ஞாயிறு, 20 ஜூன், 2010

நூறாவது மொக்கை




ஒரு நாள் நான் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாசலில் திடீரென்று சப்தம்.

மாமோய் மாமோய், இங்க வாங்க, இந்த மூட்டைய ஒரு கை புடிங்க

என்னமோ ஏதோன்னு போய்ப் பார்த்தா ஊரிலிருந்து என் மச்சினன் ஆட்டோவிலிருந்து இறங்கி ஒரு மூட்டைய இறக்கிக்கொண்டு இருக்கிறான். மூட்டைய இறக்கிட்டு பார்த்தா மச்சினனையையும் காணோம். மூட்டையையும் காணோம். உள்ள இருந்து சத்தம் மட்டும் கேக்குது. “மாமோவ், அந்த ஆட்டோக்காரனுக்கு வாடகையை கொடுத்து அனுப்பிச்சுட்டு வாங்கஅப்படீன்னு. காலங்காத்தால வம்பு என்னத்துக்குன்னு வாடகையைக் கொடுத்து ஆட்டோவை அனுப்பிச்சுட்டு வந்தா, அக்காளும் தம்பியும் குசுகுன்னு என்னமோ பேசீட்டு இருந்தாங்க. என்னப்பாத்ததும் பேச்ச நிறுத்தீட்டாங்க.

நான்: என்ன மாப்பிள்ள, திடீர்னு இந்தப்பக்கம் வந்திருக்கிறீங்க, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” 


(அப்படீன்னு கேட்டுட்டு திருப்பியும் கம்ப்யூட்டர் முன்னால வந்து உக்கார்ந்தேன். மச்சின்னும் வந்து பக்கத்துல அடக்க ஒடுக்கமா நின்னான். அவன் நிக்கிரதப்பாத்தவுடனே ஏதோ வில்லங்கம் வரப்போகுதுன்னு நெனச்சேன். மேல படீங்க)

மச்சினன்: மாமோவ் என்ன பண்ணீட்டிருக்கீங்க?

நான்:  மாப்பிள்ள இதுதான் கம்ப்யூட்டரு. அதுல நானு அப்பிடியே ஏதாச்சும் பண்ணீட்டிருப்பேன்.

மச்சினன்: என்ன பண்றீங்க, எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன், நானும் தெரிஞ்சுக்கறேன்.

நான்: மாப்பிள்ள, இதுல இன்டர்நெட்டுனு ஒண்ணு இருக்கு, அதுல இல்லாத வசயமே ஒலகத்துல இல்ல, அத த்தான் நான் பாத்துட்டிருக்கேன்.

மச்சினன்: ஆமாங்க, மாமா, அதுதான் பேப்பர்லயே எல்லா நியூசும் வருதே, அப்பறம் இதுல எச்சா என்ன பாப்பீங்க.

நான்: அட மட மாப்பிள்ள, இதில வலைப்பதிவுன்னு ஒண்ணு இருக்கு. அதுல போய் பாத்தா நெறய விசயத்தைப்பத்தி நெறயப்பேரு விதவிதமா எழுதியிருப்பாங்க, அதயெல்லாம் படிச்சா நெறய விசயம் தெரிஞ்சிக்கலாம் மாப்பிள்ள.

மச்சினன்: அப்படீங்களா மாமா, நீங்களும் எதாச்சும் எழுதறீங்களா மாமா

நான்: ஆமாம் மாப்பிள்ள, நானும் மூணு வலைத்தளம் வச்சிருக்கேன்.

அதுங்கள்ல எழுதினா ஏதாச்சும் பணங்காசு வருமுங்களா.

நான்: பணமெல்லாம் ஒண்ணும் வராதுடா மாப்பிள்ள

மச்சினன்: அப்பறம் எதுக்கு விடிய விடிய இதுல உக்காந்து கண்ணைக் கெடுத்துக்கிறீங்க.


நான்: உங்க அக்கா சொல்லிக் குடுத்துட்டாளாக்கும். நாலு பேரு படிச்சுட்டு நல்லா எழுதீருக்கீங்கன்னு சொன்னா சும்மா தலை குளுகுளுன்னு ஆகுதில்ல, அதுக்குத்தான் மாப்பிள்ள எழுதறது.

மச்சினன்: இப்படி எழுதறவங்கள எல்லாம் எங்கயாச்சும் நேர்ல பாத்துப்பீங்களா

நான்: சில பேரு பாத்துப் பேசீக்குவாங்க. நானு யாரையும் பாத்ததில்லே.

மச்சினன்: அப்படிப் பாக்கறப்போ என்ன பேசீப்பாங்க மாமா

நான்: பொதுவா அவங்க எல்லாம் பெரிய ஓட்டல்லதான் சந்திப்பாங்க. அப்படியே எதாச்சும் வாங்கி குடிச்சுட்டே மூணு நாலு மணி நேரம் பொது சமாசாரங்களப் பேசீட்டிருப்பாங்க.

அத்தன நேரம் என்ன குடிப்பாங்க மாமா

நான்: பீரு, பிராந்தின்னு என்னென்னமோ வாங்கி குடிப்பாங்க.

மச்சினன்: ஏன் மாமா, நீங்களும் அப்படி எங்காச்சும் ஓட்டலுக்கு போவீங்களா?

நான்: பாத்தியா மாப்பிளே, ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, இப்ப என்னையே கடிக்க வந்துட்ட பார்த்தியா? இதுக்குத்தான் மடப்பசங்க கூட எல்லாம் பேசப்படாதூங்கறது.

மச்சினன்: மாமா, மாமா இப்படிக் கோவிச்சுக்கிறீங்களே, நான் சும்மா தமாசுக்கு கேட்டனுங்க மாமா. அது போகட்டும் மாமா. அதென்னமோ பதிவருங்க ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்குவாங்கன்னு அக்காகிட்ட சொன்னீங்களாமே, அது எதுக்கு மாமா இதுல சண்டையெல்லாம் கூட வருமா.

நான்: அதுடா மாப்பிள்ள, டாஸ்மாக்ல நம்மூரு ஆளுங்க குடிச்சுப்போட்டு வரப்போ அதயும் இதயும் பேசி, சண்டை போட்டுவாங்க இல்லியா, அந்த மாதிரி இவுங்களும் ஒவ்வொரு நாளைக்கு சண்டை போட்டுக்குவாங்க. இப்படித்தான் பாரு, ஒரு நாளு ரண்டு பேரு பெரிய ஓட்டல்ல குடிச்சுப்புட்டு வரப்போ ஒருத்தரு இன்னொருத்தரு மூக்கை ஒடச்சுப்புட்டாரு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகவேண்டி ஆயிடுச்சு.

மச்சினன்: மாமா, நீங்க எங்காச்சும் போயி இந்த மாதிரி வில்லங்கத்துல மாட்டிக்காதீங்க மாமா, அப்பறம் ஊர்ல என்ற மானம் மரியாதியெல்லாம் கப்பல்ல ஏறீடும் மாமா.

நான்: அட மடப்பயலே, நானு அப்படியெல்லாம் போகமாட்டேண்டா.

மச்சினன்: அது சரீங்க மாமா, அக்கா சொல்றமாதிரி, இந்தக்கருமத்துக்கு ஒரேயடியா தல முளுகிட்டு வேற வேல பாக்கலாமில்லீங்களா மாமா, ஏன் இந்தக் களுதையப் புடிச்சுட்டு அளுகிறீங்க.

நான்: அப்படி இல்ல, மாப்பிள்ள, இப்ப நானு இத உட்டுட்டுப் போறேன்னு வச்சுக்கோ, அப்பறம் நாலு பேருபயந்தாங்குள்ளிஅப்படீம்பாங்க. அதுவுமில்லாமெ ரிடைர்டு ஆன பொறகு பொளுது போறதுக்கு வேற என்ன பண்ணறது? நாலு பேரு அடிச்சுக்கற பாத்தா அப்படியே பொளுது நல்லா போயிருதில்ல.

மச்சினன்: அப்படீங்களா மாமா, எதுக்கும் அக்கா மனசு நோகறாப்பல எதையும் செஞ்சுடாதீங்க. வயசான காலத்துல அக்கா கண்ணுல தண்ணி வரப்படாதுங்க.

நான்: அதெல்லாம் ஒங்க அக்காளை பூப்போஙதான் வச்சுட்டிருக்கனப்பா, நீ எதுக்கும் கவலைப்படாத.

மச்சினன்: சரீங்க மாமா, ஊர்ல வேலைகளையெல்லாம் அப்படியப்படியே போட்டுட்டு ஓடியாந்தனுங்க. நானு ஒடனே ஊருக்குப் போகோணுங்க, போயிட்டு அப்பறமா ஒரு நளைக்கு சாவகாசமா வரணுங்க.

நான்: சரிப்பா, போயிட்டு வா. ஒங்கம்மா கிட்ட சொல்லு, மாமா நல்லாத்தான் இருக்கறாரு, அக்காதான் சும்மா மனசப்போட்டு அலட்டீக்குது அப்படீன்னு, சரியா.









ஞாயிறு, 13 ஜூன், 2010

நான் வம்பினில் சிக்கினேன்

 
வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதனால் நான் எப்படி வம்பில் சிக்கினேன் என்று பார்க்கலாமா?
நான் நிலக்கடலை ஆராய்ச்சிப் பண்ணையில் சேரும்போது கடலைக்காய் அறுவடைக்காலம். கடலைக்காயில் இரண்டு வகை உண்டு: 1. குத்துக்காய்
2. கொடிக்காய். குத்துக்காய் அறுவடை செய்வது சுலபம். மண்ணில் சரியான ஈரப்பதம் இருக்கும்போது செடியைப்பிடித்து இழுத்தால் செடி வேருடனும் காய்களுடனும் வந்து விடும். மண்ணுக்குள் அதிகம் காய்கள் நிற்காது. ஆனால் கொடிக்காய் தரையோடு படர்ந்திருக்கும். அதை மம்மட்டி அல்லது களைக்கொத்து கொண்டு வெட்டித்தான் பிடுங்கவேண்டும். அப்படியும் பல காய்கள் மண்ணிற்குள் நின்றுவிடும். இதற்கு அதிகம் ஆட்கள் தேவைப்படும்.
இதற்காக கோயமுத்தூர் விவசாய பொறியியல் துறையில் டிராக்டரில் பொருத்தக்கூடிய கருவி ஒன்று கண்டு பிடித்திருந்தார்கள். அதைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக எங்கள் பண்ணைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதை கொண்டுவந்திருந்த டிராக்டர் டிரைவர் எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்தவன். என்னை விட 10 வயது மூத்தவன். அதிகமாக சர்வீஸ் போட்டவன். அதனால் அவன் என்னுடன் கொஞ்சம் உரிமையுடன் பழகுவான். அவன் சொன்ன ஒரு அறிவுரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருந்தது.
இப்படி கொஞ்சம் நெருக்கமானபடியால் ஒரு நாள் பக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலுக்கு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்தோம். நான் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவன். ஒரு நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆபீஸ் நடைமுறைகள், சர்வீஸ் ரேங்குகள், சமூக அந்தஸ்து வித்தியாசங்கள் இவைகளில் எல்லாம் எந்த அனுபவங்களும் இல்லாதவன். ஆனால் வேட்டைக்காரன்புதூர் மக்களுடைய பார்வையில் நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர். நான் ஒரு டிரைவருடன் சேர்ந்து காபிக்கடைக்குப் போய் டிபன் சாப்பிட்டது மாபெரும் அகௌரவமான செயல். தனியாகக்கூட நான் காபிக்கடைக்குப் போய் அங்கு வரும் பாமர கூலித்தொழிலாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. எது வேண்டுமென்றாலும் ஆள் அனுப்பி வேண்டியதை வாங்கிக்கொண்டு வரச்செய்து ஆபீசில் என்னுடைய அறையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும்இப்படியிருக்க நான் என்னைவிட பல படிகள் கீழே உள்ள ஒரு டிரைவருடன் எப்படிப்போய் காப்பிக்கடையில் சாப்பிடலாம் என்பது ஒரு பெரிய செய்தியாகி விட்டது.  


இதை என்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்கள் வந்து சொன்னார்கள். அப்போதுதான் புரிந்தது, கிராமம் என்றால் என்ன என்று. பிறகு சுதாரித்துக்கோண்டேன். வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜபர்தஸ்தை போகப்போக புரிந்து கொண்டேன். அவர்கள் வீடுகளெல்லாம் மிகப்பெரியதாய் இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு மெயின் ஹாலிலும் ஆளுயரத்திற்கு இரண்டு யானைத் தந்தங்கள் ஒரு ஸ்டேண்டில் பொருத்தி வைத்திருப்பார்கள். அவர்களை வேலைக்காரர்கள் எல்லாம் பார்த்து பேசவே மாட்டார்கள். எல்லாம் கணக்குப்பிள்ளை அல்லது மேஸ்திரி மூலமாகத்தான் நடக்கும்.
இது மாதிரி தஞ்சாவூரில் வேலை பார்த்தபோதும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நேரில் பார்த்தது இல்லை. அங்கு ஒரு பெரிய மிராஸ்தார். அவர் எப்பொழுதும் அவர் வீட்டு மாடியில்தான் இருப்பார். அவரைப் பார்க்க வருபவர் யாராயிருந்தாலும் மாடிக்குச்சென்றுதான் பார்க்கவேண்டும். மாடியில் ஒரு சேர்தான் உண்டு. அதில் அவர் உட்கார்ந்திருப்பார். வருபவர்கள் நின்று கொண்டுதான் அவரைப் பார்த்து பேசிவிட்டுப் போகவேண்டும். ஒருக்கால் யாராவது ரொம்பப் பெரிய மனுஷன் (கலெக்டர் மாதிரி) வந்துவிட்டால், அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். இது எப்படி இருக்கு?
தொடரும்….


வியாழன், 10 ஜூன், 2010

நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 2 (கவர்ன்மென்ட் ரூல்ஸ்)

 
சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற பழமொழி சர்க்கார் பண்ணைகளுக்கு மிகவும் பொருத்தம். ஒரு நாள் வேலை செய்தால் மூன்று நாளைக்கு கணக்கு எழுத வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் பண்ணையில் மறு நாளைக்கு என்னென்ன வேலைகள் செய்யப் போகிறோம் என்று ஒரு ரிஜிஸ்டரில் எழுதி அதில் மேலதிகாரியின் ஒப்புதல் வாங்க வேண்டும். இதற்கு Forecast Register என்று பெயர். அடுத்த நாள் காலையில் பண்ணை ஆரம்பிக்கும் நேரத்தில் மஸ்டர் எடுக்கவேண்டும். எல்லோருக்கும் வேலைகளைச் சொல்லி அனுப்பி விட்டு இன்னொரு ரிஜிஸ்டரில் இன்று வந்திருக்கும் ஆட்கள் இன்னின்ன பிளாட்டுகளில் இன்னின்ன வேலைகள் செய்கிறார்கள் என்று எழுதி மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதற்கு Programme Register பெயர். பிற்பகல் வேலை ஆரம்பிக்கு முன் இன்னொரு முறை மஸ்டர் எடுக்க வேண்டும். பின்பு அன்றைய வேலைகள் எல்லாம் முடிந்தபின் இன்று இன்னின்ன வேலைகள் நடந்து முடிந்தன என்று ஒரு ரிஜிஸ்டரில் பதிந்து அதிகாரியின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். இந்த ரிஜிஸ்டருக்கு Daily Memorandum Sheet (DMS) என்று பெயர்.

இந்த ரிஜிஸ்டரில் அன்றைய தினம் மஸ்டரில் கண்டுள்ள அனைத்து ஆட்களுக்கும் வேலை காட்டவேண்டும். இன்னின்ன பிளாட்டுகளில் இன்னின்ன வேலைகளுக்காக இவ்வளவு பேர் வேலை செய்தார்கள், இவ்வளவு வேலை முடிந்தது என்ற விவரங்கள் அதில் குறிப்பிட வேண்டும். இந்தக்கணக்கு சரியாக இல்லையென்றால் கணக்கில் விட்டுப்போன ஆளுக்கு மேனேஜர் ரெகவரி கட்டவேண்டும். ஏதாவது விதையோ, பூச்சி மருந்தோ கொடுத்திருந்தால் இந்த பிளாட்டில் விதைக்க இவ்வளவு விதை கொடுக்கப்பட்டுள்ளது, அல்லது இன்ன பிளாட்டில் மருந்து அடிக்க இவ்வளவு பூச்சி மருந்து கொடுக்கப்பட்டது என்ற விவரம் எழுத வேண்டும். பண்ணையிலிருந்து ஏதாவது அறுவடை ஆகி வந்திருந்தால் இன்ன பிளாட்டிலிருந்து இன்ன மகசூல் அறுவடையாகி வந்திருக்கிறது என்று அதில் குறிக்க வேண்டும். அந்த வேலைளைச் செய்ய ஆட்களை உபயோகப்படுத்தின விவரம் இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு பிளாட்டில் பூச்சி மருந்து அடித்ததாக பூச்சி மருந்து ஸ்டாக் புக்கில் கழித்துவிட்டு, DMS – ல் அந்த வேலை செய்ததற்கான ஆட்கள் விபரம் காட்டாவிட்டால் அது பெரும் தவறு. ஆட்கள் இல்லாமல் அந்த பூச்சி மருந்தை எப்படி அடித்திருக்க முடியும்? அதை திருடி விட்டீர்களா? என்னதான் செய்தீர்கள்? அந்த மருந்து சரியானபடி உபயோகம் செய்யப்படாததால் அதற்குண்டான பணத்தைக் கட்டு என்று ஆடிட்காரன் எழுதிவிடுவான். பணத்தைக் கட்டுவதைத் தவிர வேறு வழியே கிடையாது.

பண்ணையிலிருந்து என்ன பொருள் வெளியில் போனாலும், உள்ளே வந்தாலும் இந்த ரிஜிஸ்டரில் குறிப்பிட்டாக வேண்டும். யாராவது விசிட்டர்ஸ் வந்தாலும் குறிப்பிட வேண்டும். ஆக மொத்தம் பண்ணையில் நடக்கும் எல்லா நடவடிக்கைகளும் இந்த ரிஜிஸ்டரில் பதிவாக வேண்டும். இந்த ரிஜிஸ்டர்கள் வேலை நாட்கள் அனைத்திலும் எழுத வேண்டும். லீவு நாட்களிலும் இன்று விடுமுறை என்று அந்த தேதியைப்போட்டு குறிப்பிட வேண்டும். என்ன, தலை சுற்றுகிறதா, இதற்கே இப்படி என்றால், இன்னும் இருக்கிறது.

ஸ்டாக் ரிஜிஸ்டர்கள் என்று ஒரு குரூப் உண்டு. எல்லாப்பெயர்களையும் சொன்னால் மயக்கம் வந்து விடும்.
1.   Dead Stock Register
2.   Temporary Dead Stock Register
3.   Farm Produce register
4.   Stationary Register
5.   Stamp Register
6.   Furniture Stock Register

இவ்வளவுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இதில் பண்ணைக்கு (ஆபீஸ உட்பட) வாங்கும் சகல பொருட்களும் பதிவாக வேண்டும். இதில் பதிவாவதற்கு முன்னால் DMS – ல் பதிவாகி இருக்கவேண்டும். எந்தப் பொருளை உபயோகத்திற்கு எடுத்தாலும் இதில் பதிய வேண்டும்.

இத்தனை வேலைகளை வைத்துக்கொண்டு பண்ணை வேலைகளையும் மேற்பார்வை பார்க்கவேண்டும். ஆராய்ச்சியும் பண்ணவேண்டும். எப்படி செய்தேன் என்று இப்போது யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.

வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதில் நான் எப்படி சிக்கினேன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?

ஞாயிறு, 6 ஜூன், 2010

நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 1


நான் இந்தப் பண்ணையில்தான் என்னுடைய முதல் வேலைக்கு சேர்ந்தேன் என்று சொல்லியிருக்கிறேன். கூடவே என்னுடைய வகுப்புத்தோழனும் சேர்ந்திருந்தான். அவனுக்கும் எங்களுடைய மேல் அதிகாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால், தன்னுடைய பாட்டிக்கு உடம்பு சரியில்லைஎன்று தந்தி வரவழைத்து, லீவு போட்டுவிட்டுப் போய்விட்டான். என்னுடைய மேல் அதிகாரியும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார். நான் ஒருவனாக எல்லா வேலைகளையும் பார்த்ததில் எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லாமல் போய் (டைபாய்டு காய்ச்சல்) லீவில் போகவேண்டியதாய் விட்டது. கணக்கு வழக்குகளெல்லாம் முடிக்கவில்லை.

இதற்கிடையில் என் அதிகாரி டூட்டியில் சேர்ந்துவிட்டார். நான் உடம்பு சரியில்லாமல் லீவீல் போனது உண்மைதானா என்று பார்ப்பதற்காக என் வீட்டிற்கும் ஒரு முறை வந்து போனார். கணக்கு வழக்குகளை தான் சரி செய்வதாகக் கூறிவிட்டு சென்றார். நான் ஓரளவு நிம்மதியடைந்தேன்.

இரண்டு மாதத்தில் என் உடம்பு சரியானது. டூட்டியில் சேர்ந்தேன். எனக்கு சாப்பாடு செய்து போடுவதற்காக என்னுடைய பாட்டியையும் அழைத்து வந்து விட்டேன். ஒரு வீடு பார்த்து செட்டில் ஆனோம். காலையில் 8 மணிக்குப் போய் ஆபீசரைப் பார்த்தேன். பண்ணைக்குப்போய் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டு மதியத்திற்கு மேல் ஆபீசுக்கு வரச்சொன்னார்.

பண்ணைக்குப்போனால் அங்கு ஒரு ஆச்சரியம் ! என்னுடைய வகுப்புத் தோழன் அங்கே இருந்தான். பண்ணை ஆபீசுக்கு வெளியில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனிடம் நீ பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டேன். ஏனென்றால் சீனியாரிட்டி பிரகாரம் அவன்தான் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை, எனக்கு பொறுப்பு கொடுக்கவில்லை என்றான். இது என்ன புது குழப்பம் என்று சிறிது நேரம் குழம்பிவிட்டு, பிறகு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்து போட்டேன். அது வரை பொறுப்புகளை எங்களுக்கு கீழ் பதவியில் இருந்த ஒருவன் வைத்துக்கொண்டு இருந்தான். சாதாரணமாக இப்படி நடப்பது நடைமுறை இல்லை.

என்ன விவரம் என்று விசாரித்தால், என் வகுப்புத்தோழன் லீவில் போனதே மேல் அதிகாரியுடன் கருத்து வேற்றுமை காரணமாகத்தானே. அது ஏன் என்றால் என் தோழன் கணக்கு வழக்குகளில் கொஞ்சம் தில்லுமுல்லு செய்திருக்கிறான். இது எனக்குத்தெரியாது. (நான் அப்போது சரியான வெள்ளைச்சோளம்). அதை அதிகாரி கண்டுபிடித்ததினால்தான் இவன் லீவு போட்டுவிட்டு ஓடிப்போய்விட்டான். அதனால் அவன் லீவில் இருந்து திரும்பி வந்ததும் அவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை.

அது மட்டுமல்லாமல் அவனை துன்புறுத்தவும் செய்திருக்கிறார். அவனுக்கு எந்தப்பொறுப்பும் கொடுக்கவில்லை. ஆபீசுக்குள்ளும் விடுவதில்லை. தினமும் ஒரு பியூன் அவனுக்கு ஏதாவது ஒரு நொண்டிக்காரணம் காட்டி காலையில் ஒரு மெமோகொண்டுபோய் கொடுப்பான். மாலையில் அதற்கப்பதில் வாங்கி வருவான். இப்படி தினந்தோறும் நடந்து வந்திருக்கிறது. நான் டூட்டியில் சேரும்போது இந்த மெமோ பைல் ஏறக்குறைய நூறு பக்கம் ஆகிவிட்டது. அந்தப் பியூனுக்கு இந்த வேலை ஒன்றுதான். இதைப்பொன்ற அவமானகரமான நிலை வேறு ஒன்றும் இருக்காது.

நாலைந்து நாளில் அவனுக்கு மாற்றல் உத்திரவு வந்துவிட்டது. என் மேலதிகாரிதான் மெட்ராஸ் ஆபீசுக்கு எழுதி இந்த மாற்றல் வந்தது என்று பின்னாளில்தான் எனக்குத் தெரிய வந்தது. இப்படியாக மூன்று மாதத்தில் சர்க்கார் ஆபீஸின் கெடுபிடிகள் அத்துபடியாயின.

ஞாயிறு, 30 மே, 2010

நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது.



தந்தை, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி.

திருச்சி, மே,30.
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று திருச்சியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார்.

செய்திக்கு நன்றி: தினத்தந்தி, நாள் 30-5-2010, கோவை பதிப்பு

இந்தப் பதிவில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று கருப்பணசாமி சத்தியமா கப்பூரத்தை அணைத்து கூறுகிறேன்.