சனி, 16 அக்டோபர், 2010

பல்மொனெரி எம்பாலிசம் (Pulmonary Embolism)



டாக்டர்களைத்தவிர
மற்றவர்கள் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பது சந்தேகம். இது ஒரு அபூர்வமாக வரும் ஒரு நோய். நோய் என்று சொல்வது கூடத் தவறு. ஒரு மருத்துவச்சிக்கல் என்றுதான் கூறவேண்டும்.

கெண்டைக்காலில் ஏதாவது அடிபட்டு இருந்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உண்டு. அபூர்வமானது என்றாலும் இதைப்பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் தேவை. கருவுற்று இருக்கும் பெண்மணிகளுக்கும் பிரசவத்திற்கு முன்போ, பின்போ இந்த சிக்கல் வரும் வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

என் நண்பர் ஒருவரின் மாப்பிள்ளை போன வாரம் ஒரு நாள் தன் மனைவியுடன் ஸ்கூட்டரில் போகும்போது குறுக்கே ஒரு கார் எதிர்பாராமல் வந்ததால் சடன்பிரேக் போட்டு சறுக்கி விழுந்து விட்டார். சாதாரணமாக ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி விபத்து ஏற்பட்டிருக்கும். நண்பரின் மாப்பிள்ளை பக்கத்திலுள்ள ஒரு பெரிய தனியார் ஆஸபத்திரிக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கெண்டைக்காலின் எலும்பில் சின்னதாக இருக்கும் பிஃபியாஎன்ற எலும்பில் ஒரு லேசான கீறல். அதற்கு கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவருடைய மனைவிக்கு சாதாரண, லேசான காயங்கள் மட்டும்தான். அதற்கும் மருந்து போட்டு அனுப்பி விட்டார்கள்.

அடுத்த நாள் நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். மனுஷன் நன்றாக உற்சாகமாக இருந்தார். ஒரு மாதம் என்னைப் படுக்க வைத்து விட்டார்கள் என்று தமாசு பண்ணினார். மூன்றாவது நாள் காலையில் திடீரென்று மயக்கம் போட்டுவிட்டார் பேச்சுமூச்சு இல்லை. நாடித்துடிப்பு நின்று விட்டது. கைகால்கள் சில்லென்று ஆகிவிட்டன. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உடனே பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸப்த்திரிக்குப் போனார்கள். இதற்கு ஏறக்குறைய அரை மணி நேரம் ஆகி விட்டது.

எமர்ஜென்சி வார்டுக்குப் போனவுடன் ட்ரீட்மென்ட் கொடுத்து இருதயத்தை துடிக்க வைத்து விட்டார்கள். அதுவே பெரிய சாதனை. அரை மணிநேரம் இயங்காமல் இருந்த இருதயம் இயங்க ஆரம்பித்தவுடன் நுரையீரலுக்கும் வென்டிலேட்டர் என்ற ஒரு மிஷினைப் பொருத்தி நுரையீரலையும் ஒழுங்குபடுத்தினார்கள். இருதயம் தொடர்ந்து வேலை செய்ய பலவிதமான ஊசிகள். நுரையீரல் வேலை செய்ய மிஷின். மூளையை இயங்கச்செய்ய பலவித ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால் மூளை தனியாக இயங்கவில்லை. ஏனென்றால் மூளை இயங்கினால் நுரையீரல் தானே இயங்கவேண்டும். அது நடக்காததால் மூளை இயக்கம் இன்னும் வரவில்லை என்று டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.

இது ஒரு சிக்கலான சூழ்நிலை. பணம் தண்ணீராக செலவாகிறது. மனுஷன் எப்போது சுய நினைவுக்கு வருவார் என்று சொல்லமுடியாத நிலை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.

கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

திங்கள், 11 அக்டோபர், 2010

பத்ரிநாதரின் முதல் தரிசனம்



ரூமில் காப்பி வைத்துக் குடித்தவுடன் நேரம் இருந்ததால் கோவிலுக்குச் சென்றுவரலாம் என்று புறப்பட்டோம். நாங்கள் தங்குமிடத்திலிருந்து கோவில் சுமார் அரைக் கிலோ தூரம்தான் இருக்கும். நடந்தே போகலாம் என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம். மாலை ஐந்தரை மணிதான் இருக்கும். ஆனால் குளிர் நடுங்க வைத்தது. பக்கம்தானே, சீக்கிரம் போய்வந்து விடலாம் என்று போனோம். கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு நதி ஓடுகின்றது. மந்தாகினி என்று பெயர். கங்கை நதியின் ஒரு உபநதி.

கோவில் பார்ப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை. நல்ல பெயின்ட் அடித்திருந்தார்கள். தமிழ் நாட்டு சிறபக்கலை சில இடங்களில் தெரிந்தது. கோவில் ஒரு மலைச்சரிவில் அமைத்திருக்கிறார்கள். ஆகவே நிறைய படிகள் ஏற வேண்டியிருந்தது. கோவிலில் அதிகமாகக் கூட்டம் இல்லை. உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தோம். மொத்தம் ஐந்து சாமிகள் இருந்தன. நடுவில் பத்ரிநாதர். ஒரு புரம் லக்ஷ்மி, இன்னொரு புரம் கிருஷ்ணர், அப்புறம் மற்ற இரண்டு சாமிகளயும் அடையாளம் தெரியவில்லை. நம் ஊர் மாதிரி பூஜைகள் காணோம். எல்லா சாமிகளையும் ஜிகு ஜிகுவென்று கலர் ஜிகினாத் துணிகளினால் அலங்கரித்திருந்தார்கள். ஒரு ஐந்து நிமிடம் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தோம்.

நேரம் ஆக ஆக குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கதல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 12000 அடி உயரத்தில் பத்ரிநாத் இருப்பதால் காற்றின் அழுத்தம் குறைவு. அதனால் உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காத்தால் உடல் சோர்வும் மூச்சுத்திணறலும் உண்டாகின்றன. என் தங்கைக்கு நடக்க முடியவில்லை என்று உட்கார்ந்து விட்டாள். இரண்டு பேர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கூட்டிவந்து சூடாக ஒரு டீ வாங்கி குடிக்க வைத்த பின்பே அவளால் ஓரளவிற்கு நடக்க முடிந்தது. ஆஸ்த்மா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பத்ரிநாத் போனால் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். வாங்கி வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதை எவ்வாறு உபயோகிப்பது என்றும் கடைக்காரர்களிடமே கேட்டுத்தெரிந்து கொள்வதும் அவசியம்.


லாட்ஜுக்கு முன்பாக இருந்த ஒரு ஓட்டலில் ஆளுக்கு ஒரு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு ரூமுக்குப்போய் ரஜாயைப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டோம். ரஜாயைப் போர்த்திக் கொண்டதால் குளிர் தெரியவில்லை.

தொடரும்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

என் பிளாக்குக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள்?

என்னுடைய பிளாக்கில்  Add Images Gadget  வேலை செய்ய மாட்டேன் என்கிறது. போட்டோக்களை எப்படி போடுவது என்று தெரியவில்லை. யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். யாராவது இந்த சூன்யத்தை எடுப்பதற்கு தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்.

தமிழ் மணம், இன்ட்லி ஆகிய இரண்டு ஒட்டுப்பட்டைகளையும் காணோம்?

குடி முழுகிவிட்டது????

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

உங்களுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு !





இன்று காலையில் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் யாரு, யாருக்காக இந்த அறிவிப்பை ஒலிபரப்புகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தேன். என் மனைவிதான் நின்றுகொண்டிருந்தார்கள். (எதுக்கும் கொஞ்சம் மரியாதையாகவே இருப்போம் - எதிரணியின் உத்தி என்னவென்று தெரியவில்லையே).
என்ன, யாருக்கு இந்த அர்ச்சனை என்று கேட்டேன்.
எல்லாம் உங்களுக்குத்தான், என்றார்கள்.
ஏன், என்ன ஆச்சு, எனக்கு எதுக்காக இப்போ இந்தப் பட்டம்?
ஆமா, நானும் அரை மணி நேரமா டிபன் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன், உங்க காதிலேயே விழல்ல, அந்தக் கம்ப்யூட்டர்ல அப்படி என்ன இருக்கு, அதயே எப்பப் பார்த்தாலும் பயித்தியம் மாதிரி பார்த்துட்டே இருக்கீங்க, அதனாலதான் அந்தப் பட்டம் என்றார்கள்.
பதில் பேசாமல் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து ஒரு சுய பரிசோதனை செய்தேன்.
பயித்தியம், கிறுக்கு, பிராந்து, மென்டல், கீழ்ப்பாக்கம், லூஸு என்று பல சொற்களால் அழைக்கப்படும் ஒரு மனிதனுடைய (இது, அது என்றுதான் குறிப்பிடப்படுவதால் அந்த மனிதன் அஃறிணை லெவலுக்கு தள்ளப்படுகிறான்) குணங்கள் என்னென்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்தேன். {என்ன இருந்தாலும் நான் ஒரு ஆராய்ச்சியாளனல்லவா}. அந்த ஆராய்ச்சியில் கண்டு பிடித்தவை.
1. பைத்தியம் எப்போதும் ஒரு வேலையையே திரும்பத் திரும்ப செய்யும்.

ஆமாம், நானும் எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டிக் கொண்டிருக்கிறேன்.

2. பைத்தியம், ஏதாவது ஒன்றையே முறைத்துப்பார்த்துக்கொண்டே இருக்கும்.
ஆமாம், நானும் எப்பொழுதும் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
3. பைத்தியத்திற்கு சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இருக்காது.

ஆமாம், என்ன நடந்தாலும், யார் வந்தாலோ, போனாலோ எனக்குத் தெரிவதில்லை.

4. பசி, தாகம் என்ற உணர்வுகள் இருக்காது.
ஆமாம், சாப்பிடவேண்டும் என்றே தோணுவதில்லை.
5. யாராவது கூப்பிட்டால் காது கேட்காது.
கரெக்ட், கூப்பிட்டா காது கேட்பதில்லை.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் ஒரு பைத்தியம்தான் என்ற முடிவுக்கு வந்தேன். மனைவியைக் கூப்பிட்டு, ஆமாம், நீ சொன்னது சரிதான் போல இருக்குது என்றேன்.
எது சரியாய் இருக்கு என்றாள்.
அதுதான், நீ சொன்னது போல் எனக்குப் பைத்தியம்தான் போல இருக்கு என்றேன்.
சரிதான், இப்பத்தான் உங்களுக்கு பைத்தியம் முத்திக்கொண்டு வருகிறது என்றாள்.
இனி மேற்கொண்டு இவளிடம் பேசினால் வம்பு வந்துவிடும் என்று பேசாமல் இருந்தேன்.
என் மகள் வந்தவுடன் (அவள் ஒரு கைனகாலஜிஸ்ட்) யாராவது ஒரு பைத்தியக்கார டாக்டர் பக்கத்துல இருக்காங்களா என்று விசாரித்தேன்.
அப்படி பைத்தியக்கார டாக்டர் யாரும் கிடையாது, பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ற டாக்டர்தான் இருக்கிறாரு, சரி, யாருக்கு இப்போ பைத்தியம் என்று கேட்டாள்.
எனக்குத்தான் என்றேன்.
யாரு சொன்னா என்றாள்.
உங்கம்மாதான் சொன்னாள், எனக்குப் பைத்தியம் என்று, அப்படீன்னேன்.
பைத்தியம் யாரும் தனக்குப் பைத்தியம்னு சொல்லமாட்டாங்களே, இது என்ன புது குழப்பம் என்று அவங்கம்மாவைக் கூப்பிட்டு விசாரித்தாள்.
விசாரணை முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்னவென்றால் நான் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்தான் கம்ப்யூட்டர் பார்க்கலாம். அதற்கு மேல் பார்த்தால் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்படும்.
இந்த தீர்ப்புக்கு அப்பீல் செய்ய முடியுமா?
ஆகவே, என் பெருமதிப்பிற்குரிய பதிவுலக நண்பர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் :-
1. இனி என் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் வரும்.
2. அப்படி வரும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினை போடுவது தாமதமாகும்.
3. அப்படிப்பின்னூட்டம் போட்டவர்களின் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது இன்னும் தாமதமாகும்.
4. அது போக புதிதாக மற்றவர் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் போடுவது மேலும் தாமதமாகும்.
என்னுடைய கைகளுக்கு மீறி சுற்றுப்புற சுழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட்டதால் நிலைமைகள் சீராகும் வரை இந்த நிலையே தொடரும் என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் வழக்கம்போல் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
என்னுடைய இந்த முடிவுகளினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது. கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பார்வை மங்குகிறது. இவைதான் உண்மையான காரணங்கள். பதிவுகள் தொடரும்.)