புதன், 25 ஜனவரி, 2012

பொழுது எப்படி போகுதுங்க?


கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது சமீப காலங்களில் நான் படும் கஷ்டங்கள் பலவகையானவை. முதல் சங்கடம் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் அறிமுகமில்லாதவர்கள். இதில் ஒன்றும் தொந்தரவு இல்லை. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு எதையாவது கற்பனையில் மூழ்கி இருப்பேன்.

இந்த நூற்றில் ஒருவர் தெரிந்தவர் இருக்கிறாரே அவரிடம் சிக்கிக் கொண்டால்தான் கஷ்டமே ஆரம்பிக்கும். கொஞ்ச நேரம் ஏதாவது பொதுப்படையாகப் பேசிக்கொண்டு இருந்த பிறகு அவர் இந்த பிரம்மாஸ்திரத்தை பிரயோகிப்பார். “பொழுது எப்படி போகுதுங்கஅப்படீன்னு கேப்பார்.

நானோ பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். ஒரு வேலையும் கிடையாது. வேலைக்குப் போவதென்றாலும் வயது ஆகிவிட்டது. என்னுடைய வயதுக்கு எங்கவது கம்பெனியில் காவல்காரன் வேலைதான் கொடுப்பார்கள். அந்த வேலைக்குப் போவதற்கு என் சுயமரியாதை இடம் கொடுக்காது. ஆகவே வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டுசும்மாஇருக்கிறேன்.

திடீரென்று நம்மைப் பார்த்துபொழுது எப்படிப் போகுதுங்கஎன்று கேட்டால் பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான். நான் இதற்கு ஒரு பதில் வைத்திருக்கிறேன்.

காலைல 3 மணிக்கு எழுந்திருப்பனுங்க, பல வெளக்கி மூஞ்சி கழுவிட்டு, சமையல் ரூம்ப்ல போயி ஒரு காப்பி போட்டுக் குடிப்பனுங்க. அப்புறம் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இன்டர்நெட்ல பிளாக் பார்ப்பனுங்க. அப்புறம் 6 மணிக்கு விடியுதுங்களா, எந்திருச்சு வாக்கிங்க் போவனுங்க, …… .” இந்த ஸ்டேஜ் வரப்பவே பல பேர் வேற கிராக்கிய பார்த்துட்டு ஓடிடுவாங்க.

சில சமயம் அவங்களையே பார்த்துபொழுது போகமாட்டேங்குது, என்ன பண்ணலாம், சொல்லுங்கஅப்படீன்னாப் போதும். பார்ட்டி ஓடிடும்.

அப்புறம் சிலர்பென்சன் எவ்வளவு வருதுஅப்படீம்பாங்க. ஏதோ நான் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படற மாதிரியும், இவர்கள் நமக்கு அனுதாபம் காட்டுகிற மாதிரியும் சீன் போடுவாங்க. உண்மையான பென்ஷனைச் சொன்னால் இவர்கள் ஒன்று நம்ப மாட்டார்கள் அல்லது நான் பொய் சொல்லுகிறேன் என்று நினைப்பார்கள். ஆகவே நான் யாரிடமும் என் உண்மையான பென்ஷன் தொகையைச் சொல்வது இல்லை.

அவர்களிடமே பதில் கேள்வி கேட்பேன். எவ்வளவு வரும்னு நெனைக்கிறீங்க அப்படீம்பேன். என் பென்ஷனில் நாலில் ஒரு பங்கு சொல்வார்கள். ஆமாங்க, ஏறக்குறைய அவ்வளவுதானுங்க வருது என்று சொல்லிவிட்டால் அப்புறம் வாயைத் தெறக்க மாட்டார்கள்.
இப்படியாகத்தானே என் ஓய்வு வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.


திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்கள் சாதனையாளரா?


"வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்வதில் என்ன பயன்? வாழ்நாளில் ஏதாவது ஒரு சாதனை செய்வதுதான் பிறவியின் பயனை அடைந்ததாகும்."

இவ்வாறு பல அறிஞர்கள் தங்கள் நூல்களிலும், பேச்சாளர்கள் தங்கள் மேடைப் பேச்சுகளிலும் முழங்குவதைப் படித்தும் கேட்டுமிருப்பீர்கள்.
நம் வாழ்நாளில் பல சாதனையாளர்களைப் பார்த்தும் இருக்கிறோம். அவர்கள் லட்சத்தில் ஒருவராகவோ அல்லது கோடியில் ஒருவராகவோதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற வகையைச் சேர்ந்தவர்களே. நானும் அப்படித்தான்.

நீங்கள் ஒரு சாதனையாளராக இருந்தால் மிக்க சந்தோஷம். அதற்காக முயற்சி செய்பவராக இருந்தால் வாழ்த்துக்கள். அப்படி இல்லையென்றால் அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அப்படியிருக்கும் நாம்தான் பெரும்பான்மைக் கட்சி. அதற்காக நாம் எந்த குற்ற உணர்ச்சியுடனும் வாழவேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் உங்களை முழு மனிதன் என்று சொல்வதற்கு. உலக மனிதர்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறினால் இந்த உலகம் தாங்குமா?



வியாழன், 19 ஜனவரி, 2012

பதிவுலகத்தின் சமீபத்திய சாபக்கேடு



பதிவுலகத்திற்குள் காலடி எடுத்துவைக்கும் புதிய பதிவர்கள் அனைவரும் ஒருவித எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். தங்கள் எழுத்துக்கு உண்டான ஒரு கௌரவம் கிடைக்கும் என்று நம்பி வருகிறார்கள். ஆனால் நடப்பதென்னவோ அவர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது.

பொதுவாக பதிவர்கள் எழுதும் சமாசாரங்கள் அவரவர்களுடைய தினசரி வாழ்க்கையை ஒட்டியேதான் இருக்கும். ஆன்மீகம், சினிமா, வாழ்க்கைச் சம்பவங்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாக அமைகின்றன. சிலர் கவிதை ஒன்றே எழுதுவார்கள். இந்தக் கவிதைகளில் பெரும்பாலும் உரைநடையை கவிதை மாதிரி சந்தி பிரித்துப் போடுவதுதான் நடக்கிறது. கவிதை நயத்தோடு இருக்கும் கவிதைகள் அரிது.  ஈழப்பதிவர்களுக்கு வன்னிப் போராட்டமே முக்கிய கருப்பொருள்.


அபூர்வமாக அரசியல் அல்லது சமுதாயப் பிரச்சினைகள் பற்றி ஒரு சிலர் ஆழமாக எழுதுவது உண்டு. ஆனால் அவை மிகவும் நீளமாக இருந்து விடுவதால் படிப்பவர்கள் குறைவு. மற்ற பதிவுகளையும் படிப்பவர்கள் பல காரணங்களினால் குறைந்துகொண்டே வருகிறார்கள். காரணம் என்னவென்று பார்த்தால், நல்ல கருத்துகளைக் கொண்ட பதிவுகள் குறைந்துகொண்டே போகின்றன.


இதைப் பற்றி நான் யோசித்ததில் சில உண்மைகள் புலனாகின. நல்ல பதிவுகள் எழுதிய சீனியர் பதிவர்கள் இன்று பதிவு எழுதுவதில்லை. பதிவுலகை விட்டே ஏறக்குறைய விலகி விட்ட நிலையில் இருக்கிறார்கள். புதிய பதிவர்களும் சில மாதங்கள் பதிவு எழுதிய பின் பதிவுலகம் சலிப்பூட்டுகிறது. அதனால் பதிவுலகத்தை விட்டு விலகி விடுகிறார்கள். இதற்கு பல காரணங்களைக் கூறலாம்.


முதல் காரணம் நல்ல எழுத்துகளுக்கு ஆதரவு இல்லை. பின்னூட்டம் இடுபவர்கள் பதிவின் நல்ல கருத்துகளுக்காகவோ அல்லது விவாதிக்கும்  பொருளுக்காகவோ பின்னூட்டம் இடுவது இல்லை. தங்களுக்குப் பிடித்த பதிவுகளுக்கே/பதிவர்களுக்கே பின்னூட்டமிடுகிறார்கள். மொக்கைப் பதிவு என்று சொல்லப்படுபவைகளுக்கு பதிவு இட்டு சில மணி நேரத்திலேயே நூறு பின்னூட்டங்களுக்கு மேல் இடப்படுகின்றன. அவைகளே திரட்டிகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றன.


இத்தகைய நிலை தொடர்வதால் புதிய, பழைய பதிவர்களின் ஆர்வம் குறைந்து போகின்றது. வருங்காலத்தில் பதிவுலகம் ஆதரவு இல்லாமல் மங்கிப்போகும். இது காலத்தின் கோலம். மாற்று வழிகள் ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. நடப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
முகநூல், டிவிட்டர் போன்றவை பதிவுலகத்தைவிட சுவையாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. பல பதிவர்கள் அந்த மாதிரி தளங்களுக்குப் போய்விட்டதாக ஒரு தகவல்.


பின்னூட்டங்கள், திரட்டிகளின் ரேங்க்குகள் இவைகளை மட்டும் நினைத்து பதிவு போடுபவர்களுக்கு இனி இங்கு இடம் இருக்காது. அப்படி பின்னூட்டங்கள், ரேங்குகள் கிடைக்கும் பதிவர்கள் மட்டும்தான் இனிமேல் பதிவுலகில் இருப்பார்கள். அவர்களின் பதிவுகளும் மொக்கையாகத்தான் இருக்கும். நானும் இந்த கால சுழற்சியில் விதிவிலக்கல்ல.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

நம் எஜமானன் யார்? நம் மனதா அல்லது உடலா?


இந்தக் கேள்வி அபத்தமானது என்று பலரும் நினைக்கக் கூடும். குறிப்பாக இளைஞர்கள் அவ்வாறு நினைப்பார்கள். வயதானவர்கள் கூட மனது சரியாக இருந்தால் போதும், உடல் அதனுடன் ஒத்துழைக்கும் என்று கூறிக்கொண்டு தங்கள் வயதுக்கு ஒவ்வாத செயல்களை செய்வார்கள்.

நான் என் அனுபவத்தில் கண்டது என்னவென்றால், மனிதனின் உடல் இரும்பால் ஆனது இல்லை. இரும்பிற்கே ஒரு காலத்திற்குப் பிறகு சோர்வு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். Metal fatique பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அப்படியிருக்க உடல் அங்ககப் பொருட்களால் ஆனது. அது வயதினால் மூப்படைவது இயற்கையே. ஆனால் பலர் இதைத் தடுக்கலாம், ஒழுங்கான பழக்கங்களினாலும் யோகாசனம் காயகல்பம் போன்ற உடல் பயிற்சியினாலும், உடல் மூப்படைவதை தள்ளிப்போடலாம் என்று சொல்கிறார்கள்.

என்ன செய்தாலும் ஒரு கால கட்டத்தில் உடல் சோர்வு அடையத்தான் செய்யும். ஆனால் மனதோ இன்னும் இளமையாக இருக்கும். நான் 80 வயது இளைஞன் என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். வயதானவர்களுக்கு இயற்கையாக வரும் சலிப்பையும் சோர்வையும் போக்க இவ்வாறான கூற்றுகள் பலராலும் சொல்லப்படுகின்றன.

ஆனால் உண்மை வேறுவிதமானது. வயதானபிறகு உடலின் இயக்கங்கள் முறைந்து போகின்றன. நம்மை நாமே எவ்வளவு நாட்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியும்? நம் உடல் நிலையை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நம் செயல்களைச் செய்வோமேயானால் உடல் அதற்கு ஒத்துழைக்கும்.

நாம் சிறு வயதில் செய்த செயல்களை மனதில் வைத்துக்கொண்டு என்னால் செய்ய முடியும் என்று வீம்புக்காக செயல்களை செய்யும்போது உடல் ஒத்துழைக்காது. உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனைக்குப் போக நேரிடும்.

என் நண்பர் ஒருவர் இருதய பை-பாஸ் ஆபரேஷன் செய்தவர் தன் காரில் தானே ஓட்டிக்கொண்டு 300 கி.மீ. தூரத்திலுள்ள நன் சொந்த ஊருக்கப் போனார். இவ்வாறு அவர் பல முறை சென்றிருக்கிறார். ஆனால் இந்த முறை உடல் தலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேரவேண்டியதாகி விட்டது. எல்லா பரிசோதனைகளும் முடிந்து டாக்டர்கள் சொன்னது அவர் தன் வயதிற்கு மீறிய செயல் செய்ததுதான் இந்த உடல் நலக்குறைவுக்கு காரணம்.

நாம் தமக்கு வயதாகிவிட்டது என்பதை மறக்கிறோம் அல்லது மறந்துவிட ஆசைப்படுகிறோம். மற்றவர்கள் முன்னால் நாம் இளமையாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். இந்த ஆசை தேவையற்றது. பல சமயங்களில் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது.

இதை மூத்தவர்கள் உணர்ந்து அதற்குத் தக்கவாறு நடந்து கொண்டால் இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழலாம்.