செவ்வாய், 20 மார்ச், 2012

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை


இந்தியாவில் இன்று அநேகரிடம் பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது. அது எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பெரிய பொருளாதார நிபுணர்கள் விளக்கவேண்டிய ஒரு பொருள். நான் எழுத வந்ததற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், பெரும்பாலானவர்கள் நல்ல வசதியுள்ளவர்களாகவும் தங்கள் வாரிசுகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கக்கூடிய நிலையிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில் அதிக வசதியுள்ளவர்களின் வாரிசுகளே படிக்கிறார்கள். அவர்களின் பேச்சுகளும் பழக்க வழக்கங்களும் பணக்கார தோரணையில் அமைகின்றன. அவர்களுக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் ஒரு ஏழைக்குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.


இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவார்கள். நல்ல சம்பளம் வாங்குவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கே நேரம் இருப்பதில்லை. தங்கள் குழந்தைகளின் விருப்பு-வெறுப்பு என்ன, யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் படிப்பு எப்படியிருக்கிறது, என்ன மார்க் வாங்குகிறார்கள், என்ற விஷயங்களெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாது. காரணம், நேரமில்லை. அதனால் இந்தக் குறைபாட்டை ஈடு கட்ட தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் கேட்கும் எதையும் வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள்.


இந்த வாரிசுகள் இரு பாலரும் (ஆண்-பெண்) கல்லூரிக்குச் செல்லும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன. அது ஒரு இரண்டும் கெட்டான் வயது. நல்லது கெட்டதுகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத பருவம். அந்த வயதில் அவர்களை சரியான வழியில் செலுத்தக்கூடிய ஆலோசனைகள் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்களின் நண்பர்களிடமிருந்தே இந்த ஆலோசனைகள் கிடைக்கின்றன. நணபர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்ல ஆலோசனை கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் திசை மாறிப்போக வாய்ப்புகள் அதிகம்.


அடிப்படையில், நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு கூட, அந்த வயதிற்குண்டான, எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுவது இயற்கை. இந்த ஆர்வத்தை பெற்றோர்கள் செம்மைப்படுத்தி சரியான வழி காட்டவேண்டும். அதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாததால் வாரிசுகள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள்.  செல்போன், கம்ப்யூட்டர், இரு சக்கர வாகனம், பாக்கெட் மணி, இவையெல்லாம் தங்கு தடையில்லாமல் கிடைக்கின்றனகட்டுப்பாடு இல்லாததால் வாரிசுகள் தங்கள் இஷ்டம்போல் நடக்க ஆரம்பிக்கிறார்கள்உலகம் என்பது உல்லாசம் அனுபவிக்கத்தான் என்ற எண்ணம் இந்த வயதில் இந்த வாரிசுகளுக்கு மேலோங்கி விடுகிறது.


வாகனவசதிகள் இருப்பதால் நண்பர்களுடன் முதலில் ஊர் சுற்றுகிறார்கள். பெரிய ஓட்டல்களில் சாப்பிடுகிறார்கள். பெண்களின் நட்பும் சகவாசமும் கிடைக்கிறது. ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். இந்த வயதில் இருக்கும் பாலுணர்வு காரணமாகவும், எதையும் அனுபவிக்கவேண்டும் என்ற தூண்டுதலாலும் பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுகின்றன.


இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். இந்தக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாய் பிரண்ட் தேவைப்படுகிறார்கள். அப்படி பாய் பிரண்ட் இல்லையென்றால் அவர்கள் கல்லூரி மாணவ சமுதாயம் அவர்களை இளக்காரமாகப் பார்க்கிறது. அது மட்டும் இல்லாமல் அந்த பாய் பிரண்டுடன் எவ்வளவு நெருக்கமாக பழகுகிறாளோ அந்த அளவிற்கு அவளுக்கு கிரேடு கூடுகிறது.

இப்போது படித்தவுடன் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் துறையில் பல ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. கல்லூரிப் பழக்க வழக்கங்களே அங்கும் தொடர்கின்றன. இந்த நிலையில் பெற்றோர் தேவைப்படாதவர்களாக ஆகிவிடுகின்றனர். பெற்றோர்களும் இது நாள் வரை இருந்த வளர்ப்பு முறையை மாற்ற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கலாசாரத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் தினமும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கிறோம். முளையில் கிள்ளி எறிய வேண்டிய செடியை பெரிய மரமானபின் பிடுங்க முயல்கிறோம். ஆனால் முடிவதில்லை.


காலத்தின் கோலத்தைக் கண்டு மனம் வெதும்பத்தான் முடியும்.


ஞாயிறு, 18 மார்ச், 2012

இன்கம்டாக்ஸ் கட்டவேண்டுமா?

உங்களுக்கு வருட வருமானம் 2 லட்சத்திற்கு மேல் வருகிறதா? அப்படியானால் நீங்கள் வருமான வரி கட்ட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.

வருமான வரியா? நான் சம்பாதிக்கிறேன், அதுக்கு எதுக்கு வரி என்று வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி நினைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சில பேர் அரசு போடும் சட்டங்களை வேத வாக்காக எடுத்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் சாதாரண சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 2 1/2 லட்சம் வரை வரி இல்லை. அதே நீங்கள் ஸ்பெஷல் சீனியர் சிடிசன் ஆக இருந்தால் 5 லட்சம் வரை வரி இல்லை. அதென்ன ஸ்பெஷல் சீனியர் சிடிசன் என்கிறீர்களா? நியாயமாகப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவர்கள். இன்னும் இருந்துகொண்டு பல பேர் உயிரை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள். அதாவது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

சில சேமிப்புகள் செய்திருந்தால் 1.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அதாவது 2 லட்சம் +1.2 லட்சம் = 3.2 லட்சம் வரைக்கும் வரி கட்டவேண்டாம்.
சீனியர் சிடிசன்களுக்கும் இவ்வாறே. இதற்கு மேல் வருமானம் வந்து நீங்கள் வருமான வரி கட்டவேண்டுமென்று நினைத்தால் ஒரு வருமான வரி ஆலோசகரை நாடவும். இதற்கு முன்னால் வரி கட்டி அனுபவம் இருந்தால் நீங்களே அதற்குண்டான நடவடிக்கைகளைத் தெரிந்திருப்பீர்கள்.

மாத சம்பளம் வாங்கும் (அரசு அல்லது அரசு சாரா) பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த அலுவலகம் மூலமாகவே வரி பிடித்தம் செய்து விடுவார்கள். சிறு வியாபாரம் அல்லது சிறிய தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் வரி கட்டவேண்டிய அளவிற்கு வருமானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அப்படியே வரி கட்டவேண்டிய அளவு வருமானம் இருந்தாலும் இந்த விஷயத்தை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை.

பெரிய வியாபார நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிச்சயம் வரி கட்டவேண்டி வரும். இதற்காக அவர்கள் நல்ல திறமைசாலிகளான ஆடிட்டர்களை வைத்திருப்பார்கள். இந்த ஆடிட்டர்களுடைய வேலையே என்னவென்றால் அவர்களுடைய வாடிக்கையாளர்களின் வரிப் பளுவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதுதான். இதில் நியாய-அநியாயம் பார்க்கமாட்டார்கள். எப்படியோ வரி கட்டுவது குறைந்தால் சரி என்று ஆடிட்டரும் வாடிக்கையாளரும் இருந்து கொள்வார்கள்.

இப்படி வரி கட்டாமல் சேர்க்கும் வருமானம்தான் பிளாக் மணி என்று சொல்லப்படும் கறுப்புப் பணம். இப்படி சேர்ப்பவர்களைப் பற்றி தகவல் சேர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இப்படிப்பட்ட விவரங்களை வருமான வரி இலாக்காவிற்குச் சொல்வதால்தான் பலர் வீடுகளில் வருமான வரிச்சோதனைகள் நடைபெறுகின்றன. இதில் கறுப்புப் பணம் எவ்வளவு கண்டுபிடிக்கப்படுகிறதோ அதில் 10 % கமிஷன் இந்த விபரம் கொடுத்த நபருக்குப் போய்ச்சேரும்.

வரி கட்டும் அளவிற்கு வருமானம் வந்தும், வரி கட்டாதவர்களை சட்டம் என்ன செய்யும்? இது ஒரு பெரிய கேள்வி. எனக்கு இதில் நேரடியான அனுபவம் இல்லை. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட வரையில் அப்படிப்பட்டவர்களில் இளிச்சவாயர்கள் சிலரைப் பிடித்து ஃபைன் போட்டு உபத்திரவம் செய்வார்கள். கெட்டிக்காரர்கள் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். நான் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதுவரை மாட்டவில்லை.

இன்கம்டாக்ஸ் அதாவது வருமானவரி குறித்து மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் கன்சல்டேசன் பீஸ் வாங்கிக்கொண்டு அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறேன்.

வருமான வரி கட்டாமல் எல்லோரும் நீண்ட ஆயுளுடன் வாழ்க.



வியாழன், 15 மார்ச், 2012

சிறு வயதில் நான் செய்த ஜகஜ்ஜால புரட்டுகள்

பாக்கெட் மணி என்ற வழக்கம் தோன்றாத காலத்தில் நான் படித்தேன். வீட்டில் தினம் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் இனிப்பு பலகாரம் கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு செட் புது துணி கிடைக்கும்.

அவ்வப்போது நான் செய்யும் லீலைகள் வெளியானால் பூசை கிடைக்கும். அவ்வளவுதான். இதைத் தவிர வேறொன்றும் எதிர்பார்க்கக்கூடாது. எதிர் பார்த்தாலும் பிரயோஜனமில்லை.

நான் ஹைஸ்கூலில் நான்காவது பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது இந்த வாழ்க்கை போரடித்தது. முக்கியமாக சினிமாக்கள் பார்க்கவேண்டும். தேங்காய் பர்பி சாப்பிடவேண்டும். கேக் சாப்பிடவேண்டும். இப்படியெல்லாம் சிலபல விபரீத ஆசைகள் தோன்றலாயின.

என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்ததில் ஒரு வழி புலனாயிற்று.  என் நண்பன் ஒருவனின் அப்பா புஸ்தகம் பைண்டிங்க் செய்வார். அவன் வீட்டிற்குப் போயிருந்த சமயங்களில் அதை நான் கவனித்திருந்தேன். ஓரளவு அந்த வித்தையில் தேர்ச்சியும் பெற்றிருந்தேன்.

ஏன் நாம் கற்ற வித்தையை நம் வாழ்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நாள் புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி எனக்கும் வந்தது. உடனே அதற்கான வழி முறைகளில் இறங்கினேன். புஸ்தகங்கள் பைண்ட் செய்து கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தேன். எல்லாம் வாய் வார்த்தைகள் மூலமாகத்தான். சில பையன்கள் புஸ்தகங்களை பைண்ட் செய்யக் கொடுத்தார்கள்.

நானும் அவைகளைப் பைண்ட் செய்து கொடுத்தேன். தொழில் சுத்தமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெருகினார்கள். ஒரு புத்தகம் பைண்ட் செய்ய நாலணா செலவு ஆகும். நான் வாடிக்கையாளர்களிடம் எட்டணா வாங்குவேன். சும்மா 100 பர்சென்ட் லாபம் மட்டுமே.

இப்படி நான் படிக்கும்போதே ஒரு தொழிலதிபர் ஆனேன். பர்பி, கேக் எல்லாம் சாப்பிட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து தொழில் நசித்து விட்டது. காரணம் ஞாபகமில்லை.

செவ்வாய், 13 மார்ச், 2012

இட்லி சாப்பிடுவது எப்படி?


என்னய்யா இது? தமிழ் நாட்டுல பொறந்தவனுக்கு இட்லி கூட சாப்பிடத் தெரியாதா? இதுக்கு ஒரு பதிவான்னு கேக்கறவங்கவெல்லாம் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. உண்மையில் இட்லியை முழுவதுமாக அனுபவித்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களெல்லாம் முன்னால வாங்க.

நான் சொல்றத கவனமாக் கேட்டுக்குங்க.

மொதல்ல மாலை நேரத்தில் இட்லி மாவை ஆட்டுக்கல்லில் ஊறவைத்த அரிசியையும், உளுந்துப்பருப்பையும், கையால் ஆட்டி மண் சட்டியில் எடுத்து வைக்கவும். மறுநாள் காலையில் அதை இட்லியாக சுடவும். இட்லி சுடுவதற்கு மண் பானைதான் பயன்படுத்தவேண்டும். இந்த டெக்னிக் தெரியாதவர்கள் 80 வயதுக்கு மேல் உயிருடன் இருக்கும் பாட்டிமார்களை அணுகித் தெரிந்து கொள்ளவும்.

நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக்கொண்டு அதைச் சிதறி, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி, இஞ்சி, கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து ஆட்டுக்கல்லில் நன்றாக அரைக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார். அதில் கடுகு, உளுத்தம்பருப்பை நல்லெண்ணையில் தாளித்துக்கொட்டவும்.

ஒரு அரை லிட்டர் துவரம்பருப்பு வேகவைத்து சின்னவெங்காயம் நிறைய சேர்த்து சாம்பார் வைத்துக்கொள்ளவும்.

வீட்டில் பக்குவமாகத் தயார் செய்த இட்லிப்பொடி ஒரு 200 கிராம் எடுத்து தேவையான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே (செக்கில் ஆட்டிய)  நல்லெண்ணை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது அப்போதுதான் சுட்ட சூடான இட்லி நான்கை ஒரு தட்டில் போட்டுக்கொள்ளவும். இரண்டு இட்லியின் மேல் இரண்டிரண்டு ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றவும். அந்த இட்லிகளை பிய்த்து சட்னியில் முக்கி வாயில் போட்டு மென்று சாப்பிடவும். ருசியை அனுபவிக்கவும்.

மீதி இருக்கும் இரண்டு இட்லிகள் முங்கும் அளவிற்கு சாம்பார் ஊற்றவும். குழி பிளேட்டாயிருந்தால் உத்தமம். ஒரு ஸ்பூன் உபயோகப்படுத்தி அந்த இரண்டு இட்லியையும் சாம்பாருடன் கலக்கி சாப்பிடவும்.

இப்போது ஒரு இட்லி மிச்சம் இருக்கும். அது இட்லிப்பானையின் அடித்தட்டில் வெந்த இட்லி. அதற்கு இட்லிப்பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.

இதுதான் முதல் ரவுண்டு. குறைந்தது மூன்று ரவுண்டாவது சாப்பிட்டால்தான் இட்லி சாப்பிட்டதன் பலன் தெரியும்.


திங்கள், 12 மார்ச், 2012

கல்யாண வீட்டில் நான் செய்த திருட்டு


ஒரு கப் காபியோ அல்லது ஒரு கப் பாயசத்துடன் வந்துவிடலாமே. " மெடிக்கல் ட்ரீட் மென்டில் இருக்கிறேன் கட்டாயபடுத்தாதீர்கள்" என்று சொல்லிவிடுங்கள். 


மேற்படி பின்னூட்டம் நான் கல்யாண விருந்துகளில் நடக்கும் சமையலைப் பற்றி எழுதிய பதிவுக்கு வந்திருந்தது.


கக்கு-மாணிக்கம் சொன்ன யோசனை நல்ல யோசனையாகவும் நடைமுறைக்கு ஒத்து வருவதாகவும் தோன்றியது. இதை உடனே பரிசோதித்துப் பார்க்க ஆவலுற்றேன்.


பழங்காலத்தில் கல்யாண மண்டபங்களின் அமைப்பு எப்படியென்றால் மண்டபத்தின் முகப்பில் வாசல் இருக்கும். அதன் வழியாகத்தான் வுருந்தினர்கள் எல்லோரும் உள்ளே போக முடியும். வெளியே வருவதென்றாலும் அதே வாசல் வழியாகத்தான் வரவேண்டும். ஆகவே கல்யாணக்காரர்களுக்குத் தெரியாமல் கல்யாணத்திலிருந்து வர முடியாது. அப்போது சாப்பிடாமல் வந்தால் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இப்போது கல்யாண மண்டபங்கள் மிகவும் முன்னேறியுள்ளன. உள்ளே போகும் வழியில் சென்று கல்யாணக்காரர்களிடம் ஆஜர் கொடுத்துவிட்டு உள்ளே போனால் ஜனங்கள் அமரும் ஹால். அங்கு இரண்டொருவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு உள்ளே போனால் டைனிங்க் ஹால். முன்பெல்லாம் விருந்தினர்களை சாப்பிட வாருங்கள் என்று யாராவது அழைப்பார்கள். இப்போதெல்லாம் அப்படி யாரும் அழைப்பதில்லை. சாப்பிடவேண்டுமென்றால் சாப்பிடலாம். இல்லையென்றால் அப்படியே வெளியில் வந்தால் கார் பார்க்கிங்க் வந்துவிடும். வண்டியை எடுத்துக்கொண்டு அப்படியே எஸ் ஆகிவிடலாம்.

நான் இந்த டெக்னிக்கைக் கடைப்பிடித்து அரை கப் டீ மட்டும் குடித்து விட்டு வந்தேன். மொத்தமாக அரை மணி நேரம்தான் ஆகியது. வீட்டிற்கு வந்து இரண்டு தோசை சாப்பிட்டு விட்டுப் படுத்து விட்டேன். ஆரோக்யமாக இருந்தது.

இந்த யோசனை சொன்ன கக்கு-மாணிக்கத்திற்கு மிக்க நன்றி.


சனி, 10 மார்ச், 2012

களை எடுப்பது மகா குற்றம்.


தெரு நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது என்று மனேகா காந்தி என்று ஒருவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இப்போது நெரு நாய்களைக் கொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தெருநாய்கள் பொது ஜனங்களுக்குத் தொந்திரவாக இருந்தால் சாத்வீக முறையில் அவைகளைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து விட்டால் அப்புறம் தெரு நாய்கள் இல்லாமல் போய்விடும். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது

அதாவது கொக்கை எப்படி பிடிக்கிறது என்று ஒருத்தன் கேட்டானாம். அதற்கு மற்றொருவன் சொன்னானாம், நல்ல வெயில் அடிக்கும்போது கொக்கு தலையில் ஒரு கை வெண்ணெயை வைத்து விட்டால், அந்த வெண்ணை உருகி, கொக்கின் கண்ணை மூடிவிடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம். அது மாதிரிதான் இந்தத் திட்டமும்.

ஆனாலும் தெரு நாய்கள் வருடாவருடம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே தவிர குறைந்த மாதிரி காணோம். நாம்தான் சிந்தனையாளராயிற்றே? இந்தப் பிரச்சினை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது சில பல கருத்துக்கள் தோன்றின. உலக நன்மையை முன்னிட்டு அந்தக் கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

ஜீவகாருண்யம் என்பது உயிர்களைக் கொல்லாமல் இருப்பது. சரிதானே? அதனால்தானே தெரு நாய்களுக்காக மனேகா காந்தி போராட்டம் நடத்தினார்கள். எனக்குத் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பல மனிதர்கள் இந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் மாமிசங்களை உண்கிறார்களே, அவர்களுக்கு அந்த மாமிசம் எங்கிருந்து கிடைக்கிறது? அந்த ஆடு மாடு கோழிகளையெல்லாம் கொல்லாமலே அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா அல்லது அவைகளைக் கொன்றுதான் அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா? அப்படி அவைகளைக் கொல்கிறார்கள் என்றால் அது ஜீவகாருண்ய அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா?

இந்த எண்ணம் தோன்றிய நாளிலிருந்து என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. இப்படியே தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு எண்ணம் தோன்றியது.

நான் ஒரு விவசாயப் பட்டதாரி. செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்று நான் படிக்கும்போது சொல்லிக் கொடுத்தார்கள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியானால் அந்த செடிகொடிகளைக் கொன்றுதானே நாம் சாப்பிடுகிற அரிசி, பருப்பெல்லாம் கிடைக்கிறது? எந்த உயிரானாலும் கொல்லாமலிருப்பதுதானே ஜீவகாருண்யம்? இதை ஏன் ஒருவரும் அந்த மனேக்காவுக்குச் சொல்லவில்லை?

சரி, இப்படி வைத்துக்கொள்வோம். அந்த செடிகளெல்லாம் இறந்த பிறகுதான் அதிலிருந்து அரிசி பருப்பெல்லாம் எடுக்கிறோம் என்று வைத்துக் கொளவோம். அப்போது வேறொரு எண்ணம் உதித்தது. உதாரணத்திற்கு நெல் பயிரை எடுத்துக் கொள்வோம். நெல் பயிர் வளரும்போது கூடவே வேறு செடிகளும் வளருகின்றன. விவசாயிகள் அவைகளை களைகள் என்று கூறி அவைகளைப் பிடுங்கி விடுகிறார்கள். அந்தக் களைச் செடிகள் உயிருள்ளவைதானே. அவைகளைப் பிடுங்கி எறிவது ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்தானே?

இதை ஏன் இதுவரை ஒருவரும் எதிர்த்து பிரசாரம் பண்ணவில்லை? இனிமேல் யாரும் களை எடுக்கக்கூடாது என்று ஏன் மனேக்கா காந்தி சொல்லவில்லை? இந்த எண்ணம் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது. அதனால் நான் உடனடியாககளை பிடுங்க எதிர்ப்புகட்சி ஆரம்பித்து கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன். வெளிநாட்டுப் பணங்கள் அதிக அளவில் பெறும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மகத்தான ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.

மேலும் நமது உயிருக்கும் மேலான பதிவுலகக் கண்மணிகளும் ஆதரவு கொடுத்தால், இந்தக் களை பிடுங்கா போராட்டம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி, உறுதி, உறுதி.