உலகம் பலவிதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் பலவிதம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பதிவுகளும் பின்னூட்டங்களும்.

பதிவுகளுக்கு யார் பின்னூட்டம் போடுகிறார்கள்? உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள், அல்லது நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கும் பதிவர்க்ள, இப்படி. இவை தவிர பின்னூட்டங்கள் அதிகமாக எந்தப் பதிவுகளுக்கு வருகிறது என்று என் பதிவுகளை வைத்து சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு வித்தியாசமான கருத்து அல்லது பலரும் பல வகையான கருத்துகள் வைத்திருக்கும் ஒரு பிரச்சினை, இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. அதில் பல வசை பாடுகின்றனவாக இருக்கும். அப்படிப்பட்ட வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதிவுகள் எழுத மாட்டார்கள். எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் வரமுடியாத பதிவுகளாக எழுதுவார்கள்.

எனக்கு அப்படிப்பட்ட உப்புச் சப்பு இல்லாத பதிவுகள் எழுதுவதில் அவ்வளவு விருப்பமில்லை. பதிவுகள் காரசாரமாக இருக்கவேண்டும். பலருடைய சிந்தனைகளைத் தூண்டி விடவேண்டும். மாற்றுக்கருத்துகளும் வசைகளும் வரத்தான் செய்யும். அவைகளை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் தனித்துவம் இருக்கிறது.

இந்த ஆள் இப்படித்தான் வம்பில் மாட்டிக்கொள்வார் என்று பலரும் சொல்லலாம். சண்டை வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் ஆழமான விவாதம் செய்ய யாரும் முன் வருவதில்லை. இப்போது வரும் பதிவுகளில் பெரும்பாலும் அப்படித்தான் வருகின்றன. நிஜவாழ்க்கையில் இருக்கும் அக்கப்போர்களே போதும், பதிவுகளில் வேறு அக்கப்போர் எதற்கு என்று பல பதிவர்கள் பதிவுலகை விட்டே போய்விட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்சம் பதிவர்களும் ஆன்மீகப் பதிவுகள், சமையல் குறிப்புகள், கை வைத்தியம், கணினி பராமரிப்பு இப்படி பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நான் எழுதக் காரணம் இன்று ஒருவர் என் பழைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு அந்தப் பதிவே மறந்து போயிருந்தது. தலைப்பைப் பார்த்ததும் யாரோ எழுதிய பதிவு போல என்று நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அது நான் எழுதிய பதிவு.

அதைப்போய் படித்தேன். அந்த பதிவின் தலைப்பு -

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.

அந்தப் பதிவு மிகவும் காரசாரமாய் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று படித்துப் பாருங்கள். அதில் பதிவை விட பின்னூட்டங்கள்தான் காரம் கொண்டவை. அது மாதிரி விஷயங்கள் சமீப காலமாகக் கிடைப்பதில்லை.
இனிமேல் பதிவுகள் எழுதினால் அந்த மாதிரிதான் எழுதவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

திங்கள், 2 டிசம்பர், 2013

உலக மகாத் திருட்டு


திருட்டு என்றால் என்ன என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்திருப்பீர்கள். பொதுவான கருத்து, நமக்குச் சொந்தமில்லாத, அடுத்தவர்களின் பொருளை நாம் எடுத்துக் கொள்வதை திருட்டு என்று வைத்திருக்கிறோம்.

இதில் சில்லறைத்திருட்டு முதல் கோடிக்கணக்கான திருட்டு வரை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. திருட்டு என்பது திருட்டுக்கொடுப்பவனுக்குத் தெரியாமல்தான் எல்லாத் திருடர்களும் செய்வார்கள். ஆனால் விழித்திருக்கும்போதே கண்ணா முழியைத் திருடும் திருடர்களும் உலகத்தில் உண்டு.

சிலர் தோலிருக்க சுளை விழுங்கிகளாக இருப்பார்கள். நம் பொருள் தம்மிடம் இருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் அது நம்மிடம் இருக்காது. ம்யூச்சுவல் பண்டில் போடும் பணம் இந்தக் கதைதான். சில பாங்குகளிலும் ரொம்ப நாள் நீங்கள் போகவில்லையென்றால் தோலிருக்க சுளை விழுங்கிவிடுவார்கள்.

சில அரசியல்வாதிகள் நாட்டை விற்று விடுகிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இது அக்கிரமம் என்றும் அநியாயம் என்றும் வாயால் பேசிக்கொண்டே நாம் சில நாளில் மறந்து விடுகிறோம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். விவசாயிகள் நிலத்தை உழும்போது பக்கத்து நிலத்துக்காரன் ஏமாந்தவனாக இருந்தால் ஒரு "சால்" அவன் நிலத்தையும் சேர்த்து உழுவது வழக்கம். இந்த மாதிரி விவகாரங்களில் கோர்ட், கேஸ், வெட்டு, கொலை என்று முடிவதும் உண்டு.

ஆனால் ஒரு தேசத்து மக்கள் தங்களுக்கு பாத்தியப்படாத கடல் பிரதேசத்திலிருந்து நிலத்தைத் திருடியிருக்கிறார்கள். கடலை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த நிலத்தை அபகரித்திருக்கிறார்கள். இது உலக மகாத் திருட்டல்லவா?

இப்போது நெதர்லாந்து என்று அழைக்கப்படும் அந்தக் காலத்து ஹாலந்து மக்கள் கடலோரத்தில் வெகு தூரத்திற்கு கடல் ஆழமில்லாமல் இருந்ததைப் பயன்படுத்தி கடலில் சுவர் கட்டி நிலத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சுவர்களுக்கு டைக்ஸ் (Dikes)  என்று பெயர்.

இந்த நிலங்களை பண்படுத்தி காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இது வேறு எங்கும் காண முடியாத அதிசயம்.

இப்போது சொல்லுங்கள், நெதர்லாந்துக் காரர்களை நான் திருடர்கள் என்று சொன்னது சரிதானே?

இந்த அதிசயத்தைப் பார்க்க அன்று மதியத்திற்கு மேல் நான் போனேன். அந்த நிலங்கள் முழுவதும் நல்ல விவசாயம் செய்திருந்தார்கள். செடிகள் செழிப்பாக வளர்ந்திருந்தன. இந்த பூமி முழுவதும் கடல் மட்டத்திற்கு பல அடிகள் கீழே இருக்குறது என்று சொன்னால்தான் புரியும். பல இடங்களில் ராட்சத மோட்டார்கள் வைத்து கடலிலிருந்து கசிந்து வரும் நீரை அவ்வப்போது வளியேற்று கடலுக்கே அனுப்பி வைக்கிறார்கள். பார்க்கப் பார்க்க மலைப்பாக இருக்கிறது.

இந்த டைக்ஸ் பற்றிய கதை ஒன்று சிறு வயதில் அநேகமாக அனைவரும் படித்திருப்போம். ஒரு நாள் இந்த சுவற்றில் ஒரு சிறு துவாரம் தோன்றி அதன் வழியாக கடல் நீர் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு சிறுவன் இந்த ஓட்டையை உடனே அடைக்காவிட்டால் இது பெரிதாகி இந்த சுவர் முழுவதுமே இடிந்து விடலாம் என்று யோசித்து அந்த ஓட்டையில் தன் விரலை வைத்து அடைத்தான். தண்ணீர் கசிவது நின்று விட்டது.

அவன் பல மணி நேரம் இவ்வாறு நின்று கொண்டிருந்தும் அந்த வழியாக யாரும் வரவில்லை. வெகு நேரம் கழிந்த பிறகே அந்த வழியாக வந்த காவல்காரன் இதைப் பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் வந்து அந்த ஓட்டையை சரி செய்தார்கள். அந்தப் பையனின் வீரத்தைப் பாராட்டி அந்த ஊரில் அவனுக்கு ஒரு சிலை எழுப்பினார்கள்.

இந்தக் கதை கர்ண பரம்பரையாக எல்லா ஊர்களிலும் பள்ளிகளில் பாட புத்தகங்களில் வரும்.

இப்படி அந்த இடத்தில் போட்டோக்கள் எடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருட்டாக ஆரம்பித்தது. நான் இந்த இடத்திற்கு ஒரு பஸ்சில் வந்தேன். இறங்கிய இடத்தில் ஒரு சிறிய ரெஸ்ட்டாரென்ட் மட்டும் இருந்தது. வேறு ஒரு கட்டிடங்களும் இல்லை. நான் இந்த இடத்திற்கு அடிக்கடி பஸ்கள் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த ரெஸ்டாரென்டில் போய் விசாரித்தால் பஸ் "வரும், ஆனால் வராது" என்கிற ரீதியில் பதில் சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு வழியையும் காணோம். குளிர் வேறு. நாம் ஓட்டிலுக்குத் திரும்ப முடியாவிட்டால் இந்தக் குளிர் பிரதேசத்தில் என்ன செய்வது என்ற கவலை மனதைப் பிடித்துக்கொண்டது.

மீதி அடுத்த பதிவில்.