கிளப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப்.

                                   Image result for Coimbatore Agricultural College
இங்கிலாந்து நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் எல்லாம் பொழுதுபோக்கு கிளப்கள் இருப்பது பிரசித்தம். மேஜரான ஒவ்வொரு ஆங்கிலேயனும் ஏதாவதொரு கிளப்பில் அங்கத்தினராக இருக்கவேண்டும். இல்லாவிடில் அவனை ஒரு கனவானாக யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். இந்தப் பழக்கம் அனைவரும் அறிந்ததே.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி 200 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வந்ததை சரித்திரம் கூறும். அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பெரிய பதவிகளில் எல்லாம் ஆங்கிலேயர்கள்தான் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அனைத்துப் பெரிய ஊர்களிலும் கணிசமான அளவு ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கலாச்சாரச் சின்னமான கிளப் கலாச்சாரத்தையும் அவர்கள்இருக்கும் இடங்களில் நிறுவினார்கள். இங்கிலாந்தில் உள்ள இப்படிப்பட்ட கிளப்களைப் பற்றி நான் படித்தவற்றில் இருந்து சில குறிப்புகள் கொடுக்கிறேன். நான் இங்கிலாந்து போனதில்லையானதால் இவைகளைப் பற்றிய நேரடி வர்ணனை கொடுக்க இயலாததற்கு மன்னிக்கவும்.

இந்தக் கிளப்புகளில் பொதுவாக சுகஜீவனம் நடத்தும் இங்கிலாந்து பிரமச்சாரி கனவான்களுக்கு ( Bachelor Gentlemen with independent income - இது தமிழ் தெரியாத இந்தியக் கனவான்களுக்கான மொழி பெயர்ப்பு) ஒரு நல்ல புகலிடம். இங்கு அவர்கள் நாட்கணக்கில் தங்கிக்கொள்ளலாம். இந்தக்கிளப்புகளில் கூடவே மெஸ்சும் இருக்கும். ஆகவே உணவுப்பிரச்சினை இல்லை. செய்தித்தாள்கள், வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் வரவழைக்கப்பட்டு அங்கத்தினர்கள் படிப்பதற்காக இருக்கும். உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டுகள் இருக்கும்.

(உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டு - சீட்டாட்டம்தான். அதுவும் பெரிய மனிதர்கள் ஆடுவது "பிரிட்ஜ்" என்று சொல்லப் படுவதுதான். நம்ம ஊர் கனவான்கள் ஆடுவது "ரம்மி" எனப்படுவதாகும். நம்ம ஊர் சேரிக் கனவான்கள் ஆடுவது "மூன்று சீட்டு" அல்லது "மங்காத்தா" எனப்படும் ஆட்டங்கள்)

இப்படியான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆண்ட இந்தியாவிலும் இந்தக் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். அந்தக் காலத்தில், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில், விவசாயக் கல்லூரியில் நிறைய ஆங்கிலேயர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களில் பலரின் உருவப்படங்கள் இன்றைக்கும் கல்லூரியில் "பிரீமேன் ஹால்" என்று அழைக்கப்படும் ஹாலில் தொங்குகின்றன.

                                     Image result for Coimbatore Agricultural College

முன்பு அந்த ஹாலில் கல்லூரி வகுப்புகள் நடக்கும். அதில் வகுப்பு நடத்திய ஒரு பேராசிரிய நண்பருக்கு ஆங்கிலம் சற்றுத் தடுமாற்றம். அவர் மாணவர்களுக்கு அந்தப் படங்களைக் காண்பித்து அவர்களின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, தானும் அது மாதிரி ஒரு நாள் வருவேன் என்று ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது காட்டுத்தீ போல கல்லூரி முழுவதும் ஒரே நாளில் பரவி அது ஒரு பெரிய நகைச்சுவை ஜோக் ஆகி விட்டது.

அவர் என்ன சொன்னார் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.