வெள்ளி, 2 மார்ச், 2012

மலைவாழ் மக்களின் விருந்தோம்பல்



நான் மதுரையில் வேலையில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்படியே அலுவலக வேலை ஒன்றையும் முடித்துவிடலாம் என்று திட்டம்.

அதன்படி கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ள பண்ணைக்காடு என்னும் கிராமத்திற்குப் போகவேண்டும். அங்குள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மதுரை விவசாயக் கல்லூரியில் மண்வளப் பரிசோதனை செய்யும் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. மண்வளப் பரிசோதனை செய்யும் உபகரணங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதை வைத்து அவர் எவ்வளவு மண் மாதிரிகள் பரிசோதனை செய்திருக்கிறான் என்று ஆய்வு செய்வதுதான் என் பயணத்தின் நோக்கம்.

காலை சுமார் 11 மணிக்கு அந்த ஊருக்குப் போய் சேர்ந்தேன். அந்த இளைஞனுக்கு முன்பே தபால் மூலம் தகவல் அனுப்பியிருந்ததால் அவர் என்னை வரவேற்கத் தயாராக இருந்தார். அவர் வேலைகளைப் பார்த்து அவருக்கு சில வழிமுறைகளைச் சொல்லி முடிக்கும்போது ஏறக்குறைய 1 மணி ஆகிவிட்டது. அவர்கள் வீட்டில் எனக்காக விருந்து தயார் பண்ணிவிட்டார்கள். அதை மறுத்துவிட்டுப் போவது நாகரிகமல்ல என்பதால் விருந்தைச் சாப்பிட்டேன். சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின்பு கொடைக்கானலுக்குப் புறப்பட்டேன். அவர்கள் வீட்டிலிருந்து பஸ் நிற்குமிடத்திற்கு மூன்று பேர் துணைக்காக வந்தார்கள். அதில் ஒருவர் ஒரு பையில் நிறைய ஏதோ போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.


அதில் ஒரு கிலோ காப்பிக்கொட்டை, ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள், ஒரு சீப்பு மலைவாழைப்பழம் ஆகியவை இருந்தன. இது எனக்குப் பிற்பாடுதான் தெரிந்தது. பஸ் நிலையத்திற்கு வந்து சிறிது நேரத்தில் தூரத்தில் பஸ் வருவது தெரிந்ததும் அந்தப் பையை அவர்கள் என்னிடம் கொடுத்து ஊருக்கு கொண்டுபோங்கள் என்றார்கள். நான கொஞ்சம் பிகு பண்ணிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயமாக என் கையில் கொடுத்து விட்டார்கள். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. பணம் பத்து ரூபாயை என்னிடம் பஸ் சார்ஜுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தார்கள். நான், ஐயா, எனக்கு நீங்கள் இந்தப்பையைக் கொடுத்ததே அதிகம், ஏதோ அன்பினால் கொடுக்கிறீர்கள் என்று வாங்கிக்கொண்டேன். பஸ்சிற்கும் பணம் கொடுப்பது என்பது அதிகப்படியான சமாசாரம், எனக்கு அரசு பயணப்படி கொடுக்கிறது என்று சொல்லி அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டேன்.


அதற்கு அப்புறம் நடந்ததுதான் கிளைமாக்ஸ். நான் பஸ்சில் ஏறியதும் அவர்கள் அந்தப் பணத்தை கண்டக்டரிடம் கொடுத்து விட்டு டிக்கட்டையும் மீதி சில்லறையையும் என்னிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். கண்டக்டரிடம் நான் பணம் கொடுத்து டிக்கட் கேட்டால் கண்டக்டர் இந்த விவரத்தைச் சொல்லி, டிக்கட்டும் மீதி சில்லறையையும் என்னிடம் தந்தார். மலைவாழ் மக்களின் விருந்தோம்பும் பண்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.

  

புதன், 29 பிப்ரவரி, 2012

செயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன?


நேற்று நடைப் பயிற்சிக்காக போகும்போது தெரு முனையில் ஒரு பது விளம்பரத்தைப் பார்த்தேன். Final Year Projects இங்கே கிடைக்கும் என்று எழுதியிருந்தது. என்னவென்று விசாரித்தேன். அந்த விசாரணையில் தெரிய வந்ததை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களின்படி ஏறக்குறைய எல்லா தொழில் நுட்பப் படிப்புகளுக்கும் அந்தப் படிப்பின் கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்ட் வேலை கொடுத்து அதை முடித்து வருமாறு சொல்வார்கள். முன்பெல்லாம் இது முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் இருந்தது. அதை தீஸிஸ் சமர்ப்பித்தல் என்று சொல்லுவார்கள்.

அந்த தீஸிஸ் வேலை என்றால் என்னவென்றால், ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒரு ஆய்வாளர் பரிசீலித்து, படிக்கும் படிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது என்றால்தான் அந்த மாணவனுக்கு அந்தப் பட்டம் கிடைக்கும். இந்த தீஸிஸ் வேலையில் அந்த மாணவனை வழி நடத்த ஒரு அனுபவம் உள்ள ஆசிரியரை வழிகாட்டியாக நியமிப்பார்கள். அவர் அந்த மாணவர் எழுதும் தீஸிஸ் அவராகவே புள்ளிவிபரங்கள் சேகரித்து அவராலேயே எழுதப்பட்டது என்று சான்று கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த தீஸிஸ் முழுமையானதாகக் கருதப்படும்.

இந்த வேலை எதற்காக என்றால், ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவனிடம் ஒரு வேலை கொடுத்தால், அந்த வேலையை எவ்வாறு திட்டமிட்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்து அந்த வேலையை முடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் திறமையை வளர்ப்பதற்காகத்தான். அப்போதுதான் அவன் எந்த வேலையில் சேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையைச் செய்வான்.
நமது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வருவார்கள். அது எதற்காக என்றால் அப்போதுதான் நமது மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்குமாம். இந்த மாற்றங்களில் எல்லா வித தொழில் படிப்புகளுக்கும் இந்த செயல் திட்டத்தை கட்டாயமாக்கினார்கள். நல்ல, உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் இது.

ஆனால் கால ஓட்டத்திலே இந்த முறை சீரழிந்து, வெறும் சடங்காக மாறிவிட்டது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாக தற்போது இருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்குப் பக்கத்திலும் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள் இந்த செயல்திட்ட அறிக்கையை ரெடிமேடாக தயார் செய்து ஒரு விலை போட்டு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அதை வாங்கி அப்படியே கல்லூரியில் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்களும் சான்று கொடுத்து விடுகிறார்கள்.  

ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது. எங்களைப் போல் வாழ்வின் இறுதியில் இருக்கும் ஆசிரியர்கள் புலம்பத்தான் முடியும்!




செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.


ஒன்று.

திருநெல்வேலி ஆலங்குளம் அருகே ஒரு காரும் லாரியும் மோதினதில் எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு பேர் சீரியசாக இருக்கிறார்கள். மிகவும் பரிதாபமான செய்தி. படிப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

இந்தக் கஷ்டம், பரிதாபம் இவைகளை விட்டுவிட்டு செய்தியை அலசினால் தெரியக்கூடிய கருத்துகள்.
  
  1. ஒரு குடும்பத்தினர் பணத்தை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்னொரு உறவினர் வந்த வாடகைக் காரில் ஏறியிருக்கிறார்கள். கார் சக்திக்கு மீறிய அதிக பாரத்தை ஏற்றியிருக்கிறது.
  2.   கார் கொண்டு வந்த உறவினர், எல்லோரும் ஏறினால் இட நெருக்கடி ஏற்படும் என்று சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
  3.   கார் டிரைவர் 22 வயதுப் பையன். அவன் இப்படி அதிக பாரம் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவில்லை.
  4.   கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும், காரில் அதிக பாரம் இருக்கும்போது காரை ஓட்டுவதும் வளைப்பதுவும் எவ்வளவு கடினம் என்று.
  5.   டிரைவருக்கு இரவு சீக்கிரம் ஊர் போய்ச் சேரவேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். ஆகவே வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
  6.   அதிக பாரத்தினாலும், அதிக வேகத்தினாலும் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வண்டிக்கு இடம் கொடுக்க முடியவில்லை.
  7.   லாரிக்காரனும் அதே மாதிரி வளவில் இடம் கொடுக்காமல் வந்திருக்கலாம்.
  8.   விபத்து நடந்துவிட்டது. 8 உயிர்கள் நஷ்டம். எத்தனை அழுது புரண்டாலும் உயிர்கள் மீளப்போவதில்லை.

காரில் போகும்போது சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர் ஓட்டினாலும் கூட செல்பவர்கள் கண்காணிப்பாக இருந்து செயல்படவேண்டும். அதிக வேகம் போகும்போது டிரைவரை கண்டிக்கவேண்டும். அதற்கு தைரியம் இல்லாவிடில் காரில் போகக்கூடாது. அதிக பாரம் ஏற்றுவதில் கண்டிப்பு வேண்டும். தயவு தாட்சண்யம் கூடாது. விபத்து ஏற்பட்டபின் வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.

இரண்டு.

வேளச்சேரியில் மனித உரிமைக் கழகத்தினரை பொது மக்கள் நன்றாக மட்டம் தட்டியிருக்கிறார்கள். எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள். திருடனைப் பிடித்து தண்டித்தால் இவர்களுக்கு உடனே மனித நேய உணர்வு பொங்கிக்கொண்டு வரும்.

கொலை நடந்துவிட்டால் கொலையுண்டவனின் குடும்பத்தைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.