வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கேதார்-பத்ரி யாத்திரை - 3 விமான பயணமும் சாதாரண குடிமகனும்.


கேதார்-பத்ரி யாத்திரை – 3
விமான பயணமும் சாதாரண குடிமகனும்.

(தப்பா எடுத்துக்காதீங்க, குடிமகன் = Ordinary Citizen, இப்பெல்லாம் செந்தமிழ்ல சொன்னாத்தான் ரொம்ப பேருக்கு புரியுது)



முந்தி பிந்தி ஏரோப்பிளேன்ல போகாதவங்களுக்கு விமான நிலைய வாசல்ல போயி இறங்கினவுடனே தலையும் புரியாது, காலும் புரியாது. இது சகஜம். ரெண்டு தடவ போய்ட்டு வந்தாச்சுன்னா, அப்புறம் ஏரோப்பிளேன்லயே பொறந்து வளர்ந்தா மாதிரிதான் பேச்சு வரும்.
டாக்சிக்காரன் ஏர்போர்ட் வாசலுக்கு கொஞ்ச தூரத்திலயே இறக்கி உட்டுட்டு சார்ஜை வாங்கிட்டுப் போய்டுவான். நீங்க திருதிருன்னு முளிச்சுட்டு நிக்கப்படாது. நாலு பக்கமும் சுத்தி ஒரு லுக் உடுங்க. உங்களை யாரும் பாக்கமாட்டாங்க. எல்லோரும் அவங்கவங்க வேலைலதான் கவனமாயிருப்பாங்க. அதனால வெக்கப்படாதீங்க. மொதல்ல உள்ள போறதுக்கு வாசல் எங்க இருக்குன்னு கண்டு பிடிங்க. எல்லாப்பயலும் சாமான்களையெல்லாம் ஒரு தள்ளு வண்டியில வச்சுட்டு ஒரு பக்கமாப்போய்ட்டு இருப்பானுங்க. அதுதான் வாசல். நீங்களும் அந்த மாதிரி ஒரு தள்ளு வண்டியப் புடிங்க. அங்கதான் பக்கத்துல எங்காச்சும் இருக்கும். அதுக்கு ஒண்ணும் காசு கொடுக்கவேண்டாம். ஒருத்தன் கிட்டயும் கேக்கவும் வேண்டாம்.

உங்க சாமான்களையெல்லாம் தள்ளுவண்டியில ஏத்தி தள்ளீட்டே ஏர் போர்ட் வாசலுக்குப் போங்க. உங்க டிக்கட், அடையாளச்சீட்டு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா கையில வச்சுக்குங்க. அங்க வாசல்ல செக்யூரிடி அதைச் செக் பண்ணீட்டுத்தான் உள்ள உடுவான். உள்ள போனவுடனே நீங்க பறக்க வேண்டிய பிளேன் கம்பெனிக்காரங்க உங்களைப் பிடிச்சுவாங்க. உங்களை செக்இன் கவுன்ட்டருக்கு கூட்டிட்டுப்போவாங்க. அங்க உங்க ஏரோப்பிளேன்னுக்குள்ள போடற லக்கேஜ்களை மட்டும், அங்க வச்சிருக்கிற எடை மேடைல வச்சிருங்க. அவங்க லக்கேஜ் எடை, லிமிட்டுக்குள்ள இருக்கான்னு பாத்துட்டு ஒவ்வொரு லக்கேஜுக்கும் ஒவ்வொரு சீட்டுப்போட்டு, அதில ஒரு பாதியை லக்கேஜுல கட்டீடுவாங்க. மீதி பாதிய உங்களுக்கு கொடுக்கப்போற போர்டிங்க் பாஸுல ஒட்டிக்குடுப்பாங்க. உங்க டிக்கட்டப் பார்த்து உங்களுக்கு சீட் நெம்பர் கொடுத்து ஒரு சீட்டு கொடுப்பாங்க. அதைத்தான் போர்டிங்க் பாஸ்னு சொல்லுவாங்க.

அதை வாங்கிட்டு செக்யூரிட்டி செக்கப்புக்கு போகணும். நீங்க ஏரோப்பிளேனுக்குள்ள கொண்டு போற பைகளை கையில எடுத்துட்டு இந்த செக்யூரிடி கேட்டுக்குப் போகணும். இங்க உங்க பைகளை வாங்கி ஸ்கேன் மெஷினுக்குள்ள அனுப்பீடுவாங்க. உங்களை செக்யூரிடி ஸ்கேன் வாசல் வழியா வரச்சொல்லுவாங்க. நீங்க எதாச்சும் வெடிகுண்டு எடுத்துட்டுப் போனீங்கன்னா இந்த மெஷின் காச்சுமூச்சுன்னு சத்தம் போடும். அதக்கேட்டவுடனே செக்யூரிடி ஆளுங்க உங்களைத் தனியா தள்ளீட்டுப்போய் தனியாக் கவனிப்பாங்க. அப்படி வெடிகுண்டு ஒண்ணும் கொண்டு போகலீன்னா அந்த மெஷின் பேசாம சாதுவா இருக்கும். அப்புறமும் போலீஸ்காரன் (காரி) உங்களைத்தடவிப்பார்த்துட்டு அப்புறம்தான் அனுப்புவான். அதத்தாண்டி அந்தப்பக்கம் போனீங்கன்னா உங்க கைப்பை ஸகேன் ஆகி வந்திருக்கும். அதிலயும் வெடிகுண்டு இல்லைன்னா அத எடுத்துக்கிட்டு போயி அங்க இருக்கற சேர்கள்ள உக்காந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

நீங்க போகப்போகிற ஏரோப்பிளேன் எங்கிருந்தாவது வந்து அப்புறம் நீங்க போகவேண்டிய ஊருக்குப் புறப்படும். மைக்குல இதயெல்லாம் சொல்லுவாங்க. கவனமா கேட்டுக்கோணும். உங்க பிளேன் புறப்பட ரெடியான உடனே அதுல பொறவங்க எல்லாம் வாங்கன்னு அறிவிப்பு கொடுப்பாங்க. அதக்கேட்டவுடனே புறப்பட்டு பிளேனுக்குப் போக வேண்டியதுதான். சில ஊர்கள்ல பிளேன் கொஞ்ச தூரத்தில நிற்கும். அப்ப உங்களை பஸ்சில ஏத்திக் கூப்பிட்டுட்டுப் போவாங்க. பிளேன் கிட்ட போனதும் பஸ்சைவிட்டு இறங்கி பிளேன்ல ஏர்றதுக்கு ஒரு ஏணி வச்சிருப்பாங்க.  அதன் முதல் படியில பிளேனோட கண்டக்டர் (?) நின்னிட்டிருப்பார். அவர்கிட்ட உங்க போர்டிங்க் பாஸைக் கொடுக்க வேண்டும். அவர் அதுல பாதியைக் கிழிச்சிட்டு மீதிய உங்க கிட்ட கொடுத்துடுவாரு. மேல ஏரோப்ளேன் வாசலுக்குப் போனா, அங்கே ஒரு சினிமா நடிகை மாதிரி ஒருத்தி, உங்களைக் கும்பிட்டு வாங்கன்னு வரவேற்பாங்க. அதை தலையாட்டி ஏத்துக்கிட்டு உள்ள போனா எங்க உக்கார்ரதுன்னு தெரியாம முளிக்காதீங்க. உங்க போர்டிங்க் பாஸ்ல சீட் நெம்பர் குறிச்சிருக்கும். உள்ள இன்னோரு சினிமாக்காரி இருப்பா. அவகிட்ட கேட்டா உங்கள உங்க சீட்ல கரெக்ட்டா உக்கார வச்சிருவா. நீங்க கையில் கொண்டு போன பேக்கை வாங்கி தலைக்கு மேல இருக்கிற கேபின்ல போட்டுடுவாங்க. இறங்கறப்ப மறக்காம இந்த லக்கேஜை எடுத்துக்கொண்டு இறங்கணும்.

அவ்வளவுதான். சீட்ல உக்காந்துட்டு சீட் பெல்ட் எங்க இருக்குதுன்னு பாருங்க. கார்ல இருக்கிற மாதிரிதான் இருக்கும். அத எடுத்து இடுப்புல கட்டிக்குங்க. எல்லா பாசஞ்சர்களும் வந்து உக்கார்ந்த பிறகு, ஏணியத் தள்ளீட்டுப்போயிடுவாங்க. அப்பறம் பிளேன் கேட்டச்சாத்துவாங்க. பிளேன் டிரைவர் (அவருக்கு பைலட்னு பேரு) பிளேனை ஸ்டார்ட் செய்வார். எல்லாம் ரெடியான பிறகு ஏர் டிராபிக் கன்ட்ரோல்லர் பிளேனுக்கு ரைட் கொடுப்பார். அப்புறம் பைலட் பிளேனைத் திருப்பி மெதுவா ஓடுபாதைக்கு கொண்டு போவார். பிளேன் கட்டைவண்டி ஸ்பீடுலதான் போவும். சலிச்சுப்போகும். ஓடுபாதைக் கடைசீக்குப் போய் பிளேனைத்திருப்பி போகவேண்டிய திசையில் நிறுத்துவார்.

எல்லாம் சரியாக இருந்தால் ஏர் டிராபிக் கன்ட்ரோல்லர் டபுள் ரைட் கொடுப்பார். அப்புறம்தான் பிளேன் பறக்கறதுக்கு ரெடியாகும், பைலட் இஞ்சினை ரெய்ஸ் பண்ணி ஸ்பீட் எடுப்பார் பாருங்க, காதெல்லாம் ஜிவ்வுன்னு ஆயிடும். கொஞ்ச தூரம் ஸ்பீடாப் போயி அப்பிறம் பிளேன் பறக்க ஆரம்பிக்கும். பிளேன் மேல ஏறிம்போது அடிவயிறு நெஞ்சுக்கு வந்துடும். வயித்துக்குள்ள இருக்கறது வெளிய வர மாதிரி இருக்கும். ஜன்னல் ஓர சீட்டா இருந்தா பூமி கொஞ்சம் கொஞ்சமா நம்மை விட்டு தள்ளிப்போவது நன்றாகத்தெரியும். வீடுகள் சின்னதாய் ஆகி, புள்ளியாய் மாறி, அப்புறம் கண்ணுக்கே தெரியாமல் போகும்.

பிளேன் கொஞ்ச நேரத்தில 30000 அடி உயரம் வந்த பிறகு சமமான நிலையில் பறக்கும். அப்போது உம்ம்ம்னு ஒரு சத்தம் மட்டும்தான் கேட்கும். ஒருவிதமான ஆட்டமும் இருக்காது. வீட்டுல சேர்ல உக்காந்துட்டு இருக்கிற மாதிரிதான் இருக்கும். மணிக்கு 800 கி.மீ. ஸ்பீடில் பறக்கும் உணர்வே தெரியாது. வெளியில் பஞ்சு மூட்டைகள் மிதந்து கொண்டிருக்கும். அவை எல்லாம் மேகங்கள். வீட்டில் சேரில் உட்கார்ந்துகொண்டிருப்பது போலத்தான் இருக்கும். விமானம் முழுவதும் .சி. செய்திருப்பார்கள். சில பேருக்கு ரொம்பக்குளிர்வது போல் இருக்கும். அப்போது ஒரு சினிமாக்காரியைக் கூப்பிட்டு சொன்னால் அவளுக்கு நல்ல மூட் இருந்தால் ஒரு ஷால் கொடுப்பாள். அதைப் போர்த்திக் கொள்ளலாம்.

சில சமயம் ஏர் பாக்கெட்டுகள் என்பது வரும். அதாவது ஆகாய வெளியில் காற்றே இல்லாத ஒரு வெற்றிடம் எங்காவது ஒரு பகுதியில் இருக்கும். அந்தப் பகுதியில் விமானம் பறக்கும்போது விமானத்தைத் தாங்கிப்பிடிக்க காற்று இல்லாததால் விமானம் தொபுக்கடீரென்று கீழே சரியும். அப்போது கட்டை வண்டியில் போகும் உணர்வும், ஆஹா, நம் ஆயுள் இன்றோடு முடிந்தது என்ற பயமும் ஒன்றாக வரும்.

நாம் முன்னே பார்த்த சினிமாக்காரிகள் இப்போது ரொம்பவும் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் சினிமாக்காரிகள் அல்ல, விமான சிப்பந்திகள் (ஏர் ஹோஸ்டஸ் என்று அவர்களுக்கு நாமகரணம்) என்பது அப்புறம்தான் நமக்குப் புரியும். பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவேண்டியதுதான் அவர்களுக்கு வேலை. ஆனால் பெரும்பாலான ஏர் ஹோஸ்டஸ்கள் ஏதோ தாங்கள்தான் விமானக்கம்பெனி முதலாளிகள் போல் நடந்துகொள்வார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளமும் மற்ற வசதிகளும். பயணிகளில் பெரும் பணக்காரர்களையும் சினிமா டைரக்டர்களையும் மட்டும் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்வார்கள். நம்மைப் போல் சாதாரண பயணிகளை பென்ஸ் காரில் போகிறவன் பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அப்படியேதான் நம்மை நடத்துவார்கள். அவர்களிடத்தில் குறை சொல்லுவதில் எந்தப் பயனும் இல்லை. பிளேனை விட்டு இறங்கின பிறகு நாம் யாரோ அவர்கள் யாரோ?

இப்படிப்பட்ட விமானப்பயணத்தை என் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினேன். நாங்கள் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் காலை 11 மணிக்குப் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத் அடைந்தது. இதற்குள் சாப்பாடு என்கிற பெயரில் ஒரு பொட்டலத்தையும் ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலையும் ஒரு சினிமாக்காரி கொண்டுவந்து கொடுத்தாள். அதற்குள் முதல் நாள் சுட்ட வடைகள் இரண்டும், இரண்டு பிஸ்கட்டும், ஒரு சிறிய லட்டும் இருந்தன. அதை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அதை பெரும்பாடு பட்டு வயிற்றுக்குள் அனுப்பினேன். இதற்கு தனியாக 125 ரூபாய் டிக்கட்டுடன் கட்டியிருந்தோம். இப்படி பணம் கட்டாதவர்கள் புண்ணியவான்கள். தப்பித்தார்கள்.

ஹைதராபாத்தில் இறங்க வேண்டிவர்கள் இறங்கி, ஏறவேண்டியவர்கள் ஏறியதும் விமானம் புறப்பட்டு மாலை மூன்று மணிக்கு டில்லி விமான நிலைய ஓடுபாதையைத் தொட்டது. விமான ஓடுபாதை விமான நிலைய பயணிகள் கூடத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் இருக்கிறது. விமானம் தரையில் இறங்கிய பிறகு கட்டை வண்டி ஸ்பீடில்தான் போகும். சுமார் 15 நிமிட கட்டை வண்டி பயணத்திற்குப் பிறகு விமானம் பயணிகள் கூடத்திற்கு அரை கி.மீ. தூரத்தில் வந்து நின்றது. விமானக்கதவைத் திறந்து இறங்கும் ஏணி கொண்டுவந்து சேர்த்து பயணிகள் இறங்க ஆரம்பிக்க மேலும் ஐந்து நிமிடங்கள் ஆயின. அதற்குள் பெரும்பாலான பயணிகள் அடித்துப்பிடித்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தார்கள். நாங்கள் மெதுவாக இறங்கி கீழே வந்தோம். அங்கு பஸ்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஏறி பயணிகள் கூடத்திற்கு அருகில் வந்து இறங்கினோம்.

பயணிகள் கூடத்திலதான் நாம் பிளேனுக்குள்ள போட்ட பெட்டிகள் எல்லாம் வரும். ஒரு வட்டமா, நீளமா கன்வேயர் பெல்ட் சுத்திக்கிட்டே இருக்கும். ஒவ்வொரு பிளைட்டுக்கும் ஒவ்வொரு கன்வேயர் பெல்ட். அதுக்குப்பக்கத்தில பிளைட் நெம்பர் எழுதியிருக்கும். ஒரு தள்ளு வண்டியப்புடிச்சுக்கிட்டு அதுக்குப்பக்கத்தில போயி, நின்னுக்கோணும். நம்ம பெட்டி வர்ரப்போ கரெக்ட்டா அடையாளம் கண்டு பிடிச்சு, லபக்குனு எடுத்துக்கோணும். உட்டுட்டோம்னா அது ஒரு ரவுண்டு போயிட்டு அப்பறம்தான் வரும். நம்ம பெட்டி, லக்கேஜ் எல்லாத்தையும் புடிச்சு தள்ளு வண்டியில ஏத்தி அந்த ஏரியாவை விட்டு வெளியில வரணும். வரப்போ லக்கேஜ்களை செக் பண்ணுவாங்க.


வெளியில வந்தாச்சா. இதுவரை .சி. யில குளு குளுன்னு இருந்ததுக்கு, வெளியில டில்லி வெயில் வறுத்தெடுக்கும் பாருங்க. அதை அனுபவிச்சாத்தான் தெரியும். தண்ணி பாட்டிலக் கையில வச்சுட்டு குடிச்சுக்கிட்டே இருக்கோணுமுங்க. இனி நாங்க ஹரித்துவார் போக பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் போகவேண்டும். இதற்கு பிரிபெய்டு டாக்சி பிடித்துக்கொள்ளுங்கள என்று ஊரிலேயே மாப்பிள்ளை கூறியிருந்தார். அப்படியே பிரிபெய்டு டாக்சி கவுன்டருக்குப் போய் இரண்டு டாக்சிகளுக்கு டோகன் வாங்கிக்கொண்டு, தள்ளு வண்டிகளோட டாக்சி ஸ்டேண்டுக்கு வந்தோம். பிரிபெய்டு டாக்சி என்பதினால் பேரம் பேச வழியில்லாததினால் இதற்கென்று சில அரதப்பழைய டாக்சிக்காரர்கள் மட்டுமே வருகிறார்கள். எப்படியோ இரண்டு டாக்சிகளைப்பிடித்து சாமான்களை ஏற்றி, நாங்களும் ஏறி பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் மாலை நான்கு மணிக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தோம்.
தொடரும்

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஹரித்துவாரில் கங்கைக்கு ஆரத்தி

ஹரித்துவாரில் அனுதினமும் மாலையில் கங்கைக்கு ஆரத்தி காண்பித்து வணங்குகிறார்கள். அதை நான் கண்டு களித்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்குப்படி அந்த காட்சிகளை இங்கு பதிவிடுகிறேன்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பழமைபேசியின் நூல் அறிமுக விழாவும் பதிவர் சந்திப்பும்

பழமைபேசியின் "ஊர்ப்பழமை" புத்தக வெளியீட்டு விழாவை ஒட்டி ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற்றது. இது ஒரு Informal சந்திப்பு என்பதால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றியும் பேசவில்லை. வந்திருந்தோரின் புகைப்படங்கள் காணவும். நானே புதிதாகையாலும் புது முகங்களை பெயருடன் ஞாபகம் வைத்துக்கொள்வது என்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டதாலும் யாருடைய பெயரையும் கொடுக்கவில்லை.







ஏதோ என்னால் முடிந்த கைங்கர்யம், ஏழைக்குத்தகுந்த எள்ளுருண்டை.

சனி, 31 ஜூலை, 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 2

ஆயத்தங்கள்.
இந்த தொடர் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் இந்த மாதிரி சுற்றுலா செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய சொந்த அனுபவங்களைப் பற்றித்தான் அதிகமாக எழுதியிருக்கிறேன். என் கருத்துப்படி அதுதான் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சில விவரங்கள் அதிகப்படியானதாகத் தோன்றலாம். முன்பின் எந்த அனுபவமும் இல்லாதவர்களும் தெரிந்து கொள்ளவே அந்த விவரங்கள்.
சுற்றுலா செல்வதில் முக்கியமானது முன்னேற்பாடுகள். போகும் இடத்தின் விவரங்கள், தங்கும் இடங்கள், வாகன வசதிகள், மொழி தெரிந்த ஒருவர். அங்கு கிடைக்கும் உணவுகள் ஆகியவை பற்றி நன்கு தெரிந்திருக்கவேண்டும். தங்குமிடங்களுக்கு கூடியமட்டும் முன்பதிவு செய்தல் நலம். குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் முன்பதிவு செய்யாவிடில் தங்கும் விடுதிகள் கிடைப்பது கடினமாகிவிடும்.
அடுத்தது: கொண்டு செல்லும் சாமான்கள். சிலவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.(சோப்பு, சீப்பு, முதலியன) சில, போகும் இடங்களில் கிடைக்காமல் போகலாம். (மருந்துகள், உடைகள், முதலியன). இவைகளைப் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது: மனநிலை. நம் வீட்டில் இருக்கும் எல்லா சௌகரியங்களும் போகும் இடத்திலும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இதில் ஏமாற்றம் ஏற்பட்டால் சுற்றுலா முழுவதும் வீணாகிவிடும். எதிர்பாராத பல அசௌகரியங்கள் ஏற்படலாம். அவைகளை அனுசரித்துப் போகவேண்டும். அப்படியில்லாமல் அந்த அசௌகரியங்களைப் பற்றியே குறைப்பட்டுக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் வேதனையாக இருக்கும்.
சுற்றுலா செல்லும்போது யாராவது ஒருவர்கொஞ்சம் அனுபவம் உள்ளவர் தலைமைப்பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கும் திறன் அவரிடம் இருக்கவேண்டும். அவர் எடுக்கும் முடிவுகளை எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி கலந்தாலோசித்து இந்த விஷயங்களில் முடிவு எடுத்தோம். நான்தான் லீடர். புறப்படும் நாளன்று எல்லா சாமான்களையும் மூட்டை கட்டி ரெடியாக வைத்தோம். ஒரு கால் டாக்சி ஏற்பாடு செய்து அதில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். (இவ்வளவு செலவு செய்கிறீர்கள், ஏன் கஞ்சத்தனமாக கால் டாக்சி பிடித்தீர்கள், முழு டாக்சியாகவே பிடித்திருக்கக் கூடாதா என்பவர்களுக்கு பதில் இல்லை)
விமானநிலைய நடைமுறைகள் புதிதாகப் போகிறவர்களுக்கு புரிவது கொஞ்சம் கடினம். என்னால் முடிந்தவரையில் எளிமையாக விளக்க முயலுகிறேன்.
1.   டிக்கெட்: இது பல வழிகளில் கிடைக்கிறது. இன்டர்நெட். டிராவல் ஏஜெண்டுகள், ஏர்லைன்ஸ் நிறுவன நேரடி விற்பனை கவுண்டர் என்று பல இடங்களில் வாங்கலாம். வாங்கும் நாள், ஏர்லைன்ஸ் கம்பெனி இவைகளைப்பொறுத்து டிக்கெட்டின் விலை வித்தியாசப்படும். ஒரே பயணத்தில் பக்கத்து சீட்காரருக்கு டிபன் கொடுப்பார்கள், ஆனால் உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் நீங்கள் வாங்கிய டிக்கெட் மலிவானது. எது எப்படியிருந்தாலும் டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டு விமான நிலையம் சென்றால் தலைகீழாக நின்றாலும் உங்களை பறக்க அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் பணமும் முக்கியம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவைகளையும் கொண்டு செல்லலாம்


2.   லக்கேஜ்: விமானக் கம்பெனிகள் இவற்றை இரண்டாகப் பிரித்திருக்கின்றன. விமானத்தின் லக்கேஜ் கேபினில் போடும் மூட்டைமுடிச்சுகள் ஒருவகை. இவை ஒரு டிக்கெட்டுக்கு 20 கிலோ மட்டும் அனுமதிக்கப்படும். அதற்கு அதிகமானால் எடைக்குத்தகுந்த மாதிரி அதிகக் கட்டணம் கட்டவேண்டும். ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதற்குசெக்இன் லக்கேஜ்என்று பெயர். இந்த மூட்டைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவும் நல்ல பூட்டுக்களுடனும்  இருப்பது நலம். ஏனென்றால் விமான நிலைய ஊழியர்கள் இவைகளை கொஞ்சம் கரடுமுரடாக கையாளுவார்கள். இந்த லக்கேஜ்களில் டைம் பாம்ப், வெடிகுண்டுகள், ஜெலடின் குச்சிகள் போன்றவைகளையோ அல்லது அது மாதிரி தோற்றம் உள்ளவைகளையோ எடுத்துச்சென்றால் உங்கள் பயணம் அரோகராதான்.

அடுத்த வகைகேபின் லக்கேஜ்எனப்படும் பயணிகள் தங்களுடனேயே எடுத்துச்செல்லக் கூடியவை. இவை சுமார் 10 கிலோவிற்கு மேற்படாமல் சிறிய சூட் கேஸாகவோ அல்லது ரெக்ஸின் பேக்காகவோ இருக்கலாம். பயணிகளின் சீட்டுக்கு மேல் இருக்கும் லக்கேஜ் கேபினில் வைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வது நல்லது. இந்த வகை பைகளில் எந்த விதமான ஆயுதங்களையும் கொண்டு செல்லக்கூடாது. கத்தரிக்கோல், ஸ்க்ரூ டிரைவர், நெயில் கட்டர். கத்திகள், பெரிய ஊசிகள், முதலானவைகளைக் கொண்டு செல்லக்கூடாது. ஊறுகாய், ஜாம், சமையல் பொடிகள், தின்பண்டங்கள் ஆகியவைகளும் இதில் அடங்கும். தெரியாமல் கொண்டு சென்று ஸகேனில் தெரிந்தால் அவைகள் பறிமுதல் செய்யப்படும். அய்யோ, அப்பா என்று கூக்குரல் போட்டால் ஒன்றும் நடக்காது.

இது தவிர பெண்கள் ஒரு சாதாரண லேடீஸ் பேக் கொண்டு செல்லலாம். ஆண்கள் ஒரு லேப்டாப் கொண்டு செல்லலாம்.
இந்த சாமான்கள் அனைத்தும் மெஷின் மூலம் ஸ்கேன் செய்யப்படும். ஆட்சேபணைக்குரிய எந்தப்பொருள் இருந்தாலும் வம்புதான். ஆகவே முதலிலேயே ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

தொடரும்….

வெள்ளி, 30 ஜூலை, 2010

பதிவு தாமதம்-மன்னிக்கவும்

உடல் நிலை சிறிது மோசமாக இருப்பதால் பதிவுகள் தாமதப்படுகின்றன. எல்லோரும் மன்னிக்கவும்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ப.ரா. மன்னிப்பாராக


சும்மா தமாசுங்க, ப.ரா.

படம் நல்லா இல்லைன்னா சொல்லுங்க, ஒடனே தூக்கிடறனுங்க.


Posted by Picasa

ஒரு முக்கிய சந்திப்பு

என்னுடைய கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையை முடித்துக்கொண்டு நேற்று இரவுதான் கோவை திரும்பினேன். யாத்திரை பற்றி விரிவாக எழுதுமுன் ஒரு முக்கிய செய்தி.

யாத்திரையின்போது இரண்டு பதிவர்களைச் சந்தித்தேன். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் முன்னேயே ஏற்பாடு செய்திருந்தபடி டில்லி ரயில்வே ஸ்டேஷனில் பிளம்ஸ் பழங்களுடன்  அன்புடன் வந்து சந்தித்தார்.அவருடன் ஸ்டேஷனிலேயே பிளாட்பாரத்தில் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டோம். வேறு வழியில்லை. கூட்டமோ கூட்டம். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எதிர்பாராமல் இன்னொரு பதிவரை ஹரித்துவாரில் பார்த்தேன். ஆனால் அவர் என்னைப் பார்க்கவில்லை. அதனால் ஒரு போட்டோ மட்டும் எடுத்தேன். படத்தைப் பார்க்கவும். படத்தை இந்தப்பதிவில் போட இயலவில்லை. அவர் மேல் இருக்கும் மரியாதை காரணமாக தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்தச் செய்தியைப் படிக்கவும்.

நன்றி: தினத்தந்தி

பிரபல நடிகை சத்யப்பிரியா சென்னை தியாகராயநகர் ராமானுஜர் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக தனது காரில் வந்தார்.


ஓட்டல் வாசலில் காரில் காத்திருந்தபோது அவரது கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த அவரது கைப்பையை மர்ம ஆசாமி ஒருவன் கொள்ளையடித்து சென்று விட்டான். ரோட்டில் பத்து ரூபாய் நோட்டுக்களை சிதற விட்டு, அந்த ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா என்று மர்ம ஆசாமி ஒருவன் கேட்டான். உடனே அந்த ரூபாய் நோட்டுகளை காரில் இருந்து இறங்கி நடிகை சத்யப்பிரியா பொறுக்கிக்கொண்டு இருந்தார். (இதைத்தான் "பொறுக்கி" என்று கூறுவது)


அப்போது அந்த மர்ம ஆசாமி சத்யப்பிரியாவின் காரில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். அந்த கைப்பைக்குள் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம், வங்கி கிரெடிட் கார்டுகள், வங்கி ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் டிரைவிங்க் லைசன்சும் இருந்த்தாக நடிகை சத்யப்பிரியா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

எனக்குத் தெரிந்து இந்த டெக்னிக் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் திருந்துவதாகக் காணவில்லை.