மடத்தனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மடத்தனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஏப்ரல், 2016

14.வட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்.


வட்டத்திடம் பணம் கொடுத்தனுப்பி ஒரு வாரம் இரு வாரமாகி, ஒரு மாதமும் ஆகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. எப்போது செல்லில் கூப்பிட்டாலும் பிசி என்றே வந்தது. கடைசியில் செக்கை அனுப்பி என்ன விவரம் என்று பார்த்துவிட்டு வரச்சொன்னேன்.

அவர் போய் விசாரித்து விட்டு வந்து சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. நாம் சொன்னது போல் 1000 ஏக்கர் நிலம் பேசி வாங்கி விட்டாராம். ஆனால் அதை முழுவதுமாகத் தலைவர் பேரில் (அதாவது அன்று வந்த அரசியல்வாதி) ரிஜிஸ்டர் ஆகி, சுவாதீனம் எடுத்து, தற்பொழுது சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வட்டத்திடம் கேட்டதற்கு, இதுதான் மாமூலுங்க, நிலம் உங்களுதுதானுங்க, கிரயம் யார் பேரில் இருந்தால் என்னங்க? என்றாராம். அப்படியா என்று கேட்டுக் கொண்டு, பொதுவை அந்த அரசியல்வாதியிடம் அனுப்பினேன். அவர் பொதுவை மிரட்டியிருக்கிறார். இத பாரு பொது, எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க, அப்புறம் இந்தப் பணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இதுக்கு இன்கம்டாக்ஸ் கட்டீருக்கீங்களா. இப்படியெல்லாம் கேள்வி கேட்கவைப்பேன். அப்புறம் நீங்கள் எல்லோரும் ஜெயிலில் களி திங்க வேண்டி வரும் என்று சொல்லியிருக்கிறார்.

நான் அவருடன் போனில் பேச முயற்சி செய்தேன். போனை எடுக்கவே இல்லை. ஓஹோ, இதெல்லாம் காரியத்திற்கு உதவாது என்று நேரடி நடவடிக்கை எடுத்தேன். இரண்டு யமகிங்கரர்களை விட்டு வட்டத்தைத் தூக்கி வந்தேன். வட்டத்திற்கு என்னைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு குடிக்க பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்திய பிறகு பேச ஆரம்பித்தார்.

என் பேரில் எந்த தப்பும் இல்லைங்க, தலைவர் (அந்த அரசியல்வாதி) இப்படித்தானுங்க, நிலம் வாங்கித் தாரேன் அப்படீன்னு, யாரு பணம் கொடுத்தாலும் வாங்கி தன் பெயரில் நிலம் வாங்கி ரிஜிஸ்டர் பண்ணீப்பாருங்க. ஏனுங்க இப்படீன்னு கேட்டா, தம்பி, இதப்பாருங்க, நிலம் உங்க பேர்ல இருந்தா என்ன, என் பேரில இருந்தா என்ன. நெலம் எங்க போயிடப்போகுது, உங்க பேர்ல நெலம் இருந்திச்சின்னு வையுங்க, இந்த இன்கம்டாக்ஸ்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி உங்களைக் கேட்பான், அதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது. என்னைக் கேள்வி கேட்க ஒரு பயலுக்கும் திராணி கிடையாது.

இப்படியே இருக்கட்டும், உங்களுக்கு தேவைப்படும்போது சொல்லுங்க, மாத்தி எழுதீடலாம் என்பார். இதுதானுங்க இப்ப நடைமுறை. நான் என்ன பண்ணுட்டுங்க என்று வட்டம் சொன்னான். சரி இப்ப அந்த தலைவரைப் பார்க்கணுமே, அதுக்கு என்ன வழி என்றேன். வட்டம் சொன்னார், இந்த மாதிரி டீல் ஒண்ணை முடிச்சா, அவரு ஆறு மாசம் ஊர்லயே இருக்க மாட்டாருங்க. அவருக்குப் பல ஊர்களிலே பங்களாக்கள் இருக்குதுங்க, எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியாதுங்க என்றான்.

அப்படியா என்று நாரதரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லி அந்த ஆள் எந்த லோகத்தில் இருந்தாலும் இழுத்துக் கொண்டு வாருங்கள் என்றேன். துணைக்கு இரண்டு கிங்கரர்களை அழைத்துக்கொண்டு போங்கள் என்றேன். வட்டம் நான் போகட்டுங்களா என்றான். "அடே வட்டம், நீயும் அவனோட கூட்டுக் களவாணிதானே, அவன் வரும்போது நீ இல்லாவிட்டால் எப்படி?" என்று அவனை இருக்கவைத்தேன்.

அரை மணி நேரத்தில் நாரதரும் அந்த அரசியல்வாதியும் வந்து விட்டார்கள். வந்தவுடன் அவன் தாம்தூம் என்று குதித்தான். என்னை யாரென்று நினைத்தீர்கள், இப்போதே பிரதம மந்திரிக்குப் போன் போட்டு உன்னை என்ன செய்கிறேன் பார், உன்னை இன்கம்டாக்ஸ் கேஸ் போட்டு, ஜெயில் களி திங்க வைக்கிறேன் பார் என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினான். வட்டத்தைப் பார்த்து என் சக்தியைப் பற்றி இவர்களிடம் நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று சத்தம் போட்டான்.

அவன் ஆர்ப்பாட்டம் அடங்கட்டும் என்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கத்திவிட்டு ஓய்ந்து போனான். அப்புறம் நான் அவனைக்கேட்டேன். நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா என்றேன். "நீ யாராயிருந்தால் எனக்கென்ன, என்னை இப்போதே நான் இருந்த இடத்திற்குக் கொண்டுபோய் விடாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா" என்றான்.

"என்ன நடக்கும், பார்க்க எனக்கு ஆசையாய் இருக்கிறது" என்றேன். யார் யாருக்கோ போன் பேசினான். ஒன்றும் நடக்கவில்லை. உனக்கு யார் வேண்டும் என்றேன். பிரதம மந்திரியிடம் பேசவேண்டும் என்றான். நான் ஹாட்லைனில் பிரதம மந்திரி அலுவலகத்தைக் கூப்பிட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு போனை அவனிடம் கொடுத்தேன். பிரதம மந்திரியின் உதவியாளர் பேசினார்.

அவர் அவனிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை, அவன் தடாலென்று என் காலில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். தெய்வமே, நான் தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். இப்போதே அந்த நிலத்தையெல்லாம் நீங்கள் சொல்லுகிற மாதிரி மாற்றி எழுதி விடுகிறேன். இந்த விவகாரத்தைப் பற்றி பிரதம மந்திரியிடம் ஏதும் சொல்லிவிடாதீர்கள், நீங்கள் யாரென்று தெரியாமல் இந்தத் தப்பை செய்து விட்டேன் என்று அழுதான்.

சரி, ரொம்பவும் அழுகிறானே என்று அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லி எழுப்பி, நான் முதலில் சொன்ன பிரகாரம் பத்திரங்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பு என்று சொல்லி அவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பினேன்.

இங்குதான் நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன்.

அடுத்த பதிவைப் பாருங்கள்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அப்துல் கலாமுக்கு தர்ப்பணம்.

                                     Image result for அப்துல் கலாம் quotes

சில நாட்களுக்கு முன் தினத்தாள்களில் ஒரு செய்தி படித்தேன். சிலர் அப்துல் கலாமைப் புதைத்த பகுதியிலிருந்து கொஞ்சம் மண் எடுத்து சட்டியில் போட்டு அதை அவருடைய அஸ்தியாகப் பாவித்து அதை காவிரியில் கரைத்து அய்யரை வைத்து அப்துல் கலாமுக்கு தர்ப்பணம் கொடுத்தார்களாம்.

அப்துல் கலாம் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். யாரும் இதை மறுக்கமாட்டார்கள். ஆனாலும் அவர் பேரில் ஏதோ தங்களுக்கு மட்டும்தான் தனியாக பக்தி இருப்பது மாதிரியும், அவருக்காக தாங்கள் உயிரையே வேண்டுமானாலும் அர்ப்பணிப்போம் என்கிற மாதிரி சிலர் விளம்பரத்திள்காக பண்ணும் முறைகேடான காரியங்கள் பயித்தக்காரனின் காரியத்தை ஒத்திருக்கின்றன.

மேலும் அப்துல் கலாம் கடைப்பிடித்த மதத்தில் இந்த செயலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இதே மாதிரி தாங்கள் கொண்டாடும் ஒரு அரசியல்வாதிக்கு ஏதாவது சங்கடம் என்றால் அந்த சங்கடம் நீங்க கோவில்களில் தனியாக பூஜைகள், யாகங்கள் இவைகளை நடத்துகிறார்கள். இது முற்றிலும் விளம்பரே. கடவிள் யார்யாருக்கு எந்தெந்த சமயத்தில் என்ன நடக்கவேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். இவர்கள் யாகம் நடத்துவதால் கடவுளின் கணக்கு மாறப் போகிறதா என்ன?

இதைப் போலவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று செல் போன் டவர்களின் மேல் ஏறிக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள். இது எல்லாம் மட்ட ரகமான விளம்பரம் தவிர வேறு ஒன்று மில்லை.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய செயல்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இதுதான் இந்திய மக்களின் மடத்தனம். இது என்று மாறுமோ அன்றுதான் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா பலிதமாகும்.

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பழனியில் பழனி.கந்தசாமி செய்த மடத்தனம்

                               

நான் ஒரு தானியங்கி பல்சக்கர மாற்றி (அதாங்க Auto Gear Change - நான் இனி பதிவில் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று சபதம் மேற்கொண்டுள்ளேன்.) கொண்ட சொகுசு உந்து (car) வாங்கிய விபரம் ஏற்கெனவே நண்பர்களுக்குத் தெரியும். அந்த சொகுசு உந்தில் பழனிக்குப் போய்வரலாம் என்று என் மனைவி வேண்டுகோள் விடுத்தாள்.

நான் அந்த வேண்டுகோளை பல காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டேன். முதல் காரணம் -அந்த சொகுசு உந்து வாங்கி ஒரு மாதத்தில் ஒரு இலவச பராமரிப்பு செய்யவேண்டும். அந்த காலக் கெடுவிற்குள் கொஞ்சமாவது அந்த சொகுசு உந்தை ஓட்டியிருந்தால்தானே அதில் ஏதாவது சில்லறைக் கோளாறுகள் இருப்பது தெரியும். அப்போதுதானே அதை முதல் பராமரிப்பில் இலவசமாக சரி செய்து கொள்ளலாம். பழனி போய் வருவது இதற்குத் தோதாக அமையும் என்று நினைத்தேன். (இந்த யோசனைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக என் மூளையில் உதிக்கும். இதற்கெல்லாம் விடுதி அறை -  Hotel Room போட்டு யோசிக்கவேண்டியதில்லை)

இரண்டாவது காரணம் எங்கள் சொந்த ஊரில் இருந்து எங்கள் உறவினர்கள் தைப்பூசத்திற்காக பழனிக்கு காவடி எடுப்பது வழக்கம். இதற்காக ஒரு அமைப்பைத் தோற்றுவித்து கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நானும் சேர்ந்திருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் இரண்டு நாள் பழனியில் பூசை நடக்கும். ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து ஆட்கள் வைத்து சமையல் செய்து தடபுடலாக சிற்றுண்டி, பேருண்டி முதலானவை தரப்படும்.

அவ்வப்போது நாங்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம். அந்த வழக்கப்படி இந்த வருடம் கலந்து கொள்ளலாமே என்றபடியால் பழனி போகும் என் மனையாளின் வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

மூன்றாவது காரணம் இந்த புது சொகுசு உந்தின் குணநலன்களை நன்கு புரிந்து கொண்டால்தானே அதனுடன் வாழ்க்கை நடத்த முடியும். இவ்வாறாக பல காரணங்களை உத்தேசித்து பழனி போவதென்று முடிவு செய்தேன்.

இரண்டு நாள் தங்குவதற்கான மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டிக்கொண்டு ஒரு நல்ல நேரம் பார்த்து பழனிக்குக் கிளம்பினோம். வழியில் ஏதும் பிரச்சினை இல்லாமல் பழனி போய்ச் சேர்ந்து ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். பழனியில் தைப்பூசத்திற்காக ஏறக்குறைய தமிழ் நாட்டின் பாதி மக்கள் - ஸ்ரீரங்கம் தொகுதி நீங்கலாக - வந்திருந்தார்கள். வீதியில் மக்கள் மேல் மோதாமல் நடக்கமுடியாது.

இதைப் பார்த்த நாங்கள் இரண்டு நாள் தங்கும் யோசனையைக் கைவிட்டோம். மறுநாள் காலையில் முருகனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படியே மறுநாள் காலையில் சென்று கயிற்றுந்தில் - Rope Car - மேலே சென்று 200 ரூபாய் சீட்டு வாங்கி சிறப்பு வழியில் சென்றோம். நாங்கள் முன்கூட்டியே முருகனிடம் சந்திக்கும் நேரம் பற்றி முன்பதிவு செய்யாததினால் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று.

நேரில் பார்த்தபோது என்னப்பா இப்படிப் பண்ணி விட்டாய் என்று கேட்டதற்கு ஆமாம் இன்று எத்தனை ஆயிரம் பேர் என்னைப் பார்க்க வரப்போகிறார்கள் தெரியுமா, அதற்குத் தகுந்தாற்போல் நான் அலங்காரம் செய்து கொள்ளவேண்டாமா என்றான். இது நியாயமாகப் பட்டதால் நான் அவனைக் கோபித்துக்கொள்ள முடியவில்லை.

பேட்டியை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம். பிறகு கல்யாண மண்டபத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது அங்கு வந்திருந்த என் பெரியம்மா பையன் தானும் எங்களுடன் கோவை வருகிறேன் என்றான். சொகுசு உந்தில்தான் இடம் இருக்கிறதே என்று நான் சரி என்று ஒத்துக்கொண்டேன். அவன் பின்னால் திருவாளர் சனி பகவான் ஒளிந்து கொண்டு இருந்ததை நான் கவனிக்கவில்லை.

அவன் தன்னுடைய உடமைகளைக் கையோடு எடுத்து வந்திருந்தான். நான், என் மனைவி, அவன் ஆகிய மூவரும் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். என் சொகுசு உந்தின் சாவி என் கையில் இருந்தது. சொகுசு உந்தின் பின்புறம் சாமான்கள் வைக்கும் பகுதியைத் திறந்தேன். அந்த இடத்திற்கு மேல் ஒரு தட்டு இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். என் பெரியம்மா பையனின் பையை இரண்டு கைகளாலும் வாங்கவேண்டி இருந்ததால் சாவியை அந்தத் தட்டில் வைத்து விட்டு பையை வாங்கி உள்ளே வைத்தேன்.

சாமான் வைக்கும் பகுதிக் கதவைச் சாத்தினேன். அது பூட்டிக்கொண்டு விட்டது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த திரு. சனி பகவான் சிரிக்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்ததில் சாவியை நான் எடுக்காமல் கதவைச் சாத்திப் பூட்டி விட்ட மடத்தனம் மூளையில் பட்டது.

ஆகா, முருகன் நம்மைச் சோதிக்கிறான் என்று புரிந்தது. அங்கு சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். சொகுசு உந்தின் கதவில் இருக்கும் ரப்பர் பட்டையை எடுத்துவிட்டு ஒரு அடிக்கோலால் உள்ளே தள்ளினால் கதவு திறந்து விடும் என்றார்கள். அப்படி செய்து பார்த்ததில் அடிக்கோல் உடைந்ததே தவிர பலன் ஒன்றுமில்லை.

வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால் எந்த சோதனைக்கும் முருகன் ஒரு தீர்வை வைத்திருப்பான் என்று நம்பினேன். அப்படியே முருகன் ஒரு வழி காட்டினான். விறுவிறுவென்று விடுதியை வெளியில் வந்தேன். வரிசையாக முச்சக்கர வாடகை உந்துகள் நின்றிருந்தன. அதில் ஒன்றின் ஓட்டுனரைக் கூப்பிட்டு என் பிரச்சினையை ச் சுருக்கமாகச் சொல்லி, இதைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல ஆள் வேண்டுமே என்றேன்.

உந்தில் ஏறுங்கள் என்று சொல்லி அங்குமிங்கும் அலைந்து ஒரு ஆளைப் பிடித்தோம். அந்த ஆள் எங்கள் பின்னாலேயே வந்தார். என் சொகுசு உந்தைப் பார்த்தார். ஐயா, நீங்கள்தான் இந்த வண்டியின் சொந்தக்காரரா என்று கேட்டார். ஆமாம் தம்பி, இப்பத்தான் சுளையாக நாலேமுக்கால் லட்சம் போட்டு வாங்கினேன் என்று சொன்னேன். சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அப்படியா என்று கேட்டு விட்டு கதவு சந்தில் நான் கொண்டு வந்திருந்த இரும்பு அடிக்கோலை விட்டு ஏதோ செய்தார். மந்திரம் போட்டது போல் கதவு திறந்து கொண்டது. இரண்டே நிமிடம்தான் ஆயிற்று. ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. சரி, தம்பி, எவ்வளவு வேண்டும் என்றேன். அவர் தன்னுடைய முதலாளிக்குப் போன் போட்டுப் பேசினார் பிறகு 200 ரூபாய் கேட்டார்.

அப்போதுதான் நான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட விசயம் உறைத்தது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் அவர் கேட்ட ரூபாயைக் கொடுத்தேன். முச்சக்கர உந்தின் ஓட்டுனரிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன். அவர் சளைத்தவரா என்ன? 100 ரூபாய் வேண்டும் என்றார். பேசாமல் அதையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் திரு. சனி பகவான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். மறுநாள் இலவச பராமரிப்புக்காக பணிமனையில் விட்டேன். அங்கு வழக்கமான என் வண்டியைப் பராமரிக்கும் பணியாளர் பிரிந்து கிடக்கும் ரப்பர் பட்டைகளைப் பார்த்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டார்.

நான் நடந்தவைகளைச் சொன்னேன். சரீங்க, இனி மேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ( என் வயது காரணமாக என்ன மடத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை) என்று சொல்லி விட்டு எல்லா பராமரிப்பு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார். ரப்பர் பட்டைகளை மாற்ற ஆயிரம் ரூபாய் ஆயிற்று. எல்லாம் முருகனின் அருள் என்று எடுத்துக்கொண்டேன்.

இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், மடத்தனம் செய்வதில் தவறில்லை, ஆனால் ஒரு மடத்தனம் செய்தவுடன் அதை உணர்ந்து உடனே சரியான ஆளிடம் சென்று விடவேண்டும் என்பதுதான்.
சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் திறமை வெளிப்படும். அந்த வகையில் நான் கெட்டிக்காரன்.