பஜ்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பஜ்ஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மார்ச், 2015

நேந்திரன் பழ பஜ்ஜி

                                      Image result for நேந்திரம் பழம்
கேரளாவின் அடையாளமே நேந்திரன் பழம்தான். கேரளாக்காரர்கள் எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் இந்தப் பழத்திற்காக உயிரையே விடுவார்கள். அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.
                                    Image result for கேரளா பெண்கள்

கேரளாவில் வழக்கமான காலை சிற்றுண்டி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? குழாய்ப் புட்டு, கடலைக்குழம்பு, அவிச்ச நேந்திரன் பழம், கடைசியாக பாலில்லாத டீ. கேரளாவில் எந்த குக்கிராமத்திற்குப் போனாலும் இந்த காலைச்சிற்றுண்டி அங்குள்ள டீக்கடைகளில் கிடைக்கும். கேரளாவில் பால் வளம் குறைவு. காரணம் அந்த சீதோஷ்ண நிலைக்கும் அங்கு இருக்கும் விவசாய சூழ்நிலைக்கும் மாடுகளை வளர்ப்பது கடினம். ஆகவே அவர்கள் அன்றாட உணவில் பால், தயிர் ஆகியவை உபயோகிப்பது அபூர்வம்.

எங்க ஊர் அதாவது கோயமுத்தூர் கேரளா எல்லையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரில் கேரளாக்காரர்கள் ஏறக்குறைய 30 விழுக்காடு இருக்கிறார்கள். இங்கு நடக்கும் தங்க நகை வியாபாரம் முழுவதும் கேரளாக்காரர்கள் கையில்தான் இருக்கிறது. கொஞ்சம் வியாபாரம் சேட்டுகள் கையில் இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன் நங்க நகை வியாபாரத்தில் கோலோச்சிய வைசியச் செட்டியார்கள் அநேகமாகக் காணாமல் போய்விட்டார்கள்.

இப்ப நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம். என்னென்னமோ பஜ்ஜிகள் எல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அறுசுவையும் கொண்ட இந்த நேந்திரன் பஜ்ஜி சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். கோயமுத்தூரில் இரண்டு விதமான உணவகங்கள் உண்டு. ஒன்று பிராமணாள் காப்பி கிளப், இரண்டு கேரளாக்காரர்களின் சாயாக் கடை. பிராமணாள் காப்பிக் கடைக்குப் போய் டீ கேட்பவனும் சாயாக்கடைக்குப் போய் காப்பி கேட்பவனும் அசலூர்க்காரர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

பிராமணாள் காப்பிக் கிளப்பில் சாயந்தரமானால் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய்ச்சட்னியும் போடுவார்கள். சாயாக் கடைகளில் எப்பொழுதும் சுடுசாயாவும் காஞ்ச வர்க்கியும்தான் கிடைக்கும். எத்தனை நாளைக்குத்தான் இந்த காஞ்சுபோன வர்க்கியை வைத்துக்கொண்டே கடையை ஓட்ட முடியும்? யோசிச்சான் கேரளாக்காரன். ஆஹா, நம்ம ஊரு நேந்திரன் பழத்தில பஜ்ஜி போட்டால் எப்படி இருக்கும் என்று யோசிச்சான்.

அப்போது பிறந்ததுதான் நேந்திரன் பழபஜ்ஜி. பிராமணாள் சுடும் வாழைக்காய் பஜ்ஜி டெக்னிக்கேதான். என்ன மொந்தன் வாழைக்காய்க்குப் பதிலாக நேந்திரன் பழம். அவ்வளவுதான். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் வாழைக்காய் பஜ்ஜியில் உப்பும் காரமும் மட்டும்தான் இருக்கும். நேந்திரன்பழ பஜ்ஜியில் கூடவே இனிப்பும் இருக்கும்.

கோயமுத்தூர்க்காரன் அப்படியே இந்த பஜ்ஜியில் மயங்கிப்போனான். ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம். அதனால் இந்தப் பஜ்ஜிகளை அந்த பின்னணி நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே சாப்பிடப் பழகிக்கொண்டான். இவ்வாறு நேந்திரன் பழ பஜ்ஜி கோவையில் வலம் வரத்தொடங்கியது.

                                     Image result for நேந்திரன் சிப்ஸ்

இதன் கூடவே நேந்திரன்பழ வறுவல்களும் வர ஆரம்பித்தன. கோயமுத்தூரில் எல்லாப் பயல்களும் இந்த இரண்டிற்கும் அடிமையானார்கள். இந்த இரண்டு சமாச்சாரங்களுக்கும் அடிப்படையான நேந்திரன் பழம் கேரளாவிலிருந்துதான் வரவேண்டியிருந்தது. இங்கு டிமாண்ட் அதிகமாகவே, போதுமான அளவு நேந்திரன் பழங்கள் கேரளாவிலிருந்து கிடைக்கவில்லை.

கோயமுத்தூர் விவசாயி என்ன லேசுப்பட்டவனா? அது என்ன அவன் மட்டும்தான் நேந்திரன் பழம் போடுவானா? நானும் போடுகிறேன் பார் என்று ஆரம்பித்து நேந்திரன் பழ விவசாயம் கோவையிலும் சூடு பிடித்தது. எங்கள் சம்பந்தி தோட்டத்திலும் நேந்திரன் பழமரங்கள் நட்டார்கள். நன்றாகவே விளைந்தது. பழங்கள் எங்கள் வீட்டிற்கும் வர ஆரம்பித்தது.

நான் முன்பே இந்த நேந்திரன் பழ பஜ்ஜியை ருசி கண்டவனாதலால் இந்தப் பழத்தில் பஜ்ஜி சுட்டால் என்ன என்று வீட்டுக்காரியிடம் ஒரு நாள் நைசாகக் கேட்டேன். அது எப்படி சுடுவதென்று எனக்குத் தெரியாதே என்று முதலில் பின் வாங்கினாள். நாம் விடுவோமா? இதென்ன பெரிய ஆரிய வித்தை?  நான் உனக்கு உதவி செய்கிறேன் பார், என்று சொல்லி, நான் கற்ற வித்தைகளையெல்லாம் காட்டி எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்தேன்.

வாழைக்காய் பஜ்ஜி சுடுவதற்கான அதே கடலைமாவு-அரிசி மாவு கலவைதான். வாழைக்காய்க்குப் பதிலாக நேந்திரன் பழம். என்ன நேந்திரன் பழத்தை நீள வாக்கில் சீவுவது கடினம். அதனால் குறுக்கு வாட்டில் துண்டுகளாக வெட்டிக் கொடுத்தேன். அந்த துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து எண்ணையில் பொரிக்கவேண்டியதுதான். நேந்திரன் பழ பஜ்ஜி ரெடி.
                                     Image result for பஜ்ஜி வகைகள்
இந்த வட்ட வடிவில் உள்ள பஜ்ஜியில் இன்னுமொரு சௌகரியம் என்ன வென்றால் ஒரு பஜ்ஜியை அப்படியே முழுசாக வாயில் போட்டுக் கொள்ளலாம்.நீள பஜ்ஜி மாதிரி கடித்துக் கடித்து சாப்பிடவேண்டியதில்லை. என்ன, பஜ்ஜியின் சூடு அளவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.

இந்த பஜ்ஜிக்கு எந்த சைடு டிஷ்ஷும் வேண்டியதில்லை. சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டேஏஏஏஏஏ இருக்கலாம். நேந்திரன் பழமும் கடலை மாவும் தீர்ந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.

நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம். ஆனால் அதற்கு முன் கேரளாவிற்கு ஒரு முறை போய் வருவது பஜ்ஜியின் சுவையைக் கூட்டும்.