ஞாயிறு, 18 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? தொடர்ச்சி


நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-4)





பாகம் 3 ல் சும்மா ஒரு பெண்ணின் படத்தை மட்டும் போட்டிருக்கிறீர்களே, இது ஏன் என்ற எண்ணம் இதற்குள் வந்திருக்கவேண்டுமே? எல்லாம் காரணமாகத்தான்! சும்மா வளவளவென்று டிவி சீரியல்களில் வருகிற மாதிரி வசனமாகவே உங்கள் பதிவு இருந்தால் உங்கள் பதிவை ஒருவரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
இன்றைய உலகில் எல்லாவற்றிலும் ஒரு கவர்ச்சி தேவைப்படுகிறது. பத்திரிக்கைகளைப்பாருங்கள். அல்லது டிவி விளம்பரங்களைப்பாருங்கள். தேவை இருக்கிறதோ இல்லையோ, ஒரு பெண்ணின் படம் வருகறது. இன்றைய நடப்பு அதுதான். ஆகவே, ‘உலகத்தோடொட்டு ஒழுகல்’’ என்கிற இலக்கணப்படி உங்கள் பதிவிலும் ஆங்காங்கே இந்த மாதிரி படங்களைப் போடவேண்டியது அவசியம். உங்கள் பதிவை பிரபலமாக்க வேண்டுமல்லவா?
முதல் பதிவு போட தயாராகிவிட்டீர்களா! பதிவில் எதைப்பற்றி எழுதலாம் என்று யோசிக்கிறார்களா? எழுதுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளில் சில.
சினிமா, அரசியல் (ஆட்டோ வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்), சமூகப்பிரச்சினைகள், சிறுகதை, கேள்வி-பதில் (கேள்வியும் பதிலும் நீங்களே எழுதவேண்டும்), அடுத்த பதிவர்களை வம்புக்கு இழுத்தல் (மூக்கு உடைபட அல்லது போலீஸ் ஸடேஷன் போக தயாராக இருக்கவேண்டும்) - இப்படியாக ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு பதிவுக்கும் நல்லதாக, அதாவது வாசகர்களை சுண்டி இழுக்கும்படியான தலைப்பு வைக்கவேண்டும். தமிழ் பத்திரிக்கைகள் படிக்கும் வழக்கம் இருந்தால் கவலை இல்லை. உதாரணத்திற்கு – ‘பிரபல நடிகையின் படுக்கை அறையில் ??? – இது தலைப்பு.  ‘ஒரு கரப்பான் பூச்சி இருந்தது – இது செய்தி.
இன்னொறு விஷயம். ஐயோ, தலைப்பு இப்படி வைத்து விட்டோமே, அதற்கு ஏற்றாற்போல் என்ன எழுதுவது என்று வீணாய் கவலைப்படாதீர்கள். தலைப்பிற்கும் உள்ளே எழுதப்படும் விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் வேண்டியதில்லை. கவலை வேண்டாம்.
சரி, உங்கள் முதல் பதிவை எழுதி ப்ளாக்கில் ஏற்றியாகிவிட்டதா? இனிமேல்தான் உங்களுக்கு நிஜமான வேலை. அடுத்த பதிவில் சந்திப்போமா?
பாகம் 5 - தொடரும்



சனி, 17 அக்டோபர், 2009

உங்களுடைய பதிவு பிரபலமாக வேண்டுமா? (பாகம்-3)


Posted by Picasa

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-2)

பாகம் 1ல் கொடுத்த குறிப்புகளை நன்றாக மனதில் பதிய வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த்தாக உங்கள் முதல் பதிவை எழுதலாமா? அதற்குள் உங்களைப்பற்றிய சில தகவல்கள் வேண்டும். அதற்காக ஒரு QUIZ தயார். இந்த QUIZ ல் 100க்கு 100 மார்க் வாங்கினால் மட்டுமே நீங்கள் பதிவு எழுத லாயக்கானவர். இல்லையென்றால் பார்வையாளர் பெஞ்சில் உட்காரத்தான் லாயக்கு.
1.       சரளமாக உண்மை கலவாத பொய் எழுத வருமா?
2.       மெட்ராஸ் பாஷை, குறிப்பாக அதில் உள்ள வசைச்சொற்கள், நன்றாக தெரியுமா?
3.       வீட்டிற்கு ஆட்டோ(?) வந்தால் சமாளிப்பீர்களா?
4.       டாஸ்மாக்கில் 5 ரவுண்டு போட்ட பிறகும் ஸ்டெடியாக நிற்பீர்களா?
5.       உங்கள் மூக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறதா? யாராவது உங்கள் மூக்கில் குத்தினால் தாங்குவீர்களா? ரத்தத்தை பயமில்லாமல் பார்ப்பீர்களா?
6.       அடுத்த பதிவர்களின் அந்தரங்கங்களை சேகரித்துக்கொடுக்க நம்பிக்கையான நண்பர்கள் உண்டா?
7.       அப்படி கிடைத்த தகவல்களை வைத்து அவர்களுடைய குடும்ப நபர்களைப்பற்றி அவதூறுகள் கூறி பதிவுகள் போடமுடியுமா?
8.       உங்களை ஒரு சமயம் காவல்துறையில் கூப்பிட்டால், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டபொழுதெல்லாம் சலிக்காமல் போக முடியுமா?
9.       உங்கள் மனச்சாட்சியை ஒதுக்கித்தள்ள முடியுமா?
10.   உங்களை அடுத்த பதிவர் போட்டுத்தாக்கும்போது அதைத்தாங்கிக்கொண்டு திருப்பித்தாக்க முடியுமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் அளித்தீர்கள் என்றால் நீங்கள் பதிவு எழுதலாம்.
கூடவே கீழ்க்கண்ட வார்த்தைகளுக்கும் அர்த்தம் கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
1.       உங்கள் தளத்தை பின்பற்றுவோர்; 2. உங்கள் தளத்திற்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 3. உங்கள் பதிவிற்கு போடப்படும் பின்னூட்டங்கள்.
இந்த மூன்றும்தான் உங்கள் தளத்தின் பிரபலத்தின் அளவுகோல். இவை அதிகமாக அதிகமாக உங்கள் தளத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகும். அதனால் எனக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம்.


யாரும் கூறாத ஒரு ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன். பதிவர்களில் இருவகை உண்டு. ஒன்று-வெட்டிப்பதிவர்கள். இவர்கள் சும்மா பொழுது போக்குவதற்காக பதிவு போடுபவர்கள் (என்னை மாதிரி). இரண்டாவது வகை-காரியப்பதிவர்கள். உலகிலே முக்கிய காரியம் என்ன? பணம் பண்ணுவதுதான். இந்த பதிவுகளிலே எப்படி பணம் பண்ணமுடியும் என்று நினைக்கலாம். பதிவுகளிலே பல விளம்பரங்கள் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவை பணம் காய்க்கும் மரங்கள். உங்கள் தளத்தை எவ்வளவு பேர் பார்க்கிறார்களோ அந்த அளவு உங்களுக்கு அந்த விளம்பர நிறுவனங்கள் பணம் கொடுப்பார்கள்.
சில தளங்களில் வருகை தந்தோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். அந்த தளங்களில் வரும் விளம்பரங்களினால் அதிக வருமானம் வரும்.
உங்கள் தளத்தையும் அப்படி பணங்காய்ச்சி மரமாக மாற்ற விருப்பமா? தொடர்ந்து படியுங்கள்.


அடுத்தது பாகம்-3




நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-1)

எல்லோரும் தாங்கள் பிரபல பதிவராக ஆகவேண்டுமென்றுதான் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் (இருந்தால் மட்டுமே) மேலே படிக்கவும். அந்த ஆசை இல்லையென்றால் உடனே இந்த தளத்தை மூடிவிட்டு வேறு உபயோகமான வேலையைப்பார்க்கவும்.
ஆனால் இவை அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. யாருடைய மனதையும் எள்ளளவும் புண்படுத்துவதற்காக இந்த பதிவை எழுதவில்லை. அப்படி யாராவது தங்கள் மனது மிகவும் புண்பட்டு விட்டதாக எண்ணினால் அவர்களுக்கு என் அட்வான்ஸ் அபாலஜூஸ் (apologies). (சரியான தமிழ் வார்த்தைகளை யோசிக்க சோம்பல்). புதிதாக பதிவு எழுதப்போகும் உங்களுக்காக மிகவும் எளிய முறையில் படிப்படியாக கொடுத்திருக்கிறேன்.
முதல் படி :-
நீங்கள் முதலில் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும். இந்த பதிவைத்தான் நீங்கள் பிரபலப்படுத்தப போகிறீர்கள். பதிவு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாதா? அப்படியென்றால் நீங்கள் இந்த விளையாட்டிற்கு லாயக்கில்லை. பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்.
இரண்டாவது படி:-
இந்தப்பதிவிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் அல்லவா? இது ரொம்ப, ரொம்ப முக்கியம்! சுடுகாடு’’, பாழுங்கிணறு’’, ‘பன்னிக்குட்டி’’, ‘எங்க வீட்டு பொடக்காழி’’ இந்த மாதிரி ஒரு நல்ல பெயராக யோசித்து ஒரு பெயர் வைக்கவும். அடுத்த்தாக உங்களுக்கு (பதிவர்) ஒரு பெயரை தேர்ந்தெடுக்கவும். காட்டான், மொல்லமாரி, முடிச்சவிழ்க்கி, கொலைகாரன், இந்த மாதிரியான ஒரு பெயரை உங்களுக்கு சூட்டிக்கொள்ளவும்.
என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறதே! படித்தவர்கள் எழுதும் வலைத்தளங்களை இப்படி கொச்சைப்படுத்தலாமா என்று நினைக்கிறீர்களா? இதற்கே இப்படி தயங்கினால் நீங்கள் வலையுலகத்தில் ஓரங்கட்டப்படுவீர்கள். தயக்கப்படாதீர்கள். இனி வருபவை இதைத்தூக்கி சாப்பிடும்படியாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள். தைரியமாக மேலே படியுங்கள்.
மூன்றாவது படி:-
ஆகக்கூடி உங்கள் முதல் பதிவை ஆரம்பித்து விட்டீர்களா! வாழ்த்துக்கள். இதே மாதிரி மேலும் ஒன்பது பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் ஆரம்பியுங்கள். எதற்காக இன்னும் ஒன்பது பதிவுகள்? எனக்கு ஒரு பதிவை பிரபலமாக்கினால் போதுமே, எதற்காக இந்த வீண் வேலை என்று நினைக்கிறீர்களா? பதிவுலக நுணுக்கங்கள் புரியும் வரை குரு சொல்வதை ஒழுங்காகக்கேட்டுப்பழகுங்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே!!!
நான்காவது படி;-
உங்கள் நண்பர்களில் கணினி வைத்திருப்பவர்கள் பத்து பேரைப்பிடியுங்கள். அவர்களைத் தாஜா செய்து, அவர்களை நன்றாக கவனித்து – அது எப்படி என்பது போகப்போக விளங்கும் – அவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து பத்து வலைத்தளங்களை ஆரம்பிக்கச்சொல்லுங்கள். இது எதற்கு என்று பின்னால் விளக்குகிறேன்.
ஆச்சா! இப்போது நீங்கள் உங்கள் பதிவை பிரபலமாக்குவதற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இனி பதிவு எழுதவேண்டியதுதான் பாக்கி.
இதுவரை எழுதியவற்றையெல்லாம் பலமுறை படித்து மனதில் பதிநவைத்துக்கொள்ளுங்கள். மீதி அடுத்த பாகத்தில்....
பாகம் 2 – தொடரும்...


செவ்வாய், 29 செப்டம்பர், 2009

பதிவுலக நாற்றம்!!!

திருவிளையாடல் புராணம் சினிமாவில் பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் ‘’பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நாற்றம் உண்டா’’ என்பதுதான். இங்கு நாற்றம் என்பதின் பொருள் நல்ல மணம் என்பதாகும். ஆனால் தலைப்பில் கொடுத்துள்ள நாற்றம் வேறு. இது ‘’கூவத்தின் நாற்றம்’’.
நான் பதிவுலகத்தில் நுழைந்து ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

என்னுடைய அனுமானம் என்னவாக இருந்த்தென்றால் பதிவுலகம் என்பது மெத்தப்படித்த மேதைகளால் செய்யப்படும் ஒரு காரியம். இங்கு எல்லோரும் நாகரிகம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இங்கு எழுதப்படும் செய்திகளும் எழுத்து நடையும் மிகவும் கண்ணியமாயிருக்கும். இப்படித்தான் நினைத்துக்கொண்டு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன்.
எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. கொஞ்ச நாள் கழித்து திடீரென்று ஒரு சலசலப்பு. ஓர் நாற்றம் (?). என்னவென்று புரிவதற்கே நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

பிறகு பல பதிவுகளைப் படித்து நிலைமையை ஒருவாறாக புரிந்து கொண்டேன். என்ன புரிந்தது என்றால் ‘’நிறைய பதிவர்களுக்கும் டாஸ்மாக் ஆதரவாளர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை’’ என்பதுதான். இப்படி எழுத என் மனம் கூசுகின்றது. பதிவர்கள் என்னை மன்னிக்கமாறு வேண்டிக்கொள்கிறேன்.

தெருக்குழாய் சண்டை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்த்தில்லை. அங்கு பெண்கள் பேசுவதைக்கேட்டால் பிறகு தண்ணீரையே குடிக்கமுடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வலையுலக சண்டை குழாய்ச்சண்டையையும் மீறினதாக இருக்கிறது. இப்போது என்னுடைய கவலையெல்லாம் இந்த வலையுலகில் தொடர்ந்து இருக்கலாமா அல்லது மூட்டை கட்டி வைத்துவிட்டு ஓடிவிடலாமா என்பதுதான்!

இருந்தாலும் ஒரு தமிழனாகப்பிறந்துவிட்டு இப்படி பயந்து ஓடுவது தமிழ் இனத்தையே (முறத்தினால் புலியை விரட்டிய வீரத்தமிழிச்சி பரம்பரையல்லவா) அவமதிப்பது போல் ஆகுமே என்று மனதைத்தேற்றிக்கொண்டு பதிவைதைதொடரலாமென்று இருக்கிறேன்.

நான் படித்த பதிவுகளிலிருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால் இது ஒரு பங்காளிச்சண்டை மாதிரி படுகின்றது. சொத்து பிரிப்பதில் பங்காளிகளுக்குள் எப்போதும் சண்டை வரும். ஆனால் சண்டையின் ஆரம்ப கட்டத்தில் அது பங்காளிச்சண்டைமாதிரியே தெரியாது. சம்பந்தமில்லாத விஷயங்களில் ஆரம்பிக்கும். இங்கும் அப்படித்தான் நடக்கிறது. இப்போது இந்த பங்காளிச்சண்டை சிறிது ஓய்ந்திருக்கிறது. என்னால் இந்த அமைதி கெடவேண்டாம் என்று இத்துடன் முடிக்கிறேன்.

தொடரும....

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கோளாறு

கொங்கு நாட்டிலே கோளாறு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் – தகராறு, வம்பு, தவறு, நட்டு லூஸு, இப்படி பல அர்த்தங்கள் உண்டு. ‘ஏண்டா கோளாறு பண்றே?’ என்று சொன்னால் ‘ஏன் தகராறு பண்ணுகிறாய்?’ என்று அர்த்தம். ‘அவன் கொஞ்சம் கோளாறு பிடித்த ஆளப்பா’ என்றால் அவனுக்கு கொஞ்சம் மறை கழண்டு போய்விட்டது என்று புரிந்து கொள்ளவேண்டும். ஒரு காரியம் கோளாறாய் போய்விட்டது என்றால் அந்த காரியம் கெட்டு விட்டது என்று அர்த்தம்.

இப்படியிருக்கையில் எனக்கு ஆபீஸில் மதுரைக்கு மாற்றல் ஆகிவிட்டது. தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் கொண்டுபோய் செட்டில் ஆனேன். ஆபீஸ் குவார்ட்டர்சில் வீடு. அப்போது ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தேன். ஒரு நாள் அந்த ஸ்கூட்டரில் ஒரு கோளாறு.

ஒரு லீவு நாளன்று உள்ளூர் நண்பன் ஒருவனைக்கூட்டிக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் வொர்க்ஷாப்பிற்கு போனேன். அங்கு அந்த வொர்க் ஷாப் அதிபரிடம் விபரத்தை, அதாவது ஸ்கூட்டரில் ஏற்பட்டுள்ள கோளாறைச் சொன்னேன். அவர் உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேளையாளைக் கூப்பிட்டு ‘டேய், ஐயா நம்ம கடைக்கு புதுசாய் வந்திருக்கிறார், அவர் வண்டியை கோளாறாய் செய்து முடிச்சிறு’ என்று கூறினார்.


இதைக்கேட்ட எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. ஏற்கனவே கோளாறு என்றுதானே இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இவர் என்னடாவென்றால் இதை இன்னும் கோளாறாக்க சொல்லுகிறாரே என்று கூட வந்த நண்பரை தனியாக கூட்டிக்கொண்டு போய் ‘இதென்னப்பா, ஏற்கனவே வண்டியில் கோளாறு என்றுதானே இங்கே கொண்டு வந்திருக்கோம், இந்த கடைக்காரர் இதை இன்னும் கோளாறு பண்ணச்சொல்கிறாரே? வேறு கடையைப் பார்க்கலாமா’ என்று கேட்டேன். அந்த நண்பன் பலமாக சிரித்தான்.

எனக்கு கோபம். நான் ஒரு சீரியஸ் மேட்டர் சொல்கிறேன், இவன் விளையாட்டாக சரிக்கிறானே என்று மனதில் நினைத்துக்கொண்டு ‘ஏன் சிரிக்கிறாய்’ என்று கேட்டேன்.
அவன் கடைக்காரரிடம் என்னைக்கூட்டிக்கொண்டு போய் ‘சார் இவருக்கு ஒரு சந்தேகம். அவர் வண்டியில் ஏதோ கோளாறு என்றுதான் இங்கு வந்தோம். வந்த இடத்தில் நீங்கள் வண்டியை இன்னும் கோளாறு செய்யச் சொல்கிறீர்களே’ என்று கூறினார்.

இதைச்சொன்னவுடன் இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திருதிருவென முழித்தேன். பிறகு கடைக்காரர் நண்பரைப்பார்த்து ‘உங்கள் நண்பர் மதுரைக்கு புதுசா’ என்று கேட்ட்டார். அவரும் ‘ஆமாம்’ என்றார். கடைக்காரர் ‘அதனால்தான் இந்த சந்தேகம்’ என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து கூறினார் ‘சார், இந்த ஊர்லே கோளாறு என்றால் கெட்டிக்காரத்தனமாக அல்லது புத்திசாலித்தனமாக என்று அர்த்தம் சார், நீங்கள் கவலைப்படாமல் போய்ட்டு நாளைக்கு வாங்க, வண்டி ரெடியாய் இருக்கும்’ என்றார்.

மதுரையில் மேலும் சில வருடங்கள் இருந்தேன். இந்த ‘கோளாறு’ விஷயம் பழக்கமாகிவிட்டது. யாராவது ‘டேய், அந்த வேலையை கோளாறாய் முடித்துவிட்டு வா’ என்று சொன்னால் அதை சாதாரணமாய் எடுத்துக்கொள்வேன். பிறகு சொந்த ஊருக்கு வந்தவுடன் கோளாறை கோளாறாகப் பார்க்க பழக வேண்டியதாய் போய்விட்டது.

தொடரும்.....

புதன், 26 ஆகஸ்ட், 2009

பை, பைய, பைக்கட்டு

எனக்கு ஒரு சமயம் மதுரைக்கு மாற்றலாகி குடும்பத்துடன் அங்கே குடியேறினேன். எனக்கு விவசாயக்கல்லூரி வளாகத்திலேயே குவார்ட்டர்ஸ் கிடைத்தது. அங்கிருந்து மதுரை டவுன் சுமார் 10 கிலோ மீட்டர் இருக்கும். டவுனிலிருந்து வருபவர்களுக்காக ஆபீஸ் முடிந்த்தும் ஒரு கல்லூரி பஸ் புறப்படும். குவார்ட்டர்ஸில் கடியிருப்பவர்களும் சில சமயம் இந்த பஸ்ஸில் ஏதாவது வாங்க வேண்டியது இருந்தால் போவோம்.
அப்படி ஒரு முறை நான் போகவேண்டியிருந்தது. சாமான் வாங்க பை எடுத்து வரவில்லை. ஆகவே ஆபீஸ் பையனைக்கூப்பிட்டு ‘என் வீட்டிற்குப் போய் ஒரு பைய (பையை) வாங்கிக்கொண்டு வா’ என்று அனுப்பினேன். போனவன் போனவன்தான். ஆபீஸ் பஸ் புறப்படும் வரையிலும் வரவேயில்லை. சரி, கடையில் பை வாங்கிக்கொள்ளலாம் என்று நான் டவுனுக்கு போய்விட்டேன்.
மறுநாள் ஆபீஸ் வந்த்தும் அந்த பையனைக்கூப்பிட்டு ‘ஏன் நான் நேற்று பைய வாங்கிக்கொண்டு வரச்சொன்னேனே, ஏன் வரவில்லை’ என்று கேட்டேன். அதற்கு அவன் ‘நீங்கள்தான் வீட்டிற்கு போய்விட்டு பைய வரச்சொன்னீர்கள்’ என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மதுரை நண்பர் என்ன ஏது என்று விசாரித்துவிட்டு சிரித்தார். ஏன் சிரிக்கிறீரகள் என்று கேட்டதற்கு ‘ஆமாம், நீங்கள் அவனை வீட்டிற்கு போய்விட்டு பைய வரச்சொல்லியிருக்கிறீர்கள். அவன் அது போல செய்திருக்கிறான்’ என்றார். அப்புறம்தான் மதுரையில் ‘பைய’ என்றால் ‘மெதுவாக’ என்று அர்த்தம் என்று விளக்கினார்கள்.
சரி. எனக்கு பை (bag) வேண்டுமென்றால் நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘பைக்கட்டு’ வாங்கி வா என்று கூறவேண்டும் என்றார். எங்க ஊரில் (கோவை) பைக்கட்டு வாங்கி வா என்று சொன்னால் ஒரு கட்டு பை வாங்கிக்கொண்டு வந்து நிற்பார்கள். இப்படியாக கொஞ்ச நாளில் நானும் மதுரைத்தமிழுக்கு பழக்கமானேன்.
இன்னும் வரும்....

ஒரு நல்ல காட்சி

நான் ரசித்தது


Posted by Picasa

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

கொங்கு வட்டார வழக்குகள் – 1

கோயமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கொங்கு மண்டலம் என்று கூறுவதுண்டு. இந்த பகுதி மக்கள் பேசும் தமிழ் ஒரு மாதிரியாக இருக்கும். அது சினிமாவில் கோவை சரளா போன்றோர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது. புதிதாக கேட்பவர்களுக்கு தமாஷாகக்கூட இருக்கும்.
நான் விவசாயக்கல்லூரியில் படிக்கும்போது சிலர் ‘ஆஹா, கொங்கு தமிழ் எனக்கு நல்லா தெரியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதுண்டு. அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன். எங்கே இதன் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம் – அங்கராக்கு சோப்பிலே தொரப்புக்காய் இருக்குது எடுத்துட்டு வா புள்ளேய் – என்றால் முழிப்பார்கள். கொங்கு நாட்டிலேயே பிறந்திருந்தாலும் நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் இந்த கேள்விக்கு முழிப்பார்கள்.
ஷர்ட் பாக்கெட்டில் சாவி இருக்கறது, எடுத்து வா – இதுதான் அர்த்தம்.
இங்கு பேசுபவர்களின் பேச்சில் மரியாதையும் பண்பும் நிறைந்திருக்கும். புதிதாக யாரையாவது பார்த்தால் – என்னங்க நம்ம வீட்டிலே எல்லோரும் நல்லா இருக்காங்களா – என்று நலம் விசாரிப்பார்கள். வேறு மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் – இவர் வீட்டிலே நல்லா இருக்காங்களா என்று எனக்கு எப்படி தெரியும் என்று முழிப்பார்கள். இதை மிகவும் நுணுக்கமாக யோசித்தால்தான் விளங்கும். உங்கள் வீடு வேறு என் வீடு வேறு என்று வேறுபடுத்தி பார்க்காமல் இரண்டு வீடும் ஒன்றுதான் என்ற எண்ணத்திலிருந்து வரும் வார்த்தைகள் அவை.
நம்ம வீட்டு அம்மா செளக்கியங்களா என்று முதன்முதலாக கேட்பவர்கள் கொஞ்சம் ஆடிப்போய்விடக்கூடும். இந்த அன்னியோன்யம் வேறு மாவட்டங்களிலே பார்ப்பது அரிது.
தொடரும்....

வியாழன், 16 ஜூலை, 2009

சென்னை தமிழும் கொங்கு கவுண்டரும்

எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ரொம்ப நாளாக சென்னையில் வசித்து விட்டு சமீபத்தில் கோவைக்கு வேலை மாற்றலாகி குடி வந்தார்கள். அந்த வீட்டிலுள்ள காலேஜ் போகும் பெண் என் மகளுக்கு பழக்கம். அந்த பெண் கோவையில் பேசும் தமிழைக்கேட்டு விட்டு ‘ இங்கே என்ன தமிழ் இப்படி பேசுகிறார்கள், இழுத்து இழுத்து பேசுகிறார்கள். அப்புறம் அது என்ன எதற்கெடுத்தாலும் ஒரு ‘..ங்க’ போட்டு, என்னங்ங்ங்ங்கேகேகே... என்று இழுக்கிறார்கள்’. கொங்கு தமிழ் ஏறக்குறைய சினிமாவில் கோவை சரளா வசனங்கள் மூலமாக அனைவரிக்கும் பரிச்சயமாயிருக்கும். சினிமா பார்க்காதவர்களுக்காக சில மாதிரி சம்பாஷணைகள்;

வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் புருஷனிடம் மனைவி;
ஏனுங்க, வேலையிலிந்து ஊட்டுக்கு வர இத்தனை நேரம் ஏனுங்க, நீங்க வேலைக்கு போனதுக்கப்பறம் உங்க அம்மா பண்ற ரவுசு என்னாலெயெ தாங்க முடியலைங்க. அப்பறம் உங்க பசங்க பண்ற லொள்ளு மீறிப்போச்சுங்க, இதுக்கு என்னாச்சும் பண்ணுங்க’.
இந்த ரேஞ்சில் பேச்சு போகும்.

சென்னையில் எப்படியென்றால்;
‘என்னா நீ, வூட்ல சொல்லிகினு வந்த்ட்யா, கஸ்மாலம், நட்ரோட்ல போறயே, மண்டேலே மசாலா (க்)கீதா, எத்னாச்யும் லாரி கீரி பட்டா என்னா, ஆஸ்பத்ரிக்கு பூடுவே.’

கோயமுத்தூரிலிருந்து புதிதாக சென்னை செல்பவர்களுக்கு இந்த பாஷை ஒரு ஷாக்காக இருக்கும். யாரையும் ஒருமையில் அழைத்துப்பழக்கமில்லாத கோயமுத்தூர் கவுண்டர் ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப்போய் விடுவார். பிறகு கொஞ்சம் பழகின பிறகுதான் இதை சகித்துக் கொள்வார். ஊருக்கு திரும்பிப்போனதும் பல நாட்களுக்கு பார்த்தவர் எல்லோரிடமும் இந்த மெட்ராஸ் பாஷையைப்பற்றித்தான் பேசுவார். ‘’மெட்ராஸில ஒரு பயலுக்கும் மரியாதையே தெரியாது. அங்க பேசற மாதிரி நம்ம ஊர்லெ பேசினா எல்லாப்பயலும் நம்மை அடிக்க வந்த்ருவான்.’’ இப்படியே பல நாட்களுக்கு புலம்பிக்கொண்டு இருப்பார்.
தொடரும்....