வியாழன், 2 டிசம்பர், 2010

பணமும் புகழும்

மனிதனை இவ்வுலகில் செயலாற்ற ஊக்குவிக்கும் காரணிகள் என்னவென்று என் கிட்னி(!) (கிட்னி எங்கே இருக்கிறது என்று கவுண்டமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்) மூலமாக சிந்தித்தேன். அவ்வாறு சிந்தித்ததில் தெரிய வந்தது மனிதனை ஊக்குவிப்பது பணமும் புகழும்தான் என்பதாகும்.

பணத்தின் அவசியம் எல்லோருக்கும் தெரியும். ஆகவே அதை சேர்த்துவதில் மனிதனின் ஆசையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் கோடிக்கணக்கில் சேர்த்து ஸ்விஸ் பேங்கில் போட்டுவைப்பதில் யாருக்கு என்ன உபயோகம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை விடுங்கள்.

இந்தப் புகழுக்கு ஆசைப்பட்டு மனிதன் என்னென்ன செய்கிறான் பாருங்கள்? புகழை விரும்பும் எல்லோரும் முதலில் செய்ய முயல்வது தேச அல்லது சமுதாய சேவை. அதற்கு அவன் சொல்லும் காரணங்கள், "என்னிடம் அதிகமான பணம் சேர்ந்து விட்டது. அவ்வளவு எனக்குத்தேவையில்லை. ஆகவே நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்" இது ஒரு வகை. இன்னொன்று, என்னுடைய மனச்சாட்சி உறுத்துகிறது, நான் இந்த சமுதாயத்திலிருந்து எவ்வளவோ ஆதாயங்களைப் பெற்றிருக்கிறேன், ஆகவே இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாகவேண்டும், இல்லையென்றால் என் மனச்சாட்சி தூங்காது, இப்படியாக ஒன்று.

சமுதாயத்தில் இப்படி சொல்லிக்கொண்டு தன்னை முன்னேற்றிக்கொள்ளும் ஆசாமிகள் நிறையவே உண்டு. ஆனால் பதிவுலகத்தில், எல்லோரும் முகமூடியுடன் உலா வரும் ஒரு மாயா உலகத்தில் ஒருவர் நான் இந்த சமுதாயத்தை சீர்திருத்தப்போகிறேன் என்று ஆரம்பித்திருக்கிறார். தமிழ்ப் பதிவர்களைப்பற்றி அவருக்கு அதிகம் தெரியாது என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. தெரிந்திருந்தால் இப்படி ஒரு யோசனை அவருக்கு வந்திருக்காது.



என்னைப்போன்ற சாதா பதிவர்களை விட்டுவிடுங்கள். இந்தப் பிரபல பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. அவர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஆயுள் முழுக்க எழுதிக்கொண்டு இருக்கலாம். பிரபல பதிவர்களை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்று தெரியுமா? முன்னுக்குப்போனால் கடிக்கும், பின்னுக்குப்போனால் உதைக்கும் என்ற கதைதான். இந்தப் பதிவர்களை வைத்துக்கொண்டு சமூக புனர் நிர்மாணம் செய்வதாக அவர் எல்லாப் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சமீப காலமாக பதிவுலகில் விறுவிறுப்பு நிறைய குறைந்திருக்கிறது. மூக்குடைத்தல், புனைவுகள் எழுதுதல், கண்ணியமான குடும்பங்கள் போன்றவைகளைக் காணவில்லை. இவராவது கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதன், 1 டிசம்பர், 2010

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டையில் எங்கள் கைடு


கோட்டை வாசல்


எல்லாம் பளிங்குங்க!


பச்சைக்கம்பளம். வாங்கலாம்னு பார்த்தேன். வெலைக்குத் தரமாட்டேனுட்டாங்க.



நாங்கதேன் ?


இந்த மாடத்துலதான் ஷாஜஹான் தன் கடைசி காலத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தாராம் ! நான் பாக்கலீங்க. சொல்லக்கேள்வி.
பின்னால தாஜ்மஹால் தெரியுது பாருங்க.


அம்புட்டுத்தான், அடுத்த டூரை எதிர்பாருங்கள்.

கொசுறு :
தாஜ்மஹால் நல்லா இருக்குங்க இல்ல?



இந்தப்படம் புடிக்கலீங்களா? அப்ப இது புடிக்குதா பாருங்க!

மேலும் படங்களைப் பார்க்க இந்த லிங்க்குக்குப் போகவும்.

http://www.youtube.com/watch?v=vJGK11EyLT4




திங்கள், 29 நவம்பர், 2010

விதியை யாரால் வெல்ல முடியும் ?


வேளாண்மை பற்றி பலரும் இந்த தளத்தில் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். நான் ஒரு விவசாயப் பட்டதாரியாக இருந்து கொண்டு ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று ஏறக்குறைய குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தலையில் என்னுடைய விவசாயக் கருத்துக்களைப் படிக்கவேண்டும் என்கிற விதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்? ஆகவே விவசாயத்தைப் பற்றியும் எழுதுவது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன்.

முதலில் என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன். பிறகு விவசாய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு கேள்விகளைப் பின்னூட்டமாகவோ அல்லது என்னுடைய மின் முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம். அவ்வப்போது பதில் எழுதுகிறேன்.

முதல் பதிவு - ஒரு புனைவு:

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு. கோயமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி. அவனுக்கு ஒரு பத்து ஏக்கர் பூமி இருக்கிறது. அங்கு ஒரு கிணறு. மழை, மாரி ஒழுங்காகப் பெய்வதால் கிணற்றில் தண்ணீல் எப்போதும் வற்றாமல் இருக்கும். அந்தக்கிணற்றிலிருந்து வரும் நீரில் ஒரு ஐந்து ஏக்கரில் தோட்டக்கால் விவசாயம். மீதி ஐந்து ஏக்கரில் மானாவாரி விவசாயம். ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண். விவசாயத்தில் உதவ ஒரு பண்ணையாள். தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் குடி வைத்திருக்கிறான். இவன் ஊருக்குள் இருக்கும் பழங்கால வில்லை வீட்டில் குடியிருக்கிறான்.

விவசாயிக்கும் அவன் மனைவிக்கும் படிப்பு கிடையாது. குழந்தைகள் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் உள்ளூர் ஆசிரியரிடம் அவருடைய வீட்டில் படித்தார்கள். அதற்கு மேல் படிப்பதானால் டவுனுக்குப் போகவேண்டும். அதனால் படிப்பைத் தொடரவில்லை. பையன் அப்பாவுக்கு உதவியாக பண்ணை வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். பெண் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தோட்டத்தில் முக்கிய பயிர் சோளம், ராகி, காய்கறிகள், கொஞ்சம் பணப்பயிர்கள். வாய்க்கால் ஓரங்களில் சுமார் ஐம்பது தென்னை மரங்கள் இருக்கின்றன. அந்த விவசாயிக்கு தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய அனைத்தும் தோட்டத்திலேயே விளைகின்றன. விளக்கு எரிக்க கெரசின் ஆயில், உப்பு, சில சமையல் எண்ணைகள், தீப்பெட்டி இது போன்று சில பொருள்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கவேண்டும். அவைகளையும் வியாபாரிகள் ஊருக்குள் கொண்டு வந்து பண்டமாற்று முறையில் கொடுத்து விட்டுப் போவார்கள். பணத்திற்கு ஏறக்குறையத் தேவையே இல்லை. பண்டிகை சமயத்தில் துணிமணிகளும் கூட பண்டமாற்று முறையிலேயே கிடைக்கும். சிலர் மட்டும் டவுனுக்குப் போவார்கள்.

கூலி கொடுப்பது தானியங்கள் மூலமாகத்தான். வண்ணான், நாவிதன், கொல்லன், கொசவன், பண்டாரம், பஞ்சாங்க அய்யர் அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை அறுவடை சமயத்தில் தானியங்கள்தான் கொடுக்கப்படும்.

எல்லாத் தேவைகளுக்கும் போக தானியங்கள் மீதி இருக்கும் என்று தெரிந்தால் அவைகளை மட்டும் பண்ணைக்கே வரும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு பணம் வாங்கி பெட்டியில் வைத்துக்கொள்வார். இந்தப்பணம் ஒரு கணிசமான அளவு சேர்ந்ததும் ஏதாவது முதலீடு செய்வார்.

பண்ணையில் இரண்டு ஜோடி எருதுகள், இரண்டு பால் மாடுகள், நாலு ஆடு, நாலு கோழி இவைகள் இருக்கும். தோட்டத்தில் விளையும் பயிர்களிலிருந்து வரும் கழிவுகள் இந்தக் கால்நடைகளுக்கு போடுவார்கள். இவைகளிலிருந்து வரும் சாணி முதலானவற்றை கவனமாக சேகரித்து ஒரு எருக்குழியில் சேர்த்து வைப்பார்கள். புதிய பயிர் பயிரிடுமுன் இந்த எருவைப் பயன்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட பண்ணை வாழ்க்கைதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எல்லோரும் ஆரோக்யமாக இருந்தார்கள். இந்தப் பண்ணைகளை ஏறக்குறைய பூலோக சொர்க்கத்திற்கு இணையாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட பண்ணை இப்போது இருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க இன்று ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணைகள் எங்கே போயின? இந்த மாதிரி பண்ணைகளை இன்று உருவாக்க முடியுமா? இயற்கை விஞ்ஞானிகளே, யோசியுங்கள். யோசித்து உங்கள் பதிலைக் கூறுங்கள்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

விவசாயம் பற்றி

விவசாயம் பற்றி



உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!! என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா? இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?
அதிகமான அதிக பிரசங்கி கேள்விகளுக்கு மன்னிக்கவும்...

மேலே கொடுத்துள்ள குறிப்பு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் கேட்டது. அங்கேயே பதில் சொல்ல இடம் போதாதாகையால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.

முதலில் சொல்ல விரும்புவது: இதைத்தொடர் பதிவாகப் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகவே யாரும் பயப்படவேண்டாம். விவசாயத்தைப்பற்றி ஏற்கனவே நிறையப்பேர் பலப்பல கருத்துக்களைச் சொல்லி பரம்பரை விவசாயிகளையே குழப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் நான் சேரமாட்டேன்.

இன்றைய காலகட்டத்தில் முன் அனுபவமில்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் அரசியல்தான். அது மட்டுமல்லாமல் போட்ட முதலுக்கு பலமடங்கு லாபம் மொடுக்கும் தொழில் அது ஒன்றுதான். பரம்பரை விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விவசாயத்தை விட முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் பேரே விவசாயத்தில் லாபம் கண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். சொஞ்சம் பேர் வரவுக்கும் செலவுக்கும் சரியாய்ப் போய் வாழ்க்கை நடத்துகிறார்கள். மீதிப்பேர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய கார்ப்பரேட் ஆட்களெல்லாம் விவசாயம் செய்ய ஆரம்பித்து, துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிய கதைகளெல்லாம் இங்கு உண்டு.

விவசாயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விவசாயம் செய்யலாமா என்று கேட்பவருக்கு என் ஆலோசனை என்னவென்றால்: நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர், எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக விவசாயத்தில் ஈடுபடலாம்.

என்னை டெக்னிகல் அட்வைசராகப் போடுவதாயிருந்தால் பத்து வருட நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் கன்சல்டிங்க் பீஸ் நோட்டீஸ் கொடுத்த நாளிலிருந்து பேங்கில் செலுத்தி விடவேண்டும். என்னுடைய அக்கவுன்ட் நெம்பரும் கன்சல்டிங்க் பீஸ் விவரங்களும் வேண்டுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் தெரியப்படுத்தப்படும்.