மனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜனவரி, 2013

மனிதனுக்குள் ஒரு மிருகம்

மனிதன் ஆதி காலத்தில் மிருகமாக இருந்து, பின்பு மனிதனாக மாறினான் என்று உயிரியல் தத்துவங்கள் கூறுகின்றன. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு என்னவென்றால், மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கிறதென்று சொல்கிறார்கள். பலருக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

மனிதன் மிருகமாக செயல்பட்டதை சமீபத்தில் பார்த்தோம். ஆகவே மனிதனுக்குள் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. அது அவ்வப்போது எட்டிப் பார்க்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால்தான் மனிதன் அனுபவிக்கும் பல இன்பங்களை மிருக-இன்பம் (Animal Pleasure) என்று சொல்கிறோம்.

உதாரணத்திற்கு, பசிக்காக உணவு உண்கிறோம். தாகத்திற்காக தண்ணீர் குடிக்கிறோம். வேறு காரணங்களுக்காக என்னென்னமோ செய்கிறோம். இதையெல்லாம் மிருக-இச்சை என்று சொல்கிறோம் அல்லவா? ஒருவன் நாகரிகமில்லாமல் சாப்பிட்டால் என்ன சொல்கிறோம், “பன்னி மாதிரி தின்கிறான் பார்” என்று சொல்கிறோம். ஒருவன் நன்றாகச் சாப்பிட்டு விட்டு, படுக்கையில் படுத்து புரண்டால் “மலைப் பாம்பு தின்னுப்புட்டு நெளியற மாதிரி நெளியறான் பாரு” என்று சொல்கிறோம். ஏனென்றால் இவையெல்லாம் மிருக இச்சைகள்.

குளிப்பது மனிதனின் தேவை. மற்ற மிருகங்களும் குளிக்கின்றன. சீக்கிரம் குளிப்பவனை காக்காக் குளியல் போடுகிறவன் என்று சொல்கிறோம். சொரணை கம்மியாக இருப்பவனைப் பார்த்து “எருமை” என்று சொல்கிறோம். இதையெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நாம், பாத் டப்பில் குளிப்பவனை, (பாத் டப்பில் என்ன குளியல், தண்ணீரில் ஊறிக் கிடப்பதுதானே) குட்டையில் ஊறிக்கிடக்கும் எருமையுடன் ஒப்பிடுவதில் ஏதாவது தப்பு இருக்கிறதா? நியாயமாக எருமைகள்தான் தங்களை மனிதனுடன் ஒப்பிட்டதில் வருத்தப் படவேண்டும்.

கடைசி செய்தி: எருமைகள் சங்க வக்கீல் என் மீது கேஸ் போட ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி.