அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 செப்டம்பர், 2012

கையைச் சுட்டுக் கொண்டேன்.


நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அதாவது இல்லத்தரசிகளின் பாஷையிலே “தண்டச்சோறு”. பொழுது போவதற்காக இந்தக் கருமத்தை (கம்ப்யூட்டரை என்று பொருள் கொள்ளவும்) நோண்டிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக நான் பெறும் புகழ்மாலைகள் அளவிற்கரியது. முக்கியமாக மூன்று வேளைகளில் கிடைப்பது – சாப்பிடக்கூப்பிட்டது கூடக் காது கேட்காமல் அந்தச் சனியனை எத்தனை நேரம் கட்டீட்டு அழுவீங்க – இது ரொம்பவும் சாந்தமானது. உச்சத்தைக் கூறினால் உங்கள் இளகிய மனது தாங்காது என்பதினால் தவிர்க்கிறேன்.

இப்படியாக பொழுது நல்லபடியாக போய்கொண்டிருக்கும் போது, ஏழரை நாட்டுச் சனி கூகுள்காரன் ரூபத்தில் வந்தது. அவன் ஒரு நாள் ஒரு செய்தி போட்டிருந்தான். அதாவது மைக்ரோசாஃப்ட் கம்பெனி ஒரு புது ஆபரேட்டிங்க் சிஸ்டம் வெளியிடப்போகிறான். “விண்டோஸ் 8” என்பது அதன் பெயர். உலகத்தில் அந்த மாதிரியான புரோக்ராம் இது வரையில் வந்ததில்லை இனிமேலும் வரப்போவதில்லை, அதனுடைய டெஸ்க் டாப்பைப் பார்த்தால் அப்படியே மயங்கி விழுந்து விடுவீர்கள், அதனுடைய செயல் திறன் அலாவுதீனின் பூதத்தைக் காட்டிலும் அற்புதமாக இருக்கும், என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

எனக்குச் சனி காத்துக்கொண்டிருப்பது தெரியாமல், நான் இந்த பசப்பு வார்த்தைகளில் மயங்கி விட்டேன். அதுவும் இந்த விண்டோஸ் 8 புரொக்ராம் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்காக இலவசமாகத் தரப்படும் என்று வேறு போட்டிருந்தார்களா, அது வேறு என்னுடைய ஆர்வத்தை காட்டுத்தீ போல வளர்த்தி விட்டது. சரி என்னதான் நடக்கும் பார்த்து விடலாம் என்று துணிந்து அதற்குண்டான ஏற்பாடுகளில் இறங்கினேன்.

முதலில் அது சம்பந்தமான செய்திகளை எல்லாம் கூகுளில் தேடிப் படித்தேன். நிறையப் பேர் சிபாரிசு செய்திருந்தார்கள். (இப்போதுதான் தெரிகிறது – எல்லாப் பயல்களும் மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் கமிஷன் வாங்கும் பயல்கள் என்று). கொஞ்சம் பேர் இந்தப் புரொக்ராம் சரிப்படாது என்றும் சொல்லியிருந்தார்கள். இவர்கள் எல்லாம் மைக்ரோசாஃப்ட் மேல் அவர்களுக்கு இருக்கும் பொறாமையினால் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

சரி, இந்த விண்டோஸ் 8 ஐ எப்படி கம்ப்யூட்டரில் நிறுவுவது என்று ஆராய்ச்சி பண்ணி, நோட்ஸ் எடுத்து வைத்தேன். அதில் முதல் ஸ்டெப். இன்டர்நெட்டில் இருந்து அந்த புரொக்ராமை டவுன்லோடு செய்யவேண்டும். அது மொத்தம் 2.5 ஜி.பி. அளவு கொண்டது. என் கம்பயூட்டரில் நான் வைத்திருக்கும் இன்டர்நெட் பிளானில் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை டவுன்லோடு இலவசம். அந்த தைரியத்தில் காலை 2 மணிக்கே எழுந்திருந்து டவுன் லோடை ஆரம்பித்தேன். டவுன்லோடிங்க் ஆமை வேகத்தில் நடந்து நான்கு மணி நேரத்தில் முடிந்தது.

அது ISO image ரூபத்தில் இருந்தது. அதை டிவிடி யில் காப்பி பண்ணவேண்டும். அந்த வேலையை ஆரம்பித்தால் டவுன்லோடு சரியில்லை, எங்கேயோ ஒரு தப்பு இருக்கிறது, காப்பி செய்யமுடியாது என்று கம்ப்யூட்டர் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டது. அதற்கு அப்பீல் கிடையாது. இந்த இடத்தில் எனக்கு இந்த வேலை நமக்காகாது என்று புரிந்திருக்கவேண்டும். ஆனால் என் களிமண் மூளைக்குப் புரியவில்லை.
எல்லாவற்றையும் ஈரத்துணி + டெட்டால் போட்டுத்துடைத்து விட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். நாலு மணி நேரம் டவுன் லோடிங்க். காப்பி பண்ண ஆரம்பித்தால், திரும்பவும் பழைய குருடிக் கதைதான். இதை விடக்கூடாது என்று மறுபடியும் ஈரத்துணியில் ஸ்ட்ராங்க் பினாயிலில் தோய்த்து எல்லாவற்றையும் துடைத்தேன்.

பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ISO image சரியாக டவுன்லோடு ஆகி DVD யில் காப்பி செய்தாகி விட்டது. இனி இன்ஸ்டால் செய்யவேண்டியதுதான் பாக்கி. மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு இன்ஸ்டலேஷனை ஆரம்பித்தேன். எல்லாம் சரியாக நடந்தது. ஆஹா, இனி நாம் ஆகாயத்தில் மிதக்கப்போகிறோம் என்று கம்பயூட்டரை ஆன் செய்தேன். விண்டோஸ் 8 ன் வெல்கம் ஸ்கிரீன் தெரிந்தது. கலர் கலராக, கட்டம் கட்டமாக இருந்தது. என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் விழித்தேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் மவுஸ்தானே. சரி என்று மவுஸை ஒவ்வொரு கட்டமாக கொண்டு போய் அழுத்தினேன். அது உடனே இன்டர்நெட்டுக்குப் போகவேண்டும் என்றது. சரி, போய்த்தொலை என்றதும் அங்கே போய் கொஞ்ச நேரம் இருந்து விட்டு பழைய இடத்திற்கே வந்து விட்டது. அங்க போய் என்ன செய்ததோ கூகுளாண்டவர்க்கே வெளிச்சம். (ஒரு சமயம் பாத்ரூம் போய்ட்டு வந்திருக்குமோ, என்னமோ?) அடுத்த கட்டத்தை அழுத்தினேன். அதுவும் ஸ்கூல் பையன் ஒரு விரலைக் காட்டுவானே, அந்த மாதிரி இன்டர்நெட் போகவேண்டும் என்று காட்டியது. இப்படி எந்தக் கட்டத்தை அழுத்தினாலும் இதே கதைதான்.

இப்படி கொஞ்ச நேரம் விளையாடினோம். அப்புறம் எனக்குத் தூக்கம் ஆட்டியது. சரி, கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணலாம் என்றால் அதற்கு ஒரு வழியையும் காணவில்லை. நானும் அரை மணி நேரம் போராடிவிட்டு கூகுளாண்டவரைக் கேட்டால், அதுவா, அதை ஒளித்து வைத்திருக்றோம், இங்க அமெரிக்காவில் யாரும் கம்ப்யூட்டரை ஷட்டவுனே பண்ணமாட்டார்கள், நீங்க ஏன் ஷட்டவுன் பண்ணுகிறீர்கள் என்று கேட்டது. சாமி, எங்க ஊர்ல கரண்டுக்கு சார்ஜ் ஏகப்பட்டது கட்டவேண்டும். இன்டெர்நெட்டுக்கும் செலவு அதிகம். அதனால் வேலை முடிந்ததும் கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணுவதுதான் எங்கள் வழக்கம் என்றவுடன் ஷட்டவுன் பண்ணும் வழியைக் காட்டியது. ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஷட்டவுன் பண்ணிவிட்டு கொஞ்ச நேரம் கண்ணசந்தேன்.

ஒரு கனவு. அலாவுதீன் பூதம் மாதிரி ஒரு பூதம் என்னை விழுங்க வருகிறது. அரண்டு போய் எழுந்து பார்த்தால் கனவு என்று தெரிந்தது. உடம்பெல்லாம் பயத்தில் வேர்த்துப்போய்விட்டது. எங்கு பார்த்தாலும் கலர் கலராக கட்டங்களே தெரிகின்றன. எதை என்ன செய்வது என்று புரியவில்லை. இருட்டு ரூமுக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது என்று சொல்வார்கள். அது போல ஆகிவிட்டது.   

யோசித்தேன். இந்த வேலை நமக்கு உதவாது. பழைய சிஸ்டம்தான் சரி என்று எல்லாவற்றையும் அழித்துவிட்டு விண்டோஸ் 7 க்குத் திரும்பி விட்டேன். இந்த விண்டோஸ் 8 சமாசாரம் டேப்ளட் பிசி, மற்றும் 24 மணிநேர இன்டெர்நெட், கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்யத் தேவையில்லாத சூழ்நிலை ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது. இந்த விண்டோஸ் 8 இன்ஸ்டலேஷன் சி.டி. சும்மா இருக்கிறது. யாருக்காவது தேவைப்பட்டால் தட்சிணையுடன் தானம் கொடுக்கப்படும். முந்தவும்.
 
இப்படியாக சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்று கையைச் சுட்டுக்கொண்டேன்.                                     

காலை 7.45 மணி.

பின் குறிப்பு: இன்னும் விண்டோஸ் 8 ஐ அழிக்கவில்லை. இவ்வளவு வேலை செய்து அதை இன்ஸ்டால் பண்ணியிருக்கிறேன், அதை சும்மா விடுவதா என்று உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று அதை நான் ஜெயிக்கவேண்டும் இல்லை அது என்னை ஜெயிக்கவேண்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று துணிந்து விட்டேன்.                                                                                                                                          

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஆசையைக் குறைத்தல்

(வயது வந்தவர்களுக்கு மட்டும். அதாவது 70 வயது.)



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - குறள்

என்னதான் தேவைக்கு மிஞ்சிய பணமும் வசதியும் இருந்தாலும் மன அமைதி இல்லையேல் என்ன பயன்? மன அமைதிக்குத் திறவுகோல் ஆசையைக் குறைத்தல் மட்டுமே.


ஆசையைக் குறைத்தல் என்றால் ஆசை அறவே இல்லாமல் இருத்தல் என்று பொருளல்ல. தேவையான விஷயங்களில் தேவையான அளவு ஆசை இருக்கவேண்டும். இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்கு அர்த்தம் இல்லை.நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எதிலும் அதீத ஆசை கூடாது என்பதுதான்.


எனக்கு ஆசையே இல்லை என்று சொல்பவர்களும் ஏதாவது சில விஷயங்களின் பேரில் ஆசை வைத்திருப்பார்கள். மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக அப்படிச் சொல்பவர்களும் உண்டு.


நம் வாழ்க்கை இன்பமாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படாதவர்கள் இருக்கமுடியாது. இன்பமாக வாழ்வதற்கு சுலபமான வழி துன்பத்தை விலக்குவதே. அப்படி துன்பத்தை விலக்குவதில் இந்த ஆசையைக் கட்டுப்படுத்தல் மிக அவசியமாகிறது.


மனிதனாக வாழ்பவனுக்கு பல கடமைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவது இரண்டு வழிகளில் செய்யலாம். ஒன்று அந்தக் கடமைகளை பலன்களை எதிர்பார்த்து செய்வது. இன்னொன்று பலனை ஆண்டவன் மேல் போட்டுவிட்டு கடமைகளை மட்டும் செய்வது. இரண்டாவது வழியில் ஆசை இல்லை. பலன்கள் ஆண்டவன் கொடுத்த பிரசாதம். இப்படி செய்யும்போது மன உளைச்சல் இல்லாமல் கடமையைச் செய்யலாம். இதைத்தான் "நிஷ்காம்ய யோகம்" என்று கீதையில் கண்ணன் சொல்லுகிறான்.


இப்படி வாழும்போது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் ஒருவனுடைய மன நிலையைப் பாதிக்காது. தாமரை இலைத் தண்ணீரை பல ஆன்மீகவாதிகள் உதாரணம் சொல்லியிருப்பார்கள். இந்த தாமரை இலைத் தண்ணீரை கூர்ந்து கவனித்தால் ஒன்று புலப்படும். தாமரை இலை தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒட்டாமல் இருக்கிறது.


வாழ்க்கையில் நாம் எல்லாக் காரியங்களையும் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் காரியங்களின் மேலுள்ள பற்றைக் குறைத்துக் கொண்டால் நம் மனநிலை ஒரே சீராக இருக்கும்.




ஞாயிறு, 27 நவம்பர், 2011

மனதுக்கு வயதாவதில்லை



உடலுக்குத்தான் வயதாகும், மனதுக்கு வயதில்லை. மனதை இளமையாக வைத்துக்கொண்டால் உடலும் இளமையாக இருக்கும்.

இந்த பொன்மொழிகளை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். அவை உண்மையென்று நம்பிக்கொண்டும் பலர் இருக்கக் கூடும். இந்த நம்பிக்கை ஓரளவுக்குத்தான் சரி. வாழ்க்கையில் சலிப்பும் சோர்வும் வந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் இவை. இதைப் புரிந்து கொள்ளாமல் என் நண்பர் ஒருவர் (75 வயது) தன்னை 30 வயது இளைஞனாக நினைத்துக் கொண்டு 300 கி.மீ. தனியாக, காரில் தானே ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கு 15 வருடங்களுக்கு முன் பை-பாஸ் ஆபரேஷன் செய்திருக்கிறது.

அங்கு ஒரு கல்யாணத்திற்காகப் போனார். கல்யாணத்தன்று காலை 4 மணிக்கு மார்பு பகுதியில் கனமாக இருப்பதாக உணர்ந்தார். உடனே பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று டெஸ்ட் பண்ணினார். ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. உடனடி வைத்தியம் செய்ததில் ஓரளவு சரியாக ஆகிவிட்டது. அங்கு ஒரு டிரைவரைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அன்று இரவே மறுபடியும் தொந்திரவு வந்து பக்கத்திலிருந்த ஒரு நண்பரின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.

கடந்த மூன்று நாட்களாக நான் அவருடன் இருந்து கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எல்லாப் பரிசோதனைகளும் முடிந்தபிறகு டாக்டர்கள் சொன்னது என்னவென்றால், அவருக்கு வயதாகிவிட்டது, அதை மனதில் கொள்ளாமல் சிறு வயதுக்காரனைப் போல் அலைந்ததுதான் அவருடைய இப்போதைய தொந்திரவுகளுக்கு காரணம், இனி மேல் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை வயதுக்கு தகுந்த மாதிரி குறைத்துக்கொள்ள வேண்டும், இவ்வாறு சொல்லி விட்டார்கள்.

இந்த அனுபவத்தை ஏன் இங்கு பகிர்ந்து கொண்டேன் என்றால், வயதானவர்கள் தங்களை மனதிற்குள் இளைஞனாக நினைத்துக் கொள்ளலாம், ஆனால் தங்கள் நடவடிக்கைகளை வயதுக்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொண்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நலமாக இருக்கும் என்பதற்காகத்தான்.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

பல்லி பிடிக்கத் தெரியுமா?

இது என்ன புதுசா இருக்குன்னு நினைக்காதீங்க. ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தெரிந்து கொள்ளவேண்டிய கலை இது. எத்தனை வீட்டுல இல்லத்தரசிகள் இந்த அப்பாவிப் பிராணியைப் பார்த்துவிட்டு ஊரைக்கூட்டி இருக்கிறார்கள் என்று விசாரித்தால் தெரியும்.


இதற்குத் தேவையான  உபகரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

1. ஒரு 4 அங்குல விட்டம் கொண்ட பிளாஸ்டிக் கிண்ணம்,
2. ஆறு அங்குல அளவில் ஒரு சதுர அட்டை. ரொம்ப கெட்டியாக வேண்டாம்.
3. நிறைய மனோ தைரியம்.
படம் 1 ஐப் பார்க்கவும்.

                                                                       படம் 1

இவைகளைத் தயார் செய்த பிறகு வீட்டில் எங்காவது பல்லி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கவும். தேவையானால் ஆணி புடுங்குவதை சில நாட்கள் தள்ளிப்போடவும். பல்லி வருவதை எளிதில் அறிந்து கொள்ளலாம். சமையல் அறையிலிருந்து திடீரென்று அமானுஷ்யமான அலறல் கேட்டால் பல்லி வந்து விட்டதை அறிந்து கொள்ளலாம்.

பல்லி சமையல் மேடையில் இருக்கும். ஏறக்குறைய படம் - 2 ல் இருக்கிற மாதிரி இருக்கும்.



படம் - 2

உங்கள் தளவாடங்களுடன் சமையலறைக்கு ஆஜராகவும். முதலில் உங்கள் துணைவியாரை ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தவும். பல்லியைப் பயப்படுத்தி விடவேண்டாம். பிறகு பல்லிக்கு மேல் நைஸாக பிளாஸ்டிக் கிண்ணத்தால் மூடவும். பல்லியின் வாலை நசுக்கி விடாதீர்கள். பல்லி வாலைத் துண்டித்துக்கொள்ளும். அப்புறம் வால் தனியாகத் துடித்துக் கொண்டு இருக்கும். அதை டீல் பண்ணுவது வேறு கலை. அதை அடுத்த வகுப்பில் சொல்லித்தருகிறேன். பார்க்கவும் படம் - 3.


 
படம் - 3
இப்போது பல்லி பிளாஸ்டிக் கிண்ணத்தின் உள்ளே சிக்கிக்கொண்டது. அதை எப்படி வெளியே எடுப்பது?  ஒரு கெட்டி அட்டை முதலில் எடுத்து வைத்தோமல்லவா, அந்த அட்டையை எடுத்து நைஸாக கிண்ணத்தின் அடியில் சொருகவும். பார்க்க படம் - 4.
அவ்வளவுதான். பிளாஸ்டிக் கிண்ணத்தை அட்டையுடன் சேர்த்து தூக்கி, திருப்பிக் கொள்ளவும்.



 படம்- 4
இப்போது பல்லி பிளாஸ்டிக் ஜெயிலில். இந்தப் பல்லியை இப்போது என்ன செய்வது?

பல options  இருக்கின்றன. அவைகளில் சில.

  1. வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் (கண்டிப்பாக இருப்பார்கள்) அவர்கள் தலையில் இந்தப் பல்லியைப் போடலாம். ஆனந்தபோதினி சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ள பல்லி விழும் பலன்படி, தலை மேல் பல்லி விழுந்தால் உடனே மரணம் ஏற்படும். உங்கள் அத்யந்த நண்பர் எந்த விதமான நோய்நொடிகளும் இன்றி வைகுந்தப்ராப்தி அடைந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

2. அப்படி இல்லாமல் அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வைகுண்டம் போகவேண்டுமென்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அந்தப் பல்லியை
அவர்கள் வீட்டில் சாம்பார் கொதிக்கும்போது நைஸாக உள்ளே போட்டுவிடவும். இதற்கு அசாத்திய மனோதைரியமும் பின்விளைவுகளை சந்திக்கும் பலமும் வேண்டும்.

3. இந்த இரண்டு வழிகளும் பிடிக்காதவர்கள் பல்லியை காத தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று விடுவிக்கவும். எக்காரணம் கொண்டும் பல்லிக்கு எந்த விதமான தொல்லையும் கொடுத்து விடாதீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் இறந்த பிறகு, கல்ப கோடி காலம் கொதிக்கும் எண்ணைக் கொப்பறையில் வதக்கப்படுவீர்கள். அப்படித்தான் கருட புராணம் சொல்கிறது.


படம் - 5

நேர்முக வகுப்புகள் தேவைப்படுபவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு டிடி எடுத்து அனுப்பினால் ஏற்பாடு செய்யப்படும்.

சனி, 5 பிப்ரவரி, 2011

வெற்றிச் சிந்தனைகள்


(ஒரு கல்யாண அழைப்பிதழில் அச்சடித்திருந்தது.)

  1. தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும்.   
  2. துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.
  3. புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.
  4. விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.
  5. நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.
  6. இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.
  7. உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.
  8. உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.
  9. யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
  10. ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
  11. பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.
  12. ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.
  13. வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.
  14. பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.

 

புதன், 25 ஆகஸ்ட், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 4




பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஹரித்துவார் வரை.
எல்லா ஊர் ரயில்வே ஸ்டேஷனிலும் பிரதான நுழைவாயிலில் புகுந்தால் முதலில் இருப்பது ஒன்றாம் நெம்பர் பிளாட்பாரம்தான். அதுதான் VIP பிளாட்பாரமாக இருக்கும். எல்லா பிளாட்பாரங்களையும் விட அதுதான் எல்லா வசதிகளுடனும் இருக்கும். அது மாதிரிதான் பழைய டில்லியிலும் இருக்கும் என்று நினைத்து ஏமாந்து போனேன். சில வருடங்களுக்கு முன் போனபோதுகூட அப்படித்தான் இருந்தது. திடீரென்று யாருக்கு கிறுக்கு பிடித்ததோ தெரியவில்லை, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியிருக்கிறார்கள்.
டில்லி பறப்படுவதற்கு முன்பாகவே பதிவர் நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் டில்லியில் என்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார். நானும் என் புரோகிராமைச் சொல்லியிருந்தேன். நான் பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் சேர்ந்து அரை மணி நேரத்தில் அவர் எனக்கு போன் செய்தார். நானும் ரொம்ப ஜோராக, நான் பழைய ஞாபகத்தில் முதல் பிளாட்பாரத்தில் இன்ன கடைக்கு முன்பாக இருக்கிறேன், வாருங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் ரொம்ப உண்மையாக முதல் பிளாட்பாரத்தில் போய்த்தேடியிருக்கிறார். நான் சொன்ன கடை அங்கு இல்லை. நான் அரை மணி நேரம் கழித்து, என்னடா இவரை இன்னும் காணவில்லையே என்று மறுபடியும் போன் பண்ணினால் அவர் நான் முதல் பிளாட்பாரத்தில்தான் இருக்கிறேன், அங்கு நீங்கள் சொன்ன கடையைக் காணவில்லையே என்றார். அப்புறம்தான் நன்றாகப் பார்த்ததில் நாங்கள் இருந்தது 12 வது பிளாட்பாரம் என்று தெரிந்தது. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்தப் பிளாட்பாரத்திலேயே இன்னும் கொஞ்ச தூரம் போனால் அது 18 வது பிளாட்பாரமாகி விடுகிறது.
இந்த விபரத்தை வெங்கட்டிடம் சொன்ன ஐந்தாவது நிமிடத்தில் அவர் என் முன்னால் நின்றார். என் தற்போதைய மீசை, நான் எங்கிருந்தாலும் அடையாளம் காட்டிவிடும். அவர் அன்புடன் டில்லி பிளம்ஸ் பழங்கள் வாங்கி வந்திருந்தார். அவரை என் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு பொதுவான குடும்ப சமாசாரங்கள் பரிமாறிக்கொண்ட பிறகு பதிவுலகத்தைப் பற்றியும் சிறிது பேசினோம். பதிவுலகத்தை தற்போது பீடித்திருக்கும் முக்கிய வியாதியான ஜாதி, மதம் வேற்றுமைகளைப் பற்றிப் பேசினோம். அதைப்பற்றி இருவரும் ஒத்த கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஒரு 45 நிமிடம் அளவளாவிய பிறகு அவர் விடை பெற்றுச்சென்றார்.
டில்லி ஏர்போர்ட்டில் இறங்கும்போது வெளியில் உஷ்ண நிலை 45 டிகிரி செல்சியஸ் என்று சொன்னார்கள். கோவையில் 45 டிகிரி வெய்யிலைப் பார்த்ததே இல்லை. வெளியில் வந்தவுடனேயே வெய்யிலின் தாக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை. தண்ணீர், பாட்டில் ஜூஸ், மாற்றி மாற்றி குடித்தும் தொண்டை வறட்சியை நிறுத்த முடியவில்லை. பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு வெங்கட் வந்து பேசிவிட்டுப் போகும் வரை ஒரு மாதிரி வெய்யிலை மறந்திருந்தேன். அவர் போன பிறகு இரவு 10 மணி வரை என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருவிதமான மயக்கத்திலேயே இருந்தோம். பத்தரை மணிக்கு ஹரித்துவார் போகும் முஸ்ஸோரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு வந்தது. வெங்கட் போனபிறகு மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு உண்மையான முதல் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம்.
ரயில் வந்தவுடன் எங்கள் கம்பார்ட்மென்டில் (நல்ல காலம் ஏ.சி. கிளாஸ்) ஏறி உட்கார்ந்ததும்தான் ஒரு மாதிரி போன உயிர் திரும்பி வந்தது. ரயில் அரை மணி நேரத்தில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டவுடன் தூங்கி விட்டோம். காலை ஐந்தரை மணிக்கு ஹரித்துவார் சேர்ந்தோம். லக்கேஜ்களை இரண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி அய்யப்பன் கோவில் தங்குமிடத்துக்கு போனோம். அங்கு காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியில் வந்தோம். வாசலில் தள்ளுவண்டியில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இட்லி தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார். ஆளுக்கு நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டோம்.
ஹரித்துவாரில் ஒரு தாள் தங்கிவிட்டு அடுத்த நாள்தான் கேதார்நாத் புறப்படுவதாக முதலில் திட்டம். ஆனால் டிராவல் கம்பெனிக்கும் எனக்கும் நடந்த பேச்சுகளில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக அன்றே கேதார்நாத் புறப்பட அவர் டாக்சி 8 மணிக்கு அனுப்புவதாகச் சொல்லி விட்டார். வேறு வழியில்லை. டிபன் சாப்பிட்டவுடன் டாக்சி வந்துவிட்டது. உடனே புறப்படவேண்டியதாயிற்று. குழறுபடிக்குக் காரணம், டிராவல் ஏஜென்ட் இந்தியில் பேசினார். நான் எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இந்தி. தமிழ், இங்கலீஷ் கலந்த பாஷையில் பேசினேன். எப்படியோ டாக்சி வந்துவிட்டது.



மூட்டைகளை ஏற்றி நாங்களும் ஏறி கேதார்நாத் மகாதேவ் சாமியைக் கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.


தொடரும்…..