திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கல்யாணத்துக்கு உப்பு, ஜவுளி வாங்குதல்



அந்தக்காலத்திலயும், இப்பவும் கிராமங்கள்ல நிச்சியம்னு சொல்றது இல்லீங்கோ, “நல்ல வார்த்தெ பேசப்போறோம் னுதான் சொல்லுவாங்க, 
கல்யாண நிச்சியம் முடிஞ்ச பொறவுதான்மத்த எல்லா வேலைகளையும் பாப்பாங்க. தாராபுரத்தான்கேட்டாரு. நிச்சியத்தண்ணிக்கே மங்கிலியம் செய்யறதுக்குபொன் உருக்குவாங்களே, அதப்பத்தி ஒண்ணும் சொலல்லியே,அப்படீன்னு கேட்டிருக்காரு. அது மாதிரியே அன்னிக்கே வெறகுவெட்டறதுக்கும் போவாங்களேன்னும் கேட்டிருக்காருங்ககவுண்டருங்களுக்குள்ளயே ஊரு ஊருக்கு பளக்கவளக்கங்களெல்லாம் வித்தியாசப்படுமுங்க. எங்க ஊருமொறைமகளெல்லாம் தாராபுரத்துக்கு மாறுபாடா இருக்குமுங்க.தாராபுரத்துல கவுண்டருங்கள்லெயே ரெண்டு வகை உண்டுங்க,ஒண்ணு நெலம் நீச்செல்லாம் வச்சிட்டிருக்கிறவுங்க.அவங்களயெல்லாம் எசமானரு அப்படீன்னுதான்சொல்லோணுமுங்க. அப்பறம் நிலம் கிலம் இல்லாமெ கூலிவேலைக்குப்போறவங்களெ குடியானவங்க அப்படீன்னுசொல்லுவாங்க. எசமானருங்க எல்லாம் இன்னிக்குமளைமாரியில்லாம படற பாடு அவங்களுக்குத்தான் தெரியும்.அவியகிட்ட படி வாங்கிப் பொளச்சவனெல்லாம் இன்னிக்குவெளியூரு போயி சம்பாதிச்சு, காரு பங்களான்னு ரொம்பசௌகரியமா இருக்கறாங்க. இந்த எசமானருங்கஊரவிட்டுப்போக முடியாமெ அல்லாடிட்டு இருக்காங்க.

ரொம்ப வருசத்துக்கு முன்னாலயெல்லாம் ரொம்பவசதியானவங்கதான் தங்கத்தாலி, தங்கக்கொடியோடபோட்டுட்டு இருப்பாங்க. வசதி கொறஞ்சவங்க கல்யாணத்துக்குஅந்த ஊர்ல இருக்கற பெரியவங்க தாலிய எரவல்வாங்கித்தான் கல்யாணம் பண்ணுவாங்களாம். அப்றமா அந்ததாலிய திருப்பிக்கொடுத்துடுவாங்க. ( இங்கிலாந்துலகல்யாணப்பொண்ணுங்க கல்யாண டிரஸ்ஸை இரவல்வாங்கிப்போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம், அதுமாதிரி, நம்மூர்ல தாலி இரவல் வாங்கறது அந்தக்காலத்துலபழக்கம் இருந்திருக்கிறது)
அந்தக்காலத்துல அவங்கவங்க ஊட்லதான் எல்லா கல்யாணவிசேசங்களும் நடக்குமுங்க. இப்ப மாதிரி கல்யாணமண்டபத்துல ரெண்டு ஊட்டுக்காரங்களும் சேந்து எல்லாசீர்களையும் ஒண்ணாச்செய்யறது இல்லீங்க.
உப்பு,ஜவுளி வாங்கறதுக்குன்னு நிச்சியத்தன்னிக்கே ஒரு நல்ல நாளு பாத்திருப்பாங்க. உப்பு, ஜவுளி வாங்கப்போறதுக்கும் ஒரம்பர கூப்டோணுமுங்க. முக்கியமான பங்காளிங்க,தாயாதிங்க, மாமன், மச்சான்னு இதுக்கும் ஒரு அம்பது பேரச்சேத்தீடுவாங்க. ரெண்டு ஊட்லயும் சேந்து ஒரு நூறு பேரு ஆகிடுமுங்க. கோயமுத்தூரு ராஜவீதீல இந்தக்கடைக்கு வந்துருங்கன்னு அளைப்பு குடுக்கறப்பவே சொல்லிப்போடுவாங்க.
அதுக்கு முன்னால உப்பு வாங்கோணுமுங்க. அதுக்குன்னு கோயமுத்தூர் பெரிய மார்க்கெட்ல மாமூல் கடை இருக்குங்க.ரெண்டு ஊட்லயும் சேர்ந்து ஒரு பத்திருவது பேரு அந்தக்கடைக்குப்போவாங்க. ரெண்டு ஊட்டுக்காரங்களும் உப்பு வாங்கறதுக்குன்னு ஒரு அளவான தூத்துக்கூடை கொண்டு வந்திருப்பாங்க. கடைக்குப்போனவுடனே கடைக்காரனுக்கு இந்தக்கவுண்டருங்க என்னென்ன வாங்குவாங்கன்னு தெரியுமுங்க, மளமளன்னு ரண்டு வள்ளம் உப்பு, அரை வீசம் ஆரஞ்சு முட்டாயி. கால் வீசம் வெட்டுப்பாக்கு,திண்ணீர்ப்போட்டலம். செகப்புப்பொட்டலம், ஊதுபத்தி, கப்பூரம்,தீப்பொட்டி எல்லாம் ரெண்டு கூடையிலியும் வச்சுருவாங்க.அதுக்குள்ள ரெண்டு ஆம்பளைங்க போயி ரெண்டு ஈரெளைத்துண்டு (சும்மாடு கட்டறதுக்கு), வெத்தல. ரெண்டு சீப்பு வாளப்பளம், நாலு மொளப்பூவு, மூணு தேங்காய், மூணு எலுமிச்சம்பளம், கொஞ்சம் சந்தனம் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுவாங்க. கடைக்காரன் பில்லுப்போட்டு மொத்தம் இத்தனையாச்சுங்கன்னு சொல்லுவான். அதுல ஒரு பத்தோ இரபதோ புடிச்சுட்டு மிச்சத்தை ரெண்டு ஊட்டுக்காரங்களும் ஆளுக்குப்பாதியா கணக்குப்போட்டு கணக்க தீர்ப்பாங்க. அதுல மாப்பிள்ள ஊட்டுக்காரங்க ஒரு ரூபாயாச்சும் எச்சாக்கொடுப்பாங்க. ஏன்னா மாப்பிள்ள ஊட்டுக்காரங்க பொண்ணு ஊட்டுக்காரங்களுக்கு இளைச்சவங்களா ஆயிரப்படாது பாருங்க.
மார்கெட்டுக்குள்ளயே ஒரு அம்மன் கோயிலும் அதுக்குள்ள ஒரு விநாயகர் சந்நிதியும் இருக்குங்க. வாங்குன சாமானத்தெயெல்லாம் எடுத்துட்டு அந்தக்கோயிலுக்கு எல்லாரும் போவாங்க. அந்தப்பூசாரிக்கு கவுண்டகமொறையெல்லாம் அத்துபடிங்க. அதான் மாசத்துக்கு எப்படியும்ஒரு நூறு பேராச்சும் உப்பு வாங்கிட்டுஅந்தக்கொயிலுக்குத்தானே வராங்க.
அந்தப்பூசாரி இந்த மாதிரி நாளுக்குன்னு ரெண்டு அசிஸ்டென்ட்வச்சிருப்பானுங்க. அவங்க மளமளன்னு ரெண்டு கூடைக்கும்திண்ணூரு, சந்தனம், செகப்பு வச்சு, தேங்காய் ஒடச்சு வச்சு,இந்தக்கூடைலிருந்து மூணு கை உப்ப அந்தக்கூடைக்கு மாத்தி,அந்தக்கூடைலெயிருந்து மூணு கை உப்பை இந்தக்கூடைக்குமாத்தி பூசைக்கு, விநாயகருக்கும் தேங்காய் ஒடச்சு, பளம் வச்சுபூசைக்கு ரெடி பண்ணீருவாங்க. ஒடனே மெயின் பூசாரிவிநாயகருக்கு பூசையப்பண்ணி எல்லாத்துக்கும்கப்பூரத்தக்காட்டி, ஊம், உப்புக்கூடைய வாங்கறவுங்க முன்னாடிவாங்க அப்படீம்பானுங்க. உப்புக்கூடையை மாப்பிள்ள ஊட்லஇருந்து ஒரு பங்காளிப்பொம்பள, பொண்ணூட்ல இருந்து ஒருபங்காளிப்பொம்பள, அப்படி ரெண்டு பேருதான்வாங்கோணுமுங்க. நெருங்கின பங்காளி ஒருத்தருஅந்தக்கூடைகளெ எடுத்து அந்தப்பொம்பளைக கிட்டகுடுப்பாருங்க. மொதல்ல மாப்பிள்ள ஊட்டுக்காரங்களுக்குத்தான்கொடுக்கோணுமுங்க. அப்பறம்தான்பொண்ணூட்டுப்பொம்பளைக கிட்டக்கொடுப்பாங்க.வாங்கறவுங்க கொடுக்கறவுங்க காலத்தொட்டுக்கும்பிட்டுத்தான்கூடைய வாங்கி தலை மேல சும்மாடு கூட்டி வச்சு அது மேலகூடைய வச்சுக்குவாங்க. அப்படியே கோயிலச்சுத்திவந்துவெளில வந்து கூடைய கூட வந்திருக்கற நாசிவன் கிட்டகொடுத்துடுவாங்க. அவந்தான் அந்தக்கூடைய ஊட்டுக்குகொண்டு வந்து சேப்பானுங்க.
இப்படி உப்புக்கூடைய வாங்கினவுங்க கல்யாணம்முடியறவரைக்கும் எந்த தீட்டு ஊட்டுக்கும் போகப்படாதுங்க.
ஆமாங்க, உப்பு வாங்கறதுக்கே இத்தன நேரம் ஆயிடுச்சே,ஜவுளி எப்பப்பாத்து முடிக்கறது? அடுத்த பதிவுலபாத்துக்கலாங்களா?

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 4



விவசாயியின் பேராசைக்கு தூபம் போட்டதில் அரசுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ்நாட்டின், (ஏன், மொத்த இந்தியாவின் என்று கூட சொல்லலாம்) பெரிய சாபக்கேடு என்னவென்றால்இலவசக் கலாச்சாரம்”. எல்லாம் இலவசம். டி.வி. இலவசம். கேஸ் அடுப்பு இலவசம். பெண்டாட்டி இலவசம் (இலவசக் கல்யாணம்), பொங்கல் சாமான்கள் இலவசம், தீபாவளிக்கு வேஷ்டி, சேலை இலவசம். இப்படியாக எல்லோரையும் பிச்சைக்காரர்களாக மாற்றியாயிற்று. இது போக அரசு வேலை வாய்ப்புத்திட்டம். காலையில் போய் பெயர் கொடுத்துவிட்டு மரத்தடியில் படுத்து தூங்கி எழுந்தால் நூறு ரூபாய் கூலி. கஷ்டப்பட்டு வேலை செய்பவன் முட்டாளாகிக்கொண்டு வருகிறான்.

இந்த வரிசையில் முதலில் வந்தது விவசாயிகளின் கிணறுகளுக்கு இலவச மின்சாரம். இதை நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு விஞ்ஞான நிபுணர்களும் ஒரு காரணம். அதாவது ஆற்றுப்பாசன விவசாயிகளும், குளத்துப்பாசன விவசாயிகளும் தங்கள் நீர்த்தேவைக்காக செய்யும் நீர்த்தீர்வை செலவு சுமார் நூறு ரூபாய்கள் மட்டுமே. ஆனால் கிணற்றுப்பாசன விவசாயிகள் கிணறு வெட்ட, மோட்டார் பம்ப் செட் வாங்க, மின்சார இணைப்பு வாங்க என்றெல்லாம் அதிக முதலீடு செய்த பின்பும், தொடர் செலவாக மின்சார கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டவேண்டியதாக இருந்தது. இதை ஈடுகட்டும் வகையில் கிணற்றுப்பாசன விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கிறதா என்றால் அது இல்லை. ஆகவே அவர்களுக்கு அரசு ஏதாவது வகையில் சலுகை காட்டவேண்டுமென்று போராட்டங்களும், கருத்துப் பரிவர்த்தனைகளும் நடந்ததன் விளைவாக, கிணற்றுப்பாசன விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

இங்குதான் ஆரம்பித்தது வினை. மின்சாரத்திற்கு காசு இல்லை என்று ஆனவுடன் நிலத்தடி நீர் உபயோகம் பன்மடங்காகப் பெருகியது. எவ்விதக்கட்டுப்பாடும் இல்லாமல் விவசாயிகள் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தனர். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குப் போனது. நிலத்தடி நீர், மக்களின் பொதுச்சொத்து என்கிற கருத்து யாருக்கும் இல்லாமற்போனது. யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மையே எங்கும் நிலவியது. பல கிணறுகள் வறண்டு போயின. வளர்ந்து வரும் நகரத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு வேலைக்கு ஆட்களும் கிடைப்பது அரிதாகியது. அந்த விவசாயிகள் பலரும்முட்டுக்கல்விவசாயத்தைப் பண்ண ஆரம்பித்தார்கள். அதென்ன முட்டுக்கல் விவசாயம் என்கிறீர்களா, அதுதாங்க ரியல் ஸ்டேட் பிசினஸ். எல்லோரும் தங்கள் நிலங்களை புரோக்கர்களிடம் அக்ரீமென்ட் போட்டுவிட்டு, வந்த காசை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையை வளர விட்டால் உணவுப்பஞ்சம் வந்துவிடுமென்ற பயம் அரசுக்கு வந்தது. உள்நாட்டு வெளிநாட்டு நிபணர்களை வரவழைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து,  ஊரிலுள்ள கிணறுகளை எல்லாம் சொகுசு காரில் சுற்றிக் காண்பித்தார்கள். அவன் ஊர்ல, அவன் கிணத்தைப் பார்த்ததே இல்லை. இந்தியாவுக்கு வந்துதான் கிணற்றைப் பார்க்கிறான்.


ஆனால் அவன் கெட்டிக்காரன். இந்த உண்மையை வெளியில் சொல்வானா? அவர்களும் தஸ்புஸ் என்று இங்கிலீசில் பேசிக்கொண்டு, நம்ம ஆளுகள் கிட்ட இருந்தே எல்லா விசயமும் தெரிஞ்சுகிட்டு, இங்கிலீசில் ஒரு பெரிய ரிப்போர்ட் கொடுத்தார்கள். அதில்நீங்கள் பயப்படுகிறது முற்றிலும் சரி. இப்படியே விட்டால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில் தமிழ்நாடு பாலைவனமாகப் போய்விடும். உள்ளூர் நிபுணர்களை வைத்து இன்னும் பல தகவல்களைத் திரட்டிக்கொண்டு எங்கள் ஊருக்கு வரச்சொல்லுங்கள். இந்த ஊர் வெய்யிலில் எங்களால் சரியான தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கே நாங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்து சொல்லியனுப்புகிறோம்என்று சொல்லிவிட்டு அவர்களின் கன்சல்டேஷன் பணத்தை வாங்கிக்கொண்டு பறந்து போனார்கள்.

இப்படி பலநாட்டு நிபணர்களுக்கும் சொம்பு தூக்கி, நம் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தது என்னவென்றால்:

1.   தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அருகி வருகிறது.
2.   அதற்கு உடனடியாக ஏதாவது செய்தேயாக வேண்டும்.
3.   என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து சொல்ல உடனடியாக ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படவேண்டும்.
4.   அவர்கள் உடனே பல வெளிநாட்டுகளுக்குச் சென்று ஆராய்ந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு வரவேண்டும்.
5.   இந்தக் குழுவிற்கு மாண்புமிகு வேளாண்அமைச்சர் தலைமை தாங்குவார்.

இப்படியாக பல அரசியல் கூத்துகள் நடந்து முடிந்த பிறகு, நம் உள்ளூர் நிபணர்கள் சில உத்திகளைக் கண்டுபிடித்தார்கள். முதலில் இந்த இலவச மின்சாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உண்மை புலப்பட்டது. அரசியல் ரீதியாக ஒன்றை இலவசம் என்று ஆக்கிய பிறகு அதற்கு காசு வாங்க ஆரம்பிப்பது அரசியல் தற்கொலைக்கு சமம். இதற்காக நம் நிபுணர்கள் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார்கள். செருப்பு காலுக்குப் பத்தவில்லையா? காலை வெட்டு! இந்த ரீதியில் மின்சாரம் சப்ளை செய்வதைக் கட்டுப்படுத்தினார்கள். 24 மணி சப்ளை போய் 20 மணி, 16 மணி, 12 மணி, 8 மணி என்று படிப்படியாகக் குறைத்து தற்போது இரண்டு தவணைகளாக மொத்தம் 6 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படுகிறது. எதையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் நம் மக்கள் அதற்கு பழகிக்கொள்ளுவார்கள் என்கிற உண்மை அரசியல்வாதிகளுக்குப் புரிந்து விட்டது.

பிறகு இஸ்ரேல் சென்று வந்த நம் நிபுணர் ஒருவர்சொட்டு நீர்ப்பாசன முறையை”  அறிமுகப்படுத்தினார். அப்போது நீர்ப்பாசன வல்லுநர்கள் எல்லோரும்ஆஹா, நிலத்தடி நீர்ப் பிரச்சினை தீர்ந்துவிட்டதுஎன்று ஆர்ப்பரித்தார்கள். சில ஆண்டுகள் கழிந்த பிறகு அந்த முறையில் உள்ள சீர்கேடுகள் வெளிவர ஆரம்பித்தன. அதிக முதலீடு, தரமற்ற குழாய்கள், நம்நாட்டுக்கு உகந்த சரியான தொழில் நுட்பம் இல்லாமை, ஆகிய காரணங்களினால் இந்த சொட்டு நீர்ப்பாசன முறை எதிர்பார்த்த அளவு பலனைத் தரவில்லை. இப்போதும் பல விவசாயிகள் இந்த முறையை குறிப்பிட்ட சில பயிர்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்திற்கு திராக்ஷை பயிர். இதற்கு இந்த முறை மிகவும் லாபகரமாக இருக்கிறது. தென்னைக்கு ஓரளவு பரவாயில்லை. ஆனால் மற்ற பயிர்களுக்குப் பொருந்தவில்லை. அரசு 50 சதம் மான்யம் கொடுத்தும் இந்த முறை பிரபலமாகவில்லை