கோடீஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோடீஸ்வரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 பிப்ரவரி, 2013

கோடிகளில் புரள ஆசைப்படுங்கள்


இதற்குத் தேவை “மார்க்கெட்டிங்க்” அதாவது பேச்சுத்திறமை. உங்களுக்கு அது இருந்தால் போதும். உலகமே உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும். அது இல்லாவிடில் நல்ல மூளை வேண்டும். பேச்சுத்திறமையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

முதலில் ஒரு தொழில் திட்டம் தயாரிக்கவேண்டும். இதற்கு நல்ல கன்சல்டென்ட்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் ஐடியாவை ஒரு கோடு போட்டுக் காட்டினீர்களென்றால், அவர்கள் நல்ல பக்கா ரோடு போட்டு விடுவார்கள்.

அடுத்து ஆரம்ப மூலதனம். உலகமயமாக்கல் – இந்த தாரக மந்திரத்தை அறியாதவர்கள் இன்று யாரும் இந்தியாவில் இல்லை. இதனால் பட்டி தொட்டிகளில் இருப்பவர்களெல்லாம் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். நாமும் அப்படி புரளவேண்டாமா? மேலே படியுங்கள்.

உங்கள் திட்டத்தை நல்ல விளம்பரக் கம்பெனி மூலம் விளம்பரப் படுத்துங்கள். நீங்கள் அடையப்போகும் லாபத்தை மூலதனம் போடுபவர்களுக்கு பிரித்துக்கொடுப்பதாக சொல்லுங்கள். அவர்கள் போட்ட மூலதனம் ஒரு வருடத்தில் மூன்று பங்காக வளரும் என்று சொல்லுங்கள். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.

உங்கள் ஊரில் நல்ல லொகாலிடியில் ஒரு ஆபீஸ் திறந்து கொள்ளுங்கள். நல்ல பெர்சனாலிடி உள்ள நாலு இளம் பெண்களை ஆபீஸ் வேலைக்கு அமர்த்துங்கள். நீங்கள்தான் MD. உங்கள் ரூம் மிகவும் அட்டகாசமாக இருக்கவேண்டும். முதலில் சூடு பிடிக்க கொஞ்ச நாளாகும்.

நல்ல களப்பணியாளர்களாக பத்து பேரை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்கள் ஊர் ஊராகப்போய் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்து கோடீஸவரர் ஆனவர்களைப் பற்றி பிரசாரம் செய்யவேண்டும்.
நாளாக நாளாக உங்கள் கம்பெனிக்கு முதலீடு செய்ய ஆட்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஊருக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து கோவா அல்லது அந்தமானுக்கு டூர் கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு கூப்பிட்டு விருந்து வையுங்கள்.

அப்புறம் பாருங்கள். வரும் பணத்தை வாங்கி எண்ணக்கூட முடியாத அளவிற்குப் பணம் வரும். அப்போது ஒரு நல்ல ஆடிட்டரைப் பிடித்து அந்தப் பணத்தையெல்லாம் பினாமி பெயர்களில் முதலீடு செய்து விடுங்கள். அப்படியே ஒரு நல்ல வக்கீலையும் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனிமேல் நீங்கள் செய்யவேண்டியதுதான் மிகவும் கடினமான வேலை. இப்படி பணம் கொட்டிக் கொண்டிருக்கும்போதே கம்பெனியை மூடிவிடவேண்டும். பணம் மரத்தில் காய்ப்பது போல் கொட்டிக்கொண்டிருக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வது மெத்தக் கடினம். ஆனால் இங்கேதான் பலரும் தவறு செய்திருக்கிறார்கள்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கம்பெனியை அப்படியே அம்போவென்று விட்டு விட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தலைமறைவாகி விடவேண்டும். அவ்வளவுதான் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். பிறகு என்ன, ராஜபோகம்தான்.

வாழ்த்துக்கள்.