ஆடம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஜனவரி, 2015

கார் வாங்குகிறீர்களா?

                                        

பொருளாதாரப் பாடத்திலே மனிதனின் தேவைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. அத்தியாவசியத்தேவைகள். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இதில் அடங்கும்.

2. சௌகரியங்கள். ஒரு இரு சக்கர வாகனம், படுக்க ஒரு கட்டில் மெத்தை, மின் விசிறி இப்படியாக வாழ்வதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் சில சௌகரியங்கள்.

3. ஆடம்பரப்பொருட்கள். அதிக பொருட் செலவில் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் இதில் அடங்கும். பெரிய குளிரூட்டப்பெற்ற பங்களா, பெரிய கார், அத்தியாவசிய, தானாகச் செய்யக்கூடிய வேலைகளுக்குக் கூட ஆட்கள், இப்படி பல சமாச்சாரங்கள்.

நடைமுறை வாழ்க்கையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போவதற்கு அனைவருமே முயற்சி செய்கிறோம். சைக்கிள் வைத்திருப்பவர் ஸ்கூட்டர் வாங்க ஆசைப் படுகிறார். ஸ்கூட்டர் வைத்திருப்பவர் கார் வாங்க ஆசைப் படுகிறார். இவ்வாறு ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நேர்மையான வழியில் பொருள் ஈட்டி இவ்வகையான ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால் அந்தப் பொருட்களினால் சந்தோஷம் வரும்.

அப்படியில்லாமல், நான் முன்பு ஒரு பதிவில் சொன்ன மாதிரி கஞ்சா விற்று சம்பாதித்திருந்தால் அந்த வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பமே மிகுந்திருக்கும்.

இந்த தேவைகளில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இவைகளை ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்வதுதான். அதாவது எது அத்தியாவசியம், எது ஆடம்பரம், எது சௌகரியம் என்பதில் ஏற்படும் குழப்பங்கள்தான் ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடு வருவதற்குக் காரணமாக அமைகிறது.

கல்லூரியில் படிக்கும் மகன் ஒரு கைத் தொலைபேசி வேண்டும் என்று விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் படிப்பிற்கும் கைத்தொலை பேசிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.  ஆனாலும் அவன் விரும்புகிறான் என்று தகப்பன் வாங்கிக்கொடுக்கிறான். அவன் ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயில் வாங்கலாம் என்று நினைத்திருப்பான். ஆனால் மகனோ லேட்டஸ்ட் ஆக வந்திருக்கும் ஐபோன் 50000 ரூபாய் விலையில் வேண்டுமென்று கேட்பான்.

வம்பு வந்து விட்டதல்லவா? இதுதான் இன்றைய தலைமுறையினரின் வியாதி. அந்த தகப்பன் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தக் கைபேசியை வாங்கிக் கொடுத்து விட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்பு நடப்பவற்றை நாம் வெகு சுலபமாக யூகித்துக்கொள்ளலாம்.

இன்று ஒரு புருஷனுக்கு வேலை உயர்வு வந்து  ஐந்து இலக்க சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டான் என்றால் உடனே அவன் மனைவிக்கு ஏற்படும் ஆசை ஒரு கார் வாங்கலாமே என்பதுதான். தன் புருஷனுடன் வேலை பார்க்கும் ஒருவன் கார் வாங்கி விட்டான் என்று அவன் பெண்டாட்டி பீத்திக்கொள்கிறாள். நாம் எப்போது கார் வாங்குவது என்று அவள் தினமும் புருஷனை நச்சரிப்பாள். புருஷனும் இந்த நச்சரிப்புத் தாங்காமல் அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு காரை வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு சனி திசை ஆரம்பமாகிவிட்டது என்று பொருள். தன்னுடைய நிலைக்கு மேல் ஆசைப்படும் எந்தப் பொருளும் ஆடம்பரம்தான். தகுதிக்கு மீறிய ஆடம்பரம் துன்பத்தையே கொண்டுவரும்.

கார் வாங்குவதைப் பற்றி எழுதுமாறு ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார், "வரவு எட்டணா செலவு பத்தணா, மீதி இரண்டணா துந்தனா" என்று ஒரு சினிமாவில் பாடினார்கள். ஆடம்பரச் செலவுகள் சொய்து அந்தக் குடும்பம் எப்படி சிதறுண்டு போனது என்று அந்த சினிமாவில் துல்லியமாகக் காட்டினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது யாரால் முடியும் என்றால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர்களால் மட்டுமே முடியும். காரின் விலை குறைந்த பட்சம் ஆறு லட்சம் ஆகும். இதில் கடன் வாங்கினால் 2 லட்சம் கைப் பணம் 4 லட்சம் கடன் என்று வைத்துக்கொண்டால் மாதம் ஏறக்குறைய ஏழாயிரம் ரூபாய் அந்தக் கடனுக்காக கட்டவேண்டிவரும்.

குடும்பச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, பொழுதுபோக்கு செலவுகள், உடை, வேலைக்காரர்கள், குழந்தைகளுக்கான எதிர்காலச் சேமிப்பு, தன்னுடைய பென்ஷனுக்கான சேமிப்பு, வருமான வரி இப்படி கணக்குப் பார்த்தால் ஒரு லட்சம் வருமானம் வாங்குகிறவன் கூட செலவுகளைச் சமாளிக்கத் திணறித்தான் போவான்.

கார் வைத்துக்கொள்ள அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தனியாக அலவன்ஸ் கொடுக்காத பட்சத்தில் கார் பெரிய சுமையாக மாறி விடும்.

ஒரு காரின் நேரடி செலவுகள், மறைமுக செலவுகள் என்னென்ன என்று நான் கணக்குப்போட்டு வைத்துள்ளேன். அதைப் பாருங்கள்.

1. காரின் விலையான 6 லட்சத்திற்கு வட்டி மாதம் ஒன்றுக்கு  ரூ.6000
2. டிப்ரீஷியேஷன்                                                        "              "                ரூ.5000
3. கார் சர்வீஸ், இன்சூரன்ஸ், சில்லறை ரிப்பேர்             "                ரூ.2000
4. பெட்ரோல் 500 கி.மீ. ஓட்டம்                                  "             "                 ரூ.2000
                                                                                                                               --------------
                                                                               மொத்தம்                            ரூ.15000
                                                                                                                               --------------

கார் மாமனார் வீட்டு சீதனமாக இருந்தால் முதல் இரண்டு செலவுகள் இல்லை.

இது தவிர நீங்கள் கார் வைத்துக்கொண்டு இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது எங்காவது சுற்றுலா செல்லவேண்டி வரும். அதற்கான செலவுகளைக் கூட்டிக்கொள்ளவும்.

காரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கப்போனால் வெறும் கையுடனா போகமுடியும். முன்பு பஸ்சில் போகும்போது ஒரு பிஸ்கட் பேக்கட் வாங்கிப்போனால் போதும். ஆனால் காரில் போகும்போது ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்வீட் இப்படி வாங்கிக்கொண்டு போனால்தான் காரில் செல்வதற்கு அடையாளம்.

இப்படியாக கார் வாங்குவது முற்றிலும் ஆடம்பரச் செலவே. அதற்கான வசதி இருந்தால் செய்யலாம்.