சனி, 7 மே, 2016

காதல் கல்யாணங்கள்

ஒரு ஊழியனின் குரல் 

என்கிற தளத்தில் வெளி வந்த
இப்பெண்ணின் கேள்விக்கு பதிலென்ன?

என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்.


நான் இந்த கலப்புத் திருமணங்களைப் பற்றி சில சொந்தக் கருத்துகள் வைத்திருக்கிறேன். அவை என்னைப் பிற்போக்குவாதியாகவும் சாதி வெறியனாகவும் இன்னும் பல அடைமொழிகளுக்கு உரியவனாகவும் காட்டலாம். அவைகளைப் பற்றி கவலைப்படாமல்தான் இந்த பின்னூட்டம் போடுகிறேன். இந்தப் பின்னூட்டம் மேலும் பல மாற்றுக்கருத்துகளுக்கு வழி வகுத்தால் நன்மை உண்டாகும்.

காதல் என்பது ஒரு பருவக்கவர்ச்சியே என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்க சாத்தியமில்லை. இதை சரியான கோணத்தில் கையாள்வதற்கு நம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்.நாம் வாழும் காலம் என்ன, நம் வாழ்க்கையை வாழ என்னென்ன தேவைகள் உண்டு, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற நாம் என்ன தகுதி பெற்றிருக்கவேண்டும் என்ற சிந்தனைகள் ஒவ்வொரு பொறுப்புள்ள இளைஞன் மற்றும் இளைஞிக்கு வேண்டும்.

18 வயது பெண்ணும் 21 வயது பையனும் கல்லூரியில் பழகும்போது காதலில் ஈடுபட்டு கல்யாணம் செய்து கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த என்ன பொருளாதார வசதி இருக்கும்? என்ன உலக அனுபவம் இருக்கும்? இந்த நடைமுறை உண்மையைப் புரிந்து கொள்ளாமல் காதல் என்ற போர்வையைப் போர்த்துக்கொண்டு கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தோற்று விடுகிறது.

இந்த மாதிரி கல்யாணங்களில் சாதி வேறுபாடும் கலந்து விட்டால் அந்தக் காதலர்களின் வாழ்க்கை இன்னும் பிரச்சினைக் குரியதாகிறது. இந்தப் பிரச்சினையை ஒரு சமுதாயப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்கு மாற்று வழிகளாக ஏதாவது கருத்துகள்  மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் இந்தப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். இந்த நிகழ்வுகளுக்கு வெறும் சாதிச் சாயம் மட்டுமே பூசி சாதி வெறியை அதிகரிப்பதினால் யாருக்கு என்ன பயன்?

கல்யாணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் சமநிலையில் இருக்கவேண்டும். அதாவது அவர்கள் குடும்பம், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள் இத்தியாதி. இவை சமநிலையில் இருந்தால்தான் அவர்களின் திருமணம் வெற்றிகரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கலப்புத் திருமணங்களில் இந்த சம நிலை இருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே அவைகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை.

ஜாதி வெறி என்று சொல்வதினால் அது உடனே மறைந்து போகப் போவதில்லை. இதை அரசியலாக்குவதால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எந்த விடிவும் ஏற்படப்போவதில்லை. இந்த நிலை மாறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல காலங்கள் ஆகும். அதற்குள் கீழ் நிலையிலிருப்பவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு அவர்களுக்கு வழிகாட்டத் தகுந்த தலைவர்கள் வேண்டும். இதற்கெல்லாம் காலம் பிடிக்கும். அதற்குள் அவசரப்பட்டு கலப்புத் திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பல இன்னல்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.

நம் சமுதாயம் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அடையுமா, அடையாதா, அடையும் என்றால் எத்தனை காலம் பிடிக்கும் என்பதே ஒரு பெரிய கேள்விக் குறிதான்.

இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்ச்சியைத் தூண்ட வல்லது. ஆகவே இதைப்பற்றி எழுதும்போது மிகவும் கவனமாகத்தான் எழுதுகிறேன். நான் இந்தப் பதிவு எழுதுவதின் நோக்கமே ஒரு சமுதாய மாற்றத்திற்கான சிந்தனைகள் வளர வேண்டும் என்பதற்காகவே. அப்படியும் சிலர் என் மீது தனிப்பட்ட முறையில் கோபப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரச்சினையை விட்டு விட்டு தனி நபர் மீது கோபம் கொள்வது எந்த வகையிலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்கு உதவாது என்பதை உணர வேண்டும்.

13 கருத்துகள்:

  1. அட்சர லட்சம். பக்கத்து வீட்டிலும், திரையிலும் நடக்கும்போது கை தட்டி ஆதரிக்கும்னாம், நம் வீட்டில் நடக்கும்போதிடிந்து போவோம். மனித பலவீனம்.திரையில் காதலில் அவர்கள் இணைந்த உடன் "சுபம்" என்று போட்டு விடுவார்கள். அப்புறம் அவர்கள் அன்றாட வாழ்க்கைக்குப் படும் கஷ்டங்களைக் காட்டப் போவதில்லை. பாதி இளைஞர்களை சினிமா கெடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. எல்லோரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுவார்கள். ஆனால் சமூகம் என்ற போர்வையில் அவரவர் ஜாதிகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவைப் பொருத்தவரை இது மாற்ற முடியாதது.

    ஆகவே சாதிப்பேயை ஒழிப்போம் என்றெல்லாம் வீராப்பு பேசாமல் அந்த பேயை எப்படி நம்முடைய நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்று சிந்தித்து செயல் பட்டோமானால் நல்லது.

    வெளிநாடுகளில் காதல் திருமணங்கள் மட்டுமே நடைபெறுவதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமானவை மூன்று.

    1. மகன் அல்லது மகள் 18 வயது அடைந்ததுமே அவர்கள் சொந்தக்காலில் நிற்க பெற்றோர்கள் விட்டு விடுகிறார்கள். மகன்/மகள் அவ்வாறு உலக அனுபவம் பெற்று பக்குவம் அடைகிறார்கள். கல்வி போலும் அவர்களே கடன் வாங்கி அல்லது பகுதி நேர வேலை பார்த்து கற்கிறார்கள்.

    2. ஆன் பெண் வித்தியாசம் பாராமல் நண்பர்கள் ஆகும் இளைஞர்கள்/இளைஞிகள் நன்றாகப் புரிந்து கொண்ட பின்பே கல்யாணம் செய்கிறார்கள்.

    3. விவாக ரத்து என்பது எளிது ஆகையால் காதலித்துத் திருமணம் செய்தாலும் விவாக ரத்து செய்து விட்டு வேறு ஒருவரை விவாகம் செய்வது சாதாரணம் ஆகிறது.

    பதிவிட்டுப் புலம்புவதைத் தவிர உங்களாலும் என்னாலும் வேறு ஒன்றும் செய்யமுடியாது. காரணம் ஜாதி ஒழிப்பு போராட்டம் நடத்திய பெரியார் போன்றவர்களே தோற்று விட்டனர்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஐயா தங்களது கருத்தில் நான் உடன் படுகின்றேன் காதல் என்பது தாங்கள் சொல்வது போல பருவ வயதில் உணர்வுகளால் ஏற்படும் மோகம் மட்டுமே இதை கடக்காத மனிதர்களே இருக்க முடியாது ஏன் ? தாங்களும்கூட இதே விடயம் தங்களது 20 வது வயதில் தோன்றி இருக்குமா ? கண்டிப்பாக இருந்திருக்காது காரணம் என்ன ? பருவக்கோளாறு இன்று உலகை அறிந்த, சமூகத்தை அறிந்த அனுபவசாலி.

    எல்லோருமே காதலிப்பதற்கு முன் இதன் பின்விளைவுகள் என்ன ? என்பதைப்பற்றி கொஞ்ச நேரம் ஆராய்ந்து பார்த்தால் காதலிக்க பின் வாங்குவார்கள் என்பதே உண்மை இருப்பினும் காதலை அழிக்கவே முடியாது உலகம் தோன்றிய காலத்திலிருந்தே தோன்றியது காதல்.

    அருமையாக, பக்குவமாக கையாண்டு இருக்கின்றீர்கள்
    குறிப்பு – நானும் ஜாதி வெறியன் அல்ல
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய 23 வது வயதில் என் தகப்பனார் கூறியது. "நீ யாரை வேண்டுமானாலும் எந்த ஜாதியில் வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை." அதே வார்த்தையில் கடைசி வரை இருந்தார். என் கல்யாணச் செலவிற்கு கூட அவர் பணம் கொடுக்கவில்லை.

      ஆனால் அப்போதே நான் தெளிவாக இருந்தேன். நம் ஜாதியை விட்டு வேறு ஜாதியில் கல்யாணம் பண்ணினால் நமக்கு யாரும் உதவிக்கு வரமாட்டார்கள். நாம் எப்படியாவது வாழ்ந்து விடலாம். ஆனால் நமக்கு பிறக்கும் குழந்தைகள் கஷ்டப்படும். ஆகையால் நம் ஜாதியிலேயேதான் கல்யாணம் செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அப்படியே நடந்தேன். இன்று பிரச்சினை இல்லாமல் இருக்கிறேன்.

      நீக்கு
  4. கல்யாணம் நடக்குதோ இல்லையோ, காதலிப்பதில் தவறு இல்லை.

    காதலில் எப்போதுமே, யாருக்குமே, எந்த வயதிலுமே, எழுத்தில் எடுத்துரைக்க முடியாததொரு த்ரில் உண்டு. :)

    பதிலளிநீக்கு
  5. காதல் குறித்தும் திருமணங்கள் குறித்தும் உயர்வுதாழ்வுகள் குரித்தும் நிறையவே எழுதிவிட்டேன் சாதிகளின் நோக்கமே உயர்வு தாழ்வுக்கு உரமிடுவதுதான் என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  6. ஜாதிபார்த்து நடக்கும் திருமணங்களில் கூட சமநிலை பாதிக்கையில் வேறுபாடுகள் எழுந்து பிரிதலில் முடிகின்றது. உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை! உணர்ச்சிவசப்படுவதை விட உண்மையை உணர்ந்து நடப்பதே நன்மை! அருமையான கருத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. ஐயா! சாதிகள் இருக்கும் வரை காதல் திருமணங்கள் பிரச்சினையில் தான் கொண்டுபோய் விடும். அதுவும் பொருளாதார ஏற்ற தாழ்வு இருந்தால் சொல்லவே வேண்டாம். எனவே அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை விட்டுவிட்டு காதல் திருமணங்களால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி பரப்புரை செய்யலாம். திரு ஜெயக்குமார் அவர்கள் சொன்னதுபோல நம்மால் பதிவில் எழுதத்தான் முடியும். காலம் இதற்கு பதில் சொல்லும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  8. காதல் திருமணம், கலப்பு திருமணம் என்பதெல்லாம் அவரவர் தனிநபர் பிரச்சினை. இதில் பஞ்சாயத்து செய்பவர்கள்தான் பிரச்சினையை திசை திருப்பி பெரிதாக்கி விடுகிறார்கள். இங்கு நீங்கள் முன்பு ஒருமுறை எழுதிய கீழே உள்ள பின்னூட்டம்தான் (REF: ஜாதியும் கலப்பு மணங்களும் http://tthamizhelango.blogspot.com/2016/03/blog-post_15.html ) நினைவுக்கு வருகிறது.

    // ஒரு அடிப்படைச் செய்தி. மணமக்களில் ஒருவர் SC ஆக இருக்கும்போதுதான் பொதுவாகப் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் இருந்தால் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்று நினைக்கிறேன். //

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான். இதுதான் உண்மையும் கூட. வெளிநாட்டுப் பெண்ணை, பையன் காதலித்தால், தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தமிழ் முறைப்படி கெட்டிமேளம் முழங்க கல்யாணம் செய்து வைப்பார்கள். தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பவும் செய்வார்கள். அவர்களே பையனோ, பெண்ணோ எஸ்.சி என்றால் (பொருளாதார ரீதியா இருவரும் சமம் என்ற போதிலும் ) ஜாதியை முன்னிறுத்தி, குதி குதி என்று குதிப்பார்கள். காரணம் ‘மனிதனை மனிதனாக’ ஏற்றுக் கொள்ளாத சகிப்புத் தன்மை இன்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மாறலாம். எஸ்சி சமூகத்தினர் தங்கள் சமுதாய நிலையை மேம்படுத்தினால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தீவிரமாக இருக்காது. ஆனால் அந்த முன்னேற்றத்திற்கு அவர்களுடைய ஜாதித்தலைவர்களே எதிர்ப்பாக செயல்படுகிறார்க்ள. ஏனென்றால் அந்த மக்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால்தான் அந்தத் தலைவர்களுடைய பிழைப்பு நடக்கும். இது ஒரு முடிவில்லாத அரசியல் தந்திரம்.

      நீக்கு
  9. இந்த விஷயத்தில் எல்லோரும் வசனமும் நடக்காத கருத்துக்களையும்தான் சொல்வதாகத் தெரிகிறது. காதல் திருமணங்கள், பெரும்பாலும் ஜாதி பார்க்காத காஸ்மாபாலிடன் நகரங்களில்தான் சாத்தியம். நமக்கே தெரியும், நம் ஊர் ('நகரம்) காஸ்மாபாலிடனா இல்லை, ஜாதியில் ஊறியதா என்று. எங்கு சாதியின் தாக்கம் இருக்கிறதோ, அங்கு நம் வீரத்தைக் காட்டி காதல் திருமணத்தில் ஈடுபடுவதில் பயனில்லை. இதே ஆணும், பெண்ணும் வேலையில் இருந்து, மும்பையிலோ அல்லது அடுத்த தேசத்திலோ வாழும் பட்சத்தில், எந்தவிதப் பிரச்சனையும் இருக்காது. ஆனால், சாதியினால் சூழப்பட்ட தங்கள் சொந்தக் கிராமத்துக்கோ 'நகரத்துக்கோ திரும்பிச் செல்லும்போது நிச்சயம் பிரச்சனைதான். நடப்புகாலப் பிரச்சனைகளைப்பற்றி ஒன்றும் தெரியாமல், காதலில் இறங்குவது, கண்ணை மூடிக்கொண்டு வெள்ளத்தில் இறங்குவதுபோல்தான்.

    எல்லோரும், காதல் என்பது அவரவரது தனிப்பட்ட விஷயம் என்று சொல்வார்கள். உண்மை. ஆனால் இங்கு எல்லோரும் பெரும்பாலும் சாதிசார்ந்த சமுதாயத்தில் வாழ்கிறோம். By our deeds, we should not endanger the hormony of the society.

    நீங்கள் கூர்ந்துகவனித்திருந்தால், ஆண், இப்போதிருக்கும் நிலையில், தன் சாதியைவிட மேலடுக்கில் இருக்கும் ஜாதிப் பெண்ணை மணந்தால், அவனுக்குப் பிரச்சனை எழுவதில்லை. பிரச்சனை பெண்ணுக்குத்தான். ஆண், தனக்குக் கீழாக சமூகத்தில் இப்போது கருதப்படும் சாதியிலிருந்து பெண் எடுத்தால், அவனுடைய சமூகம் அதை ஒத்துக்கொள்வதில்லை, பிரச்சனை செய்கிறது. ஆனால், பெண் சமூகம் அதைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு விடுகிறது. இதன் அர்த்தம் என்ன? நம் சமூகம் சாதியினால், சாதீய உணர்வினால் சூழப்பட்டிருக்கிறது. அதனால், இருபாலாரும் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. பிரச்சனை காதல் திருமணத்தில் இல்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் சம்மத்த்தில்தான் அதன் சூச்சம்ம் உள்ளது. பெற்றோர்பார்த்து வைத்த திருமணமானாலும், காதல் திருமணமானாலும் இவர்கள் அரசியல் செய்ய ஆரம்பித்தால் பிரச்சனை உண்டாகி விவகாரத்தில் முடிகிறது. எல்லா தோல்வி திருமணங்களையும் கூர்ந்து ஆராய்ந்தால் நான் சொல்வது விளங்கும்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதோர் பகிர்வு. காதல் - திருமணம் - யோசித்துச் செய்யவேண்டிய விஷயமாக இருந்தாலும், யோசிக்கும் நிலையில் பலர் இருப்பதில்லை என்பது நிதர்சனம்.

    பதிலளிநீக்கு