூன்று மணி நேரத்தில் படித்த நான் எப்படி ஆகி விட்டேன் என்று நினைக்கும் போதுதான் என் வயதின் தாக்கம் புரிகிறது. இனி அந்த நாட்கள் வரப்போவதில்லை. மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.

சனி, 4 பிப்ரவரி, 2017

நான் ஏன் பணம் சேர்க்கிறேன்?


                                              Image result for அனில் அம்பானி
ஒரு ஊரில் ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வியாபாரம் நல்ல வியாபாரம்தான். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனுக்கு ஏகப்பட்ட கடன் ஏற்பட்டு விட்டது. விற்ற பொருள்களுக்கு பணம் வரவில்லை. வாங்கின பொருள்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் பிரச்சினை. ஒரு கட்டத்தில் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு அவன் ஒரு பாட்டில் பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு, பூங்காவிற்குப் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான்.

அவன் உட்கார்ந்த சில நொடிகளில் ஒரு டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். இந்த வியாபாரி மிகவும் சோகமாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவர் என்ன விஷயம் என்று கேட்டார். இவன் தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லிவிட்டு, தான் தற்கொலை செய்யப் போவதைப் பற்றியும் அவரிடம் சொன்னான்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சொன்னார். நான் இப்போது உனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செக் தருகிறேன். அதை வைத்து உன் வியாபாரத்தை விருத்தி செய். சரியாக ஒரு வருஷம் கழித்து நாம் இதே இடத்தில் சந்திப்போம். உன் வியாபாரம் விருத்தியடைந்தால் இந்தப் பணத்தைத் திருப்பிக்கொடு. இல்லாவிட்டாலும் என்ன ஆயிற்று என்று விவாதிப்போம் என்றார். இவனும் சரியென்றான்.

அவர் தன் கோட்டுப் பாக்கெட்டில் இருந்து ஒரு செக் புக்கை எடுத்து ஒரு கோடி ரூபாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டு, இவனிடம் கொடுத்தார். இவனும் அவருக்கு பலவிதமாக நன்றி சொல்லி விட்டு அந்தச் செக்கை வாங்கிக்கொண்டான். அந்த விஷ மருந்தைத் தூக்கி எறிந்து விட்டு சந்தோஷமாக திரும்பிப் போனான்.

வீட்டிற்குப் போனதும் அந்த செக்கில் இருந்த கையெழுத்தைப் பார்த்தான். அனில் அம்பானி என்று இருந்தது. இவனும் சந்தோஷமாக அந்தச் செக்கை தன்னுடைய இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுத் தூங்கினான். அடுத்த நாள் இவன் தன்னுடைய கடைக்குப் போய் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.

தன் வீட்டு இரும்புப் பெட்டியில் ஒரு கோடி ரூபாய்க்கான செக் இருப்பது அவனுக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. வரவு செலவுகளைப் பார்த்து ஒழுங்கு செய்ய ஆரம்பித்தான். வராக் கடன்களை எல்லாம் வசூல் செய்தான். கொடுக்கவேண்டிய கடன்களை எல்லாம் கொடுத்தான். அந்தச் செக்கை இவன் பயன்படுத்தவேயில்லை. இவன் தைரியத்தைப் பார்த்து எல்லோரும் இவனிடம் வியாபார உறவுகளைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.

ஒரு வருடத்தில் இவன் பெரிய பணக்காரன் ஆகி விட்டான். அந்த நாளும் வந்தது. அதாவது இவனுக்கு செக் கிடைத்த நாள். அந்த செக்கை எடுத்துக்கொண்டு அதே பார்க்குக்குச் சென்றான்.  இவனுக்கு செக் கொடுத்த அனில் அம்பானியும் முன்னரே வந்து இவனுக்காகக் காத்திருந்தார். இவன் இவனுடைய வெற்றிக் கதையைச் சொல்லி விட்டு அந்தச்செக்கை மிகுந்த நன்றியுடன் அவரிடம் திருப்பிக்கொடுத்தான்.

அப்போது ஒரு நர்சும் இரண்டு தடி ஆட்களும் அங்கு வந்து இந்த செக் கொடுத்த ஆளைப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது இந்த வியாபாரி அவர்களிடம் கேட்டான். ஏன் இவரைப் பிடிக்கிறீர்கள்  என்றான். அப்போது அவர்கள் சொன்னார்கள், இந்த ஆள் பக்கத்தில் உள்ள எங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வந்து விட்டான். அவன் உங்களிடம் தான்தான் அனில் அம்பானி என்று சொல்லியிருப்பானே என்றார்கள்.

அப்போதுதான் வியாபாரிக்கு உண்மை புரிந்தது. பைத்தியக்காரன்  கொடுத்த செக்கையா நாம் இவ்வளவு நாள் வைத்திருந்தோம் என்று  அதிசயப்பட்டான். ஆனாலும் அந்தச் செக் நம்மை உயர்த்தியது அல்லவா. ஆகவே அந்தச் செக்கை விட, பணம் நம்மிடம் இருக்கிறது என்ற தைரியம்தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது என்று புரிந்து கொண்டான்.

இந்தக் கதை ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல் ஆகும். இருந்தாலும் கதையின் நீதி எல்லோருக்கும் புரியும்.

பின் குறிப்பு: அதனால்தான் நான் பணத்தைச் சேர்த்து பேங்கில் போட்டு வைத்திருக்கிறேன்.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

தியாராஜ ஸ்வாமிகள் பற்றிய சில குறிப்புகள்.

எனக்கு வயதாகிவிட்டபடியால் என் மூளை துருப்பிடித்து விட்டது. அந்த துருவை எடுக்கக் கூடிய சாதனங்கள் ஏதும் என்னிடம் கைவசம் இல்லை. அதனால் நான் பெரும்பாலும் சுயமாக சிந்திப்பதை விட்டு விட்டேன். பதிவுகள் எழுதுவதற்கு சுய சிந்தனை வேண்டுமல்லவா? அதற்கு என் மூளை ஒத்துழைப்பதில்லை.
ஆகவே மற்றவர்களுடைய கருத்துக்களை திருட வேண்டிய நிலையில் இருக்கிறேன். சிலர் பெரிய மனது பண்ணி திருடிக்கொள்ள பர்மிஷன் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பரந்த விசால மனப்பாங்கு கொண்டவர்கள் இருவர்.

   1.   திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள். இவரை அறியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்கமாட்டார்கள். சமீப காலங்களில் அவர் அதிகமாகப் பதிவுகள் எழுதாவிட்டாலும் முகநூலில் அவ்வப்போது அவர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவைகளை ஒரு தொகுப்பாகச் சேர்த்துப் படிப்பது அலாதி இன்பம்.  
   
   2. திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள். வைகோவிற்கு இவரை சிஷ்யர் என்று சொல்லலாம்.

இருவரும் திருச்சி வாசிகள். காவிரித் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள். அதனால் காவிரித் தாயின் விசால மனப்பாங்கு இவர்களுக்கும் வந்து விட்டது. இவர்களுக்கு இடையே நடந்த ஒரு முகநூல் பரிமாற்றத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

தியாகி சித்தரஞ்சன் தாஸ் தன் தந்தை கடனாக விட்டுச் சென்ற தொகையை  (அந்த காலத்தில் மிகப் பெரிய தொகை அது) கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை ஒரு வரமாக கருதி அடைத்தது ஒரு நிகழ்வு.

கஸபியன்கா என்ற பெயருடைய அந்த கப்பல் மாலுமியின் மகன்,கப்பல் தீப்பற்றி எரிந்த
 போது,'இங்கே இரு' என்று தந்தை சொன்னதை, தீயின் கோரப் பற்கள் அவனை முத்த மிட்ட போதும் தந்தையின் சொல் மதித்து, அசையாமல் நின்று, தீக்கு தன் இன்னுயிரை ஈந்து அழியாப்புகழ் பெற்றது மற்றொரு நிகழ்வு.

அது போல இதுவும் ஒன்று.
 முலக நாடு என்ற இருப்பிடத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வாழ்வில் நடந்த
நிகழ்வு இது.

திருவையாறு திருமஞ்சன வீதியில் இருந்த அந்த வீடு அவருடைய பிதாமகருக்கு தஞ்சை மராட்டிய மன்னனால் மான்யமாக்க் கொடுக்கப் பட்டது. நந்தவனத்திலிருந்து பூக்களை கொய்து,
 புண்ய நதியாம் காவிரியிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, தன் அஹத்தில் உள்ள விக்ரஹத்துக்கு பூஜை செய்யும் அவருக்கு உபகாரமாக அவருடைய இளைய மகன் வருவான்.

அவர் பூஜை செய்யும் போது,
 கிடைத்த இடைவெளியில், புரந்த தாஸரின் கிருதிகளை  அந்த குழந்தை பாடுவான். அவர் பூஜை செய்த ஸ்ரத்தை அவனுக்கு பிதா மீதான பக்தியை  அதிகரிக்கச் செய்தது.அவனுடைய நாதானுபாஸனை...அந்த பூஜானுபவம், அவன் கண்களில் பாஷ்யமாக பெருகி,அவனை உத்தம வாக்கேயனாக்கியது.அவனுக்கு ராமன் மீது உள்ள பக்தி...அவன் கீர்த்தனங்களின் உட்பொருளாய் உள்ள அந்த ராம ஆராதனை ...எல்லாம் அந்த ராமன் சுகபோக ராஜ வாழ்வைத் துறந்து, 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'
என்று வனமேகியதால் கூட இருக்கலாம்..ஆனால் அந்த சிறுவனுக்கு அவன் பிதா மீதுள்ள பக்தியை...ஈர்ப்பைப் பார்க்கும் போது,
 உட்பொருளாய் அவன் ராமனை துதி செய்தாலும், மறை பொருளாய் அவன் பிதா ராம பரம்மத்தை தான் துதி செய்கிறானோ என்று எனக்கு ஒரு ஐயம் உண்டு, எப்போதுமே!

இன்று
 Father's Day இல்லை.....தியாகையர் ஆராதனை இல்லை....ஶ்ரீராம நவமி இல்லை....ஏதோ எழுதத் தூண்டியது...எழுதினேன்....

எப்பவுமே காமெடியாகத் தான் இவன் எழுதுவான் என்று யாரும் நினைத்து விடக் கூடாது,
 பாருங்கள்!


Vai Gopalakrishnan தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் 100-வது பிறந்தநாளான 05.11.1970 அன்று நம் BHEL உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும், மத்திய அரசால் ஸ்பெஷல் விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது. அவரின் பிறந்த நாள்: 05.11.1870. அவர் தன் 55-வது வயதில் மறைந்த நாள்: 16.06.1925. இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குருவும் ஆவார்.
Image may contain: 1 person, closeup

Aaranyanivas R Ramamoorthy ஆஹா ...தன்யனானேன் ஸார்..
-=-=-=-=-

Vai Gopalakrishnan தியாகப்பிரும்மம் வாழ்ந்த காலம்: 1767 முதல் 1848 வரை

தியாகப்பிரும்மத்தின் தகப்பனார் பெயர் ராமப்பிரும்மம். அவர் மிகப்பிரபலமான கோதண்டராம ஸ்வாமிகளின் சிஷ்யர் ஆவார். அவரிடமிருந்துதான் ஸ்ரீ பாதுகைகளையும், சூத்ரானுக்கிரஹமும் (மாலையை வைத்துக்கொண்டு தினமும் ஒரு லக்ஷத்து எட்டாயிரம் முறை ராமநாம ஜபம் செய்தல்) பெற்றுக் கொண்டவர், ராமப்பிரும்மம்.
 

திருவாரூரில் இருந்த இவர்களின் குடும்பம் பிறகு காவிரி ஸ்நானத்திற்காகவோ என்னவோ பஞ்சநத க்ஷேத்ரமான திருவையாறு திருமஞ்சன வீதிக்கு இடம் பெயர்ந்தது.
 

அவர்களின் குலதெய்வம் ஸ்ரீ கோதண்டராமர். ஸ்ரீ ராம பக்தி அதிகம் உள்ள குடும்பம். உஞ்சவிருத்தி எடுப்பதும், பாகவதாள்களுடன் சேர்ந்து, பகவத் பஜனைகள் செய்வதும் இவர்கள் குல வழக்கம். இவர்கள் தெலுங்கு பிராமணாளில் காகர்லவாலு என்ற ஒருவிதப் பிரிவினை சேர்ந்தவர்கள்.
 

ராமப் பிரும்மத்திற்கு மொத்தம் மூன்று பிள்ளைகள்.
 

மூத்த பிள்ளையின் பெயர்: ஜப்ஜேஷன் என்பதாகும். அங்கு மட்டும் கோயிலிலுள்ள தக்ஷிணாமூர்த்தியின் பெயர் இது. (உலகில் உள்ள மற்ற அனைத்துக் கோயில்களிலும் தக்ஷிணா மூர்த்திக்கு வேறு குறிப்பிட்ட பெயர்கள் கிடையாது. சில இடங்களில் தக்ஷிணா குரு மூர்த்தி என்று மட்டுமே அழைப்பார்கள்). இவர் மந்திரித்தல், மாந்தரீகம் செய்தல், வருவோருக்கெல்லாம் வேப்பலை அடித்தல் போன்ற தொழில்கள் செய்து வந்ததாகக் கேள்வி. ஹார்மோனியப் பெட்டியை முடுக்கி விட்டு உரக்க இசையும் பாடுவாராம். ஆனால் இவருக்கு பாகவத சம்பிரதாயங்கள் ஏதும் தெரியாதாம். அந்தவழிக்கே இவர் வருவது இல்லையாம்.
 

இரண்டாவது பிள்ளை பெயர்: சுந்தரேசன். அவர் ஏதோ காரணங்களால் வீட்டை விட்டே ஓடிப்போய் விட்டதாகக் கேள்வி. அவர் பிறகு எங்கு போனார், என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியாது. ராமப்பிரும்மத்திற்கு அப்போதே இந்த புத்ர சோகம் உண்டு.

மூன்றாவது கடைக்குட்டிப் பிள்ளையே சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகப் பிரும்மம் என்னும் தியாகராஜர். இவரின் பத்னிக்குப் பெயர்: கமலாம்பாள். பொதுவாக மஹாலக்ஷ்மிக்குத்தான் கமலாம்பாள் என்று பெயர் இருக்கும். ஆனால் திருவாரூர் கோயிலிலுள்ள தியாகராஜராகிய சிவனின் பத்னியான பார்வதி அம்பாளின் பெயர் கமலாம்பாள் என்பது.

ஸ்ரீ ராமப் பிரும்மம் காலமாகும் முன்பு, ஸ்ரீ தியாகராஜர் தன் தந்தையிடம் சொல்கிறார்:
 

நான் அந்தக் கோதண்டபாணியை சாக்ஷாத்தாக நேரில் பார்க்கணும் என ஆசைப்பட்டேன். தாங்கள் தான் என் குருநாதர். வேறு யாரையும் எனக்கு குருவாக ஏற்றுக்கொள்ள என் மனசுக்கு இஷ்டம் இல்லை. தங்கள் மூலம் ஸ்ரீ ராமனை நேரில் பார்த்து விடலாம் என மிகவும் ஆசையாக இருந்தேன். இப்படி திடீரென்று கிளம்பி ஸ்ரீராமனின் திருவடிகளை அடையப் போவதாகச் சொல்லுகிறீர்களே, இனி நான் என் ஆசையை யாரிடம் சொல்லி பூர்த்தி செய்து கொள்வேன்?” என தன் தந்தையாரிடம் அழுது புலம்புகிறார்.

இதைக்கேட்டு மிகவும் சந்தோஷப்பட்ட ராமப்பிரும்மம், தியாகுவை தன் அருகில் அழைத்து அவன் காதில் ராம, ராம, ராம, ராம, ராம, ராம எனச் சொல்லி, தான் அதுவரை செய்து வந்த சூத்தரத்தைக் (ஜப மாலையைக்) கொடுத்து இதுபோல 100 கோடி தடவை ராம நாம ஜபம் சொல்லிக்கொண்டே இரு. என்றைக்கு உனக்கு 100 கோடி பூர்த்தியாகிறதோ, அன்றைக்கு ஸ்ரீ ராமபிரான் பிரத்யக்ஷமாக உன் முன் தோன்றி காட்சியளிப்பார்எனச் சொல்லிக்கொண்டே தன் கண்ணை மூடி பிராணனை விடுகிறார்.
 

இவையெல்லாம் நான் சமீபத்தில் ஒரு உபன்யாசத்தில் கேட்ட தகவல்களாகும்.

-=-=-=-=-

Palaniappan Kandaswamy அருமையான தகவல்கள். தங்கள் ஞாபக சக்தியைப் பாராட்டிக் கொள்கிறேன்.
-=-=-=-=-

Aaranyanivas R Ramamoorthy ஆஹா...அருமை..vai Vai Gopalakrishnan Sir!

-=-=-=-=-

Vai Gopalakrishnan இன்னும் நகைச்சுவை கலந்து அந்த உபன்யாசகர் பல விஷயங்கள் சொன்னார். நான் சுருக்கோ சுருக்கென சுருக்கி இங்கு ஏதோ கொஞ்சம் மட்டுமே கொடுத்துள்ளேன். அதிலும் தியாகராஜரின் அண்ணாவைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் மிகவும் சிறப்பாகவும், சிரிப்பாகவும் இருந்தன. அதைப்பற்றி மட்டும் கொஞ்சூண்டு சொல்லி விடுகிறேன். (தொடரும்)

-=-=-=-=-

Vai Gopalakrishnan குடும்பத்தின் மூத்த பிள்ளையான ஜப்ஜேஷனை மூர்க்கன் என்று நாம் சொல்கிறோமே தவிர, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் குடும்பப் பொறுப்பை ஏற்று நிர்வகிப்பவர்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியும். ஒருவன் கஷ்டப்பட்டு, ஏதோ வருபவர்களுக்கெல்லாம் வேப்பிலை அடித்து, மந்திரித்து, சம்பாதிக்கும் காசில் எப்படி பலபேர்கள் சாப்பிட முடியும்? அதுபோன்றவர்களுக்கு கோபம் வரத்தான் வரும். 

அவனுக்கு இந்த பஜனைகள், தேவையில்லாமல் தன் வீட்டில் கூடி வரும் பாகவதாளின் வருகை, அவர்கள் கோவிந்தாசொல்லிக் கூத்தடிப்பது போன்றவைகள் சுத்தமாகப் பிடிக்காது. வரும் பாகவதாளை எல்லாம் கன்னா பின்னான்னு திட்டுவான். அங்கு அவன் இருக்கும் போது வருவோருக்கெல்லாம் மிகவும் கூச்சமாக இருக்கும்.

மற்ற பாகவதாள் எல்லோரும், தியாகராஜரின் அன்புக்காகவும், பக்திக்காகவும், பாண்டித்தத்திற்காகவும் வருகிறவர்கள். எல்லோரும் பஜனை + பூஜைகள் முடிந்து, அந்த வீட்டிலேயே பிரஸாதம் சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள்.
 

தன் தம்பியான தியாகராஜரை திட்டுவான் .... மொட்டுவான். நீ உஞ்சவிருத்தி எடுத்து அரிசி, பருப்பு கொண்டு வந்தால் போதுமா? நெய் எங்கிருந்து வரும்? நேற்று பகவதாளுக்கெல்லாம் ஒரு முட்டை நெய் கூடுதலாக ஊற்றச் சொன்னாயாமே. உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நீ வீட்டை விட்டு தனியே போய் விடுஎனக் கடுமையாகக் கத்துவானாம்.
 

பாட்டுச் சொல்லிக்கொடுத்தால், வருவோரிடமெல்லாம் அதற்கான சில்லரையைக் கறக்க வேண்டாமா, சும்மாவா சொல்லிக்கொடுப்பதுஎன தியாகராஜரைத் திட்டுவான். 

காலணா சம்பாதிக்கத் துப்பு இல்லாமல் வீட்டில் வெட்டிச் சோறு தின்றுகொண்டிருக்கிறாய்என்பான். இதில் உன்னுடன் கும்பலாக கோவிந்தா சொல்ல வெட்டியாகப் பத்து பேரு. அவாளுக்கும் இங்கே சாப்பாடுஎனக் கத்துவானாம்.

>>>>>

Vai Gopalakrishnan தியாகராஜர் சுதந்திரமாக பக்தி செய்ய முடியாமல் இடைஞ்சல் செய்வானாம். அவர் பூஜை செய்யும் போது, மோசமான பெண்களை வீட்டுக்குள் கூட்டிவந்து, தன் ஹார்மோனியப்பெட்டியை முடுக்கிவிட்டு பலக்க கத்த விட்டு அவர்களுக்குப் பாட்டு சொல்லித்தருவானாம். 

பரம ஸாத்வீகரான தியாகராஜருக்கு தலைவேதனையாக இருக்குமாம். சுவாதந்தரியமாக அவரால் பக்தி செய்ய முடியாதாம். தியாகராஜர் மிகவும் மரியாதையாக இருப்பாராம். தன் அண்ணாவாகவும் போய்விட்டதால், அவரை துஷ்டன் என்றும் அவரால் சொல்லவும் முடியாதாம். அண்ணாவுடன்தான் தான் சேர்ந்து இருக்கணும். நம்மால் தனியாக வாழ முடியாது. தானாகவே தனியாகப் பிரிந்து போறேன் என்றும் சொல்ல முடியாது. இதுபோன்ற தர்ம சங்கடத்தில் தியாகராஜர் இருந்து வந்துள்ளார்.

குடும்பத்தில் வறுமை. தினமும் தியாகராஜரைப் பார்க்க வருவோர் போவோர் பலபேருக்கு அதிதி சத்காரம். போதிய வருமானம் இல்லாததால், ஒரு நாள் சண்டை முற்றி வீட்டை விட்டு வெளியே போடாஎனச் சொல்லி விட்டானாம் அவரின் அண்ணா.
 

ராவணன் உன்னால்தான் குலம் கெட்டதுஎன் விபீஷனனைப் பார்த்து சொன்னானாம். அதுபோல உள்ளது இதுவும்.
 

>>>>>

Vai Gopalakrishnan வேறு வழியே இல்லாமல், அப்போது அவரும் அவர் மனைவியும் தன் அண்ணா வீட்டைவிட்டு வெளியேறி தனி ஜாகை பார்த்துக்கொண்டு போகும் போதும், தன் அண்ணாவிடம் வேறு எதுவும் உதவிகள் கேட்கத்தோன்றாமல், “அண்ணா, நம் அப்பா பூஜை செய்துவந்த ராமனை மட்டும் நான் எடுத்துக்கொண்டு போய் விடுகிறேன் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாராம். அவருக்குத் தெரிந்தது + அவருக்கு வேண்டியது அது மட்டும்தான். 

அவனும் சரியென்று சொல்லி அதை மட்டும் எடுத்துக்கொண்டு, சீக்கரமாக வீட்டை விட்டு வெளியே போய்த்தொலைஎன்றானாம். வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தனி ஜாகையில் போய் அமர்ந்தும் விட்டார்.
 

நித்தியப்படி சாப்பாட்டுக்கு உஞ்சவிருத்தி உள்ளது. அவர் புகழ் மேலும் மேலும் பரவப் பரவ ரத்னமான சிஷ்யர்கள் அவருக்கு, அவரிடம் வந்து சேர்ந்தார்கள்.
 

அவர்களில் வாலாஜா பேட்டையிலிருந்து வந்து சேர்ந்த வெங்கட்ராம பாகவதர் என்பவர் மிகவும் முக்கியமானவர். நன்னா தளதளன்னு குண்டா இருப்பாராம். ஸ்வாமிகளிடம் அபார பக்தி அவருக்கு. ஸ்ரீராமருக்கு ஆஞ்சநேயர் போல நம் தியாகராஜ ஸ்வாமிகளுக்கு இந்த வாலாஜா பேட்டை வெங்கட்ராம பாகவதர். விநயத்திலும் அவர் மிகவும் சிறந்தவர்.
 

அவருக்கு கட்டைத் தொண்டையாக இருந்து சங்கீதம் வராததால் கோட்டு வாத்யம்வாசிக்க தியாகராஜரே சொல்லிக்கொடுத்தாராம். இந்த வெங்கட்ராம பாகவதர்தான், தியாகராஜர் மேல் தியாகராஜ அஷ்டகம்ஒன்று வெளியிட்டுள்ளார். அது மிகவும் சிறப்பானதாகும்.
 

தியாகராஜருக்கும், இந்த வாலாஜா பேட்டை வெங்கட்ராம பாகவதருக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பினை மிகச் சுவையாகவும், நகைச்சுவையாகவும், மிகச் சிறப்பாகவும், சிரித்து மகிழும் படியும் அந்த உபன்யாசகர் சொல்லியிருந்தார். அதையெல்லாம் சொல்லிக் கொண்டே போனால் இங்கு இடமே இருக்காது.
 



Palaniappan Kandaswamy இடத்தைப் பற்றி கவலைப் படாதீங்கோ. என்ன விலையானாலும் வாங்கி விடலாம். எங்களுக்கு உங்களின் முழுக்கதையும் நிச்சயமாக வேண்டும். 

Aaranyanivas R Ramamoorthy இங்கேயே எழுதுங்கோ ஸார்...
தாஸனா கேட்க காத்துக் கொண்டு இருக்கிறோம்...
-=-=-=-=-

Vai Gopalakrishnan :) //Aaranyanivas R Ramamoorthy இங்கேயே எழுதுங்கோ ஸார்... தாஸனா கேட்க காத்துக் கொண்டு இருக்கிறோம்...//

:) அடாடா .... தங்கள் ஸித்தம் ..... என் பாக்யம் :)தொடர்கிறேன். :) :)


-=-=-=-=-

Vai Gopalakrishnan 1)

தன் அண்ணாவிடமிருந்து பிரிந்து, தனி ஜாகை பார்த்து வந்து விட்ட தியாகராஜரின் புகழ் எங்கும் பரவ ஆரம்பித்து விட்டது. அவர் செய்துவரும் நித்தியப்படி ஸ்ரீராம பூஜைக்காகவும், அவருடைய சங்கீத கீர்த்தனைகளை கேட்டு ரஸிப்பதற்காகவும், பெரிய மஹானாகிய அவரை நேரில் தரிஸிப்பதற்காகவும் பல ஜனங்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
 

>>>>>

Vai Gopalakrishnan 2)

அவருடன் கூடவே உஞ்சவிருத்திக்குச் செல்வதற்காகவும், அவருடன் சேர்ந்தே பூஜை பஜனை முதலியவற்றில் கலந்துகொண்டு, அதன்பிறகு அவர் வீட்டிலேயே தங்கிக்கொண்டு, வேளாவேளைக்கு பிரஸாதங்கள் சாப்பிடுவதற்காகவுமாக, குருவுக்கு ஏற்ற ரத்னமாக பல சிஷ்யர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள்.
 

கண்ணுக்கு விருந்து, காதுக்கும் விருந்து, வயிற்றுக்கும் விருந்து என அவர் வீடே சிஷ்ய சம்பத்துக்களால் நிறைந்து வழிந்து ஜே ஜே என இருந்து வந்தது.
 

>>>>>

Vai Gopalakrishnan 3)

அவரும் மிகுந்த சந்தோஷமாக, ஸதா ஸர்வகாலமும் ஸ்ரீ ராம நிஷ்டையுடன், தனது நித்ய அனுஷ்டானங்களைச் செய்துகொண்டு இருந்து வரலானார். காலையில் எழுந்ததும் பெருமாளுக்கு ஸுப்ரபாதம், அதன்பின் ஸ்ரீராம நாம ஜபம், காவிரி ஸ்நானம், பஜனை செய்துகொண்டு உஞ்சவிருத்திக்குச்
 சென்று வருதல், ஸ்ரீராமருக்கு நித்யப்படி பூஜை, வந்திருக்கும் பாகவதாள் + பக்தர்கள் அனைவருக்கும் அதிதி சத்காரம் முதலியன தினமும் குறைவில்லாமல் நடைபெற்று வந்துகொண்டிருந்தன. 

>>>>>

Vai Gopalakrishnan 4)

அதன் பின் மத்யான வேளையில் தன் சிஷ்யப்பிள்ளைகளுக்கும், மற்றும் வேறு சில விரும்பி பாட்டுகள் கற்க விரும்புவோருக்கும், ராக ஆலாபனைகளுடன் வாய்ப்பாட்டு, கீர்த்தனைகள் சொல்லித் தருவது அவரின் வழக்கமாகும். சாயங்காலம் காவிரியில் நித்யப்படி அனுஷ்டானம். திரும்ப
 சாயங்கால பஜனைகள், பூஜைகள், இரவு டோலோத்ஸவம் என அவருக்கு தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும்வரை, இவ்வாறு ஸ்ரீராமனுடன் செலவழிக்க மட்டுமே நேரம் சரியாக இருந்து வந்தது. 

>>>>>

Vai Gopalakrishnan 5)

தியாகராஜர் வெறும் வாய்ப் பாட்டுப்பாடுபவர் மட்டுமல்ல. இவர் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார். வேதம் படித்துள்ளார், சாஸ்திரங்கள் யாவும் படித்துள்ளார். வியாகரணத்தில் மஹா பண்டிதர். அவர் கிருதிகளைப் பார்த்தாலே தெரியும். சில சொற்களை சம்ஸ்கிருதத்தில் அவரே சொந்தமாகத் தயாரித்து உபயோகித்துள்ளார். ஸங்கீத ஞானத்திலோ கேட்க வேண்டியதே இல்லை. சாஹித்யத்தில் இவருக்கு ஈடு இணையே கிடையாது. ஜோஸ்யத்திலும் சிறந்தவர். எல்லாவற்றிற்கும் மேலே விநயத்தில் சிறந்தவர். வித்தைகளை விட விநயமே (தான் என்ற கர்வம் இல்லாத தன்னடக்கம் + பெளவ்யம்) மிகவும் சிறந்தது. விநயத்தில் இவர் ஆஞ்சநேய ஸ்வாமி போன்றவர்.
 

>>>>>

Vai Gopalakrishnan 6)

இவர் புகழ் பரவப் பரவ நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இவரைக் காணவும், இவரின் பஜனைப் பாடல்களைக் கேட்டு மகிழவும், இவர் செய்யும் ஸ்ரீராம பூஜையைக் கண்டு களிக்கவும் தினசரிக் கூட்டம் கூடிக்கொண்டே வந்தது.
 

அதுபோல வந்து சேந்தவர்களில் ஒருவர்தான் வாலாஜா பேட்டை வெங்கடரமண பாகவதர். ஒரு மாதமாகவே தியாகராஜர் அருகிலேயே நின்று மெய்மறந்து அவரின் கீர்த்தனைகளைக் காதால் கேட்டுக்கொண்டு, அவர் செய்யும் பூஜைகளைக் கண்ணால் கண்டு களித்துக்கொண்டு இருந்து வருகிறார். அவருடன் உஞ்சவிருத்திக்கும் சென்று வருகிறார். காலையிலேயே வந்து விடுவார். வரும்போதே வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுவார். மத்யானம் காவிரிக்கரையில் சாப்பிட்டு விட்டு, இரவும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, அதன் பின் திருவையாறு அருகேயுள்ள ஏதோவொரு ஊரில் உள்ள தன் கிராமத்து ஜாகைக்குக் கிளம்பிப் போய் விடுவார். ஆனால் அவர் தியாகராஜரை இன்னும் நெருங்கி வரவே இல்லை. தியாகராஜரும் இவரை சரியாக கவனிக்கவும் இல்லை.
 

>>>>>

Vai Gopalakrishnan 7)

ஒருநாள் நல்ல கடும் வெயில் காலம். தன் வீட்டின் பெரிய முற்றத்தில் தன் சிஷ்ய பிள்ளைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போது சொல்கிறார்:

பிள்ளைகளே, வெயில் ஜாஸ்தியாக உள்ளது. இந்த முற்றத்தில் வெயில் அடிக்காமல் ஓர் கோடைப் பந்தல் போட்டால் தேவலாம். யாரிடமாவது சொல்லி கொஞ்சம் பணம் கடனாக வாங்கி ஓர் பந்தல் போட ஏற்பாடு செய்யுங்கோ. நான் அடுத்த 2-3 நாட்களுக்கு மட்டும் திருவாரூர் செல்ல வேண்டியுள்ளது. அங்கு குத்தகைக்காரரிடம் கொஞ்சம் நிலம் கொடுத்துள்ளேன். அவர் நெல் தருவார். அதைத் தூக்கி வர முடியாததால் அங்கேயே விற்று விட்டு, கொஞ்சம் பணத்துடன் வருவேன். நான் கொண்டுவரும் பணத்தில் அந்த மூங்கில், கீற்று பந்தலுக்கான பணத்தைக் கொடுத்து கடனை அடைத்துவிடலாம்என்று சொல்லுகிறார். அவ்வளவு ஒரு நேர்மையானவர். யாரையும் அவர் செலவிலேயே பந்தல் போடச்சொல்லி கேட்கவும் மாட்டார். வற்புருத்தவும் மாட்டார்.
 

>>>>>

Vai Gopalakrishnan 8)

2-3 நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார். கையில் நியாயமாக ஏதோ கொஞ்சம் பணமும் கிடைத்து எடுத்து வந்திருந்தார். புதிதாக பந்தல் போட்டுள்ளதைப் பார்த்தார். சந்தோஷத்துடன் பிள்ளைகளை அழைத்தார்.
 

பந்தல் யார் போட்டார்கள்? அதற்கு எவ்வளவு பணம் ஆச்சு? அந்தக்கணக்கு எங்கே?” என்று கேட்டார்.

>>>>>

Vai Gopalakrishnan 9)

ஒரே நாளில் ஒருத்தரே கொண்டு வந்து இங்கே இந்தப் பந்தலைப் போட்டு விட்டார். அவர் பணம் ஏதும் கேட்டு வாங்கிக்கொள்ளவே இல்லைஎன்றனர் சிஷ்யப்பிள்ளைகள்.

ஒரே நாளில் அதுவும் ஒருத்தரே போட்டாரா? யார் அவர்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் தியாகராஜர்.

கடந்த ஒரு மாசமாக இங்கே வந்து ஒரு ஓரமாக நின்று கொண்டு இருக்கிறாரே, குண்டாக ஒருத்தர் .... நம்முடன் உஞ்சவிருத்திக்குக்கூட வந்து கொண்டிருக்கிறாரே, அவர்தான் இந்தப் பந்தலைப் போட்டார்என்றனர் சிஷ்யப் பிள்ளைகள்.

ஒரு மாதமாக வருகிறாரா? நான் யாரென்று கவனிக்கவே இல்லையே. இன்று வந்தால் என்னிடம் சொல்லுங்கோஎன்றார், தியாகராஜர்.

>>>>>

Vai Gopalakrishnan 10)

ஒதுங்கி ஓரமாக நின்று கொண்டிருந்த வெங்கடரமணன், தியாகராஜர் அருகே வந்து, மிகவும் விநயத்துடன் அவரை வணங்கி நமஸ்கரித்து விட்டு அடியேன் பெயர் வெங்கடரமணன் என்று சொல்லுவார்கள். என் ஊர் காஞ்சீபுரம் அருகேயுள்ள வாலாஜா பேட்டை. ஸ்வாமிகளின் புகழைக் கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். தாங்கள் சிஷ்யப்பிள்ளைகளிடம், கோடைப் பந்தல் போட வேண்டும் என்று அன்று சொல்லிக் கொண்டிருந்தது அடியேன் காதினில் விழுந்தது. இந்த ஒரு சின்ன கைங்கர்யத்தை, நானே செய்யணும் என நினைத்துக்கொண்டு செய்து விட்டேன்என்று மிகவும் அடக்கத்துடன் சொல்லி முடித்தார்.
 

>>>>>

Vai Gopalakrishnan 11)

நீ ஏன் ஒண்டியாகப் பண்ணனும்? எப்படிப்பண்ணினாய்?” என்று கேட்டார் தியாகராஜர்.

என் சொந்த ஊர் தான் வாலாஜா பேட்டை. என் வேட்டாம் (மாமனார்-மாமியார்-மனைவியின் வீடும் ஊரும்) இங்குள்ள அய்யம்பேட்டை என்ற கிராமம். அங்கு என் வேட்டாத்து .... அவாத்து வாசலில் (அவர்கள் வீட்டு வாசலில்) புதிதாகக் கோடைப் பந்தல் போட்டிருந்தார்கள். அதைப் பிரித்து வந்து இங்கு போட்டுட்டேன். அங்கு எதற்கு அநாவஸ்யமாக ஒரு பந்தல் என நினைத்து, அதைப்பிரித்து வந்து இங்கு போட்டு விட்டேன்என்று அடக்கத்துடன் சொன்னார்.

>>>>>

Vai Gopalakrishnan 12)

அப்படியா, பரவாயில்லை. சந்தோஷம். உமது பெயர் என்னவென்று சொன்னீர்?” எனத் தியாகராஜர், சிரித்துக்கொண்டே மீண்டும் கேட்டுக்கொண்டு, அன்றுமுதல் அவரைத் தன் நெருங்கிய சிஷ்யர் ஆக்கிக் கொண்டு விட்டார்.

தியாகராஜ ஸ்வாமிகள் மேல் அபரிமிதமான பக்திகொண்டவர் இந்த வெங்கடரமணர். ஸ்ரீராமருக்கு ஆஞ்சநேயர் போல தியாகராஜருக்கு இந்த வெங்கடரமணர்.
 

அன்றுமுதல் அங்கேயே தியாகராஜர் வீட்டிலேயே தங்கிக்கொண்டு, அவரின் பிரதான சிஷ்யராகவும் ஆகி, அவர் வீட்டிலேயே தியாகராஜப் பிரஸாதங்கள் சாப்பிட்டுக்கொண்டு, அவர் மேல் தியாகராஜாஷ்டகம்என்ற ஒரு மிகச்சிறப்பான பாடலை மிக அருமையாக எழுதியுள்ளார்.
 

இது போதுமா ஸ்வாமீ ! 
 :) 

-oOo-

Aaranyanivas R Ramamoorthy ஆஹா....அற்புதமாக இருக்கு சார்!