செவ்வாய், 6 ஜூலை, 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 1

முன்னுரை
 
நான் நண்பர்களுடன் சார்தாம் யாத்திரை போயிருக்கிறேன். “சார்தாம் என்பது யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு க்ஷேத்திரங்களைக் குறிக்கும். இந்த யாத்திரைக்குப் போகிறவர்கள் முதலில் ஹரித்துவாருக்குப் போய் அங்கிருந்துதான் இந்தக் கோயில்களுக்குப் போகவேண்டும். கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இரண்டு கோயில்களுக்கு மட்டும் போகிறவர்களும் உண்டு. நான் என் மனைவியுடனும் தங்கையுடனும் இந்த இரண்டு கோயில்களுக்கு மட்டும் போய் வரலாம் என்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது என் சம்பந்திகள் இருவரும் எங்களையும் கூட்டிக்கொண்டு போய் இந்த கோயில்களைக் காட்டக்கூடாதா என்று கேட்டார்கள். சரி. ஐந்து பேருமாகப் போகலாம் என்று முடிவு செய்தோம்.
எப்படிப் போவது, எங்கெங்கு போவது என்று பேசும்பொழுது, ஹரித்துவார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், டில்லி, ஆக்ரா என்ற இந்த ஊர்களுக்குப் போவது என்று முடிவாயிற்று. எப்படி போகலாம் என்று பேசினபோது, என் மாப்பிள்ளை, உங்களைத்தவிர இவர்கள் யாரும் ஏரோப்பிளேனைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. நீங்கள் எல்லோரும் டில்லி வரையில் ஏன் பிளேனில் போகக்கூடாது என்றார். நாங்கள் பொருளாதார ரீதியில் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆபீஸ் செலவில் நான் பிளேனில் போனதைத்தவிர, சொந்தச் செலவில் குடும்ப அங்கத்தினர்களை எங்கும் பிளேனில் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று கனா கூட கண்டதில்லை. செலவு நிறைய ஆகுமே என்கிற என்னுடைய ஆட்சேபணைக்கு, மாப்பிள்ளை, அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறேன், தேதிகளை முடிவு செய்து விட்டு சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.
சரி. பிறகென்ன கவலை என்று டூர் புரொக்ராம் போட்டோம். கோவையிலிருந்து டில்லி, ஹரித்துவார், கேதார்நாத், பத்ரிநாத் பார்த்து வர பதினைந்து நாள் டூர். போகும்போது டில்லி வரை பிளேன், வரும்போது ரயில். டில்லியிலிருந்து ரிஷிகேஷ் போகவர ரயில். இந்த புரொக்ராம் ஜூலை 10ம் தேதி புறப்படுவதாகப் போட்டு தேதிகளை மாப்பிள்ளையிடம் கொடுத்து விட்டேன். இது நடந்தது ஏப்ரல் மாதம். மாப்பிள்ளை டிக்கட் வாங்குவது, என் மாதிரி ரயில்வே ஸ்டேஷன் போய் க்யூவில் நின்று வாங்குவதெல்லாம் கிடையாது. இன்டர்நெட்டில்தான் எல்லா டிக்கட்டுகளும் வாங்குவார். நான் தேதிகளைக் கொடுத்த மறுநாள் மாமா, டிக்கெட் எல்லாம் புக் பண்ணிவிட்டேன். பிளேன் டிக்கட் சீப்பாக கிடைத்தது. அதனால் டில்லிக்கு போகவர இரண்டு வழிக்கும் சேர்த்தே பிளேன் டிக்கட் போட்டுவிட்டேன். அங்கிருந்து ஹரித்துவார் போகவர .ஸி. கிளாஸில் டிக்கட் போட்டாய் விட்டது. பிளேனில் சாப்பாட்டுக்கு சொல்லிவிட்டேன். டில்லியில் தங்குவதற்கும், ஆக்ரா போய் வருவதற்கும், டில்லி லோக்கல் சைட்சீயிங்க் ட்ரிப்புக்கும், ஸ்டேஷனிலிருந்து ஹோட்டலுக்கு வருவதற்கும், ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் போவதற்கும் வேண்டிய எல்லா புக்கிங்கும் செய்தாய்விட்டதுஎன்று சொல்லி எல்லா புக்கிங்க் பிரின்ட்களையும் கொடுத்து விட்டார். ஆஹா, மாப்பிள்ளையினுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம் என்று மெச்சிக்கொண்டேன். ஆகக்கூடி 15 நாள் டூர் 13 நாட்களாகக் குறைந்து விட்டது.
என் பங்குக்கு நான் ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் போகவர ஹரித்துவாரில் ஒரு ஏஜன்ட்டை இன்டர்நெட்டில் பிடித்து ரேட் பேசி, அட்வான்ஸும் அனுப்பி விட்டேன். ஹரித்துவாரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு ஐயப்பன் கோவில் இருக்கிறது. இதற்குச்சேர்ந்து பயணிகள் தங்குவதற்கு ரூம்களும் உண்டு. அந்த விலாசம் இன்டர்நெட்டில் கிடைத்தது. அவர்களுக்கு நாங்கள் வரும் தேதியைக்குறிப்பிட்டு ஒரு தபால் எழுதிப்போட்டிருக்கிறேன். அங்கு போய்த்தான் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு நிறைய லாட்ஜுகள் இருப்பதால் சமாளித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆக எல்லா ஏற்பாடுகளும் பக்காவாகச் செய்தாகிவிட்டது.
இதற்கிடையில் இந்த யாத்திரைக்கு சமீபத்தில் போய் வந்த ஒரு பார்ட்டியைச் சந்தித்து அங்குள்ள நடைமுறைகளை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அவர்களிடமிருந்து முதலாவதாகத் தெரிந்து கொண்டது, டில்லியில் வறுத்தெடுக்கும் வெயில், கேதார்-பத்ரியில் எலும்பை உறைய வைக்கும் குளிர், இந்த இரண்டிற்கும் தயாராகப் போகவேண்டும் என்பதுதான். இரண்டாவது நம்ம ஊர் சாப்பாடு அங்கே மருந்துக்கு கூடக் கிடைக்காது என்பதாகும். மூன்றாவது அங்கே அனைத்து உணவுகளும் கடுகு எண்ணையில் செய்கிறார்கள் என்பதாகும். கடுகு எண்ணையைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ். அந்த எண்ணை காயும்போது வரும் வாசனை, அதாவது நாற்றம் (நாத்தம்), நம்ம ஊர் குப்பைத்தொட்டியில் கூட வராது. கொஞ்ச நேரம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தால் வாந்தி வந்துவிடும்.
இந்த விபரங்களை வீட்டில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி அவர்களை ரொட்டிவாலாக்களாக மாற தயார் செய்தேன். குளிரைத்தாங்க ஸ்வெட்டர், மப்ளர், கிளவுஸ், குல்லாய், சாக்ஸ், சால்வை இத்தியாதிகள் ஆளுக்கு ஒரு செட் தயார் செய்தோம். வெயிலுக்காக ரீஹைட்ரேஷன் சால்ட் தயார்செய்தேன். இப்படியாக எல்லா முஸ்தீபுகளும் ரெடியாகின.
புறப்படும் நாளும் வந்தது.

சனி, 3 ஜூலை, 2010

என்னைப் பிடித்திருக்கும் பெருங்கவலை?



 
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பழைய நண்பர் வீட்டுக்கு வந்தார். அவரை ஒரு 50 வருடங்களாக அறிமுகம் என்றாலும் நெருங்கிப் பழகியதில்லை.
என் வீடு அவருக்கு எப்படித் தெரிந்தது என்றால் இரண்டு மாதத்திற்கு முன் என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் நானும் இன்னொரு நண்பரும் வந்து கொண்டிருந்தபோது நேர் எதிரில் அவர் வந்தபடியால் பேசவேண்டியதாயிற்று. என் கூட வந்த நண்பருக்கும் அவர் தெரிந்தவர்தான். அன்று என் நாக்கில் சனி பகவான் இருந்திருக்கிறார். ஒரு மரியாதைக்காக என் வீடு பக்கத்தில்தான் இருக்கறது, வாங்களேன், ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று அழைத்தேன். அவரும் ஆஹா, பேஷா வருகிறேன் என்று சொல்லி எங்களுடனே வீட்டுக்கு வந்தார்.
எங்கள் வீட்டு அம்மாவிடம் சொல்லி அவருக்கு ஒரு காப்பி கொடுத்தேன். நாங்கள் இருவரும் முன்பே அன்னபூர்ணாவில் காபி குடித்துவிட்டுத்தான் திரும்பிக் கொண்டிருந்தோம். அவர் காபி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். முக்கால்வாசி அவர் பேசினார். நாங்கள் இருவரும் சேர்ந்து கால்வாசி பேசினோம். எல்லாம் அவருடைய சுயபுராணம்தான். ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டார். எப்படியோ கஷ்டப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் கழித்து அவர் புறப்பட்டுச் சென்றார். அவர் போன பிறகு என் நண்பர் சொன்னார், நான் கண்ணால் ஜாடை காட்டினேனே, அதைப்புரிந்து கொள்ளாமல் இவரை எதற்கு வீட்டிற்கு கூப்பிட்டீர்கள் என்று கூறினார்.
சரி, எப்படியோ இந்த முறை தெரியாமல் நடந்துகொண்டேன், இனிமேல் ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன் என்று கூறினேன். அப்புறம் அவரும் போய்விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் போன் செய்து வீட்டில் இருக்கிறீர்களா என்று கேட்டார். போனை எடுத்த பிறகு நான் வீட்டில் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்து விட்டார். அப்புறம் என்ன செய்யமுடியும்? விதிப்பிரகாரம் நடக்கட்டும் என்று முடிவு செய்தேன். பதினைந்து நிமிடத்தில் அவர் வந்துவிட்டார்.
பிறகு ஒரு காபி (வீட்டம்மா கருணையுடன்) கொடுத்தேன். காபி குடித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதாவது அவர் பேசினார், நான்ஊம்கொட்டிக்கொண்டிருந்தேன். நடுவில் நான் பேச முயற்சித்தால் அவர் விடுவதில்லை. மொதல்லே இதைக்கேளுங்க என்று சொல்லி என்னைப்பேச விடுவதில்லை.
என்ன பேசினாரென்றால் முழுவதும் சுயபுராணம்தான். அவர் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து இன்று வரையில் நடந்த அத்தனை கதைகளையும் சொல்லி விட்டார். இதில் பாதி கதைகள் போன தடவை வந்தபோதே சொன்னவை. ஒரு கட்டத்தில் புறப்படுகிறேன் என்று சொன்னவர் திரும்பவும் விட்டுப்போனதை சொல்ல ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.
கடைசியாக விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஒரு மரியாதைக்காக வாசல் வரை சென்றேன். அங்கே நின்றுகொண்டு மீண்டும் அரை மணி நேரம் பேசினார். கடைசியாக அப்பப்போ நேரம் இருக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
எனக்கு இப்போதைய பெருங்கவலை என்னவென்றால் அடுத்த தடவை இவர் வந்தால் எப்படி தப்பிப்பது என்பதுதான். நண்பர்கள் யாராவது யோசனை கூறினால் அவர்களுக்கு கோயில் கட்டி கும்பிடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.

சனி, 26 ஜூன், 2010

பொது மன்னிப்பு கேட்கிறேன்

 

சக பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. தெரியாத்தனமா ஒர் விஷப்பரீட்சையில் இறங்கி தோற்றுவிட்டேன். நம் பதிவை அதிகம் யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த விஷப்பரீட்சை, விபரீதமாகப் போயிற்று. நான் தோற்றுப் போய்விட்டேன். ஆனால் தோற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய பதிவுகளை இவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்னும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

அனைவருக்கும் நன்றி. நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,

மொக்கைப் பதிவிற்கு முன்னூறு கும்மிகள்

(டிஸ்கி: இந்தப்பதிவு முற்றிலும் கம்பெனியினுடைய சொந்த தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகவே. யாரும் இது தங்களைக் குறிக்கிறது என்று கருதினால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.)


ரொம்ப நாளாக ஒரு தகாத ஆசை. வயசுக்குத் தகுந்த ஆசைதான் வரணும். ஆனா யாருக்கு என்ன கெட்ட காலமோ தெரியல, இந்த மாதிரி ஒரு ஆசை வந்துடுச்சு. வயசான பிறகு எந்த ஆசை வந்தாலும் அதை உடனே தீத்துக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால உடனே செயல்ல இறங்கிட்டேனுங்க.
 நம்ம பதிவுக்கு, ஏதோ வயசான பெரியவரு எழுதறாரேன்னு ஒரு பத்து பேர் கமென்ட் போடறாங்க. அதுவும் எப்படி? சின்னக்குழந்தைக்கு முட்டாயி கொடுக்கறாப்ல, நல்லாயிருக்கு, எழுதறத உட்டுடாதீங்க, இன்னும் எழுதுங்க, இப்படி. ஏதோ நான் எழுதறதுனாலதான் சூரியன் தினமும் கிழக்கே உதிச்சு மேற்கே அஸ்தமனமாகிறது போல ஒரு பில்டப் கொடுத்துடுவாங்க. நானும் இதுலயே கிறுகிறுத்துப்போயி எழுதிக் கிளிச்சு நூறு பதிவு போட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள ஒரு ஆசை ரொம்ப நாளா இருந்துட்டிருக்குது. அதுதான் எப்படியாச்சும் ஒரு மொக்கைப்பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் வாங்கீடறதுன்னு முடிவோட இந்தப்பதிவை போடுகிறேன்.

யாரும் தயவு செய்து என் மேல் பொறாமையோ, கோபமோ அல்லது வருத்தமோ பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.