ஞாயிறு, 6 மார்ச், 2011

செயல்களும் விளைவுகளும்


கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி, செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் தருகின்றன.

நாம் செய்யும் செயல்களுக்கு எப்போதும் நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளே ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும், எதிர் மறையாக இருந்தால் துன்பமும் நம் மனதில் தோன்றுகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவன் இந்த விளைவுகளைக் கண்டு கலங்க மாட்டான். அவன்தான் ஞானி எனப்படுபவன். எல்லோரும் ஞானியாக முடியாது. ஆனால் ஓரளவிற்கு இந்த உலக அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கீதை இதைத்தான் மக்களுக்குப் போதிக்கிறது.

உன் கடமையைச் செய். பலனை என்னிடம் விட்டு விடு.”  

இதை வெறும் வறட்டு வேதாந்தமாகக் கருதாமல் நடைமுறை வாழ்க்கையில் அனுசரித்தால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மதியும் விதியும்

விதி, விதி என்று அடிக்கடி பேசுகிறோம். ஆனால் அது என்ன என்று தீவிரமாய் சிந்தித்திருக்கிறோமா
 
உதாரணத்திற்கு, நாம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு செயல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன. ஏதோ ஒரு வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின் விளைவுகள் என்னவென்று தெரியாது. இந்த நிலையில் பொதுவாக எல்லோரும் தம்முடைய அனுபவத்தின் காரணமாக ஒரு வழியைத் தேர்வு செய்வோம். விளைவு சாதகமாக இருந்துவிட்டால் ஆஹா, நாம் தேர்ந்தெடுத்த வழி நல்ல வழி என்று திருப்திப் பட்டுக்கொள்வோம். இல்லையென்றால் ஆஹா, இந்த வழியை ஏன் தேர்ந்தெடுத்தோம்? என்று வருத்தப்பட்டுக்கொள்வோம்

நடைபெற்ற செயல் சாதாரணமானதாக இருந்துவிட்டால் சீக்கிரமே அதை மறந்துவிடுவோம். ஆனால் அதுவே வாழ்வா-சாவா என்ற ஜீவமரணப் பிரச்சினையாக இருந்து, நடந்த விளைவு மிகவும் மோசமானதாக இருந்தால் மனம் வருந்தி சோர்வில் ஆழ்ந்து, மனிதன் உடைந்துபோய், ஒன்றுக்கும் உதவாதவனாய் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது

அதாவது, குற்ற உணர்வு மேலோங்கி, சுய பச்சாத்தாபத்தில் மூழ்கி தீவிர மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்குதான் ஒரு மனோதத்துவ ஆறுதலை பெரியவர்கள் ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

குழந்தை கீழே விழுந்து அழுது கொண்டு வந்தால் அம்மா என்ன செய்கிறாள்? குழந்தையை, அது கீழே விழுந்த இடத்திற்கு கூட்டிப்போய், அந்த இடத்தை குச்சியால் இரண்டு அடி கொடுத்தால் குழந்தை சமாதானமாகி விடுகிறது. நாமும் வளர்ந்த குழந்தை மாதிரிதான். நமக்கும் இந்த மாதிரி நொண்டி சமாதானம் மன ரீதியாகத் தேவைப்படுகிறது. நடந்தது நம் விதிப்பயன், நாம் என்ன முயன்றிருந்தாலும் இந்த விளைவு ஏற்பட்டேயிருக்கும் என்ற தத்துவத்தை நம் மனதில் ஆழமாக ஏற்றியிருப்பதால், அதைச்சொல்லி சமாதானப்பட்டுக் கொள்கிறோம்.

நம் சுய பச்சாத்தாபத்தை மாற்ற இதைவிட வேறு உபாயம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் இந்த சமாதானத்தின் உட்பொருளை விளங்கிக்கொண்டிருந்தால் சரி. இல்லாமல் முழு மூடத்தனமாக என்னுடைய எல்லாச் செயலையும் விதிதான் நிர்ணயிக்கிறது என்று எண்ணி செயல்களைச் செய்வானானால் விளைவுகள் மோசமாக இருக்கும். அவன் வாழ்வு சிறப்பாக இருக்காது.


செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தைக் கடந்த பெண்ணும், காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்குபவர்களும் இவ்வாறு தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஆவார்கள். நமக்கு இயற்கை கொடுத்திருக்கும் மதியைப் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்த வேண்டும். இதைத்தான் பெரியவர்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

சலீசாக ஊட்டி சீசனைப் பார்க்க வேண்டுமா?

 
கோவைக்கு வாருங்கள். என்றுமில்லாத அதிசயமாய் நேற்று இரவு முதல் மழை பெய்து சும்மா ஜிலுஜிலுவென்று இருக்கிறது. இதைப் பார்த்துத்தான் வெள்ளைக்காரன் "ஏழைகளின் ஊட்டி" என்று பெயர் வைத்திருக்கிறான்.

இதைப் பார்த்து விட்டுத்தான்  வேறு மாவட்டங்களிலிருந்து கோவைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் எல்லாம் பணக்காரர்களாகி, இங்கனயே வூடு கட்டிக்கினு, கோயமுத்தூர்க்காரனையெல்லாம் வெளியூருக்கு அனுப்பிச்சிட்டிருக்கான்.

டெம்ப்ளேட் கமென்ட்டுகள்.


பதிவுகள் எக்கச்சக்கமாகி விட்டன. எல்லாப் பதிவுகளையும் படிக்க நேரம் போதவில்லை. எல்லாப்பதிவர்களும் தங்கள் பதிவுகளில் ஓட்டுப் போடவும், பின்னூட்டம் போடவும் வற்புறுத்துகிறார்கள். ஒரு மரியாதைக்காக ஓட்டுப் போடலாம் என்று பார்த்தால் ஓட்டுப்பெட்டிகள் ஏழு தலைமுறை ஜாதகத்தைக் கேட்கின்றன. 
 
அது போகட்டும், பின்னூட்டமாவது போடலாம் என்று பார்த்தால் அந்த சமயம் பார்த்து நம் மூளை (இருந்தால்தானே என்பவர்களுக்கு தனியாக ஒரு பதிவு போடுகிறேன்) அந்த சமயம் பார்த்து ஊர் மேயப்போய் விடுகிறது. அப்டிப்பட்ட சமயங்களில் உதவுவதற்காக சில “டெம்ப்ளேட்” கமென்ட்டுகளை இங்கே தொகுத்து அளித்திருக்கிறேன். உசிதம் போல் உபயோகித்துக் கொள்ளவும். நன்றி எல்லாம் வேண்டாம். இதுநாள் வரை சேர்ந்த நன்றிகளே வீடு கொள்ளாமல் வாசலில் போட்டு வைத்திருக்கிறேன்.


1.     ரொம்ப நல்லா இருக்கு :-)
2.     very interesting video. :-)
3.     நல்லாயிருக்கு... சகோதரா
4.     போடு முத வெட்டை
5.     ரசிக்க வைத்த வரிகள்
6.     நச் வரிகள்
7.     சூப்பர்! கலக்கிட்டீங்க பாஸ்!
8.     நல்லாய் இருக்கு சார்
9.     arumaiyana pathivu....
10.  மீ த பர்ஸ்ட்டேய்...
11.  mmmmmm....
12.  என்ன சொல்வதென்றே தெரியவில்லை……………………கலக்குங்க பாஸ்..
13.  செம நக்கல். ஆட்டோ வர போகுது பாத்து பத்திரமா இருங்க ....:))
14.  நல்ல பதிவு . . . நன்றி . . .
15.  i got the vada
16.  ஆட்டோ கன்பார்ம்...
இவ்வளவு போதும்னு நினைக்கிறேன். கும்மி அடிப்பது தனிக்கலை. அதைப்பற்றி பின்னால் ஒரு ஸ்பெஷல் பதிவு போடுகிறேன்.

ரொம்ப ரொம்ப நல்ல பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள்.
17.  0 comments:


 பின்குறிப்பு:  ஒரு  அட்டகாசமான (அக்கிரமமான ?) படம் போட்டிருந்தேன். படம் நல்லா இல்லைன்னு நாலு பேரு சொன்னதால படத்தை மாத்தீட்டேன்.

சனி, 19 பிப்ரவரி, 2011

முதுமையை எதிர்கொள்ள பத்து அம்சத்திட்டம்.



முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையைச் சந்திக்கத் தகுந்த திட்டமிடல் இருந்தால் முதுமையையும் சந்தோஷமாக அனுபவிக்கலாம். அதற்கு உதவும் சில கருத்துக்கள்.

1.   முதுமையில் பணம் மிகவும் அவசியம். வாழ்நாளில் சேமித்தது எல்லாவற்றையும் மக்களுக்காக செலவழித்த பிறகு, மக்கள் பெற்றோரை புறக்கணிக்கும் சம்பவங்கள் ஏராளம்.


2.   உங்கள் வருமானத்தில் பாதி தொகையில் உங்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை முடித்துக் கொள்ளவேண்டும். மீதி பாதியைச் சேமித்தால், அதில் பாதி எதிர்பாராத செலவுகளுக்காகத் தேவைப்படும். மீதிப்பாதிதான் உண்மையான சேமிப்பாக அமையும்.


3.   முதியவர்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் சேர்த்தவை, பரம்பரையாக வந்த சொத்துக்கள் இவற்றை தமக்குப் பிறகு யார் யாருக்கு எவ்வளவு என்று பிரித்து தெளிவாக உயில் எழுதி, சாட்சிகள் கையொப்பமிட்டு, ரிஜிஸ்டர் செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உயிலில் என்ன எழுதியிருக்கிறோம் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிந்திருப்பது நல்லது.

4.   வங்கியிலிருந்து அதிகத் தொகை எடுத்து வரவேண்டியிருந்தால் நம்பகமான ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்லவும்.


5.   தடுமாற்றமுள்ளவர்கள் கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. காலையில் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்திருக்காமல், முதலில் அரை நிமிட நேரமாவது படுக்கையில் உட்கார்ந்த பிறகு மெதுவாக எழுந்து நடக்க வேண்டும்.

6.   வழவழப்பான தரை, பாத்ரூமில் ஈரமான தரை, மார்பிள் தளம் போன்றவற்றால் நிலை தடுமாறி விழும் நிலை தோன்றலாம். டெலிபோன் அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.


7.   உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் இரத்த அழுத்தம் குறையும், எலும்புகள் வலுப்பெறும், மலச்சிக்கல் தோன்றாது. நல்ல தூக்கம் வரும்.

8.   சிலர் மரணபயத்தால் நிலை குலைந்து தவிப்பார்கள். இவர்கள் மனநல மருத்துவரைக் கலந்து தகுந்த ஆலோசனைகள் பெறுவது நல்லது. மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


9.   உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.

10. பற்றற்ற வாழ்க்கை வாழப்பழகிக் கொள்ளவேண்டும். தியானம் மூலம் மன அமைதி பெறலாம். சகிப்புத்தன்மை கூடும், உடல் நலம் பாதுகாக்கப் படும்.