வெள்ளி, 28 மே, 2010

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை - பாகம் 2


மறுநாள் காலையில் எழுந்த விக்கிரமாதித்தன் தேவலோக நந்தவனத்திற்குப் போய் மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், முதலான பூக்களைச் சேகரித்து, சில,பல நண்டு, நட்டுவாக்களி, தேள் ஆகிய விஷ ஜந்துக்களையும் சேகரித்து, அந்த விஷ ஜந்துக்களை உள்ளே வைத்து அந்த ஜந்துக்கள் வெளியே தெரியாதபடி மலர்களைக்கொண்டு இரண்டு செண்டுகள் தயாரித்தான்.

பிறகு விடுதிக்குச் சென்று காலைக்கடன்களை முடித்து, அந்த மலர்ச்செண்டுகளை எடுத்துக்கொண்டு, ஆடையாபரணலங்கிருதனாய் இந்திர சபைக்கு வந்தான். அப்போது இந்திரனும் வர, அவர்களிருவரும் பேசிக்கொண்டே சென்று அவரவர்கள் ஆசனத்தில் அமர்ந்தார்கள். அப்போது இந்திரன் விக்கிரமாதித்தனைப்பார்த்து நடனத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்க, விக்கிரமாதித்தனும் சம்மதித்தான். இந்திரன் சைகை காட்ட ரம்பையும் ஊர்வசியும் சபையினுள் புகுந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தங்கள் நடனத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் முன்னும் பின்னும் சுழன்றும், குனிந்தும், நிமிர்ந்தும், மான்களைப்போல் துள்ளிக்குதித்தும்  ஒருவருக்கொருவர் சளைக்காமலும், தாளம் தப்பாமலும் ஆடின நடனத்தைப்பார்த்த தேவர்களும், மற்றோர்களும், விக்கிரமாதித்தன் இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வி எவ்வாறு கண்டுபிடித்து சொல்வானோவென்று ஆச்சரியத்துடன் காத்திருந்தார்கள்.

அப்போது விக்கிரமாதித்தன் அந்த நடனமாதர் இருவரையும் அருகில் அழைத்து, நீங்கள் நடனம் ஆடும் சிறப்பு மிகவும் மேன்மையாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் வெறும் கையால் அபிநயம் பிடித்து ஆடுவதை விட இந்த மலர்ச்செண்டை கையில் பிடித்துக்கொண்டு ஆடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறி, அவன் கொண்டுபோயிருந்த மலர்ச்செண்டுகளை அவர்கள் கையில் கொடுத்தான். அவர்களும் ஆஹா, விக்கிரமாதித்த மகாராஜா நமது நடனத்தை மெச்சி பரிசாக இந்தமலர்ச் செண்டுகளைக் கொடுத்தார் என்று சந்தோஷப்பட்டு அந்த மலர்ச்செண்டுகளை கையில் பிடித்துக்கொண்டு இன்னும் உற்சாகத்துடன் நடனமாடினார்கள்.

இப்படி அவர்கள் நடனமாடியதில் ரம்பையானவள் அந்தப் பூச்செண்டை லாவகமாகவும், லேசாகவும் பிடித்துக்கொண்டு ஆடினாள். ஊர்வசியோ அந்த மலர்ச்செண்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அதனுள் இருந்த விஷ ஜந்துக்கள் அவள் விரலைத் தீண்ட, அவளுக்கு விஷம் ஏறி நடனத்தில் தாளம் தப்பி, தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அப்போது விக்கிரமாதித்தன் எழுந்து ரம்பையே போட்டியில் வென்றவள் என்று சபையோருக்கு அறிவித்தான். இந்திரன் முதலான சகல தேவர்களும் கைகொட்டி அதை ஆமோதித்தார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு விக்கிரமாதித்தன் இந்த வெற்றி தோல்வியினை எவ்வாறு கண்டுபிடித்தான் என்று தெரிந்துகொள்ள ஆவல். இதை தேவேந்திரனே விக்கிரமாதித்தனிடம் கேட்க, விக்கிரமாதித்தன் அந்த இரண்டு மலர்ச்செண்டுகளையும் கொண்டு வரச்செய்து அவைகளைப் பிரித்துக் காட்டினான். அவைகளுக்குள் இருந்த விஷ ஜந்துக்களை எல்லோரும் பார்த்தார்கள். விக்கிரமாதித்தன் சொன்னான், நான் இவ்வாறு மலர்ச்செண்டுகளை காலையில் தயார் செய்து கோண்டு வந்திருந்தேன். அவைகளை இந்த நடனமாதர்களின் கையில் கொடுத்து ஆடச்சொன்னதை யாவரும் பார்த்தீர்கள். ரம்பை இந்த மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக்கொண்டு ஆடியதால் இந்த விஷ ஜந்துக்கள் அவளை ஒன்றும் செய்யவில்லை. ஊர்வசியோ இந்த மலர்ச்செண்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அவளை இந்த விஷ ஜந்துக்கள் தீண்டி, அவள் தாளம் தப்பி ஆடினாள் என்று சொல்ல, எல்லோரும் விக்கிரமாதித்தனின் புத்தி சாதுர்யத்தை மெச்சிப் புகழ்ந்தார்கள். பிறகு சபை கலைந்தது.

தேவேந்திரன் கேட்டுக்கொண்டதினால் விக்கிரமாதித்தன் மேலும் சில தினங்கள் இந்திரலோகத்தில் தங்கினான். நான்கைந்து தினங்கள் சென்றபிறகு, விக்கிரமாதித்தன் தேவேந்திரனைப்பார்த்து, நான் என் நாட்டைவிட்டு வந்து பல தினங்கள் ஆகிவிட்டன. எல்லோரும் என்னை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள், ஆகவே எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்திரனும் அப்படியே ஆகட்டும் என்று கூறி, குபேரனைக்கூப்பிட்டு நமது பொக்கிஷசாலையில் இருக்கும் அந்த முப்பத்திரண்டு பதுமைகள் வைத்த ரத்தின சிம்மாசனத்தை எடுத்து வருமாறு பணித்தான். அவனும் அவ்வாறே அந்த சிம்மாசனத்தை சபையில் கொண்டு வந்து வைத்தான். அந்த சிம்மாசனமோ மிகுந்த வேலைப்பாட்டுடனும், விலைமதிக்க முடியாத நவரத்தினங்கள் பதித்து, முப்பத்திரண்டு படிகளுடனும், ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு பதுமையும் கூடி, கண்டோர் வியக்கும் வண்ணம் தேவலோக சிற்பி மயனால் இயற்றப்பட்டதாகும்.

தேவேந்திரன் விக்கிரமாதித்தனை பலவாறாகப் புகழ்ந்து, அந்த சிம்மாதனத்தை விக்கிரமாதித்தனுக்கு கொடுத்து, இந்த சிம்மாசனத்தை எங்கள் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, இந்த சிம்மாசனத்தில் நீ ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிவாயாக என்ற வரமும் கொடுத்தருளினான். கூடியிருந்த மற்ற தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் அவ்வாறே ஆகுக என்று வாழ்த்தினார்கள். பிறகு இந்திரன் மாதலியைக்கூப்பிட்டு, விக்கிரமாதித்த மகாராஜாவையும், இந்த சிம்மாசனத்தையும் அவருடைய நாட்டில் சேர்ப்பித்துவிட்டு வருவாயாக என்று பணித்தான். விக்கிரமாதித்தனும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு தேரில் ஏற, மாதலியும் சில நொடிகளில் விக்கிரமாதித்தனின் சபை முன்பு தேரைக் கொண்டு போய் நிறுத்தினான். ராஜா தேரிலிருந்து இறங்கிக்கொண்டு பணியாட்களைக் கூப்பிட்டு முப்பத்தியிரண்டு பதுமைகள் கூடிய சிம்மாசனத்தை இறக்கி ராஜசபையில் வைக்கச்சொல்லிவிட்டு, மாதலிக்கு விடை கொடுத்தனுப்பினான். அதற்குள் ராஜா வந்துவிட்ட சேதி தெரிந்து பட்டியும், மற்ற மந்திரி பிரதானிகளும் வாசலுக்கு வந்து ராஜாவிற்கு முகமன் கூறி வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துப் போனார்கள்.

எல்லோரும் அவரவர்கள் ஆசனங்களில் அமர்ந்தானபிறகு பட்டி எழுந்திருந்துதேவரீர் இங்கிருந்து தேவலோகம் சென்று திரும்பின வரையிலான செய்திகளைக்கேட்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம், ஆகவே அவற்றை தாங்கள் எடுத்துக்கூற வேண்டுகிறோம்என்று விக்ஞாபித்தான். விக்கிரமாதித்தனும் அவ்வாறே தான் தேவலோகம் சென்று ரம்பை ஊர்வசி நடனப்போட்டிக்கு தீர்ப்பு சொன்னது, தேவேந்திரன் ரத்தின சிம்மாசனம் கொடுத்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் கொடுத்து அனுப்பியது வரையிலான விருத்தாத்தங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்ட பட்டி, தேவரீருக்கு ஆயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்தீர்களே, எனக்கு ஏதாவது கேட்டு வாங்கி வந்தீர்களாவென்று கேட்க, பட்டி, உன்னை மறந்தேனே, என்ன செய்வது என்க, பட்டியும் போனால் போகிறது, விடுங்கள் என்று சொன்னான். அப்போது சூர்யாஸ்தமன நேரம் ஆகிவிட்டபடியால் சபை கலைந்து எல்லோரும் அவரவர்கள்  இருப்பிடங்களுக்குப் போய் சேர்ந்தார்கள்.

அன்று இரவு படுக்கப்போன பட்டிக்கு தூக்கம் வரவில்லை. நமது ராஜா இவ்வாறு தனக்கு மட்டும் ஆயுள் வாங்கிக்கொண்டு என்னை மறந்து வந்தாரே, நாம் இருவரும் ஆயுள் பரியந்தம் ஒன்றாக இருப்பதாக அம்மன்முன் சபதம் எடுத்தோமே, அது இப்போது வீணாய்ப்போய்விடும்போல் இருக்கிறதே என்று பலவாறாக யோசனை செய்து, எதற்கும் நமக்கு நம் மாகாளியம்மன் துணை இருக்கும்போது என்ன கவலை என்று உடனே புறப்பட்டு உச்சினிமாகாளியம்மன் கோவிலை அடைந்தான். அப்போது இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்ப சமயமானதால் அம்மன் நகர்வலம் போயிருந்தாள். சரி, அம்மன் வரட்டும் என்று பட்டி அம்மனைத் துதித்துக் கொண்டு அங்கேயே இருந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த அம்மன் பட்டியை அங்கே பார்த்து ஆச்சர்யப்பட்டு, ஏது பிள்ளாய் பட்டி, இந்த நேரத்தில் இங்கு விஜயம் என்று கேட்க, பட்டியும் அம்மனைப் பலவாறாகத் தோத்திரம் செய்து, அம்மா, நீயல்லவோ ஏழை பங்காளன், எனக்கு உன்னை விட்டால் யாரிருக்கிறார்கள், நீதான் எனக்கு அருள் புரியவேண்டும் என்று தோத்திரம் செய்ய, பட்டியும் விக்கிரமாதித்தன் இந்திரலோகம் சென்று வந்த விருத்தாத்தங்களயெல்லாம் கூறி அங்கு அவன் தனக்கு மட்டும் ஆயிரம் ஆண்டுகள் வரம் வாங்கிக்கொண்டு, தன்னை மறந்து விட்டு வந்ததையும் கூறினான்.

அப்போது அம்மன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, பட்டியும் விக்கிரமாதித்தன் தேவலோகத்துக்குப் போய் ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வாங்கி வந்திருக்கிறான், நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ வரம் கொடுக்க வேண்டுமென்று கேட்க, அம்மன் இது என்னால் முடியாத காரியம் ஆயிற்றே என்று சொல்ல, பட்டியும்அம்மா, உன்னால் முடியாத காரியமும் இந்த லோகத்தில் இருக்கிறதோ என்று பலவாறாக வேண்ட, அம்மன் ஏதாவது சால்ஜாப்பு சொல்லி இவனை அனுப்பிவிடலாம் என்றெண்ணி, அப்படியானால் நீ போய் விக்கிரமாதித்தனுடைய தலையை வெட்டிக்கொண்டு வந்தாயானால் உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னாள். பட்டி சரி, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, உடனே விக்கிரமாதித்தன் அரண்மனைக்குச்சென்று அவன் சயனமண்டபத்துக்குள் புகுந்து அவனை எழுப்பினான். எழுந்த விக்கிரமாதித்தன் பட்டியைப்பார்த்து ஏது பிள்ளாய் பட்டி, இன்னேரத்தில் இங்கு வந்த காரணம் என்னவென்று கேட்க, பட்டியும் தேவரீர் தலை ஒரு காரியமாய் அவசரமாகத் தேவைப்படுகிறது, அதற்காகத்தான் வந்தேன்என்றான். விக்கிரமாதித்தனும்சரி எடுத்துக்கொண்டு போஎன்று சொல்லி படுத்துக்கொண்டான்.

பட்டி உடனே உடைவாளை உருவி விக்கிரமாதித்தன் தலையை ஒரே வெட்டாக வெட்டி தலையை எடுத்துக்கொண்டு அம்மன் கோவிலுக்குச் சென்று தலையை அம்மன் காலடியில் வைத்தான். அம்மன் திடுக்கிட்டு, ஓஹோ, இனிமேல் இவனுக்கு சால்ஜாப்பு சொல்லக்கூடாது என்று முடிவு செய்து வாரும் பிள்ளாய் பட்டி, நான் சொன்ன காரியத்தை நீ செய்து முடித்துவிட்டபடியால் நீ கேட்ட இரண்டாயிரம் வருடம் ஆயுளைத் தந்தோம், சுகமாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தாள். கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்ட பட்டி அம்மனைப் பார்த்து கெக்கெக்கென பலமாகச் சிரித்தான். அம்மனுக்கு இவன் சிரித்த்தைப்பார்த்ததும் கோபம் வந்து யாது பிள்ளாய் நீ இப்போது சிரித்த காரணம் யாது, உடனே சொல்லக்கடவாய் என்று கேட்க பட்டியும் கூறலுற்றான். அம்மா தாயே இதோ இருக்கும் விக்கிரமாதித்தன் தேவலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மற்றுமுள்ள முனி சிரேஷ்டர்களும் கூடி ஆசீர்வதித்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் கொடுத்தனுப்பி இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் என் கையால் வெட்டப்பட்டு அவன் தலை உன் முன்னால் இருக்கிறது. அப்பேர்க்கொத்த வரத்திற்கே இந்த கதியென்றால் நீ கொடுத்த வரம் எத்தனை நாளைக்கு நிற்கப்போகிறதோ என்று நினைத்துச் சிரித்தேன் என்றான்.

அம்மனும் அவன் வார்த்தைச் சாதுர்யத்திற்கு மெச்சி, வாரும் பிள்ளாய் பட்டி, நீ அப்படி சந்தேகப்படவேண்டியதில்லை, என்னுடைய வரம் என்றென்றும் நிற்கும், நீ பயப்படவேண்டியதில்லை, ஆனாலும் உன்னுடைய வாக்குச் சாதுர்யத்தை மெச்சி, விக்கிரமாதித்தனையும் உயிரூட்டுகிறோம் என்று கூறி, இதோ தீர்த்தமும் பிரம்பும் தருகிறோம், நீ இந்த தலையை எடுத்துக்கொண்டு போய் விக்கிரமாதித்தன் உடம்பில் வைத்து தீர்த்தம் தெளித்து பிரம்பால் தட்டியெழுப்புவாயாகில் அவன் உயிருடன் எழுந்திருப்பான் என்று சொல்லி தீர்த்தமும் பிரம்பும் கொடுத்தனுப்பினாள். பட்டியும் அம்மனைப் பலவாறாகப் புகழ்ந்து தீர்த்த த்தையும் பிரம்பையும் வாங்கிக்கொண்டு, விக்கிரமாதித்தன் தலையையும் எடுத்துக்கொண்டு விக்கிரமாதித்தன் உடல் இருக்குமிடத்திற்கு வந்து தலையை உடலுடன் ஒட்டி வைத்து தீர்த்தத்தை தெளித்து பிரம்பால் தட்டி எழுப்பினான்

விக்கிரமாதித்தனும் தூக்கத்திலிருந்து எழுபவன் போல் எழுந்திருந்து, வாரும் பிள்ளாய் பட்டி, என் தலையை அவசரமாக இரவல் வாங்கிக்கொண்டு போன காரியம் என்னவென்று கேட்க, பட்டியும் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லி தான் அம்மனிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்தது வரை சொன்னான். அதைக்கேட்ட விக்கிரமாதித்தன் நல்ல காரியம் செய்தாய் பட்டி, ஆனால் ஒன்று, எனக்கு தேவேந்திரன் கொடுத்த ஆயுள் ஆயிரம் வருடம்தானே, நீ இப்போது அம்மனிடம் பெற்றுள்ள ஆயுள் இரண்டாயிரம் வருடம் ஆயிற்றே, இதற்கு என்ன செய்வது என்று கேட்க, பட்டி சொன்னான், தேவரீர் இந்திரனிடம் பெற்ற வரம், ஆயிரம் வருடங்கள் ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆட்சி புரிவதற்கல்லவா, நாம் ஒன்று செய்வோம், ஆறு மாதம் அரசாட்சி செய்த பிறகு ஆறு மாதம் காட்டுக்குச் சென்று வனவாசம் செய்வோம், அப்போது தேவரீருடைய ஆயளும் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிவிடும் என்று சொல்ல விக்கிரமாதித்தனும் பட்டியின் புத்தி சாதுர்யத்தை மெச்சி, ஆகா, பட்டி உன்னுடைய புத்தியே புத்தியென்று சொல்லி அவனைப்பாராட்டி, சரி, இரவு வெகு நேரம் ஆகிவிட்டது, நீ சென்று நித்திரை கொள் என்று அவனை வழியனுப்பிவிட்டு விக்கிரமாதித்தனும் நித்திரை போனான்

பட்டி விக்கிரமாதித்தன் தலையை இரவல் வாங்கின கதை முடிந்தது. சுபம்.

ஞாயிறு, 23 மே, 2010

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை - பாகம் 1

விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.

இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று. அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.

உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.

மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான். விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம்.

விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் அசராமல் வந்து கொண்டிருந்தான்.
இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்தனை தேரில் ஏற்றி ஆசனத்தில் உட்காரவைத்து, தேரை தேவேந்திரன் சபை வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். விக்கிரமாதித்தன் வருவதைப்பார்த்த தேவேந்திரன் முதலான தேவர்கள் சபையின் வாசலுக்கே வந்து ராஜனை வரவேற்று சபைக்குள் அழைத்துப்போய் தனக்கருகில் ஓர் ஆசனம் போடச்செய்து, தேவேந்திரனும், விக்கிரமாதித்தனும் உட்கார்ந்துகொண்டு பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது விக்கிரமாதித்தனும் தேவேந்தரனை நோக்கி, தேவேந்திரா, என்னை இங்கு அவசரமாய் அழைத்து வரச்சொன்ன காரணம் என்னவெனக்கேட்க, தேவேந்திரன் சொன்னான், அகோ வாரும் விக்கிரமாதித்தா, நமது இந்திர சபையில் வழமையாக நடனமாடும் நால்வரில் ரம்பை, ஊர்வசி ஆகியோருக்கிடையில் தங்கள் தங்கள் திறமையில் கர்வமுண்டாகி நான்தான் சிறந்தவள் என்று இருவரும் கூறிக்கொண்டு, தங்களில் யார் சிறந்தவள் என்று தீர்மானித்துக் கூறும்படியாய் என்னிடத்தில் வந்தார்கள். நானும் அவர்களது நடனத்தைப்பார்த்து யாருடைய நடனம் சிறந்தது என்று கூற முடியவில்லை. அப்போது நாரதர் உன்னுடைய வீரப்பிரதாபங்களையும், சகல கலைக்ஞானத்தைப்பற்றியும், நீதி தவறாத ஆட்சியைப்பற்றியும் கூறி, இந்த நடனமாதர்களின் சிறப்பை உன்னால்தான் கணித்துச்சொல்ல முடியும் என்று கூறியதால் அந்தக்காரியத்திற்காக உன்னை இங்கு வரவழைத்தோம் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் சரி, நாளைக்காலையில் அவர்கள் இருவரையும் இங்கு சபையில் நடனமாடச்சொல்லுங்கள், நான் எனக்குத்தெரிந்த வரையில் அவர்களின் ஆட்ட நுட்பத்தை அறிந்து சொல்கிறேன் என்று கூறினான்.

பிறகு இந்திரன் சில சேடிப்பெண்களைக் கூப்பிட்டு விக்கிரமாதித்த மகாராஜாவை அழைத்துப்போய் நமது அரண்மனையில் தங்க வைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்யுமாறு பணித்தான். அவ்வாறே பணிப்பெண்களும் விக்கிரமாதித்தனை அழைத்துப்போய் போஜனம் செய்வித்து அம்சதூளிமா மஞ்சத்தை தயார் செய்து அவனை சயனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு ஒரு புறமாய்ப் போய் இருந்தார்கள். விக்கிரமாதித்தனும் சிறிது நேரம் யோசனையாய் இருந்துவிட்டு நித்திரை போனான்.

நாமும் நித்திரை செய்து பிறகு மீதியைப் பார்ப்போமா?

செவ்வாய், 18 மே, 2010

பூனைத்தோல் கம்பெனி




பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரையை படித்தேன். இன்று ஒரு வலைத்தளத்தைப் பார்த்தவுடன் அந்தக்கட்டுரை நினைவுக்கு வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி (???!!!) அடைகிறேன்.

ஒரு நாள் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரம் வெளிவந்தது.

பூனைத்தோல் கம்பெனி.

ஒரு பங்கு ஒரு டாலர் மட்டுமே. உங்கள் பங்க்குகளுக்கு முந்துங்கள்.

நாங்கள் ஒரு புது கம்பெனி ஆரம்பித்திருக்கிறோம். அமெரிக்காவிலும் ஐரோப்பா கண்டத்திலும் தற்போது பூனைத்தோல் அங்கிகளும் அலங்காரப்பொருள்களும் மிக பிராபல்யமாக விற்பனையாகின்றன. ஆனால் அவைகளை போதுமான அளவில் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருளான பூனைத்தோல் கிடைப்பதில்லை. இந்தக்குறையை நீக்கும்பொருட்டு நாங்கள் ஒரு பூனைத்தோல் கம்பெனி ஆரம்பித்துள்ளோம்.

வருடத்திற்கு ஒரு கோடி (10 பில்லியன்) பூனைத்தோல் தேவைப்படுகின்றது. அதற்காக நாங்கள் ஒரு பூனைப்பண்ணை ஆரம்பிக்கப்போகிறோம். இந்தப்பண்ணையில் பதினொரு லட்சம் பூனைகள் வளர்க்கப்போகிறோம். இதில் ஒரு லட்சம் பூனைகள் ஆண் பூனைகள். மீதி பெண் பூனைகள். ஒரு பெண் பூனை 6 மாதத்தில் இரண்டு குட்டிகள் போடும். இதில் சராசரியாக ஒன்று ஆணும் ஒன்று பெண்ணாகவும் இருக்கும். தாய்பூனையும் குட்டிப்பூனையும் அடுத்த 6 மாதத்தில் 4 குட்டிகள் போடும். ஆகக்கூடி ஒரு பெண் பூனை ஒரு வருடத்தில் 7 பூனைகளாகப் பெருகி விடும். பத்து லட்சம் பூனைகள் அந்த வருட முடிவில் 70 லட்சம் பூனைகளாக பெருகிவிடும். 10 லட்சம் பெண் பூனைகளை வைத்துக்கொண்டு மீதி 60 லட்சம் பூனைகளைத்தோலுரித்து ஒரு தோல் 5 டாலர் என்று விற்றால் 300 லட்சம் டாலர் கிடைக்கும்.



பூனைகளுக்கு சாப்பாடு வேண்டுமல்லவா? அதற்காக பக்கத்திலேயே ஒரு எலிப்பண்ணை ஆரம்பிக்கப்படும். 5 கோடி எலிகள் வளர்க்கப்படும். எலிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 10 குட்டிகள் போடும். இவைகள் பூனைகளுக்கு தீனியாக போடப்படும்.

எலிகளுக்கு தீனி வேண்டுமல்லவா? அதற்காக பூனைகளின் தோலை உறித்தபிறகு இருக்கும் கழிவுகளை பதப்படுத்தி எலிகளுக்கு உணவாக கொடுக்கப்படும்.

இப்படியாக மிகக்குறைந்த செலவில் மிக அதிக லாபம் ஈட்டப்போகிறோம். அந்த லாபத்தில் 10 பர்சென்ட் மட்டும் கம்பெனி சிலவுகளுக்காக வைத்துக்கொண்டு மீதி லாபம் முழுவதும் பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். ஒரு பங்கின் விலை ஓரு டாலர் மட்டுமே. உங்கள் தேவைகளுக்கு முந்துங்கள். பதிவர்களுக்கு சலுகை வழங்கப்படும்.

இப்படியாக ஒரு விளம்பரம் வந்ததாக ஒரு கற்பனைக்கதை.

இதை மிஞ்சும் வகையில் இன்று ஒரு பதிவில் ஒரு விளம்பரம் பார்த்தேன். இதுவும் அமெரிக்க விளம்பரம்தான். அவருடைய பதிவில் இருக்கும் பிக்சல்களை விற்கிறாராம். ஒரு பிக்சல் ஒரு டாலர் மட்டுமே. ரொம்ப சலீசு. தேவைப்படுபவர்கள் சீக்கிரமே வாங்கிக்கொள்ள வேண்டுமாம். பிக்சல்கள் தீர்ந்துவிட்டால் பிறகு வருத்தப்படக்கூடாது. இந்ந விளம்பரத்தைப்பார்க்காதவர்கள் உடனே பார்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 12 மே, 2010

இன்றைய செய்தி-சென்னை பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைக்கு தினமலரில் வந்த செய்தி.

ஏழைகள் சொந்தமாக சொத்து வாங்குவதை ஊக்குவிக்க, 3,000 ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளை வாங்கும் போது, அந்த ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என, 1998ல் அரசு உத்தரவிட்டது. தற்போது நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால், 5,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும்.

ஆகவே சென்னையில் 5,000 ரூபாய்க்கு சொத்து வாங்க முடியும் என்று தெரிகிறது. பதிவுலக நண்பர்கள் அப்படி ஏதாவது சொத்து கிடைப்பதாயிருந்தால் உடனடியாக எனக்கு தகவல் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


சனி, 8 மே, 2010

கிளி ராஜாவான கதை.






விக்கிரமாதித்தனாகிய கிளி பட்டியுடன் ஊர் திரும்பியதை போன பதிவில் பார்த்தோம். பட்டி எப்படி கிளியை ராஜாவாக மாற்றினான் என்று பார்ப்போம்.

பட்டி ஊர் திரும்பியவுடன் அந்தப்புரத்திற்கு ஒரு செய்தி சொல்லியனுப்பினான். அதாவது அவர்கள் இருந்த விரதம் முடிந்து விட்டது என்றும் மகாராஜா இனி அந்தப்புரத்திற்குள் வருவதற்கு தடை இல்லையென்றும் ராஜாவிடத்தில் சொல்லிவிடுங்கள் என்பதுதான் அந்த செய்தி. அவர்களும் ஒஹோ, நமது ராஜனைப்பற்றி ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும், அதனால்தான் பட்டி இவ்வாறு சொல்லியிருக்கவேண்டும் என்று சந்தோஷப்பட்டு, அதே மாதிரி (கம்மாள) ராஜாவுக்கும் தோழிகள் மூலமாக சொல்லியனுப்பினார்கள்.

கம்மாளனும் ஆஹா, நம் நீண்டநாள் அபிலாட்சை நிறைவேறப்போகிறது என்று சந்தோஷத்துடன் ஆடைஆபரண அலங்கிருதனாய் அந்தப்புறம் நோக்கி வந்தான். அந்தப்புறம் வருவதற்கு சற்று முன்பாக சில தோழிகள் ராஜாவிடம் வந்துஇந்த மாதிரி விரதம் முடிந்து ராஜா அந்தப்புரம் வருமுன் ஒரு ஆட்டுக்கிடா சண்டை வைப்பது வழக்கம், அதில் ஒன்று ராஜாவின் கிடா என்றும், மற்றொன்று ராணிகளின் கிடா என்றும் வைத்துக்கொண்டு கிடாக்களை சண்டைக்கு விடுவோம், அதில் ராஜா கிடா ஜெயித்தால்தான் ராஜா அந்தப்புரம் வரலாம்என்று சொன்னார்கள். ராஜாவும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்லி பட்டியிடம் கிடாச்சண்டைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னான். பட்டி ஏற்கெனவே தயாராக இருந்த இரண்டு கிடாக்களை கொண்டுவந்து சண்டைக்கு விடச்சொன்னான். பட்டி அதில் தாட்டியான கிடாவை ராணிகளின் கிடா என்றும் கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் கிடாவை ராஜா கிடா என்றும் அறிவித்தான்.


இரண்டு கிடாக்களும் வீரமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதி சண்டை போட்டன. அவைகளில் ராஜா கிடா நோஞ்சானாக இருந்தபடியால் அதை ராணிகளின் கிடா முட்டி மோதி கொன்றுவிட்டது. இதைப்பார்த்த ராஜா, ஆஹா, நம் கிடா செத்துவிட்டதா என்று ஆக்ரோஷமாய் தன்னுயிரை கிடாவின் உடம்பில் புகுத்தி, கிடாவை எழுப்பி திரும்பவும் ராணிகளின் கிடாவுடன் சண்டை போடப்போனான். இதைப்பார்த்துக்கொண்டிருந்த பட்டி ஆஹா, நாம் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று உடனே விக்கிரமாதித்தனாகிய கிளியைக்கொண்டு வந்து ராஜாவின் உடம்பின் அருகில் விட்டான். விக்கிரமாதித்தனும் உடனே கிளியின் உடம்பை விட்டு தன் உடலில் பிரவேசித்தான். பட்டி உடனே மல்லர்களை விட்டு கம்மாளன் பிரவேசித்த கிடாவைப்பிடித்து கொன்றுவிடச்சொன்னான். மல்லர்களும் அவ்வாறே செய்ய கம்மாளனின் உயிர் ஒன்றுக்குமுதவாமல் போய்விட்டது.


உடனே பட்டி எல்லோருக்கும் நமது விக்கிரமாதித்த ராஜா வந்துவிட்டார் என்று பிரகடனம் செய்து அது நாள் வரைக்கும் நடந்த விருத்தாந்தங்களை எல்லோருக்கும் சொன்னான். சகல ஜனங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, இந்த வைபவத்தை நாடெங்கிலும் கொண்டாடினார்கள்.

பட்டி விக்கிரமாதித்தன் தலையை இரவல் கேட்ட கதையை அடுத்த பதிவில் பார்க்கலாமா?

திங்கள், 3 மே, 2010

காய்ச்சலும் அப்பாவின் வரவும்





டாக்டரைப்பார்த்துவிட்டு வந்து ரூமில் படுத்துக்கொண்டேன். படுக்கும்போது சுமார் 10 மணி இருக்கும். தூங்கி விட்டேன். 12 மணி சமயத்தில் ஆபீஸ் பியூன் வந்து, சார், சார் என்று என்னை எழுப்பினான். விழித்துப்பார்த்தால் எதிரில் என்னுடைய அப்பா. கூடவே என்னுடைய அத்தை மாமாவும். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பா சொன்னார், அவருக்கு என்னமோ ராத்திரி திடீரென்று மகனைப்பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அவருக்கு லீவு. காலையில் எழுந்து பொள்ளாச்சி வந்து என் அத்தை மாமாவையும் கூட்டிக்கொண்டு ஆனைமலை வந்து நான் தங்கியிருக்கும் இடத்தை விசாரித்து வந்து விட்டார்கள். நானோ இப்படி படுத்திருப்பதைப் பார்த்தவுடன் அவர்களுக்கும் அதிர்ச்சி. பரஸ்பரம் விசாரிப்புகளுக்குப் பின் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தோம்.

என்னுடைய ஆபீசரும் லீவில் இருப்பதால் நான் உடனே கிளம்ப முடியாது. கோயமுத்தூரில்தான் அவருக்கும் பெரிய ஆபீசர் இருக்கிறார். அவருக்கு ஆள் அனுப்பி லீவு சேங்க்ஷன் ஆன பிறகுதான் நான் ஊரைவிட்டு கிளம்ப முடியும். அதற்கு எப்படியும் இரண்டு நாள் ஆகிவிடும். இந்த விவரங்களை நான் சொன்னவுடன் அப்பா ஒரு முடிவு செய்தார். அதாவது அவர் ஆருக்குத்திரும்பிப்போய் என்னுடைய பாட்டியை எனக்குத்துணைக்காக அனுப்புவதாகவும், நான் லீவு கிடைத்தவுடன் பாட்டியுடன் கோயமுத்தூர் வருவதாகவும் முடிவு செய்தோம்.

அப்படியே என் அப்பா திரும்பிப்போய் மறுநாள் என் பாட்டியை என் சித்தப்பா கூட்டுக்கொண்டு வந்தார். பாட்டி கெட்டிக்காரி. எப்படியோ அங்கும் இங்கும் அலைந்து எனக்கு கஞ்சி வைக்கவேண்டிய சாதனங்களை தேடி எனக்கு கஞ்சி வைத்துக்கொடுத்தார்கள். தனக்கும் சாப்பாடு செய்து கொண்டார்கள். நான் ஆபீஸ் பியூனை கோயமுத்தூருக்கு அனுப்பி, லீவு கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவர் ஒரு நாளில் லீவு சேங்க்ஷன் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். மறுநாள் ஆபீஸ் பொறுப்புகளையெல்லாம் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ரேட்டரிடம் கொடுத்துவிட்டு ஊருக்குப்புறப்பட்டேன்.

இந்த இரண்டு மூன்று நாளில் என்னுடைய உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது. என்னுடைய சித்தப்பா பொள்ளாச்சி சென்று ஒரு டாக்சி பிடித்துவந்தார். டாக்சியில் புறப்பட்டு கோயமுத்தூர் வந்து சேர்ந்தேன்.

எங்களுக்கு என்று ஒரு குடும்ப டாக்டர் அப்போது உண்டு. அவரிடம்தான் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வைத்தியம் செய்து கொள்வோம். அவர் வீட்டில் கன்சல்டிங்க் ரூமில் ஆளுயர அலமாரிகள் இரண்டு இருக்கும். அவைகளில் நூற்றுக்கணக்கான பாட்டில்களில் விதவிதமான கலர்களில் பல மருந்துகள் இருக்கும். நாங்கள் வைத்தியத்திற்கு போனால், கையைப்பிடித்து பார்த்துவிட்டு அலமாரியில் இருக்கும் நாலைந்து பாட்டில்களில் இருந்து கொஞ்சகொஞ்சம் மருந்துகளை ஒரு அளவுகுப்பியில் ஊற்றி கலக்கி, நாங்கள் கொண்டு போயிருக்கும் பாட்டிலில் ஊற்றுவார். பிறகு விரல் அகல காகிதம் ஒன்றை எடுத்து நீளவாக்கில் மடித்து கத்தரிக்கோலால் அளவுகள் வெட்டுவார். அதை பாட்டிலின் மேல் ஒட்டி இந்த மருந்தை இந்த ஆளவு பிரகாரம் இரண்டு நாள் சப்பிட்டுவிட்டு வருமாறு கூறுவார். அந்த மருந்து ஆறு வேளைக்கு வரும். எந்த நோயாக இருந்தாலும் அந்த ஆறு வேளை மருந்திலேயே சரியாகிவிடும்.

இவருக்கு பீஸ் உடனடியாகக் கொடுப்பதில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து பில் அனுப்புவார். பில் எவ்வளவு இருக்கும் தெரியுமா, ஐந்து ரூபாய் அல்லது ஆறு ரூபாய் என்றிருக்கும். இதை உடனடியாக கொடுக்க வீட்டில் முடியாமலிருக்கும். எங்கள் வீட்டில் நாலைந்து தென்னை மரங்கள் உண்டு. அவை நன்றாக காய்த்துக்கொண்டிருந்தன. ஒரு மாதம் கழித்து டாக்டர் வீட்டிலிருந்து வேலையாள் வருவான். அம்மா தேங்காய் இருந்தால் வாங்கிக்கொண்டு வரச்சொன்னார்கள் என்பான். எங்க அம்மாவும் பத்து தேங்காய்களை சாக்கில் போட்டுக்கட்டி அவனிடம் கொடுத்தனுப்புவார்கள். அதுதான் நாங்கள் டாக்டருக்கு பில் செட்டில் செய்யும் முறை.

இந்த டாக்டர் எங்கள் வீட்டில் யாருக்காவது ரொம்பவும் முடியாமலிருந்தால் வீட்டுக்கே வருவார். வந்து பார்த்துவிட்டு போகும்போது நாராவது கூடவே டாக்டர் வீட்டுக்குப்போய் மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். அப்போதெல்லாம் கோயமுத்தூரில் மருந்துக்கடைகளே அபூர்வம். மொத்தமாகவே மூன்று நான்கு மருந்துக்கடைகள்தான் உண்டு. டாக்டர்களும் மொத்தமாகவே ஒரு பத்து பேர்களுக்குள்தான் இருந்தார்கள். ஏதாவது பெரிய நோய் என்றால் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் (கவர்மெண்ட் ஆஸ்பத்திரி) கொண்டு போகவேண்டும். ஒருவரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னால் ஏறக்குறைய அவர் கதை முடிந்துவிட்டது என்று எல்லாரும் பேசிக்கொள்வார்கள். அங்கு போய் நோய் தீர்ந்து வீடு திரும்பினால் பெரிய அதிர்ஷ்டசாலி என்று பொருள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்கள் குடும்ப டாக்டர் என்னை வந்து பார்த்துவிட்டு இது டைபாய்டு ஜுரம், கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லி வைத்தியம் செய்தார். எப்படியோ என்னுடைய ஆயுள் கெட்டியாக இருந்தது. நான் பிழைத்து எழுவதற்கு இரண்டு மாதம் ஆகியது. அதற்குப்பிறகுதான் நான் வேலைக்கு சென்றேன்.

இந்த இரண்டு மாத இடைவெளியில் விக்கிரமாதித்தனை கிளியிலிருந்து ராஜாவாக மாற்றுவோமா?