உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜூன், 2017

12. நான் படித்த புத்தகம்

                                              Image result for fat person eating
கொலஸ்ட்ரால்-குறைப்பது எப்படி என்ற புத்தகத்தை டாக்டர் சு.முத்துக்குமாரசாமி என்பவர் எழுதி New Horizon Media Pvt. Ltd. என்ற நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் யாராவது கொஞ்சம் தலைக்கனம் பிடித்து அலைந்தால் ‘அவனுக்கு கொழுப்பு ஏறிப்போச்சு என்று சொல்வது வழக்கம்’. இது ஒரு பேச்சுக்காக சொல்வது. ஆனால் தற்போது பெரும்பாலான-வர்களுக்கு நிஜமாகவே கொழுப்பு அதிகமாகி விட்டது. மருத்துவர்கள் இதை நாகரிகமாக கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.


ஒரு மனிதனுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றவுடனேயே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் ஏதோ அந்த மனிதனுக்கு வரக்கூடாத நோய் வந்து விட்டது, அந்த ஆள் அவ்வளவுதான் என்கிற மாதிரிதான் நினைக்கிறார்கள்.


டாக்டர் முத்து செல்லக்குமார் அவர்கள் இந்த புத்தகத்தில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன, மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் எவ்வாறு இருக்கிறது, அதன் தேவை என்ன, கொலஸ்ட்ரால் அதிகம் உடலில் சேர்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பவைகளைப்பற்றி சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார்.


மனிதனின் உடம்பில் புரதம் மற்றும் கொலஸ்ட்ரால், இவை இரண்டும்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடம்பின் எல்லா பகுதிகளும் இந்த இரண்டு பொருள்களினால்தான் உருவாகியிருக்கின்றன. ஆகவே கொழுப்பையே உணவிலிருந்து விலக்குவது முடியாத காரியம். நாம் கொழுப்பை சாப்பிட்டே ஆகவேண்டும். ஆனால் எந்த வகையான கொலஸ்ட்ரால்கள் உடலுக்கு ஏற்றது என்று அறிந்து அவ்வகை உணவுகளைத் தேர்ந்து சாப்பிடவேண்டும். இதற்கான வழிகளை இந்த புத்தகத்தில் விரிவாக காணலாம்.


கொழுப்பின் வகைகளைப்பற்றியும் அவை உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விரிவாக இந்தப்புத்தகத்தில் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் சேர்ந்த பொருட்களைச் சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது. ஆனால் அந்த கொலஸ்ட்ரால் அதிகமாகிப்போனால் உடலில் வேண்டாத விளைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.


கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது எவ்வாறு ரத்தக் குழாய்களில் உட்புறம் படிந்து ரத்த அடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது என்பதை நன்கு படங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. இந்த ரத்த அடைப்பு இருதயத்திற்கு போகும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பில் முடியும் என்பதை அழுத்தமாக கூறியுள்ளார்.


கொழுப்பில் நல்லது, கெட்டது என்று இரண்டு வகை உண்டு என்பதே பலருக்கு ஒரு புதுமையான செய்தியாக இருக்கும். நம் உடம்பில் இந்த பல வகை கொலஸ்ட்ரால் சத்துக்கள் எவ்வளவு இருக்க வேண்டும், அவைகள் அதிகமாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர் விளக்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஒமெகா கொலஸ்ட்ரால் அமிலங்கள் என்றால் என்ன, அவை நமக்கு எவ்வாறு உபயோகப்படுகின்றன என்ற தகவல்கள் புதிதானவை. நம் உடம்பில் இருக்கும் பல்வேறு வகை கொலஸ்ட்ரால்களை எவ்வாறு டெஸ்ட் மூலம் கண்டு பிடிக்கலாம், அவை எவ்வளவு அளவில் இருக்கவேண்டும் என்ற கணக்குகளை ஆசிரியர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.


கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்னென்ன மருந்துகள் உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாதாரணமாகவே ஒவ்வொருவரும் தம்முடைய உணவு, உடற்பயிற்சி ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். ருசிக்காக எண்ணையில் பொரித்த பலகாரங்களை சாப்பிட்டால் எவ்வாறு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதைப்பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண நடைப்பயிற்சி கூட எவ்வாறு கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் என்று விளக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரியங்களில் கவனமாக இருந்தாலே கொலஸ்ட்ரால் சம்பந்தமான பெரும்பாலான தொந்திரவுகளிலிருந்து நாம் விடுதலை பெறலாம்.


Fast Food கலாச்சாரத்திற்கு அடிமையாகி இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். தெருவோரங்களில் எண்ணையில் பொரித்துக் கொடுக்கப்படும் தின்பண்டங்களில் இருக்கும் எண்ணையால் உடலுக்கு எவ்வாறு கேடு விளைகிறது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் நன்கு புரிந்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயன் படக்கூடியது. ஒவ்வொரு வகை உணவிலும் எவ்வளவு கொலஸ்ட்ரால்ச்சத்து உள்ளது என்ற பட்டியல் எல்லொருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் எந்தெந்த எண்ணைகள் சேர்த்துக்கொள்ளலாம், எவைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. வயதான பிறகு தங்களுடைய உடல் நலத்தில் மூத்த குடிமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன.


சில குறைகள்;


பக்கம் 32ல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் பல உணவு வகைகள் நம் நாட்டினருக்கு பரிச்சயமில்லாதவை. உணவு மாற்றங்களைப பற்றி எழுதும்போது சில இடங்களில் மிகவும் டெக்னிகலாக இருக்கின்றன. அவை மூத்த குடிமக்கள் பலருக்கு புரிந்து கொள்ள சிரமமாக இருக்கலாம். மற்றபடி இந்த புத்தகம் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடயதாகவே இருக்கிறது.


நல்ல சரளமான தமிழில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கும் அதை தைரியமாக பிரசுரித்த NHM நிறுவனத்திற்கும் என்னுடைய பாராட்டுகள். புத்தகத்தின் அட்டைப்படமும் மற்ற அமைப்புகளும் நன்றாக இருக்கின்றன.


புத்தகத்தின் பிரசுர விவரங்கள்;


கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?
ஆசிரியர்; டாக்டர் சு.முத்து செல்லக்குமார்
முதல் பதிப்பு – அக்டோபர், 2008
128 பக்கம் விலை; ரூ.60
பிரசுரித்தவர்; பத்ரி சேஷாத்ரி
Published by:
New Horizon Media Pvt. Ltd.,
No. 33/15, Eldams Road,
Alwarpet, Chennai-600 018.

செவ்வாய், 5 ஜூலை, 2016

ஆண்களுக்கான உடல் நலக் குறிப்பு


                                Image result for ஆண்கள்

ஆண்களுக்கு மட்டும். பெண்கள் படிக்க வேண்டாம்

மனிதனுக்கு பல உடல் நலக்குறைவுகள் ஏற்படுவது இயற்கை. அதில் சிலவற்றை உடனடியாக க் குணப்படுத்த வேண்டியது அவசியம். இதற்குத் தான் இப்போது வீதிக்கு இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்களே?

சில உடல் உபாதைகள் உடனடியாகக் கவனிக்க வேண்டியதில்லாதவை. உதாரணத்திற்கு அஜீரணம், மலச்சிக்கல், சளிக்காய்ச்சல், தலைவலி முதலானவை. இரண்டு நாள் சும்மா இருந்தால் இவை போய்விடும். இவைகளுக்குப் பல கை வைத்தியங்கள் உள்ளன. அவைகளில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

சில உபாதைகள் நீங்காமல் இருந்து கொண்டு தொந்திரவு கொடுக்கக் கூடியவை. இவைகளில் டாக்டரிடம் உடனடியாகக் காட்ட முடியாதவை சிலது உண்டு. அதுவும் வயதானவர்களுக்கு வரக்கூடிய உபாதைகள் இவை. அவைகளில் ஒன்று இங்கே ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறேன்.

இந்த உபாதைக்கு இணையத்தில் நல்ல யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. டாக்டரிடம் செல்லாமல் நாமே கடைப்பிடிக்கக் கூடியவை. (டாக்டர்கள் மன்னிக்கவும்) இந்த யோசனைகளை அனுசரித்து நான் பலன் பெற்றபடியால் இதை இங்கே பதிவு செய்கிறேன்.


What is jock itch? What does jock itch look like?

Jock itch is a common, itchy rash of the groin. It can produce a very intense itch and is associated with a red or pink rash involving the groin folds and genitals. Jock itch is primarily a skin condition in men because of anatomic structures unique to males, the male genitalia.
The symptoms of jock itch may come and go, and many cases of jock itch resolve spontaneously without any treatment. Jock itch is primarily seen in the groin, although it may spread to the inner thighs, genitals (including penis, scrotum, labia, and vaginal opening), and anus.
While jock itch is frequently noted in otherwise healthy people, those with diabetes and/or obesityare more susceptible. Possible causes include irritation from tight or abrasive underwear, excess moisture, sweating, skin rubbing or friction, allergic problems, fungal infection, Candida (yeast) infection, and bacterial overgrowth.
Treatment of fungal-related jock itch may include one or a combination of antifungal creams and, rarely, antifungal pills. Treatment of jock itch that is not caused by fungus involves proper groin hygiene, keeping the area clean and dry, and washing frequently with gentle soap and water (especially after sweating or exercise).
Jock itch causes a symmetrical red or pink rash on the sides of the groin folds. There may be a dry, scaly rash or a collection of small, pinpoint red or pink bumps at each hair follicle
Certain groups of people may be more prone to jock itch. Patients withdiabetes, obesity, and those with a compromised immune system such as from HIV/AIDShepatitis, chronic illnesses, cancer, systemicchemotherapy, immunosuppressive drugs such as prednisone, and those on biologic immune-system-modifying drugs such as infliximab (Remicade) oretanercept (Enbrel) may be more prone to jock itch.



செவ்வாய், 10 நவம்பர், 2015

மேக்கி நூடுல்ஸ்

                                               Image result for மேக்கி நூடுல்ஸ்

ஆறு மாத த்திற்கு முன் 10-6-2015 அன்று மேக்கி நூடுல்ஸ் பற்றி நான் போட்ட பதிவு.

லிங்க்: http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_10.html

அதில் கடைசி பாரா;

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

இன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி. 100 நகரங்களில் மேக்கி நூடுல்ஸ்சுக்கான தடை நீக்கப்பட்டது. ஜிங்க் மற்றும் எம்எஸ்ஜி, ஜீபூம்பா என்று காணாமல் போயிற்று. எல்லோரும் தீபாவளிக்கு மேக்கி நூடுல்ஸ் சாப்பிட்டு ஆனந்தமாக இருக்க நரகாசுரனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க மேக்கி.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இனிமையான வியாதி

இனிப்பானதெல்லாம் இன்பமானதல்ல. அதில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உலகில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நோய். இந்திய நாடு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் “மதுமேகம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியர்களுக்குப் பல காலமாகப் பரிச்சயமான நோய். இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவசியம்.


முதலில் புரிந்து கொள்ளவேண்டியது – இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு. வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். இது ஒரு ஜீரண மாறுபாடு. இந்நோய் பற்றிய மருத்துவத் தகவல்கள் டாக்டர் முருகானந்தம் அவர்கள் ஒரு பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். தையும் படியுங்கள்.

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று முதன்முதலில் தெரியும்போது எல்லோரும் அதிர்ச்சியடைவது இயல்பு. அவர்கள் கற்பனை சிறகடித்துக்கொண்டு பறக்கும். ஓ, இனி ஆயுளுக்கும் இனிப்பு சாப்படக்கூடாது, காப்பிக்கு சர்க்கரை போடாமல் குடிக்கவேண்டும், சப்பாத்தி மட்டுமே சாப்பிடவேண்டும், இப்படி வாழ்வது என்ன வாழ்க்கை, செத்துப் போய்விடலாமா என்றெல்லாம் கற்பனை பண்ணுவார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் தேவையற்றவை. நீங்களும் எல்லோரையும் போல் வாழலாம். நல்ல காப்பி குடிக்கலாம். கல்யாண வீட்டில் வெளுத்துக் கட்டலாம். அரிசிச் சாப்பட்டை விட வேண்டியதில்லை. எப்படி என்று பார்க்கலாம்.

நம் உடம்பின் அவயவங்கள் இயங்குவதற்கும், நாம் வேலை செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. (ஆபீசில் வேலை செய்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு - ஏனென்றால் அவர்கள் வேலை என்பது தூங்குவதுதானே). இந்த சக்தியானது நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு அப்படியே சக்தியாவதில்லை. பலவிதமான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உணவு சக்தியாக மாறுகின்றது. அப்படி ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானது நம் உணவிலுள்ள ஸ்டார்ச்சு சத்து குளுகோஸ் சர்க்கரையாக மாறுவது. இது நமது இரைப்பையில் நடக்கிறது.

இந்த குளுகோஸ் சர்க்கரை குடல்களில் உள்ள குடல் வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. இந்த குளுகோஸ் சர்க்கரைதான் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அந்த திசுக்களுக்கு சக்தியைத் தருகிறது. குளுகோஸ் திசுக்களில் எப்படி சக்தியாக மாறுகிறது என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ( நான் படிச்சதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி கட்டாயம் உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன்.)

நாம் எல்லோரும் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோம். அதற்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். நாம் சாப்பிட்ட உணவு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி, அந்த குளுகோஸ் முழுவதும் ரத்தத்தில் சேர்ந்து விடும். அப்போது ரத்தத்தில் குளிகோஸின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் நமது உடம்புக்கு சக்தி ஒரு அளவில் நீடித்து, அதாவது அடுத்த வேளை உணவு உண்ணும் வரை வேண்டும். ஆகவே ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையை ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பிறகு உடலுக்குத் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் நல்லதல்லவா? கடவுள் இதற்கான ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது, அந்த சர்க்கரையானது கல்லீரலில் சேமிக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து ரத்தத்திற்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதை அணைக்கட்டுகளில் சேகரித்து ஆற்றில் நீரை ஒரே அளவில் விடுகிறோம் அல்லவா? அதே போல் கல்லீரல் சர்க்கரைக்கு ஒரு அணைக் கட்டாக செயல்படுகிறது. இப்படி இல்லாவிட்டால் ஆற்று வெள்ளம் அது பாயும் இடங்களிலெல்லாம் சேதம் விளைவித்து விடும் அல்லவா? அது போல்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் உடலின் பல அவயவங்களுக்குத் தீமை வந்து சேரும். இவ்வாறு நடக்காமல் இருக்க கல்லீரல் ஒரு அணையாக வேலை செய்கிறது.

இன்னொரு சமாச்சாரம். சர்க்கரை ரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் போவதற்கும் மறுபடி கல்லீரலுக்குள் இருந்து ரத்தத்திற்கு வருவதற்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகின்றது. பல காரணங்களினால் இந்த இன்சுலின் பலருடைய உடம்பில் பற்றாக்குறையாகி விடுகிறது. அப்போது சாப்பிட்டவுடன் ரத்தத்தில் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்குள் போகாமல் ரத்தத்திலேயே இருந்து விடுகிறது. அதனால்தான் இதை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

சரி, அப்படி ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அதிக சர்க்கரை ரத்தத்தில் இருந்தால், கிட்னி அதை வெளியேற்றப் பார்க்கும். அப்போது சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இப்படி சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டால் கொஞ்ச நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கல்லீரலிலிருந்து சர்க்கரை ரத்தத்திற்கு வராது. வேலை செய்ய சக்தி குறையும். அதை ஈடுகட்ட மூளை சாப்பிடு என்று சொல்லும். பசி எடுக்கும். அப்போது சாப்பிடவேண்டும்.

இப்படி சாப்பிடுவதும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் இருந்து சிறுநீர் வழியாக சர்க்கரை வெளியேறுவதுமாக இருந்தால் உடல் நிலை க்ஷீணித்து பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வு உடலில் இன்சலின் செயலை அதிகரிக்கவேண்டும். இதை இரண்டு விதத்தில் டாக்டர்கள் செய்வார்கள். ஒன்று மாத்திரைகள், இரண்டு இன்சுலின் இஞ்செக்ஷன். ஆனால் இவை முழுமையான தீர்வுகள் அல்ல. டாக்டர் முருகானந்தம் சொல்லியுள்ள வழி முறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கழுத்துவலி - பாகம் 2


நண்பர் நீடுர் அலி அவர்கள் ஒரு யோகா பயிற்சியின் சுட்டியை அனுப்பினார்கள். மிகவும் எளிய பயிற்சி. கழுத்து வலியில்லாதவர்கள் கூட செய்யலாம். நல்ல பலன் கொடுக்கும்.

வியாழன், 19 ஏப்ரல், 2012

கழுத்து வலியைக் குணப்படுத்த வழி


நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல். - குறள்.

ஆகவே எந்த நோயாக இருந்தாலும் அது எப்படி, எதனால் வந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த நாளில் கழுத்து வலி வருவதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்.

1. இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் போகும்போது குண்டு குழிகளில், வேகத்தடுப்பான்களில், வேகத்தைக் குறைக்காமல் வேகமாகப் போகும்போது ஏற்படும் அதிர்ச்சி.

2. கணிணி முன் மணிக்கணக்காக ஒரே நிலையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பது.

3. தலையணையின் உயரம் ஒத்துக் கொள்ளாமல் போவது.

முதல் இரண்டு காரணங்களையும் பலர் அறிந்திருப்பார்கள். அதற்கு உண்டான வைத்தியத்தையும் அறிந்திருப்பார்கள். இந்த மூன்றாவது தலையணை காரணத்தையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும். இது நாள் வரை டாக்டர்கள் சொல்லி வந்தது என்னவென்றால் தலையணை அதிக உயரம் கூடாது என்பதுதான்.

என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதே. ஆகவே நீங்கள் உங்களுக்கு எவ்வளவு உயரமான தலையணை வேண்டும் என்பதை அனுபவத்தில் கண்டு பிடித்து அதை உபயோகப்படுத்தவேண்டும்.

நான் உயரம் குறைவான தலையணையைத்தான் உபயோகித்து வந்தேன். கழுத்து வலி இருந்து கொண்டே இருந்தது. ஒரு பரிசோதனைக்காக ஒரு உயரமான தலையணையை உபயோகித்தேன். இரண்டு மூன்று நாளில் கழுத்து வலி குறைந்து, ஒரு வாரத்தில் முற்றிலும் சரியாகி விட்டது.

இதுலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பொருத்தமான தலையணையைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவேண்டும்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

தீராத தும்மலைத் தீர்க்க! (பாகம் 2)

1956 ம் வருடம். கோயம்புத்தூர், கோவை ஆகாத சமயம். ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்பட்ட ஊர். அப்போது எனக்கு 22 வயது. இப்போது எவ்வளவு என்று கணக்குத் தெரிந்தவர்கள் கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். கணக்கு தெரியாதவர்கள் தெரிந்தவர்களை அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்போது ஒரு கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இங்கிலீஷ் டாக்டர்கள் கோயமுத்தூரில் இருந்தார்கள். ஊரில் ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான். அதுதான் பெரிய ஆஸ்பத்திரி என்று வழக்கில் கூறப்படும் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி. பெரும்பாலான ஜனங்கள் எந்த சீக்கென்றாலும் வீட்டிலேயே கை வைத்தியம், அதைத்தாண்டி மந்திரம், மாந்தரீகம், நாட்டு வைத்தியம் இதையெல்லாம் பார்த்துவிட்டு நோய் குணமாகாவிட்டால், அப்புறம்தான் பெரியாஸ்பத்திரி கொண்டு செல்வார்கள்.

பெரிய ஆஸ்பத்திரி போகும்போதே கேஸ் ரொம்ப மோசமாக இருக்கும். அங்கு வியாதி குணமாகி திரும்புபவர்கள் பாதி பேர்தான். ஆகவே ஒருவரை பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னாலே சொந்தக்காரர்கள் எல்லாம் கடைசிக் காரியத்திற்கு தயாராகி விடுவார்கள். எல்லா உறவினர்களுக்கும் தகவல் போய்விடும்.

இது தவிர ஊரில் நாட்டு வைத்தியர் என்று அழைக்கப்படும் ஆயுர்வேத டாக்டர்கள் அங்கோன்றும் இங்கொன்றுமாக சிலர் இருந்தார்கள். அதில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலேயே மைசூர் வைத்தியர் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார். நல்ல கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர். அவர்கள் குடும்பமே நாட்டு வைத்தியத்தில் பெயர் பெற்றவர்கள். திப்பு சுல்தான் கொங்கு நாட்டிற்கு படையெடுத்து வந்தபோது அந்தப் படையுடன் வந்தவர்கள். இங்கேயே தங்கி விட்டார்கள்.

நிற்க, என்னுடைய வியாதியும் அவ்வளவு சீரியஸ் ஆக இல்லாததினால் பெரிய ஆஸ்பத்திரி போகும் அளவிற்கு ஆகவில்லை. அப்படி ஏதாவது ஆகியிருந்தால் உங்களுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பாக்கியம் இருந்திருக்காது.

ஒரு நாள் என் தந்தையார் என்னை இந்த மைசூர் வைத்தியரிடம் அழைத்துச்சென்றார். அவர் என்னுடைய தும்மல் வரலாற்றைக் கேட்டு விட்டு, வைத்தியம் சொன்னார்.

இரண்டு மருந்துகள் கொடுக்கிறேன். ஒன்று உள்ளுக்குச் சாப்பிடவேண்டியது. இன்னொன்று வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளிக்கவேண்டியது. தலைக்கு இந்தத் தைலம் தேய்த்துக் குளிப்பதற்கு சில பத்தியங்கள் உண்டு. தலையைக் கழுவுவதற்கு அரப்பு தேய்க்கக் கூடாது. சீவக்காய்த்தூள் மட்டும்தான் தேய்த்துக் கொள்ளவேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரம் போக நன்றாக காய வைக்கவேண்டும்.

அன்று முழுவதும் காய்ச்சின நீர்தான் வெதுவெதுப்பாக குடிக்கவேண்டும். தயிர், மோர் சேர்க்கக் கூடாது. வெளியில் அலையக்கூடாது. பகலில் தூங்கக் கூடாது. மதியம் சீரக ரசம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஆறு மாதம் இருந்தால் குணம் தெரியும் என்றார்.

அவர் கொடுத்த மருந்துகள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. உள்ளுக்கு சாப்பிட சியவனப்பிரகாச லேகியம். தலைக்கு குளிக்க சிந்துவாரத்தைலம். இரண்டையும் வாங்கிக்கொண்டோம். முதல் தடவை அந்தத் தைலத்தை தலையில் வைத்தவுடன் சில்லென்று ஒரு உணர்ச்சி. தைலம் தலைக்குள் போவது மாதிரியே இருந்தது. பிறகு எப்போதும் அந்த மாதிரி உணர்ச்சி ஏற்பட்டதே இல்லை.

மூன்று மாதத்தில் ஓரளவு குணம் தெரிந்ததால் மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்தேன். ஆறு மாதத்தில் தும்மல் அடியோடு நின்றுவிட்டது. எப்போதாவது சளி பிடிக்கும். இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும். ஒரு வருடத்தில் என்னுடைய தும்மல் அறவே காணவில்லை. வைத்தியர் இந்த மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று சொல்லியிருந்ததால் ஏறக்குறைய ஒரு எட்டு வருடம் இந்த மருந்துகளைத் தவறாமல் உபயோகித்தேன்.

பிறகு மனிதனுக்கு வழக்கமாக வரும் வியாதியான "மெத்தனம்" என்னைப் பீடித்தது. மருந்துகளை உபயோகிப்பதை நிறுத்து விட்டேன். இரண்டு வருடங்கள் நன்றாக இருந்தேன். பிறகு பழைய தும்மல் வர ஆரம்பித்தது. ஆஹா, தவறு செய்து விட்டோம் என்று உடனே தைலமும் லேகியமும் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் உடனே குணம் தெரியவில்லை. தும்மல், சளி, நுரையீரலில் கபம், நடந்தால் மூச்சு இரைத்தல், இப்படி ஏறக்குறைய ஆஸத்மா நிலைக்குப் போய்விட்டேன். இங்கிலீஷ் மருந்துகளும் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் விடப்பிடியாக இந்த தைலத்தை மட்டும் உபயோகித்து வந்தேன். ஏறக்குறைய ஐந்து வருடம் கழித்து இந்த தொந்திரவுகள் குறைந்தன.

அப்போதிலிருந்து இன்று வரை இந்த தைல வைத்தியத்தைத் தொடர்ந்து வருகிறேன். முதலில் பார்த்த மைசூர் வைத்தியர் (சுப்பாராவ் என்று பெயர்) காலனுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டார். பிறகு அவருடைய ஒன்று விட்ட சகோதரர் சீனிவாச ராவிடம் இந்தத் தைலம் வாங்கி உபயோகித்தேன். அவர் இந்த தைலத்திற்கு "நிர்குண்டித்தைலம்" என்று பெயர் வைத்திருந்தார். அவர் அமரிக்காவில் இருக்கும் தன் பெண் வீட்டிற்குப் போய்விட்டார்.

பிறகு தற்போது கோவையில் பிரபலமாக இருக்கும் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலையில் இந்தத் தைலம் வாங்கி உபயோகிக்கிறேன். அங்கு இந்தத் தைலத்திற்கு "வாசாதி தைலம்" என்று பெயர். வாரம் ஒரு முறை, சனிக்கிழமை இந்த தைல ஸ்நானம் நடக்கும். தும்மல், சளி என்பவற்றை நான் மறந்து பல வருடங்கள் ஆகி விட்டன.

ஆயுர்வேத முறை நல்ல முறைதான். ஆனால் நாட்பட மருந்துகள் சாப்பிடவேண்டும். தவிர ஒவ்வொருவருக்கும் உடல்வாகு வேறுபடுவதால் ஒருவருக்கு குணம் கொடுக்கும் மருந்துகள் மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த வைத்தியத்தில் நம்பிக்கை, பத்தியம், நீடித்த உபயோகம் ஆகியவை இன்றியமையாதவை.

புதன், 4 ஏப்ரல், 2012

சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்


சர்க்கரை நோயைப் பற்றி பல மருத்துவர்கள் குறிப்பாக டாக்டர் முருகானந்தம் பல பதிவுகள் எழுதியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மருத்துவ ரீதியில் மிகவும் துல்லியமானவை. பல மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தொகுத்து அதன் சாராம்சங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் சாதாரண சர்க்கரை நோய் உள்ள, சாதாரண மனிதனுக்கு அந்த குறிப்புகளை மனதில் வாங்கி நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிரமமான சமாச்சாரம். அதற்காக, என்னைப் போல் உள்ள பாமர மக்களுக்கும் புரியும்படி சிறு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும்.

இவை யாவும் நான் கற்றுக்கொண்ட நடைமுறை உண்மைகள். ஆனால் இவைகளைக் கடைப்பிடிக்கும்போது ஏதாவது சிக்கல்கள் வருகிற மாதிரி தோன்றினால் உடனே உங்கள் வழக்கமான டாக்டரைப் பார்த்து விடுங்கள்.

1. நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதை முதலில் மறந்து விடுங்கள். கவலை சர்க்கரை நோயை அதிகரிக்கும்.

2. எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் பழைய அளவில் பாதி மட்டும் சாப்பிடவேண்டும். அதாவது முன்பு ஒரு டஜன் இட்லி சாப்பிடுபவராக இருந்தால் இப்போது அரை டஜன் மட்டும் சாப்பிடவும்.

3. நீங்கள் காப்பிப் பிரியரா? சர்க்கரை இல்லாத காப்பி குடிப்தற்குப் பதிலாக விஷத்தை குடித்து விடலாம். நல்ல காப்பி குடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ன இரண்டு ஸ்பூன் சர்க்கரைக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் பழகி விடும்.

அதற்குப்பிறகு ஒரு ஸ்பூனுக்குப் பதிலாக அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் பழகி விடும்.

அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.

4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.

5. டாக்டர் சொல்லும் மருந்துகளைத் தவறாது டாக்டர் சொன்ன முறைப்படி சாப்பிட்டுவிடுங்கள். இதில் எந்த மாற்றமும் கூடாது.

6.பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

7. மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. 100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.

8. எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.

9. வீட்டில் மற்றவர்கள் எல்லாம் வக்கணையாக, விதம் விதமாக ஸ்வீட்டுகள் செய்து சாப்பிடுவார்கள். அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.

10. தினமும் தவறாமல் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.

அவ்வளவுதானுங்க. ஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

புதன், 6 ஜூலை, 2011

தீவிர உடல் நலக்குறைவு ஏற்படும்போது…..




ஒவ்வொரு குடும்பத்திலும் திடீரென்று யாருக்காவது தீவிர உடல் நலக்குறைவு ஏற்படலாம். அப்போது பொதுவாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அந்த நபரை அந்த ஊரிலுள்ள பெரிய, தனியார் ஆஸ்பத்திரிக்குத்தான் பொதுவாக கூட்டிச்  செல்வார்கள். எப்படியாவது, என்ன செலவானாலும் சரி, இவரைப் பிழைக்க வையுங்கள் என்று சொல்வார்கள் இப்படி சொல்பவர்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டுக்காரர்களாகவே இருக்கும். அந்த நபருக்காக செலவு செய்யும் குடும்ப அங்கத்தினர் அழுது கொண்டு இருப்பாரே தவிர, இந்த முடிவுகளில் தலையிடக்கூடிய மன நிலையில் இருக்க மாட்டார்.

வசதி இல்லாதவர்கள் முதல் நாள் செலவைப் பார்த்தே, இது நமக்குக் கட்டுப்படியாகாது என்று கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

மிகப் பணக்காரர்களுக்கு இந்த செலவுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இந்த இரண்டும் கெட்டானாக இருக்கிற நடுத்தர மக்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். சரியான முடிவு எடுக்க முடியாமல், திண்டாடி, சரி, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று கடன் வாங்கி அந்த தனியார் ஆஸ்பத்திரியிலேயே வைத்தியம் பார்ப்பார்கள்.

அந்த ஆள் உடல் நலம் தேறி, வீட்டுக்கு வந்தால், அவரின் மிச்ச ஆயுள் முழுவதும்  இந்த கடனை அடைக்கவே சரியாயிருக்கும். பல சமயங்களில் இந்தக் கடன் தீர்வதற்குள்ளாகவே அவர் போய்ச் சேர்ந்து விடுவார். அவருடைய குடும்பம் சின்னாபின்னமாகப் போய்விடும்.

நீதி: இந்த நிலை ஒரு குடும்பத்தில் இருக்குமானால் அவரை அரசாங்க ஆஸபத்திரியில் சேர்ப்பதே நல்லது. அரசாங்க ஆஸபத்திரிகளிலும் வைத்தியம் நன்றாகவே செய்கிறார்கள்.

சனி, 16 அக்டோபர், 2010

பல்மொனெரி எம்பாலிசம் (Pulmonary Embolism)



டாக்டர்களைத்தவிர
மற்றவர்கள் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம். இது ஒரு அபூர்வமாக வரும் ஒரு நோய். நோய் என்று சொல்வது கூடத் தவறு. ஒரு மருத்துவச்சிக்கல் என்றுதான் கூறவேண்டும்.

கெண்டைக்காலில் ஏதாவது அடிபட்டு இருந்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உண்டு. அபூர்வமானது என்றாலும் இதைப்பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் தேவை. கருவுற்று இருக்கும் பெண்மணிகளுக்கும் பிரசவத்திற்கு முன்போ, பின்போ இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

என் நண்பர் ஒருவரின் மாப்பிள்ளை போன வாரம் ஒரு நாள் தன் மனைவியுடன் ஸ்கூட்டரில் போகும்போது குறுக்கே ஒரு கார் எதிர்பாராமல் வந்ததால் சடன்பிரேக் போட்டு சறுக்கி விழுந்து விட்டார். சாதாரணமாக ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி விபத்து ஏற்பட்டிருக்கும். நண்பரின் மாப்பிள்ளை பக்கத்திலுள்ள ஒரு பெரிய தனியார் ஆஸபத்திரிக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கெண்டைக்காலின் எலும்பில் சின்னதாக இருக்கும் பிஃபியாஎன்ற எலும்பில் ஒரு லேசான கீறல். அதற்கு கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருடைய மனைவிக்கு சாதாரண, லேசான காயங்கள் மட்டும்தான். அதற்கும் மருந்து போட்டு அனுப்பி விட்டார்கள்.

அடுத்த நாள் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். மனுஷன் நன்றாக உற்சாகமாக இருந்தார். ஒரு மாதம் என்னைப் படுக்க வைத்து விட்டார்கள் என்று தமாசு பண்ணினார். மூன்றாவது நாள் காலையில் திடீரென்று மயக்கம் போட்டுவிட்டார் பேச்சுமூச்சு இல்லை. நாடித்துடிப்பு நின்று விட்டது. கைகால்கள் சில்லென்று ஆகிவிட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸப்த்திரிக்குப் போனார்கள். இதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் ஆகி விட்டது.

எமர்ஜென்சி வார்டுக்குப் போனவுடன் ட்ரீட்மென்ட் கொடுத்து இருதயத்தை துடிக்க வைத்து விட்டார்கள். அதுவே பெரிய சாதனை. அரை மணிநேரம் இயங்காமல் இருந்த இருதயம் இயங்க ஆரம்பித்தவுடன் நுரையீரலுக்கும் வென்டிலேட்டர் என்ற ஒரு மிஷினைப் பொருத்தி நுரையீரலையும் ஒழுங்குபடுத்தினார்கள். இருதயம் தொடர்ந்து வேலை செய்ய பலவிதமான ஊசிகள். நுரையீரல் வேலை செய்ய மிஷின். மூளையை இயங்கச்செய்ய பலவித ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால் மூளை தனியாக இயங்கவில்லை. ஏனென்றால் மூளை இயங்கினால் நுரையீரல் தானே இயங்கவேண்டும். அது நடக்காததால் மூளை இயக்கம் இன்னும் வரவில்லை என்று டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.

இது ஒரு சிக்கலான சூழ்நிலை. பணம் தண்ணீராக செலவாகிறது. மனுஷன் எப்போது சுய நினைவுக்கு வருவார் என்று சொல்லமுடியாத நிலை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.

கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!