வியாழன், 26 நவம்பர், 2015

இது என்னுடைய 900 ஆவது பதிவு

                          Image result for 900
முதலில் ஒரு சந்தேகம். "900 ஆவது" என்ற சொல், அதாவது எண்ணையும் எழுத்தையும் இணைத்து உருவாக்கிய சொல், இலக்கண விதிகளின்படி சரியா? "தொள்ளாயிரமாவது" என்று எழுதியிருக்கவேண்டுமோ? சரி, இதை இலக்கண நிபுணர்களின் விவாதத்திற்கு  விட்டு விட்டு நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம்.

இதுவரை, இந்தப் பதிவோடு சேர்த்து தொள்ளாயிரம் (எதுக்கு வம்பு, இலக்கணப்பிரகாரமே எழுதி விடுவோம்) பதிவுகள் எழுதியாகி விட்டது. வயதும் 80 ஆகி விட்டது. மூளையின் உயிரணுக்கள் குறைந்து கொண்டே போகின்றன. ஒரு வித சோம்பல் மனதையும் உடலையும் பீடிக்கிறது. பதிவு எழுத ஆர்வம் குறைகிறது.

இந்தப் புலம்பல்களை பதிவில் எழுதி என்ன ஆகப்போகிறது? பதிவுலக நண்பர்கள் சில ஆறுதல் வார்த்தைகள் கூறலாம். ஒரு நண்பர் (எதிரி நண்பர் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன்) நீங்கள் பதிவு எழுதாவிட்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா என்று கூடக் கேட்டார்.  இன்னொருவர் முனைவர் பட்டம் வாங்கி என்ன பயன்? பகுத்தறிவு இல்லையே என்கிறார்.

ஆகவே இந்த இரண்டு கருத்துக்களுக்கும் ஒரு தீர்வு காணவேண்டும். பத்து நாளாக நான் பதிவு எழுதவில்லை. உலகம் அஸ்தமித்துப் போன மாதிரி தோணவில்லை. ஆகவே நான் பதிவு எழுதுவதற்கும் உலகம் அஸ்தமிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று நிரூபணம் ஆகி விட்டது.

ஆனால் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மக்களை மிகவும் வதைத்து விட்டது. நான் பதிவு எழுதாததிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று ஆராய வேண்டும். என்னமோ "கேயாஸ் தியரி" என்று ஒன்று இருக்கிறதாமே? நம் கமல் கூட தசாவதாரம் படத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது பிரகாரம் இந்த நிகழ்வுகளுக்குள் என்ன தொடர்பு என்று ஆராயவேண்டும். யாராவது இந்த ஆராய்ச்சிக்கு மான்யம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

                                          Image result for சென்னை வெள்ளம்

அடுத்து பகுத்தறிவுக்கும் முனைவர் பட்டத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராயவேண்டும். இது இன்றைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆராய்ச்சியை எப்படி செய்வது என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் கருத்துகள் சொன்னால் என்றென்றும் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஆஹா, எப்படியோ சோம்பிக் கிடந்த நரம்புகளைத் தட்டியெழுப்பி ஒரு பதிவைத் தேத்தியாகி விட்டது. என் பிதற்றல்களைத் தவறாது படித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

37 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    இன்னும் பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள் ஐயா
    நேரம் கிடைக்கும் போது எனது பக்கமும் வாருங்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. 900 தொடர்பாக தாங்கள் சொன்ன ஐயம் எனக்கும் உள்ளது. தங்களின் யதார்த்த சிந்தனைகளைக் கொண்ட பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவோரில் நானும் ஒருவன். மென்மேலும் தங்களது அனுபவங்களைப் பகிருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. 900th Post !!!!!

    மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    மேலும் எழுச்சியுடன் இதுபோல் எழுதி விரைவில் ஆயிரத்தையும் ஆசைதீரத் தொட்டு விடவும்.

    அப்போதும் சமீபத்திய வெள்ளம்போல, மழை கொட்டோ கொட்டென்று கொட்டினால் 1001வது பதிவினை சற்றே தாமதமாக (வெள்ள நிவாரணங்கள் .... பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்ப்ட்டபின்) வெளியிட்டுக்கொள்ளலாம். :)

    பதிலளிநீக்கு
  4. தொள்ளாயிரமாவது பதிவு ...
    தொண்ணூறாயிரமாக மலர இனிய வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  5. ஐயா

    //பகுத்தறிவுக்கும் முனைவர் பட்டத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராயவேண்டும்//

    பகுத்தறிவு கிடைக்க 80 வயசு வரை போராட வேண்டும். ஆனால் முனைவர் பட்டத்திற்கு காக்கா பிடிக்கவும் காப்பி அடிக்கவும் மற்ற முனைவர்கள் தயவும் வேண்டும் (தற்போதைய சூழ்நிலை).
    இரண்டையும் சேர்த்தும் பெறலாம் அல்லது ஒன்றை மட்டும் பெறலாம்.

    ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அதாவது ஆயிரம் பதிவு + ஆயிரம் பின்தொடர்பவர்கள் பெறுவதற்கு வாழ்த்துகிறேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. அதென்ன வம்பு? இதைப் பத்தியும் ஒரு பதிவு எழுதிடுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாயறியாத சூல் உண்டா? வம்பன் அறியாத வம்பு உண்டா?

      நீக்கு
    2. ஐயா, வம்பனாரே, இப்பத்தான் பதிவை ஆரம்பிச்சிருக்கீங்க. இன்னும் முழுசா ஒரு பதிவு கூடப் போடல்ல. அதுக்குள்ள வம்பு வழக்கெல்லாம் கேக்கற மாதிரி ஆயிப்போச்சு. ஆனாலும் பதிவுலகம் ரொம்பவும் தான் முன்னேறி விட்டது.

      நீக்கு
  7. "900 வது" என்ற சொல்,

    இது சொல்லா அல்லது எண்ணா 80பதை கில்லர்ஜி கிட்டே கேட்கலாம்.

    Hello Killerji Please explain.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா விரைவில் 1000மாவது பதிவைத்தொட எமது வாழ்த்துகள்.

      ஐயா தொடங்கும் பொழுதே நிபுணர்களின் விவாதத்துக்கு விடுவோம் என்றுதானே... தொடங்குகின்றீர்கள்..

      இந்த 900த்தை வேற மா3யும் சொல்லிக் கொல்ழளாம் ஆனால் ? ஆண்டாண்டு காலமாக நமக்கு சொல்லிக் கொடுத்ததையே... நாம் சொல்லி வருகிறோம்.
      நூறு
      இருநூறு
      முன்னூறு
      நானூறு
      ஐநூறு
      அறநூறு
      எழுநூறு
      எண்ணூறு
      என்று சொல்லிக் கொடுத்தவர்கள்
      ஆயிரம் என்று சொல்லுவதற்க்கு
      முன்பே தொள்ளாயிரம் என்று ஏன் ? சொன்னார்கள்
      வேறு எந்த மொழியிலும் இப்படி சொல்லவில்லை 80 எனது அறிவுக்கு 8கிறது.

      தங்களைப் போன்ற மாற்றுக்கருத்து வேண்டியதே... மக்கள் மனதில் மாற்று சிந்தனைகள் வந்தால்தான் இந்திய அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும் மனிதனை சர்வ சாதாரணமாக வெட்டிக்கொன்று விட்டு போகின்றான் அவனை என்ன ? செய்யலாம் அவனுக்கு என்ன ? தண்டனை கொடுக்கலாம் இனிமேல் யாரும் கொலை செய்யாமலிருக்க என்ன செய்யலாம் ? என்று யாரும் சிந்திக்கவில்லை ஆனால் மாட்டை வெட்டுபவர்களை தூக்கில் போட வேண்டுமாம் பார்தீர்களா ? இந்த மனிதர்களுக்கு 6அறிவாம் அடுத்த ஜென்மம் இருந்தால் 5அறிவு ஜீவியாக பிறக்கலாம்.

      -கில்லர்ஜி
      தமிழ் மணத்தில் நுளைக்க 777

      நீக்கு
  8. முதலில் உங்களது தொள்ளாயிரமாவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள். ( எண்ணாலும் எழுத்தாலும், 900 ஆவது என்று எழுதினாலும் அல்லது தொள்ளாயிரமாவது என்று எழுதினாலும் இரண்டும் சரியே; உச்சரிக்கும் போது தொள்ளாயிரமாவது என்றே உச்சரிக்க வேண்டும்)

    நீங்கள் உங்கள் பாணியில் எப்போதும் போல, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற வாசகர்களது விருப்பம்.

    ஆன்மீகத்தில் உள்ள குருட்டு நம்பிக்கைகள் போன்றே, பகுத்தறிவிலும் சில குருட்டு நம்பிக்கை வாதிகள் உண்டு. வலையுலகில் இவர்கள் முகமூடிகளோடு வருவார்கள். இவர்களோடு வாதம் செய்வது என்பது காற்றோடு வாள் ஏந்தி சண்டை போடுவது போலாகும். அவர்கள் வீட்டில் அவரும், அவர் வீட்டு மக்களும் என்ன செய்கிறார்கள், பகுத்தறிவோடு இருக்கிறார்களா என்பதைப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். (இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு பிலுபிலு என்று வருவார்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி வரக்கூடியவங்கள்லே ஒரு ஆளை எனக்கு நல்லாத் தெரியும். வேற யாரு யாரு வராங்கன்னு பார்க்கலாம்.

      நீக்கு


  9. ஐயா! தொல்காப்பியரின் காலத்துக்கு முன் எண் 9 தொண்டு என அழைக்கப்பட்டதாம். அதாவது 9, 90, 900, 9000 என்பனவற்றிற்கு முறையே தொண்டு, தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று சொல்லப்பட்டதாம். பின்னர் தொண்டு என்ற சொல் வழக்கொழிந்ததும், தற்போதைய முறை வந்துவிட்டது. இன்றைக்கும் கன்னடத்தில் 9 ஐ ஒம்பத்து என்றும், 90 ஐ தொம்பத்தும் என்றும், 900 ஒம்பை நூறு என்றும் சொல்கிறார்கள் (கர்நாடகாவில் 7 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன்.)

    தாங்கள் 899 பதிவுகளை வெற்றிகரமாக பதிவேற்றி 900 ஆவது பதிவை வெளியிட்டிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. விரைவில் 9000 ஆவது பதிவை எட்ட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒம்பை நூறு பதிவுக்கே நாக்கு தள்ளிப்போச்சு. 9000 பதிவுகளா? அம்மாடி. ஒரு பத்து ஜன்மம் வேண்டும்.

      நீக்கு
  10. 80க்கு வாழ்த்தவா?! இல்ல 900க்கு வாழ்த்தவாப்பா?!

    பதிலளிநீக்கு
  11. எண்பதுக்கும் வாழ்த்துகள். நமஸ்காரங்கள்.

    900 த்துக்கும் வாழ்த்துகள். எப்படி எழுதினால் என்ன? சொல்ல வரும் அர்த்தம் புரிந்தால் சரிதான்.

    யாரையும் புண்படுத்தாத உங்கள் இலேஸான கிண்டல் கலந்த நகைச்சுவை எழுத்துகளுக்கு நான் ரசிகன். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஆயிரத்திற்கும் நூறுக்கும் அட்வான்ஸ்
    வாழ்த்துக்கள்
    உங்கள் நரம்புகளை மட்டும் அல்ல
    எங்கள் நரம்புகளையும் தட்டி எழுப்பிப் போகிறது
    தங்கள் பதிவு
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. 90 வயதைக் கடந்த பிறகும் எழுதிச் சாதனை புரிந்தவர்கள் உண்டு. இன்னும் 10 ஆண்டுகளூக்கு மேல் நீங்கள் எழுதலாம். அதற்கான மன திடம் உங்களுக்கு இருப்பதாக உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது தெரிகிறது..
    நகைச்சுவைக்காக ஒரு வலைப்பக்கம் தொடங்கிய[முழுமை பெறுமா என்று தெரியவில்லை] நான் ஒரு சோதனை முயற்சியாக உங்களுக்குப் பின்னூட்டம் இட்டேன். அது தவறென்றால் மன்னியுங்கள்.
    நீங்கள் 100 வயதைக் கடந்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள் ஐயா உங்கள் 80 வது நிறைவிற்கும், 900 வது பதிவிற்கும்...மனப்பூர்வமான வாழ்த்துகள்!

    கீதா: ஐயா தங்களுக்கு எழுந்த இந்த சந்தேகம் என் மகனுக்கும் பள்ளியில் படித்த காலத்தில் தோன்றியது. ஒன்பது நூறுகள் தானே 900.....அது போன்று ஒன்பது பத்துகள்தானெ 90 இதனை ஏன் தொண்ணூறு என்றும் 900 தொள்ளாயிரம் என்றும், 10 ற்கு முன் ஒன்பது என்றும் சொல்லுகின்றனர். 9000 சரியாக ஒன்பதாயிரம் என்று சொல்லுகின்றோமே. ஏன் அவை மூன்றும் மட்டும் மாறி வருகின்றன?
    இருபது என்பது இரு பத்து, முப்பது என்பது மூன்று பத்து....எண்பது என்பது எட்டு பத்து அப்போ 90 என்பது? அப்போ ஒன்பது எப்படி 10ன் முன் வரும்...ஒன்பது சரியல்ல என்றால் ஒன்பதாயிரம்? ஒன்பதிலிருந்தே ஆரம்பமாகின்றது இந்தக் குழப்பம் என்று வாதிடுவான். நானும் யோசித்ததுதான் என்றாலும் விடை கிடைக்கவில்லை...யாராவது தீர்த்துவைத்தால் நல்லதுதான் ஐயா...

    பதிலளிநீக்கு
  15. எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு வாழ்த்து

    பதிலளிநீக்கு
  16. சச்சின் ௧௦௦ நூறுகளை எப்போது அடிப்பார் என்று ஆவலாக இருந்தோம்... இப்பொழுது உங்கள் ௧௦௦௦ தை எதிர்பார்த்து....

    பதிலளிநீக்கு
  17. சார்....

    நீங்க

    போய்க்கிட்டே

    இருங்க...

    நாங்க...

    வந்துட்டே

    இருக்கோம்,

    இறை நாட்டம்...

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அய்யா!
    வாழ்த்தி வணங்குகிறேன்.
    தங்களது எழுத்துக்கள் நிரந்தரமானவை
    எந்த நிலையிலும் அதற்கு நிரந்தர கண்ணயர்வு இல்லை!

    மிக மிக விரைவில் 1000 வது பதிவு வழங்கி சிறப்பிக்க வேண்டுகிறேன்.
    நன்றி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  19. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூ ர்வ சிந்தாமணி என்ற பட்டத்தை, உங்களுக்கு இப்போதே தந்து மகிழ்கிறேன் !

    பதிலளிநீக்கு
  20. 900 பதிவுக்கும், 80 வயதுக்கும் வாழ்த்தி வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  21. அய்யா வணக்கம், அய்யா. வாழ்த்துகள்.
    சென்னைப் பித்தன் அய்யா சொன்னது போல விரைவில் 1000 தொடுவீர்கள்.
    (900வது என்பது பிழைதான் அய்யா. 900ஆவது என்று வரவேண்டும். இந்தச் சிக்கலை, நீங்கள் எழுதியதுபோல தொள்ளாயிரம் என்று எழுதுவதால் தீர்க்கலாம். இதுபற்றிய எனது பதிவு பார்த்தீர்களா? “மூனு சுழி ண, ரெண்டு சுழி ன “ நேரமிருக்கும்போது பார்க்க வேண்டுகிறேன்.
    தங்கள் உடல்நலத்தோடு, பதிவு நலமும் வளர வாழ்த்தி வணங்குகிறேன். (இந்த உங்களின் பதிவை மனதில் வைத்து, இன்றைய எனது பதிவில் உங்கள் படத்தைச் சேர்த்திருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  22. 900 வது பதிவிற்கு வாழ்த்தி வணங்குகிறோம் ஐயா.

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துக்கள், தொடரட்டும் சேவை. ஆயிரம் தாண்டி கோடி கூடட்டும்.

    பதிலளிநீக்கு
  24. 900 ல் அனுபவப் பதிவுகளே அதிகம், அவை எமக்குப் பாடங்கள்!
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு