வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஈரோடு, ஈரோடு,ஈரோடு,

நானும் ஈரோட்டுக்குப் போறேன். என்னோடு வருபவர்கள் எல்லாம் கோயமுத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிற்கு 26ம் தேதி காலை 8 மணிக்கு வந்துவிடுங்கள். அங்கே "ஈரோடு, ஈரோடு, ஈரோடு" என்று கூவிக்கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இந்த பஸ் நேராக ஈரோடு போகுமா என்று கேட்டு விட்டு பஸ்ஸில் ஏறினால் நேராக ஈரோடு கொண்டுபோய் விடும். பஸ் கண்டக்டரிடம் என் பெயரைச் சொல்லி 50 ரூபாய் கொடுத்தால் ஈரோடுக்கு டிக்கெட் கொடுப்பார். ஈரோடு பஸ் ஸ்டேண்ட் போய் இறங்கியதும் என் பெயரைச் சொன்னால் உங்களை நேராக.....

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்

நிகழ்ச்சியில்

நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்

எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

உங்கள் வருகையே எங்களின் வெற்றி!

திங்கள், 6 டிசம்பர், 2010

இந்தியாவில் உணவுப்புரட்சி



இந்தியாவில் உணவுப்புரட்சி


இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட அரசியல், சமூக, மதக் குழப்பங்கள் தீர்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. 1960 களின் கடைசியில் ஒரு குழு தெய்வாதீனமாக அமைந்தது. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் பொறுப்பேற்றார். திரு.சி.சுப்பிரமணியம் மத்திய விவசாய அமைச்சராக இருந்தார். இருவரும் கலந்து ஆலோசித்து இந்திய உணவுப் பிரச்சினையை தீர்க்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். டாக்டர் எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்குத் தெரிந்த ஒரு அமெரிக்க விவசாய விஞ்ஞானி, நோபல் பரிசு வாங்கியவரான டாக்டர் நார்மன் போர்லாக் என்பவரை இந்தியாவிற்கு வரவழைத்தார்கள்.

அவர் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள விவசாய தொழில் நுட்பங்களை ஆராய்ந்து இங்குள்ள விவசாய நிபணர்களிடமும் கலந்தாலோசித்து சில முடிவுகளைச் சொன்னார். இந்திய விவசாயத்தை மேம்படுத்த முக்கியமாக மூன்று அபிவிருத்திகள் செய்ய வேண்டும் என்றார். ஒன்று - நல்ல விதை. இரண்டுநல்ல உரம். மூன்றுநல்ல பயிர் பாதுகாப்பு. நல்ல விளைச்சல் தரக்கூடிய கோதுமை விதைகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உரங்களும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும் பல நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன. இவைகளை உபயோகப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதில் விளைச்சல் பலமடங்கு அதிகமாக விளைந்தது. இந்திய நாடு உணவு வகையில் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.


பசுமைப்புரட்சிஎன்றழைக்கப்பட்ட இந்த விவசாயப்புரட்சி ஏற்படுத்திய மாற்றங்களினால் இந்திய மக்கள் பஞ்சத்திலிருந்து விடுபட்டார்கள். ஆனாலும் இந்திய மக்கள் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்தார்கள். அதாவது எலிகள் போல் பெருகினார்கள். முப்பது கோடியாய் இருந்தவர்கள் அறுபது வருடங்களுக்குள் நூற்று இருபது கோடியாய் பெருகி இருக்கிறார்கள். இந்தியாவின் சாபக்கேடே இந்த மனித உற்பத்திப் பெருக்கம்தான். சரி, இருக்கிற ஜனங்களாவது ஒழுங்காக, தேசப்பற்றுடன், நாடு முன்னேற பாடுபடுகின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஏறக்குறைய தரை மட்டமாக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்கர்களே பயப்படும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசப்பற்று இருக்கிறது. நமக்கு?????



இந்தியர்களின் பசியைப் போக்கியதில் உரங்களும் பயிர்பாதுகாப்பு மருந்துகளும் முக்கிமான பங்கை ஆற்றியிருக்கின்றன. இவைகளின் உபயோகம் வருடாவருடம் அதிகரித்து வந்துள்ளது. இந்த உண்மையை மனதில் கொள்ளாமல் திடீரென்று இனிமேல் எல்லோரும் இயற்கை வழி விவசாயம் செய்து வாழ்வோம் என்று பேசினால் அது நடைமுறைக்கு ஒத்து வருமா என்று யோசிக்க வேண்டும்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

இந்திய உணவுப்பஞ்சம் 1943-50


மீள்பதிவு:

இந்திய உணவுப்பஞ்சம் 1943-50

1943 ல் இந்திய நாட்டின் ஜனத்தொகை ஏறக்குறைய முப்பது கோடி மட்டுமே. நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டு இருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமர். உலக யுத்தத்தை சமாளிப்பதற்காகவே அவரை பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஸ்பெஷலாக பிரதமராக அமர்த்தியிருந்தது. அவர்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். இரும்பு இதயம் படைத்தவர். இந்திய மக்கள் உணவுப் பஞ்சத்தினால் இறந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபோது “let them die. They will breed like rats” சொன்னவர்.


நமது நாட்டிலுள்ள அனைத்து செல்வங்களும் யுத்தத்திற்காக கட்டாயக் கொள்முதல் செய்யப்பட்டு யுத்த முனைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. மனிதர்கள், உணவு தானியங்கள், துணிகள், மற்றும் எல்லாப் பொருட்களும் யுத்தத் தேவைக்காக கொள்முதல் செய்யப்பட்டு சென்று கொண்டிருந்தன. தொழிற்சாலைகள் அனைத்தும் யுத்தத்திற்கு வேண்டிய பொருட்களைத்தான் தயார் செய்து அனுப்பிக்கொண்டிருந்தன. உள்நாட்டு உபயோகத்துக்காக மிகக்குறைந்த அளவு பொருட்களே விநியோகிக்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை.
ரோடுகளில் கிடக்கும் ஆணிகள், லாடங்களுக்கு கூட கிராக்கி. அவைகளைச் சேகரிக்க அந்தக்காலத்து TVS பஸ்களின் பின்புறத்தில் ஸ்பெஷல் காந்தங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அரிசிக்கு ரேஷன் முறை கொண்டு வரப்பட்டது. வாரத்துக்கு ஒரு முறை அரிசி போடப்படும். முதலில் 16 அவுன்ஸ் (அதாவது ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஏறக்குறைய 400 கிராம் அரிசி, மூன்று வேளைக்கும் சேர்த்து) ரேஷன் கொடுத்தார்கள். பிறகு 12, 10, 8 என்று படிப்படியாகக் குறைத்து ஒரு சமயத்தில் 6 அவுன்ஸ் ரேஷன் மட்டுமே போடப்பட்டது. இந்த சமயத்தில் ரொட்டி வாங்க டோக்கன் கொடுத்தார்கள். அதை பேக்கரியில் கொடுத்தால் ரொட்டி கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பஞ்சாப் கோதுமை அறிமுகப் படுத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் இது விற்கப்பட்டது. உள்ளூரில் விளையும் நாட்டுக்கோதுமையை விவசாயிகள் தங்கள் தேவைக்குப் பயிரிட்டு வந்தார்கள். அதை ரவை பண்ணி உப்புமா செய்து சாப்பிடுவார்கள். இந்த பஞ்சாப் கோதுமையைமொட்டைக் கோதுமைஎன்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஏனெனில் உள்ளூர் கோதுமை நீளமாக இருக்கும். வடநாட்டுக்கோதுமை குட்டையாக, குண்டாக இருக்கும். வட இந்திய சப்பாத்தி, தமிழர்களுக்கு அப்போது பரிச்சயம் இல்லை. அந்தக் கோதுமை சப்பாத்திக்குத்தான் நன்றாக இருக்கும். அதனால் சப்பாத்தி செய்வது எப்படி என்று பெரிய பிரச்சாரமே நடந்தது. ஹோட்டல்களில் இட்டிலி, தோசைக்குப் பதிலாக சப்பாத்தி போடும்படி அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள்.
கல்யாண விருந்துகளில் 25 பேருக்கு மேல் சாப்பாடு போடக்கூடாது என்று கவர்மென்ட் உத்திரவு போடப்பட்டது. எல்லா உணவுப்பொருட்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. தானியங்களை தனிப்பட்டவர்கள் இடம் விட்டு இடம் கொண்டு போகக்கூடாது. இப்படியெல்லாம் இருந்து, ஒரு வழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிந்தவுடன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திக்கு வாக்குக் கொடுத்ததினால்தான், காந்தி இந்தியர்களை யுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆகவே யுத்தம் முடிந்தவுடன் இந்திய அரசியல்வாதிகள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வற்புறுத்த ஆரம்பித்தனர். பிரிட்டிஷ்காரனுக்கும்உடும்பு வேண்டாம், கை தப்பித்தால் போதும்என்கிற எண்ணம் வந்துவிட்டது.
ஏனென்றால் …..
1. இந்தியாவில் இருந்து கொண்டு போவதற்கு மிச்சம் மீதி ஒன்றுமில்லை.
2. இங்குள்ள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டதால் இந்தியாவை இனிமேலும் அடிமை நாடாக வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை.
3. உலக நாடுகளின் கொள்கை மாற்றம்
4. தவிர இங்கிலாந்து நாட்டையே யுத்த சீரழிவுகளிலிருந்து மீட்கவேண்டிய வேலை தலைக்கு மேல் இருந்தது.
5. இந்தியாவை வறுமையின் பிடியிலிருந்து மீட்க ஏகப்பட்ட செலவாகும்.
இக்காரணங்களினால் இந்தியாவுக்கு 1947 ல் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தான்.
இந்த 1943-47 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட பட்டினிச்சாவுகள் ஏற்பட்டன. வங்காளத்தில்தான் மிக அதிகம். தமிழ்நாட்டிலும் கூட வயிறு நிறைய சாப்பிட்டவர்கள் பாதிப்பேர்தான். ராமநாதபுரத்தில் புளியங்கொட்டையைக்கூட வறுத்து தின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டு ஏழைகளுக்கு கஞ்சி வார்க்கப்பட்டது. இதில் நான் கூற வருவது என்னவென்றால் அன்றைக்கு இருந்த முப்பது கோடி ஜனங்களுக்கே உணவு உற்பத்தி போதவில்லை என்பதுதான். அன்றைக்கு விவசாயம் நான் போன பதிவில் சொல்லியிருந்தபடி இயற்கை முறையில்தான் நடந்துகொண்டிருந்தது.
இன்றைக்கு 120 கோடி மக்களுக்கும் நமது விவசாயம் உணவு கொடுக்கிறது என்றால் அது எப்படி சாத்தியமாயிற்று

பின் குறிப்பு : என்னுடைய சென்ற பதிவின் காரணத்தை இங்கு சென்று பார்க்கவும்.

வியாழன், 2 டிசம்பர், 2010

பணமும் புகழும்

மனிதனை இவ்வுலகில் செயலாற்ற ஊக்குவிக்கும் காரணிகள் என்னவென்று என் கிட்னி(!) (கிட்னி எங்கே இருக்கிறது என்று கவுண்டமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்) மூலமாக சிந்தித்தேன். அவ்வாறு சிந்தித்ததில் தெரிய வந்தது மனிதனை ஊக்குவிப்பது பணமும் புகழும்தான் என்பதாகும்.

பணத்தின் அவசியம் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அதை சேர்த்துவதில் மனிதனின் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் கோடிக்கணக்கில் சேர்த்து ஸ்விஸ் பேங்கில் போட்டுவைப்பதில் யாருக்கு என்ன உபயோகம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை விடுங்கள்.

இந்தப் புகழுக்கு ஆசைப்பட்டு மனிதன் என்னென்ன செய்கிறான் பாருங்கள்? புகழை விரும்பும் எல்லோரும் முதலில் செய்ய முயல்வது தேச அல்லது சமுதாய சேவை. அதற்கு அவன் சொல்லும் காரணங்கள், "என்னிடம் அதிகமான பணம் சேர்ந்து விட்டது. அவ்வளவு எனக்குத்தேவையில்லை. ஆகவே நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்" இது ஒரு வகை. இன்னொன்று, என்னுடைய மனச்சாட்சி உறுத்துகிறது, நான் இந்த சமுதாயத்திலிருந்து எவ்வளவோ ஆதாயங்களைப் பெற்றிருக்கிறேன், ஆகவே இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாகவேண்டும், இல்லையென்றால் என் மனச்சாட்சி தூங்காது, இப்படியாக ஒன்று.

சமுதாயத்தில் இப்படி சொல்லிக்கொண்டு தன்னை முன்னேற்றிக்கொள்ளும் ஆசாமிகள் நிறையவே உண்டு. ஆனால் பதிவுலகத்தில், எல்லோரும் முகமூடியுடன் உலா வரும் ஒரு மாயா உலகத்தில் ஒருவர் நான் இந்த சமுதாயத்தை சீர்திருத்தப்போகிறேன் என்று ஆரம்பித்திருக்கிறார். தமிழ்ப் பதிவர்களைப்பற்றி அவருக்கு அதிகம் தெரியாது என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. தெரிந்திருந்தால் இப்படி ஒரு யோசனை அவருக்கு வந்திருக்காது.



என்னைப்போன்ற சாதா பதிவர்களை விட்டுவிடுங்கள். இந்தப் பிரபல பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. அவர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஆயுள் முழுக்க எழுதிக்கொண்டு இருக்கலாம். பிரபல பதிவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்று தெரியுமா? முன்னுக்குப்போனால் கடிக்கும், பின்னுக்குப்போனால் உதைக்கும் என்ற கதைதான். இந்தப் பதிவர்களை வைத்துக்கொண்டு சமூக புனர் நிர்மாணம் செய்வதாக அவர் எல்லாப் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சமீப காலமாக பதிவுலகில் விறுவிறுப்பு நிறைய குறைந்திருக்கிறது. மூக்குடைத்தல், புனைவுகள் எழுதுதல், கண்ணியமான குடும்பங்கள் போன்றவைகளைக் காணவில்லை. இவராவது கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதன், 1 டிசம்பர், 2010

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டையில் எங்கள் கைடு


கோட்டை வாசல்


எல்லாம் பளிங்குங்க!


பச்சைக்கம்பளம். வாங்கலாம்னு பார்த்தேன். வெலைக்குத் தரமாட்டேனுட்டாங்க.



நாங்கதேன் ?


இந்த மாடத்துலதான் ஷாஜஹான் தன் கடைசி காலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தாராம் ! நான் பாக்கலீங்க. சொல்லக்கேள்வி.
பின்னால தாஜ்மஹால் தெரியுது பாருங்க.


அம்புட்டுத்தான், அடுத்த டூரை எதிர்பாருங்கள்.

கொசுறு :
தாஜ்மஹால் நல்லா இருக்குங்க இல்ல?



இந்தப்படம் புடிக்கலீங்களா? அப்ப இது புடிக்குதா பாருங்க!

மேலும் படங்களைப் பார்க்க இந்த லிங்க்குக்குப் போகவும்.

http://www.youtube.com/watch?v=vJGK11EyLT4




திங்கள், 29 நவம்பர், 2010

விதியை யாரால் வெல்ல முடியும் ?


வேளாண்மை பற்றி பலரும் இந்த தளத்தில் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். நான் ஒரு விவசாயப் பட்டதாரியாக இருந்து கொண்டு ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று ஏறக்குறைய குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தலையில் என்னுடைய விவசாயக் கருத்துக்களைப் படிக்கவேண்டும் என்கிற விதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்? ஆகவே விவசாயத்தைப் பற்றியும் எழுதுவது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன்.

முதலில் என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன். பிறகு விவசாய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு கேள்விகளைப் பின்னூட்டமாகவோ அல்லது என்னுடைய மின் முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம். அவ்வப்போது பதில் எழுதுகிறேன்.

முதல் பதிவு - ஒரு புனைவு:

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு. கோயமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி. அவனுக்கு ஒரு பத்து ஏக்கர் பூமி இருக்கிறது. அங்கு ஒரு கிணறு. மழை, மாரி ஒழுங்காகப் பெய்வதால் கிணற்றில் தண்ணீல் எப்போதும் வற்றாமல் இருக்கும். அந்தக்கிணற்றிலிருந்து வரும் நீரில் ஒரு ஐந்து ஏக்கரில் தோட்டக்கால் விவசாயம். மீதி ஐந்து ஏக்கரில் மானாவாரி விவசாயம். ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண். விவசாயத்தில் உதவ ஒரு பண்ணையாள். தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் குடி வைத்திருக்கிறான். இவன் ஊருக்குள் இருக்கும் பழங்கால வில்லை வீட்டில் குடியிருக்கிறான்.

விவசாயிக்கும் அவன் மனைவிக்கும் படிப்பு கிடையாது. குழந்தைகள் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் உள்ளூர் ஆசிரியரிடம் அவருடைய வீட்டில் படித்தார்கள். அதற்கு மேல் படிப்பதானால் டவுனுக்குப் போகவேண்டும். அதனால் படிப்பைத் தொடரவில்லை. பையன் அப்பாவுக்கு உதவியாக பண்ணை வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். பெண் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தோட்டத்தில் முக்கிய பயிர் சோளம், ராகி, காய்கறிகள், கொஞ்சம் பணப்பயிர்கள். வாய்க்கால் ஓரங்களில் சுமார் ஐம்பது தென்னை மரங்கள் இருக்கின்றன. அந்த விவசாயிக்கு தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய அனைத்தும் தோட்டத்திலேயே விளைகின்றன. விளக்கு எரிக்க கெரசின் ஆயில், உப்பு, சில சமையல் எண்ணைகள், தீப்பெட்டி இது போன்று சில பொருள்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கவேண்டும். அவைகளையும் வியாபாரிகள் ஊருக்குள் கொண்டு வந்து பண்டமாற்று முறையில் கொடுத்து விட்டுப் போவார்கள். பணத்திற்கு ஏறக்குறையத் தேவையே இல்லை. பண்டிகை சமயத்தில் துணிமணிகளும் கூட பண்டமாற்று முறையிலேயே கிடைக்கும். சிலர் மட்டும் டவுனுக்குப் போவார்கள்.

கூலி கொடுப்பது தானியங்கள் மூலமாகத்தான். வண்ணான், நாவிதன், கொல்லன், கொசவன், பண்டாரம், பஞ்சாங்க அய்யர் அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை அறுவடை சமயத்தில் தானியங்கள்தான் கொடுக்கப்படும்.

எல்லாத் தேவைகளுக்கும் போக தானியங்கள் மீதி இருக்கும் என்று தெரிந்தால் அவைகளை மட்டும் பண்ணைக்கே வரும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு பணம் வாங்கி பெட்டியில் வைத்துக்கொள்வார். இந்தப்பணம் ஒரு கணிசமான அளவு சேர்ந்ததும் ஏதாவது முதலீடு செய்வார்.

பண்ணையில் இரண்டு ஜோடி எருதுகள், இரண்டு பால் மாடுகள், நாலு ஆடு, நாலு கோழி இவைகள் இருக்கும். தோட்டத்தில் விளையும் பயிர்களிலிருந்து வரும் கழிவுகள் இந்தக் கால்நடைகளுக்கு போடுவார்கள். இவைகளிலிருந்து வரும் சாணி முதலானவற்றை கவனமாக சேகரித்து ஒரு எருக்குழியில் சேர்த்து வைப்பார்கள். புதிய பயிர் பயிரிடுமுன் இந்த எருவைப் பயன்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட பண்ணை வாழ்க்கைதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எல்லோரும் ஆரோக்யமாக இருந்தார்கள். இந்தப் பண்ணைகளை ஏறக்குறைய பூலோக சொர்க்கத்திற்கு இணையாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட பண்ணை இப்போது இருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க இன்று ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணைகள் எங்கே போயின? இந்த மாதிரி பண்ணைகளை இன்று உருவாக்க முடியுமா? இயற்கை விஞ்ஞானிகளே, யோசியுங்கள். யோசித்து உங்கள் பதிலைக் கூறுங்கள்.