புதன், 15 நவம்பர், 2017

23. புத்தகம் படிக்கும்போது கண் சொருகுதல்


 இதே போல புத்தகம் படிக்க முடியாமல் கண்கள் கனமாவதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் அந்தக் குற்ற உணர்வும் நீங்கும்.

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் புத்தகம் படிக்கும் போது கண்கள் கனமாவது அதாவது கண்கள் சொருகுவது பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். கேளுங்கள், கொடுக்கப்படும் என்பதுதானே நம் கொள்கை. அதன்படி இதோ விளக்கங்கள்.

நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களினால் ஆக்கப்பட்டது என்று அறிந்திருப்பீர்கள். இந்த உயிரணுக்களின் ஆயுள்காலம் மூன்று வாரங்கள்தான். ஆனால் எல்லா உயிரணுக்களும் இவ்வாறு மூன்று வாரத்தில் அழிந்து போவதில்லை. சில மாதக்கணக்கிலும் அழியாமல் இருக்கும். குறிப்பாக மூளையின் உயிரணுக்கள் ஒருவனின் ஆயுட்காலம் முழுவதும் அழிவதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படிப் போனாலும் நம் உடலில் உள்ள உயிரணுக்களினால்தான் நாம் வாழ்கிறோம். அவைகள் செயல்படுவதினால்தான் நாம் உயிருடன் இருக்கிறோம். ஆனாலும் இந்த உயிரணுக்கள் நாள்பட நாள்பட தங்கள் செயல் திறனை இழக்கின்றன. நாம் இளமையில் ஐந்து நிமிடத்தில் செய்த வேலையை வயதானபின் செய்ய ஒரு மணி நேரம் தேவைப் படுகிறது.

முக்கியமாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மாற்றம் சீக்கிரமே ஏற்பட்டு விடுகிறது. குளிர் பிரதேச நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் மெதுவாகவே நிகழ்கிறது.

வயதானவர்கள் இந்த மாறுதலை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 80 வயதான ஒருவர் நான் 80 வயது வாலிபன் என்று மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறார். இருக்கலாம். மனதளவில் அவர் வாலிபனாகவே இருந்து கொள்ளட்டும். ஆனால் அவரது உடல் அவர் மனதுடன் ஒத்துழைக்காது.

எந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தாலும் சில மணித்துளிகளிலேயே உடல் ஆயாசமடைந்து விடும். அப்படியே புத்தகம் படிப்பதுவும். புத்தகம் படிப்பது என்பது மூளை செய்யும் ஒரு வேலையே. வயதானபின் மூளையும் சீக்கிரத்தில் சோர்வடைந்து விடும். அப்படி மூளை சோர்வடைந்தால் முதலில் கொட்டாவி வரும். அடுத்ததாக கண்கள் தானாக மூடிக்கொள்ளும். தூக்கம் தன்னையறியாமல் வரும்.

இது எல்லாம் வயதாவதின் விளைவுகள் என்று அறிந்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை விட்டு விட்டு பழைய நினைப்பில் முடியாத வேலைகளுக்குத் தலைப்படாதீர்கள்.

                                              Image result for வயதானவர்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

22. மூட நம்பிக்கைகள் - சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது

                                          Image result for sleeping beauty
சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்துத்தான் தூங்கவேண்டும். அப்போதுதான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். இவ்வாறு பல புத்தகங்களில் படித்திருக்கிறேன். அநேகமாக நீங்களும் படித்திருக்கலாம். இதைப்போன்ற அபத்தமான ஒரு மூட நம்பிக்கை இவ்வுலகில் இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஏன் என்று பார்ப்போம்.

''உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு'' என்ற பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அதன் கருத்தை ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன்.

உணவு உண்டவுடன் அது இரைப்பைக்கு செல்கிறது. அங்கு அந்த உணவு ஜீரணமாவதற்குத் தேவையான பல அமிலங்களும் என்சைம்களும் சுரந்து அந்த உணவை ஜீரணிக்க உதவுகின்றன. இதற்கு இரைப்பைக்கு அதிக ரத்தம் தேவைப் படுகின்றது. உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்ற ரத்தத்தைக் குறைத்து இரைப்பைக்கு அதிக ரத்தம் வருகிறது. இந்த நிகழ்ச்சி இயற்கையாக நடக்கும் ஒன்றாகும்.

இப்படி நடக்கும்போது மூளைக்குச் செல்லும் இரத்தமும் குறைகிறது. அதனால் மூளை தன் வேலைப்பாட்டை குறைத்துக்கொள்கிறது. இதே போல் மற்ற அவயவங்களும் தங்கள் தங்கள் வேலையைக் குறைத்துக்கொள்கிறது. இந்த செயல்களால் மொத்த உடலும் ஒரு வகை சோர்வுக்கு உள்ளாகிறது. இதைத்தான் உண்ட மயக்கம் என்கிறோம்.

இந்த மயக்கம் தெளிய ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த நேரத்தில் தூங்கினால் தூக்கம் சுகமாக வரும். இரவு சாப்பிட்டபின் தூங்கினால் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இது இயற்கையுடன் ஒத்து வாழும் வழி.

இதை விடுத்து சாப்பிட்ட உணவு ஜீரணமானவுடன்தான் தூங்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால் அப்போது உடலின் எல்லா அவயவங்களும் தயார் நிலையில் இருக்கும். மூளைக்கு ரத்தம் நல்ல நிலையில் சென்று கொண்டிருப்பதால் மூளை விழிப்புடன் இருக்கும். அப்போது தூங்கச்சென்றால் தூக்கம் வருவதற்கு நேரமாகும். உடல் அசதி இருந்தால்தான் தூக்கம் வரும். இல்லாவிட்டால் தூக்கம் வராது.

ஏன் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும்? தூக்கம் வரும்போது தூங்குவதை விட்டு விட்டு தூக்கம் வராத வேளையில் எதற்கு தூங்கச் செல்ல வேண்டும்? மக்களே, இது ஒரு விஞ்ஞானத் தத்துவம். சரியாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவியுங்கள். நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இவ்வாறுதான் தூங்குகிறேன். இப்போது எனக்கு 83 வயது ஆகிறது. நன்றாகத்தான் இருக்கிறேன்.

ஆகாவே இந்த 'சாப்பிட்வுடன் தூங்கக்கூடாது' என்கிற மூட நம்பிக்கையிலிருந்து விடுபடுங்கள்.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

21. நான் இட்லி சாப்பிட்டேன்.

                                           Image result for ஜெயலலிதா இட்லி
நான் இட்லி சாப்பிட்ட விவகாரம் இப்படி அரசியலாகும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே விடியோ எடுத்து யூட்யீபில் போட்டிருப்பேனே? தெரியாமப் போச்சே!

என் உடன் பிறவா சகோதரியைக் கேட்டால் சொல்லியிருப்பார்களே! இதற்கு ஏன் எல்லோரும் இப்படி வாக்குவாதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

என் அன்பு சகோதரன் பதிவர் கந்தசாமி இப்போதுதான் இந்திர லோகத்திற்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரிந்தேன். அந்த சர்வீஸ் ஆரம்பித்த பிறகு நானே ஒரு முறை தமிழ் நாட்டிற்கு வந்து உங்கள் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறேன். அது வரை கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசாமல் இருந்தால் நல்லது.

அதுவரை எல்லோரும் அமைதியாக அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டு பசியாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

20. பணக்காரர்களுடன் பழகுவது எப்படி?

                     Image result for bungalow house
மனிதர்கள் என்றுமே அவர்களின் பொருளாதார ரீதியில்தான் மதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. ஒருவனைப் பார்த்தால் இவனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான் அவனுக்கு அவன் சொத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு கிடைக்கும்.

இப்போதுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பார்த்தால் கீழ்க்கண்ட வகுப்புகள் இருப்பது தெரியும்.

Poor (including ultra poor), Lower Middle class, Upper Middle class, Rich, Super Rich, Ultra Rich, Aristocrats, Arab Sultans, Top Rich persons like Ambani brothers.

நான்  ஏழையும் அல்லாத மிடில் கிளாசும் அல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து  தற்சமயம் ஒரு  அப்பர் மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடிய தகுதியில் இருக்கிறேன். நான் வளர்ந்த சூழ்நிலை எனக்குள் பல குணாதசியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் முக்கியமானது பணக்காரர்களைக் கண்டால் ஒதுங்கிப்போவது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமானது பணக்காரர்கள் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளைப் பிச்சைக் காரர்கள் போல் பார்க்கும் ஒரு குணம். அவர்கள் வீட்டிற்கு சும்மா பார்க்கப்போனாலே, ஏதோ பண உதவி கேட்பதற்காக  வந்திருக்கிறானோ என்று சந்தேகப்பட்டு தூரமாகவே நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.

பல பணக்காரர்களின் வீடுகளில் பல நிலைகள் இருக்கும்.

1. வாசல் கேட்.
2. முன் வாசல்
3. வராந்தா
4. உள் ஹால்

தங்கள் வீட்டிற்கு வருபவர்களை இனம் பிரித்து அந்தந்த நிலைகளில் நிறுத்தி திருப்பி அனுப்பப்   படுவார்கள். இதற்காக பல நிலைகளில் சிப்பந்திகள் இருப்பார்கள். நீங்கள் முக்கியமானவராகத் தெரிந்தால் மட்டுமே உங்களை முன் வராந்தாவில் அமர வைப்பார்கள். இதோ ஐயா வந்து விடுவார் என்ற செய்தியைச் சொல்லி விட்டு உங்களைக் காக்க வைப்பார்கள்.

அந்த வீட்டு ஐயா வந்திருப்பவர் யார், என்ன விபரம் என்று விசாரித்து விட்டு, சாவகாசமாக தன் ஒப்பனைகளை முடித்து விட்டு முன் வராந்தாவிற்கு வருவார். வந்திருப்பவர் தனக்கு முன்பே தெரிந்தவராகவும் தன் தகுதிக்கு ஈடானவராகவும் இருந்தால் உடனே வாங்க, வாங்க என்று வரவேற்று உள் ஹாலுக்கு கூட்டிக்கொண்டு போவார்.

தன்னை விட கொஞ்சம் கீழ்நிலையில் உள்ளவர் என்றால் அங்கேயே அவரை விசாரித்து விட்டு அனுப்பி விடுவார்.

இந்த நடைமுறைகளை நான் நன்கு பார்த்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு பெரும் பணக்காரர்கள் வீட்டிற்குப் போவதென்றால் வெறுப்பு.

நீங்களும் இந்த மாதிரியான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

19. ஆதார் கார்டும் நானும்

                                          Image result for ஆதார் அட்டை
ஆதார் கார்டு பதிவு செய்ய ஆரம்பித்த காலத்திலேயே நானும் என் குடும்பத்தினரும் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் பதிவு செய்து விட்டோம். ஆதார் கார்டு எந்த ஒரு அரசு வேலைக்கும் தேவையில்லை என்று உச்ச நீதி மன்றம் அன்றிலிருந்து இன்று வரை கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறது.

ஆனால் அரசோ மும்முரமாய் அனைத்து துறைகளிலும் ஆதார் ஆதார் என்று ஆப்பு வைத்துக்கொண்டே போகிறது. தற்பாதைய லேடஸ்ட் ஆப்பு மொபைல் போனை ஆதாருடன் இணைப்பது.

என்னுடைய மொபைலில் பிஎஸ்என்எல் காரன் ஒரு நாள் இதைப் பற்றி ஒரு செய்தி அனுப்பியிருந்தான். நானும் உடனே ஓடிப்போய் என் மொபைல் நெம்பரை ஆதார் நெம்பருடன் இணைக்கப்பார்த்தேன்.

என் கை விரலை ஒரு ஸ்கேனரில் வைக்கச்சொன்னார்கள். நானும் வைத்தேன். ஸ்கேனர் கம்மென்று இருந்தது. அந்த ஆபரேட்டர் பொறுமையாக ஒவ்வொரு விரலாக ஸ்கேனரில் வைத்துப் பார்த்தார். ஆனால் அந்த ஸகேனர் எதற்கும் அசைவதாகக் காணோம்.

அப்புறம் அந்த ஆபரேட்டர் என் மேல் பரிதாப ப் பட்டு "சார், உங்கள் கைவிரல் ரேகைகளெல்லாம் தேய்ந்து அழிந்து போய்விட்டன. இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது. இந்த ஆதார்-மொபைல் லிங்க் செய்வதற்கு ஒரு வருடம் கெடு இருக்கிறது, அதனால் அதற்குள் இந்த பிரச்சினைக்கு ஏதாவது வழு பிறக்கும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று என்னை வழியனுப்பி வைத்தார்.

நானும் என் கை ரேகைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்று வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.