மெகா சீரியல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெகா சீரியல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.

மகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் சிலைகளை வைத்திருந்ததாகச் சொல்லுவார்கள்.
                                Image result for மூன்று குரங்குகள்
அவை குறிப்பிடுபவை என்னவென்றால், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதிகும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

மனதனாகப்பட்டவன் நல்லவனாக வாழ இந்தப் பழக்கங்கள் வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்.

ஆனால் இன்று தமிழ்நாட்டில் நடப்பது என்ன? (மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லையாதலால் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை)

தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெண்கள் குடும்பத்தலைவிகளே. அதாவது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்பவர்களே. இவர்களுக்கு காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு மதியச் சாப்பாட்டையும் செய்து விட்டால் பகல் 11 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வேறு வேலை இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள் வராத காலத்தில் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுடன் ஏதோ பேசுவார்கள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதோ வேலைகளைச் செய்வார்கள்.

இப்போது வீட்டு வேலைகளைச் சுலபமாக்க பலவித உபகரணங்கள் வந்து விட்டன. குடும்பத் தலைவிகளின் வேலைகள் வெகுவாகக் குறைந்து விட்டன. தவிர தொலைக்காட்சிப்பெட்டியும் எல்லோர் வீட்டிலும் வந்து விட்டது. அப்படியும் சிலருக்கு இந்தப் பெட்டியை வாங்க வசதியில்லாக் காரணத்தினால் அரசே இலவசமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்து அதற்கு வேண்டிய மின்சாரத்தையும் இலவசமாகவே கொடுக்கிறது.

தொலைக்காட்சிப் பெட்டி வந்த காலத்தில் அதில் இவ்வளவு நிகழ்ச்சிகள் ஒளி பரப்பாகவில்லை. இவ்வளவு தொலைக்காட்சி நிறுவனங்களும் இல்லை. அப்பொழுது மக்கள் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஒலியும் ஒளியும் என்ற நிகழ்ச்சிதான். சினிமாவில் வந்த பாட்டுகளை ஒளிபரப்புவார்கள். பிறகு தொடர் நாடகங்கள் வந்தன. அவைகள் 13 வாரம், வாரத்திற்கு ஒரு நாள் வீதம் ஒளிபரப்பாகும்.

அந்த தொடர் நாடகங்களில் ஒரு கதையும்  வாழ்க்கைக்கான ஒரு நீதியும் இருக்கும். ஒரு சமயத்தில் ஒரு தொடர் நாடகம் மட்டும்தான் ஒளிபரப்பாகும். அப்போது இருந்தது அரசு தொலைக்காட்சி நிறுவனமான "தூர்தர்ஷன்" மட்டுமே. இதனால் மக்ளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படவில்லை.

பிறகு அதில் மகாபாரதம் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இதுதான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்ட இன்றைய மெகா சீரியல்களின் முன்னோடி. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

அப்போதுதான் விளம்பரங்களில் நன்றாகக் காசு பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்தது. அரசு பணம் வாங்கிக்கொண்டு பலருக்கு தொலைக்காட்சி நடத்த உரிமை வழங்கினார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகின. விளம்பரங்கள் பெருகின. காசு சேர்ந்தது.  ஆனால் மக்களை இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பது எப்படி? இந்தப் பிரச்சினைக்கு யாரோ ஒரு மகானுபாவன் கண்டு பிடித்த தீர்வுதான் இன்று அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் மெகா சீரியல்கள்.

பெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கப் பெண்கள் இவைகளுக்கு அடிமையாகிப் போனார்கள்.  இதனால் விளைந்த விளைவு என்னவென்றால் பல குடும்பங்களில் அமைதி குலைந்து போனது.

நான் இந்த சீரியல்களைப் பார்ப்பதில்லை. இருந்தாலும் வீட்டில் மற்றவர்கள் பார்க்கும்போது நிகழ்ச்சிகள் அவ்வப்போது காதில் விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. சன் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மெகாத்தொடர்கள் ஒளி பரப்பாகின்றன. இவைகளைத்தான் என் வீட்டில் பார்க்கிறார்கள்.

 இந்தத் தொடர்களில் நான் கவனித்தவை. ஏறக்குறைய எல்லாத் தொடர்களின் கதையும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. கதாநாயகன், நாயகி, அவர்களைச்சுற்றி வழக்கமாக வரும் உப-பாத்திரங்கள் போக, ஒரு வில்லனோ அல்லது வில்லியோ அல்லது இருவருமோ கட்டாயமாக இருக்கிறார்கள்.

இந்த வில்லன் அல்லது வில்லி கூட்டம் இருக்கிறதே, அவர்கள் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லில் அடங்கா. ஆனாலும் இந்தத் தொடர்களின் டைரக்டர்கள் திறமைசாலிகள்தான். இந்த வில்லன் வில்லி பாத்திரங்களை அவ்வளவு மோசமாக சித்தரிக்க அவர்களால்தான் முடியும். இதைப் பார்க்கும் நம் குல விளக்குகள் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கதாநாயகியின் பேரில் அனுதாபம் பொங்கி வழியும். கண்ணீர்க் கடலில் மூழ்கி விடுவார்கள்.

இந்த தொடர்களின் வில்லிகள் எங்காவது நாலு பெண்கள் இருக்குமிடத்திற்கு
நேரில் வந்தால் அவர்களை இந்தப் பெண்கள் கடித்துக் குதறிக் கொன்றே விடுவார்கள். அவ்வளவு ஆத்திரம் அந்தப் பெண்களின் பேரில் இருக்கிறது. இந்த வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகைகள் தனியாக வெளியில் நடமாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

விஷயம் இத்தோடு முடிந்து விட்டால் வேறு பிரச்சினை இல்லையே? ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு. இந்த குடும்பத்தலைவிகள் இந்த தொடர்களைப் பார்த்து அவைகளின் வசனங்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்களா? வீட்டில் நம்முடன் பேசும்போதும் இந்த வசனங்களின் பாதிப்பு வெளி வருகிறது. முன்பெல்லாம் நம் கேள்விகளுக்கு சாதாரணமாகப் பதில் சொல்லும் தாய்க்குலம் இப்போது நம் கேள்விகளுக்கு தொடர்களில் வரும் வில்லிகள் பேசும் பாணியில் பதில் பேசுகிறார்கள். அந்தப் பதில்கள் வெகு சூடாக இருக்கின்றன. சமயத்தில் தேள் கொட்டுவது போலும் இருக்கிறது.

இப்போதெல்லாம் வீட்டில் ஏதாவது பேசுவதென்றால் பயமாக இருக்கிறது. எப்படிப் பேசினாலும் அதற்குப் பதில் சூடாகவே வருகிறது. இதனால் நான் இப்போது என் பேச்சை வெகுவாகக் குறைத்து விட்டேன். இந்தப் போக்கு இப்படியே போனால் நாம் எல்லோரும் ஏதாவதொரு சங்கம் ஆரம்பித்து நம் பேச்சுரிமைக்காகப் போராட வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.
                               Image result for பெண்கள் அரட்டை