நம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 மார்ச், 2010

மனித சிந்தனையும் கடவுள் நம்பிக்கையும்.

நம் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரம் பல காலமாக பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களினால் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிகம் படித்தவர்கள் இந்த கொள்கைகளை ஒத்துக்கொண்டு இதைப்பரப்ப வேண்டும் என்று இந்த பகுத்தறிவுவாதிகள் படித்தவர்களை வற்புறுத்துகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று எனக்குப்புரியவில்லை.

இதில் முதலில் நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் இவர்கள் எதையெதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள் என்கிற லிஸட்டைத்தான். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கடவுள் நம்பிக்கை- கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இருக்கிறார் என்றால் பார்த்தவர்கள் யார்? எனக்கு காட்டமுடியுமா? நான் பார்த்தால்தான் நம்புவேன். இப்படிப்பட்ட கேள்விகளை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கேட்கிறார்கள்.

ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கைகளின் லிஸ்ட்டில் முதலில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதை திறந்த மனதுடன் பாருங்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்கிற வாதத்துடன் கடவுள் நம்பிக்கையை சம்பந்தப்படுத்தாதீர்கள். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னுடைய சொந்த வாழ்விற்கு கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தேவைப்படுகிறது என்று ஒருவன் சொன்னால், அவனது செயல்களில் அதைக்கடைப்பிடித்தால், என்ன தவறு? அவன் படித்திருந்தால் இதைச்செய்யக்கூடாதா? படித்தவன் என்றால் அவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் நிர்ணயிக்கவேண்டும்?

நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் ஏன் முடிச்சுப்போடுகிறாய்? என்று கேட்கலாம். இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள் அல்ல. ஆனால் நடைமுறை உண்மையைப்புரிந்து கொள்ள மறுத்து ஒரு மாயைக்கொள்கையை பிடித்துக் கொண்டிருப்பதைத்தான் நான் மூடநம்பிக்கை என்று நம்புகிறேன்.

மனிதனுக்கு சில நேரங்களில் சில ஊன்றுகோல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. கடவுளை நம்பகிறவனுக்கு அந்த நம்பிக்கை ஊன்றுகோலாக இருக்கிறது. கடவுளை நம்பாதவனுக்கு அந்த நம்பிக்கையே ஊன்றுகோலாக செயல்படுகிறது. எப்படிப் பார்த்தாலும்
மனிதனுக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அது கடவுள் நம்பிக்கையாகவோ, அல்லது கடவுள் அவநம்பிக்கையாகவோ இருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். சமகாலத்தில் வாழும் மனிதர்கள் அல்ல. ஒரு கருத்து பெரும்பான்மையான மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதே கருத்து சரியில்லை என்றால் அது காலப்போக்கில் அழிந்துவிடும்.