மனிதாபிமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதாபிமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 நவம்பர், 2015

கருணை இல்லங்கள்


மனிதாபிமானம் இந்த உலகில் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம் கருணை இல்லங்கள்தான். பிறந்த குழந்தைகளிலிருந்து நாளை மூச்சை நிறுத்தப்போகும் வயதானவர்கள் உட்பட அனைவருக்கும் உதவக்கூடிய பல வகை கருணை  இல்லங்கள் கோயமுத்தூரில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இவ்வகையான இல்லங்கள் பெரும்பாலும் மனிதாபிமானத்துடனேயே செயல்படுகின்றன. ஏதோ ஒன்றிரண்டு மாறுபாடாக இருக்கலாம். தீபாவளி அன்று இப்படிப்பட்ட கருணை இல்லம் ஒன்றிற்குச் சென்று அவர்களுக்கு இனிப்பு வழங்கி வரலாமே என்று எனது நண்பர் விரும்பினார்.

அதற்காக நாங்கள் போன கருணை இல்லம், கோயமுத்தூர் என்ஜிஓ காலனியில் செயல்படும் ஒரு கருணை இல்லம். இதை நாங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது என் மச்சினன் வீட்டிற்கு எதிரில் இருந்ததுதான். முதல் நாளே என் மச்சினன் மகனுக்கு போன் செய்து நாங்கள் இது மாதிரி பலகாரங்கள் கொண்டு வருகிறோம் என்று சொல்லி கருணை இல்ல நிர்வாகியிடம் சொல்லி வைக்கச்சொன்னேன்.


எனது நண்பர், என் மச்சினன் மகன், நான்

இந்த மாதிரி கருணை இல்லங்களுக்கு உணவோ அல்லது பலகாரங்களோ கொண்டு செல்பவர்கள் முன்கூட்டியே சொல்லி அவர்கள் அனுமதி பெற்றுச் செல்வது தேவையானது. ஏனெனில் ஒரே சமயத்தில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்கள் வந்து விட்டால் அவைகளை அவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் வீணாவதற்கு வாய்ப்பு உண்டு.

நாங்கள் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததினால் இந்தக் குழப்பம் வரவில்லை. நாங்கள் காலை 10.30 மணிக்குச் சென்றோம். இந்தக் கருணை இல்லத்தில் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தம் 35 பேர் இருக்கிறார்கள். நாங்கள் போன சமயம் 15 பேர் அவர்கள் உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டார்கள். மீதி இருந்தவர்களுக்கு மட்டும் நாங்கள் கொண்டுபோன பலகாரங்களை விநியோகித்து விட்டு மேலும் இருந்தவற்றை அங்கேயே மற்றவர்களுக்கும் கொடுக்கச்சொல்லி வைத்து விட்டு வந்தோம்.

தீபாவளி அன்றி இப்படி கருணை இல்லக் குழந்தைகளுக்கு பலகாரம் கொடுத்தது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

சில படங்கள்.

கருணை இல்லக் குழந்தைகள்


கருணை இல்ல நிர்வாகி திருமதி. பாலின்.


கருணை இல்லம்