வருமான வரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருமான வரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 அக்டோபர், 2016

வருமான வரி - சில விளக்கங்கள்

       Image result for வருமான வரி                   
"வருமானவரி என்றால் என்ன?": 

SUBBU உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்

இதில் இன்னமும் பல சந்தேகங்கள் உள்ளன, நான் தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன்,எனக்கு கிடைத்த சுமார் 30 லச்சம் தொகையை வங்கி டெபாசிட்டில் போட்டு மாதா,மாதம், சுமார் 24000/- வட்டியும், பென்ஷன் ஆக ரூபாய் 20000/-சேர்த்து மாதம் மொத்தம் 44,000/- பெறுகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். 


நான் பெரும் வட்டிக்கு 10% வருமான வரி பிடித்தம் வங்கியிலேயே பிடித்தம் செய்த பிறகும் நான் ஆண்டுதோறும் வருமான ஆண்டின் எந்த மொத்த வருமானத்திற்கு ரிடர்ன்   சமர்பிக்க வேண்டும், அல்லது ரிடர்ன் சமர்ப்பிக்க வேண்டாமா  என்பது குறித்து தெளிவு படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.

நான் சுமார் 40 ஆண்டுகளாக வருமான வரி கட்டி, வருமான வரி ரிடர்ன் சமர்ப்பித்துக்கொண்டு வருகிறேன். ஆகவே இந்த மாத சம்பளம் /பென்சன் வாங்குபவர்களின் வருமான வரி சமாச்சாரங்கள் ஓரளவு எனக்கு அத்துபடியாகி உள்ளன.

இந்த வருமான வரி சமாச்சாரத்தில் ஒருவர் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கலாம். 

ஒன்று:  சட்டப்பிரகாரம் என்ன வரி உண்டோ அதைக் கட்டிவிட்டு வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்து விட்டு நிம்மதியாக இருப்பது.

இரண்டு: பலவிதமான கோல்மால்கள் செய்து வரி கட்டாமல் தப்பித்து இரவில் தூக்கம் வராமல் தவிப்பது. இந்த இரண்டாவது வழியும் எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி நான் இங்கு விவரிக்கப்போவதில்லை. அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பவர்களுக்கு, நேரில் வந்தால் ட்யூஷன் எடுக்கப்படும். பீஸ் உண்டு.


முதல் வழி நேர் வழி. அதற்கு வருவோம். முக்கியமான சில அம்சங்களைப் பற்றி மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

1. சம்பளம், பென்சன், பேங்க் வட்டி இவைகள் அனைத்தும் ஒருவனின் வருமானமே. இதற்கு வருமான வரி கட்டவேண்டும்.

2. 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 2.5 லட்சம் வரை வரி இல்லை.

3. 60 வயதிற்கு மேற்பட்டு 80 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 3.0 லட்சம் வரை வரி இல்லை.

4. 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 5.0 லட்சம் வரை வரி இல்லை.

இப்போது "சுப்பு" அவர்களின் பிரச்சினைக்கு வருவோம்.

அவருக்கு மாதம் 20000 ரூபாய் பென்சன். அதாவது வருடத்திற்கு 2.4 லட்சம். இது மட்டுமே அவர் வருமானம் என்றால் அவர் வருமான வரி கட்டத்தேவையில்லை.

ஆனால் அவர் 30 லட்சம் ரூபாயை பேங்கில் 8% வட்டிக்குப் போட்டிருக்கிறார். அதன் மூலம் அவருக்கு வருடம் ஒன்றுக்கு இன்னுமொரு 2.4 லட்சம் வருமானம் வருகிறது. ஆக மொத்தம் அவருக்கு வருடத்திற்கு 4.8 லட்சம் வருமானம் வருகிறது.

இதில் அவருக்கு 60 வயது பூர்த்தி ஆகியிருந்தால் 3.0 லட்சத்திற்கு வரி கட்டவேண்டியதில்லை. மீதி உள்ள 1.8 லட்சத்திற்கு 10% வீதம் 18000 ரூபாய் வரி கட்ட வேண்டும். ஒருக்கால் அவருடைய பேங்கில் 10% வரியாக சுமார் 24000 ரூபாய் ஏற்கெனவே பிடித்தம் செய்திருந்தால் அதற்கு உண்டான சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொள்ளவேண்டும்.

அவர் அந்தப் பேங்க்கில் 20 லடசம் மட்டும் போட்டிருந்தால் இந்த வரிப்பிடித்தம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விடலாம். அப்போது பேங்க்கில் இந்த வரிப்பிடுத்தம் செய்ய மாட்டார்கள். 

அவர் கட்டவேண்டிய வரி 18000 மட்டுமே. பேங்க் அதிகமாகப் பிடித்தம் செய்துள்ள 6000 ரூபாயை இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பித்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படியும் அவர் ரிடர்ன் சமர்ப்பித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க முடியாது.

வெள்ளி, 10 மே, 2013

வருமானவரி என்றால் என்ன?


ஐயா.வருமான வரி யார் யாருயெல்லாம் கட்ட வேண்டும்.ரிட்டன் தாக்கல் செய்வது என்றால் என்ன?வரி கட்ட வில்லை என்றால் என்ன செய்து விடுவார்கள்.
தங்களின் பதில் தனி பதிவாக வெளியிட்டால் நலம்.

ஆஹா, கடவுள் எப்படியெல்லாம் கருணை காட்டுகிறார், பாருங்கள். பதிவு போட சப்ஜெக்ட் இல்லாமல் அல்லாடும்போது "ஆரிஃப்" ரூபத்தில் வந்து உதவுகிறார் பாருங்கள்.
==================================================================================

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை. இந்த உண்மை அந்த பெயரிலிருந்தே உங்களுக்கு விளங்கியிருக்கவேண்டும். இருந்தாலும் ஒரு ஆசிரியன் என்கிற முறையில் இதைச் சொல்வது என் கடமையாகிறது.

நான் சம்பாதிக்கிறேன். அதற்கு அரசுக்கு எதற்கு வரி செலுத்தவேண்டும் என்று சிலர் கேட்பார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி. அரசு இல்லாவிட்டால் உனக்கு வேலை ஏது? சம்பளம் ஏது? நீயே இருக்க முடியாதே? இதைப் புரிவது கொஞ்சம் கடினம்தான்.

எவ்வளவு வருமானம் இருப்பவர்கள் வருமான வரி கட்டவேண்டும்? இது ஒரு சிக்கலான கேள்வி. நம் நாட்டில் சட்டம் ஒன்று சொல்லும். ஆனால் மக்கள் ஒரு விதமாக நடப்பார்கள். முதலில் சட்டத்தை சொல்கிறேன். பிறகு நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்து விடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுக்கான வருமானவரிச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால்,  வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் இரண்டு லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்தவேண்டும். வரி விகிதம் இவர்களுக்கு ரூபாய்க்கு பத்து பைசா மட்டுமே. இவர்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் அந்த அதிக சம்பளத்திற்கு வரி ரூபாய்க்கு இருபது பைசா. சம்பளம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி ரூபாய்க்கு முப்பது பைசா. இதுதான் அதிக பட்ச வரி விகிதம்.

வருமானவரி சட்டத்தின்படி வருடம் என்பது ஏப்ரல் 1 ந்தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் மார்ச் 31 ந்தேதி முடிவடையும் வருடமாகும். இதை கணக்கு வருடம் என்பார்கள் அதாவது "Accounting Year" என்பார்கள். அதற்கு அடுத்த வருடத்தை "Assessment Year" சுருக்கமாக "AY" என்பார்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவே சில வருடங்கள் ஆகும்.

நீங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் பணம் போடுபவராக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டவேண்டியதில்லை. அதே போல் மெடிகல் இன்சூரன்ஸ் செய்திருந்தால் 15000 ரூபாய்  வரை வரி இல்லை. பல டொனேஷன்களுக்கும் இவ்வாறு சலுகைகள் உண்டு.

சொந்தமாக வீடு கட்டியிருந்தால், அதற்கு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனின் வட்டிக்கு வரி இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வாடகைப் பணத்தின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஊனமுற்றிருந்தால் அவர்கள் பராமரிப்புக்கு என்று ஒரு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இப்படியாக இன்னும் பல விலக்குகள் உண்டு. அவைகளைப் பற்றி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் வேலை செய்பவர்களுக்கே சரியாகத் தெரியாது. நாமும் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை.

இப்படி இந்த சட்டதிட்டங்களை எல்லாம், எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது கடினம். ஒவ்வொரு ஆபீசிலும் இந்த சட்டதிட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் ஒருவர் இருப்பார் (என்னை மாதிரி). அவரிடம் போனால் அவர் உங்களுக்கு எவ்வளவு டாக்ஸ் வரும் என்று ஐந்து நிமித்தில் கணக்குப் போட்டு சொல்லிவிடுவார். என்ன, அவருக்கு ஒரு பார்ட்டி வைக்கவேண்டி வரும். அவ்வளவுதான்.

நீங்கள் ஆபீசில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் வருமான வரியை அவர்களே பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் கட்டிவிடுவார்கள். அதற்கான ஒரு சர்டிபிகேட்டும் கொடுப்பார்கள். இந்த சர்டிபிகேட் பின்னால் தேவைப்படும்.

நீங்கள் ரிடையர் ஆகியிருந்தாலோ அல்லது வியாபாரம் செய்பவராகவோ இருந்தால் இந்த வரியை நீங்களே பேங்கில் கட்டவேண்டும். அதற்கு அவர்கள் ரசீது கொடுப்பார்கள்.

இப்படி நீங்கள் மார்ச் 31ந் தேதிக்குள் அந்த வருடத்திற்கான வருமான வரியைக் கணக்குப்போட்டு கட்டிவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த வரி கட்டின விபரங்களை அதற்குரிய படிவத்தில் சரியாக எழுதி அதை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்குண்டான படிவத்தில் ஒப்புதல் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். இதைத்தான் இன்கம்டாக்ஸ் ரிடர்ன் சமர்ப்பிப்பது என்று சொல்வார்கள். நாம் வாங்கும் ஒப்புதலுக்கு "Acknowledgement" என்று பெயர். இது மிகவும் முக்கியமான தஸ்தாவேஜு. இந்த வேலையை ஜூலை 31க்குள் செய்து முடித்துவிடவேண்டும்.

நீங்கள் பாட்டுக்கு வரி கட்டிவிட்டு, நாம்தான் வரி கட்டிவிட்டோமே என்று இருந்தீர்களானால், நீங்கள் வரி கட்டாதவராகத்தான் வருமானவரி இலாக்கா உங்களைக் கருதும். இந்த ரிடர்ன் பல பக்கங்களுடையதாய் சில வருடங்கள் முன்பு வரை இருந்தது. அத்தகைய படிவங்களை வைப்பதற்கு போதுமான இடம் வருமானவரி அலுவலகங்களில் இல்லாமையால் இப்போது இந்த படிவங்களை ஒரு சிங்கிள் காகிதமாக மாற்றிவிட்டார்கள்.

இந்த சிங்கிள் காகிதத்தை அச்சடிக்கத்தான் அவர்களுக்கு நேரம் இல்லை.

இத்துடன் வருமான வரி சமாச்சாரம் முடிந்து விடாது. உங்கள் கர்மவினை சரியாக இல்லாவிட்டால், உங்கள் வருமானவரிப் படிவம் ஒரு கிளார்க் கண்ணில் பட்டு அவனுக்கு அதில் ஏதாவது சந்தேகம் வரும். அப்போது அவன் உங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவான். அதில் ஒரு தேதியில் வருமானவரி ஆபீசுக்கு வரச்சொல்லி இருக்கும். அன்று நீங்கள் நேரில் போய் விளக்கம் கொடுக்கவேண்டி இருக்கும்.

இந்த நடைமுறைகளெல்லாம் நம் போன்ற சாதாரண பிரஜைகளுக்குத்தான். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய வியாபாரிகள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோருக்கு இந்த வருமானவரிச் சட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும்.

நீங்கள் மந்திரியாக இருந்தால், நான் வருமானவரி படிவம் தாக்கல் செய்ய மறந்துவிட்டேன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம். தேச சேவையில் இந்த மாதிரி சாதாரண விஷயங்கள் நினைவில் இருப்பது கடினம்தானே.

பின்சேர்க்கை:

சில வார்த்தைகளுக்கு வருமானவரி இலாக்காவில் அர்த்தம்.

1. Financial Year: இது ஏப்ரல் 1 ம் தேதி முதல் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி முடிய உண்டான வருடம். இதை Accounting Year என்றும் சொல்லுவார்கள்.

2. Assessment Year: உங்கள் வருமான வரியை கணிப்பது, ரிடர்ன் சமர்ப்பிப்பது ஆகியவைகளுக்கு உண்டான வருடம். 31-3-2013 அன்று முடிவடைந்த கணக்கு வருடத்திற்கு 1-4-2013 முதல் 31-3-2014 வரை உண்டான வருடம்தான் Assessment year.

3. FY 2012-13  என்றால் 1-4-2012 முதல் 31-3-2013 வரை. இதற்கான Assessment Year = AY 2013-14.

4. AY 2013-14  என்றால் 1-4-2013 முதல் 31--3-2014 வரை.

இந்த வருடக் கணக்கை சரியாகப் புரிந்து கொள்ள எனக்கு 78 வயது தேவைப்பட்டது. உங்களில் அநேகர் என்னைவிட கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள். ஆகவே இந்தக் கணக்கை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

AY 2013-14 வருடத்திற்கான வருமான வரிப் படிவம் இன்டர்நெட்டில் வந்துவிட்டது. அதை டவுட்லோடு செய்து பிரின்டிங் சென்டரில் கொடுத்தால் பிரின்ட் செய்து கொடுப்பார்கள். நம்மைப்போல் சாதாரணர்களுக்கு உண்டான படிவம் ITR 1 என்பதாகும். இது இரண்டு பக்கம் உள்ளது. இதை ஒரே காகிதத்தில் பிரின்ட் செய்யவேண்டும். தவிர இது  கண்டிப்பாக கலர் பிரின்ட்டாக இருக்கவேண்டும்.

கூடவே ITR V என்று ஒரு படிவம் இருக்கிறது. அதை கருப்பு வெள்ளையில் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் வருமானவரி அலுவலகத்தில் ITR1 படிவத்தைக் கொடுத்ததும், இந்தப் படிவத்தில்தான் வரி ரிடர்ன்ஐ பெற்றுக்கொண்டதற்கான கம்ப்யூட்டர் ரசீதை ஒட்டிக்கொடுப்பார்கள். இதுதான் வரி ரிடர்ன் சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி. பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தப் படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும் தவறாமல் கொடுக்கவேண்டும். குறிப்பாக உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பர். பேங்கின் IFSC  கோட் ஆகியவை கண்டிப்பாக வேண்டும்.  IFSC என்றால் Indian Financial System Code  என்பதின் சுருக்கம். இது அந்தந்த பேங்கிலோ அல்லது இன்டர்நெட்டிலோ கண்டு பிடிக்கலாம்.

இந்த விளக்கங்கள் போதுமென்று நினைக்கிறேன். மேலும் விவரங்கள் தேவைப்படின் பின்னூட்டத்தில் எழுதுங்கள். தனிப்பட்ட ஆலோசனை தேவைப்படுபவர்கள் நேரில் தக்ஷிணையுடன் வரவும்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நான் வருமானவரி கட்டப் போன கதை.


நான் ஏறத்தாழ 40 வருடங்களாக வருமானவரி கட்டிக்கொண்டு வருகிறேன். மார்ச் 31 தேதிக்குள் அந்த வருடத்திற்கான வரியை பேங்கில் கட்டி விடுவேன். ஏப்ரல் முதல் வாரத்தில் வருமான வரி ரிடர்ன் தயார் செய்து 15ம் தேதிக்குள் வருமான வரி ஆபீசில் தாக்கல்செய்து விடுவேன்.

நானும் என் நண்பர்கள் சிலரும் இவ்வாறுதான் வருடா வருடம் செய்து வந்தோம். வருமான வரி படிவத்திற்கு என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. வருமான வரி ஆபீசில் கேட்டால் தாராளமாக கொடுப்பார்கள். இரண்டு மூன்று படிவங்கள் என் பைலில் எப்போதும் இருக்கும்.

போன வருடம் இந்த மாதிரி வழக்கம்போல் ஒரு படிவத்தில் விவரங்களைப் பதிவு செய்து வருமானவரி ஆபீசுக்கு சென்றோம். அவர்கள் இந்த பழைய படிவங்கள் செல்லாது, புதிய படிவங்கள் இன்டர்நெட்டில் இருக்கிறது, டவுன்லோடு செய்து அதில் விவரங்களைப் பூர்த்தி செய்து கொண்டு வாருங்கள் என்றார்கள். நீங்களே படிவங்கள் தருவீர்களே, அந்த முறை என்ன ஆயிற்று என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், நாங்கள் கொடுப்போம், இப்பொழுதுதான் படிவங்களை அச்சாபீசுக்கு கொடுத்திருக்கிறோம், அவை வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும், உங்களுக்கு அவசரமில்லையென்றால் காத்திருங்கள் என்றார்கள். எங்களுக்கு இந்த சனியன் பிடித்த வேலையை சீக்கிரம் முடித்து விட்டால் ஒரு தொல்லை தீருமே என்ற எண்ணம்.

வீட்டிற்கு வந்து இன்டர் நெட்டில் தேடி அந்தப் படிவத்தைக் கண்டுபிடித்து டவுன்லோடு செய்து ஜீராக்ஸ் சென்டருக்குப் போய் பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து, வருமானவரி ஆபீசில் சேர்த்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.

இந்த வருடமும் அவ்வாறே மார்ச் 31 க்குள் வரி முழுவதையும் கட்டிவிட்டு பழைய படிவத்தில் விவரங்கள் பூர்த்தி செய்து எடுத்துக் கொண்டு வருமானவரி ஆபீசுக்குப் போனோம். அங்கே இந்தப் படிவம் வாங்கும் கவுன்டரில் இரண்டு பேர் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களிடம் இந்த மாதிரி வருமானவரி படிவம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அவர்கள் எங்கள் படிவங்களை ஏறெடுத்தும் பாராமல், இந்த வருடம் புது படிவம் வரப்போகிறது, அதில்தான் நீங்கள் ரிடர்ன் தாக்கல் செய்யவேண்டும் என்றார்கள். சரி, புது படிவங்கள் எப்பொது கிடைக்கும் என்று கேட்டோம். மூன்று மாதங்களில் அநேகமாக கிடைக்கும் என்றார்கள், அதாவது ஜூன் மாதக் கடைசியில் வரும் என்றார்கள்.

இன்டர்நெட்டில் இப்போது கிடைக்குமா என்று கேட்டதற்கு, இன்டர்நெட்டிலும் ஜூன் மாதம்தான் கிடைக்கும் என்றார்கள். இப்போது தினம் இன்டர்நெட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

அவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்பிய கேள்வி வாய் வரையில் வந்து விட்டது. இருந்தாலும் அதைக்கேட்கவில்லை. அந்தக்கேள்வி- வருமானவரிப் படிவங்கள் வருவதற்கு இன்னும் மூன்று மாதம் ஆகும். அதுவரையில் நீங்கள் என்ன செய்து கிழிக்கப்போகிறீர்கள்? சேரைத் தேய்ப்பதற்கா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?   இடம், பொருள், ஏவல் கருதி அந்தக் கேள்விகளை அப்படியே விழுங்கி விட்டு வந்தேன்.

இந்த மேட்டரில் எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் வருமானவரித்துறை மிக முக்கிய இடம் வகிக்கின்றது. ஏப்ரல் 1 ம் தேதியானால் வருமானவரி ரிடர்ன் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பது இந்த மடச்சாம்பிராணி டிபார்ட்மென்டுக்கு நன்றாகத்தெரியும். ஒரு மாதம் முன்பே இந்தப் படிவங்களை தயார் செய்து வைத்தால் என்ன?

வருடம் ஏறக்குறைய இரண்டு லட்சம் கோடி வருமானம் வசூலிக்கும் ஒரு அரசுத்துறையின் அவலத்தை என்னவென்று சொல்வது?

ஞாயிறு, 18 மார்ச், 2012

இன்கம்டாக்ஸ் கட்டவேண்டுமா?

உங்களுக்கு வருட வருமானம் 2 லட்சத்திற்கு மேல் வருகிறதா? அப்படியானால் நீங்கள் வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.

வருமான வரியா? நான் சம்பாதிக்கிறேன், அதுக்கு எதுக்கு வரி என்று வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நினைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சில பேர் அரசு போடும் சட்டங்களை வேத வாக்காக எடுத்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் சாதாரண சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 2 1/2 லட்சம் வரை வரி இல்லை. அதே நீங்கள் ஸ்பெஷல் சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 5 லட்சம் வரை வரி இல்லை. அதென்ன ஸ்பெஷல் சீனியர் சிடிசன் என்கிறீர்களா? நியாயமாகப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். இன்னும் இருந்துகொண்டு பல பேர் உயிரை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள். அதாவது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

சில சேமிப்புகள் செய்திருந்தால் 1.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அதாவது 2 லட்சம் +1.2 லட்சம் = 3.2 லட்சம் வரைக்கும் வரி கட்டவேண்டாம்.
சீனியர் சிடிசன்களுக்கும் இவ்வாறே. இதற்கு மேல் வருமானம் வந்து நீங்கள் வருமான வரி கட்டவேண்டுமென்று நினைத்தால் ஒரு வருமான வரி ஆலோசகரை நாடவும். இதற்கு முன்னால் வரி கட்டி அனுபவம் இருந்தால் நீங்களே அதற்குண்டான நடவடிக்கைகளைத் தெரிந்திருப்பீர்கள்.

மாத சம்பளம் வாங்கும் (அரசு அல்லது அரசு சாரா) பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த அலுவலகம் மூலமாகவே வரி பிடித்தம் செய்து விடுவார்கள். சிறு வியாபாரம் அல்லது சிறிய தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் வரி கட்டவேண்டிய அளவிற்கு வருமானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அப்படியே வரி கட்டவேண்டிய அளவு வருமானம் இருந்தாலும் இந்த விஷயத்தை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை.

பெரிய வியாபார நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிச்சயம் வரி கட்டவேண்டி வரும். இதற்காக அவர்கள் நல்ல திறமைசாலிகளான ஆடிட்டர்களை வைத்திருப்பார்கள். இந்த ஆடிட்டர்களுடைய வேலையே என்னவென்றால் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் வரிப் பளுவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதுதான். இதில் நியாய-அநியாயம் பார்க்கமாட்டார்கள். எப்படியோ வரி கட்டுவது குறைந்தால் சரி என்று ஆடிட்டரும் வாடிக்கையாளரும் இருந்து கொள்வார்கள்.

இப்படி வரி கட்டாமல் சேர்க்கும் வருமானம்தான் பிளாக் மணி என்று சொல்லப்படும் கறுப்புப் பணம். இப்படி சேர்ப்பவர்களைப் பற்றி தகவல் சேர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இப்படிப்பட்ட விவரங்களை வருமான வரி இலாக்காவிற்குச் சொல்வதால்தான் பலர் வீடுகளில் வருமான வரிச்சோதனைகள் நடைபெறுகின்றன. இதில் கறுப்புப் பணம் எவ்வளவு கண்டுபிடிக்கப்படுகிறதோ அதில் 10 % கமிஷன் இந்த விபரம் கொடுத்த நபருக்குப் போய்ச்சேரும்.

வரி கட்டும் அளவிற்கு வருமானம் வந்தும், வரி கட்டாதவர்களை சட்டம் என்ன செய்யும்? இது ஒரு பெரிய கேள்வி. எனக்கு இதில் நேரடியான அனுபவம் இல்லை. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட வரையில் அப்படிப்பட்டவர்களில் இளிச்சவாயர்கள் சிலரைப் பிடித்து ஃபைன் போட்டு உபத்திரவம் செய்வார்கள். கெட்டிக்காரர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதுவரை மாட்டவில்லை.

இன்கம்டாக்ஸ் அதாவது வருமானவரி குறித்து மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் கன்சல்டேசன் பீஸ் வாங்கிக்கொண்டு அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறேன்.

வருமான வரி கட்டாமல் எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ்க.