காது குடைதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காது குடைதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 ஜனவரி, 2013

காது குடைதல் எப்படி?


ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி இப்படிக் கேட்டு விட்டார்.

"காது குடைவது எப்படி?" என்பது உங்கள் அடுத்த பதிவு என்பதை

எதிர்பார்க்கலாமா சார்?

அவருடைய ஆசையை நிறைவேற்றுவதை விட வேறென்ன வெட்டி முறிக்கப் போகிறேன். ஆதலினால் இந்தப் பதிவு.

காது குடைதலினால் வரும் இன்பம் தெனாலிராமன் சொல்லிய சுகத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல. அனுபவித்தவர்களுக்குத்தான் இது தெரியும்.

திரு.சக்திவேல் சொல்லுகிறார்:

எஸ் சக்திவேல் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுத்துச் சென்றுள்ளார்"கால் கழுவுவது எப்படி?": 
காது குடைவது ரொம்ப ஆபத்தானது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 

இது எல்லாம் நிலாவில பாட்டி வடை சுடுகிற கதை. "ஈஎன்டி" வைத்தியர்கள் தங்களுக்கு வரும்படி போய்விடுமே என்பதற்காக கட்டிவிட்ட கதை. எங்கே, காது குடைந்ததால் காது செவிடாய்விட்டது என்பதற்கு ஒரு உதாரணம் காட்ட முடியுமா? முடியாது. ஏனென்றால் இறைவன் காதைப் படைத்ததே, காது குடைவதற்காகத்தான்.

இந்த டாக்டர்கள் இந்தக் காது குடைதலில் உள்ள சூட்சுமம் புரியாமல் பேசுகிறார்கள். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இருக்கிறது இவர்களின் பேச்சு. அது எப்படி என்று கடைசியில் விளக்குகிறேன்.

தேவலோகத்தில் கூட இந்த சுகம் இல்லையென்று நினைக்கிறேன். ஏனென்றால் எந்தப் புராணத்திலும், எந்தக் கடவுளோ அல்லது தேவர்களோ, காது குடைந்ததாக எழுதப் படவில்லை. அது போலவே, தெனாலிராமன் கூறிய சுகமும் அங்கு இல்லையென்று தெரிகிறது. அப்புறம் எதற்காக மக்கள் தேவலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) போக ஆசைப் படுகிறார்கள் என்று புரியவில்லை.

இது நிற்க, சப்ஜெக்ட்டுக்கு வருவோம். காது குடைதல் என்றால் என்ன? அவ்வப்போது காதிலே நமைச்சல் உண்டாகும். இது இறைவன் கொடுக்கும் வரம். அப்போது காதுக்குள் எதையாவது விட்டுக் குடைந்தால் மிகவும் சுகமாக இருக்கும். இந்த சுகத்திற்கு ஈடு இணை கிடையாது. அப்படியே மெய்மறந்து போகும்.

இதை சைன்டிபிக்காக எப்படி குடைவது என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.

காது குடைவதற்கான உபகரணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. அவரவர்கள் சுண்டு விரல் : இதுதான் அவசரத்திற்கு கிடைக்கக் கூடியது. சுண்டு விரலை காதுக்குள் விட்டு குடையலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதுக்குள் அதிக தூரம் இந்த விரல் உள்ளே போகாது. அதனால் காது குடைவதின் சுகம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

2. அடுத்து அவசரத்திற்கு உபயோகப் படக்கூடியது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் சாவி. இது ஓரளவிற்கு காதினுள் புகும். இதனால் குடையும்போது ஓரளவிற்கு சுகமாயிருக்கும்.

3. நீங்கள் அலுவலகத்தில் இருந்தீர்களானால் உங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியவை, பென்சில் அல்லது பால்பாய்ன்ட் பேனா. இவைகள் நல்லவையே. என்ன, பென்சிலின் கூர் உடைந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டியிருக்கும்.

4. துண்டு பேப்பர்: இது ஆபீசிலும் வீட்டிலும் தாராளமாகக் கிடைக்கும். இதை ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி, கூப்பு வடிவத்திற்கு கொண்டு வந்து, கூராக இருக்கும் முனையை சிறிது மடக்கி விட்டு, உபயோகிக்கலாம். தினசரி காலண்டர் தாளைக் கிழித்தவுடன் அநேகர் செய்யும் முதல் காரியம் இதுதான். இது எந்த விதமான ஆபத்தும் இல்லாதது.

5. பறவைகளின் இறகுகள்: இவை இயற்கை நமக்குக் கொடுத்த வரம். இதனால் காதைக் குடையும்போது அப்படியே வானத்தில் சஞ்சரிப்பது போல உணர்வீர்கள்.

6. "இயர்பட்ஸ்" (earbuds): இவை ஓரளவிற்கு பாதுகாப்பானவை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மெடிகல் ஷாப்புகளில் விற்பது. இது விலை அதிகம். அடுத்தது, வீட்டில் தயார் செய்வது (Home-made). இது ரொம்பவும் செலவில்லாதது. ஊர்க்குச்சியை எடுத்து ஒரு முனையில் கொஞ்சம் பஞ்சை வைத்து திருகினால் "இயர்பட்" தயார்.

ஆனால் ஒரு அக்கிரமம் பாருங்கள், இதையும் டாக்டர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

இப்படியெல்லாம் காது குடைந்து வரும் சுகத்திற்கு ஏதாவது விலை கொடுக்கவேண்டாமா? இப்படி குடைவதால் காது டிரம்மில் போய் குத்தி, காது செவிடாகிவிடும் என்று டாக்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். காது டிரம் இறைவனால் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமென்றே அதை கெடுக்கவேண்டும் என்றாலும் முடியாது.

பிறகு என்ன நடக்குமென்றால் உள்காதில் எங்காவது காயம் ஏற்படும். அது உடனே உங்களுக்குத் தெரியாது. ஒரு வாரம் பத்து நாள் கழித்து காதில் வலி ஏற்பட்டு சீழ் வடியும். மனிதனுக்கு வரும் வலியில் பல் வலிக்கு அடுத்தபடியாக கொடுமையான வலி இதுதான்.

உடனே "ஈஎன்டி'' டாக்டரிடம் போய்த்தான் ஆகவேண்டும். அவர் பேசாமல் காதைப்பார்த்து வைத்தியம் செய்யவேண்டியதுதானே? பண்ணமாட்டார். காதைப் பார்த்தவுடனே, "காதைக் குடைந்தீர்களா" என்று கேட்பார். இந்தக் கேள்விதான் உலகத்திலேயே மகாக் கொடுமையான கேள்வி. ஆம் என்றும் சொல்ல முடியாது, இல்லையென்றும் சொல்ல முடியாது. எப்படிச்சொன்னாலும் டாக்டர் அர்ச்சனையைக் கேட்டே ஆகவேண்டும்.

வேறு வழியில்லை. எப்படியோ டாக்டரைச் சமாளித்து மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். மருந்தை நேரம் தவறாமல் காதில் விட்டு, பஞ்சால் காதை மூடிவைக்கவேண்டும். பார்பவர்களுக்கெல்லாம் காதில் என்ன என்று பதில் கூறவேண்டும்.

ஒரு சுகம் வேண்டுமென்றால், ஒரு துக்கத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். இது உலக நியதிதானே.

இப்படி காது குடைவதினால்  "ஈஎன்டி'' டாக்டர்களுக்கு அதிக வருமானம்தானே தவிர, அவர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் இல்லையே. பின் ஏன் அவர்கள் காது குடையாதீர்கள் என்று சொல்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு சமயம் காது குடைவது அவர்களது ஏகபோக உரிமை என்று நினைக்கிறார்களோ, என்னமோ?