திங்கள், 22 டிசம்பர், 2014

சில பதிவர்களின் அக்கிரமம்.

இன்று கீழ்க் கண்ட பதிவை தமிழ்மணம் திரட்டியில் பார்த்தேன்.


VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மு.பொ.போ.மு.க. உதயம் !!

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இது ஒரு நெடுங்கதை. இதற்கு விமர்சனம் எழுதுவதானால் அது ஒரு நாவலில்தான் முடியும். ஆகவே சுருக்கமாக சொல்லுகிறேன்.

எந்த ஒரு ஆபீசிலும் இந்த மாதிரி ஸ்ரீனிவாசன்களைக் காணலாம். வெறும் சவடால் அடித்துக் கொண்டே காலத்தை ஓட்டுவார்கள். மற்றவர்களை குல்லாய் போட்டே தங்களை காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இத்தகைய ஒரு நபரை கதாசிரியர் தான் வேலை செய்த ஆபீசில் பார்த்திருக்கவேண்டும்.

அதை அடிப்படையாக வைத்து இந்த நெடுங்கதையை பின்னியிருக்கிறார். நம் கதை நாயகருக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு நிலைகள்தான். ஒன்று வழுவட்டை நிலை, அடுத்தது எழுச்சி நிலை. இந்த இரண்டு வார்த்தைகளும் அவர் வாயில் இருந்து அனாயாசமாக வெளி வருகின்றன. சோர்விற்கு அவர் “வழுவட்டை” என்றும் சுறுசுறுப்பிற்கு “எழுச்சி” என்றும் கூறுகிறார் என்பது புலனாகிறது. இது ஏதாவது ஒரு ஊரின் வட்டார வழக்காக இருக்கலாம். கதையைப் படித்து முடிக்கு முன் நாமும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மிகவும் பரிச்சயமாகி விடுகிறோம்.

அவர் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கூறும் தத்துவங்கள் ஒவ்வொரு பிரம்மச்சாரியும் அறிந்து கொள்ள வேண்டியவை. இதை அவர் நம் இளம் கதாநாயகனுக்கு போதிக்கும் முறை இருக்கிறதே, அது 60 வயதில்தான் வரும். அவருடைய துபாய் டூரைப்பற்றிய விவரங்கள் ஒரு தனி பாணி.

எல்லாவற்றிலும் இசையில் சுருதி போல ஆதாரமாக ஓடுவது பொடி உபயோகம்தான். அதன் மேல் உள்ள ஈர்ப்பு, மற்ற எல்லா ஆசைகளையும் புறந்தள்ளி விடுகிறது. பொடி போடும் உத்தி எத்தனை வகைப்படும் என்று அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். பொடி போடுபவர்கள் செய்யும் அட்டூழியங்களையும் அப்படியே புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் ஆசிரியர். நேரடி அனுபவம் இல்லாமல் இப்படி விவரிப்பது சாத்தியமில்லை.

அவர் ரிடையர் ஆகுமுன் அனைவருக்கும் பொடி டின் பரிசளிப்பது அவருடைய பொடி மோகத்திற்கு ஒரு முத்தாய்ப்பு.

ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

சனி, 20 டிசம்பர், 2014

ஐரோப்பாவின் சில கோட்டைகளும் பூந்தோட்டங்களும்

Picasa என்ற மென்பொருளை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். உங்கள் கணிணியில் நிறுவியும் இருப்பீர்கள். ஆனால் அதிலுள்ள சில வசதிகளை முழுமையாக உபயோகித்திருப்பீர்களா என்பது சந்தேகமே.

அதில் create என்கிற மெனுவில்  video என்று ஒரு ஆப்ஷன் இருக்கிறது. இதை உபயோகித்து ஒரு ஸ்லைடு ஷோ உருவாக்க முடியும். பவர் பாய்ன்ட் ஸ்லைடு ஷோ வேறுமாதிரியானது. பிகாசாவின் ஸ்லைடு ஷோவை நாம் யூட்யூபில் பதிவேற்றலாம். பவர்பாய்ன்ட் ஸ்லைடு ஷோவை யூட்யூபில் பதவேற்ற முடியாது.

நமக்குப் பிடித்த படங்களையும் நமக்குப் பிடித்த பாடலையும் கொண்டு நாம் இந்த ஸ்லைடு ஷோவை உருவாக்கலாம். அப்படி நான் உருவாக்கி யூட்யூப்பில் பதிவேற்றிய ஒரு ஷோவை இங்கே கொடுத்துள்ளேன். கண்டு ரசியுங்கள்.


                          

உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.


வெள்ளி, 19 டிசம்பர், 2014

என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும்


1962 ம் வருடம். அப்போது எனக்கு 28 வயது. கல்யாணம் ஆகவில்லை. ஆனால் குடும்பப் பொறுப்பு முழுவதும் என் தலையில். என் தகப்பனார் குடும்பச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத மன நிலையில் பொறுப்பை என்னிடம் விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தேசாந்திரம் சென்று விட்டார்.

அப்போது இந்தப் படம் வந்து சக்கைப்போடு போட்டது. அதில் இடம் பெற்ற "சிங்கார வேலனே " பாட்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அப்போது இருந்த பாட்டுக்கேட்கும் சாதனங்கள் ரேடியோவும் கிராமபோன் பிளேயரும்தான்.

என்னிடம் ரேடியோ கூட கிடையாது. எங்காவது ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போது இந்தப் பாட்டு ஏதாவது கல்யாண வீட்டில் இருந்தோ அல்லது கோயில் திருவிழாவிலிருந்தோ, ஒலி பெருக்கி மூலம் மூலம் காதில் விழுந்தால் அந்தப் பாட்டு முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.

அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், எனக்கு வசதி வந்தால் ஒரு கிராமபோன் பிளேயரும் இந்தப் பாட்டின் ரெக்கார்டும் வாங்கி சலிக்கும் வரைக்கும் கேட்கவேண்டும் என்பதுதான்.

                           

காலம் மாறியது. தொழில் நுட்பங்கள் மாறின. எனக்கு வசதி வந்த நாளில் கிராமபோன் மிஷின் காணாமல் போயிற்று. ஆனலும் என்ன? அதன் இடத்தில் வேறு நுட்பங்கள் வந்து விட்டன.

டேப் ரிகார்டர் வந்து ஒரு இருபது ஆண்டுகள் கோலோச்சியது. ஐபாட் வந்தது. உங்கள் அபிமான பாடல்களை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு போகலாம். ஆனாலும் இன்று வந்துள்ள டேப்ளட்டுகளும் கிண்டில் கருவிகளும் இசை கேட்கும் அனுபவத்தை தலைகீழாய் மாற்றிவிட்டன.

இன்று, இதோ என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் என் கைப்பிடியில் எனக்காகப் பாடுகிறார்கள். என் பெட்ரூமில் கச்சேரி மேடையே போட்டாகி விட்டது. சுதா ரகுநாதனின் கச்சேரியைக் கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்து கேட்டது போய், இப்போது என் கைக்கெட்டும் தூரத்திலிருந்து பாடுவதைக் கேட்க, காண முடிகிறது.

இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை உண்டாக்கி, அந்தக் கருவிகளை வாங்கி இந்த இன்பங்களை அனுபவிக்க பழனி. கந்தசாமிக்கு அருள் புரிந்த அந்த சிக்கில் சிங்கார வேலவனுக்கும் என்னப்பன் பழனி முருகனுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.                                  

புதன், 17 டிசம்பர், 2014

பாப்பாத்தி அம்மா மாடு வந்திருச்சு

                                   


ஒரு ஊர்ல ஒரு சின்ன அக்ரஹாரம். அதுல பதினைந்து வீடுகள். எல்லொருக்கும் நிலம் நீச்சுன்னு சௌகரியமா வாழ்க்கை ஓடிண்டிருக்கு. ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு பசுமாடு. சாஸ்திரோக்தமா பூஜைக்கு தீட்டுப் படாத பசுமாட்டிலிருந்து பால் கறந்துதான் சாமிக்குப் படைக்கணும். அதுக்காகத்தான் அவாளவாள் ஆத்தில பசுமாடு வளர்க்கறா.

ஆனாப் பாருங்கோ, அந்தப் பசுமாட்டப் பாத்தா எல்லா மாமிகளுக்கும் பயம். அது கொம்பை ஆட்டினா ஐயோன்னு கத்திண்டு எல்லோரும் ஆத்துக்குள்ள ஓடிடுவா. அதனால இந்தப் பசு மாட்டுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போய் சாயந்திரம் கொண்டுவந்து கொட்டிலில் கட்டிவிட்டுப் போவதற்கு ஒவ்வொரு ஊர் அக்ரஹாரத்திற்கும் ஒரு மாட்டுக்காரன் இருப்பான்.

நான் சொல்றதெல்லாம் 100 வருடத்திற்கு முந்தைய கதை. இன்னிக்குத்தான் பூத் பால்தான் எல்லாத்துக்கும்னு ஆயிப்போச்சே. பாக்கெட் மேலே கொஞ்சம் ஜலம் தெளிச்சா  தீட்டு எல்லாம் போயிடும்கறது சாஸ்த்ரம்.

இப்படி இருக்கச்சே, ஒரு நாள் ஒரு மாமிக்கு இந்த மாட்டுக்காரன் பேர்ல கோவம். முந்தின நாள் அரைப் படி பால் கொறச்சலாக் கறந்தா கோவம் வராதா? அதனால அன்னிக்குக் காலைல மாட்டுக்காரனை சத்தம் போட்டுட்டள். நீ மாட்டை சரியா மேய்க்கல, அதனாலதான் பால் கொறஞ்சு போச்சுன்னு சத்தம் போட்டாச்சு.

அன்னிக்கீன்னு பாத்து அந்த மாட்டுக்காரன் ஊட்லயும் அவன் பொண்டாட்டி கூட அவன் சண்டை போட்டுட்டு வந்திருக்கான். மாமியும் இப்படி சத்தம் போட்டதால, அவனுக்கு கோவம் இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு. இருந்தாலும் மாமி கிட்ட கோவத்தைக் காட்ட முடியுமோ. பேசாமல் போய்ட்டான். பகல் பூராவும் அவனுக்கு மனசே சரியில்லை. இந்த மாமி இப்படிக் கேட்கலாச்சே என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டிருந்தான்.

அதனால் என்ன பண்ணினான் என்றால் அந்த மாமியின் மாடு அவாள் வீட்டுக்கு எதிரில் வந்தவுடன் " பாப்பாத்தியம்மா, மாடு வந்துட்டுது, புடிச்சுக் கட்டிக்கோ" அப்படீன்னு சத்தமாச் சொல்லீட்டு போய்ட்டான். அந்தக் காலத்தில சூத்திரப் பயலுகளுகளெல்லாம் எல்லா அய்யர்களையும் பாப்பான் என்று சொல்லித்தான் பழக்கம். நேர்ல பாக்கறப்ப "சாமி" அப்படீம்பான்.

இப்படி ஆன பிறகு அந்த மாமி என்ன செய்தாள் என்பது வேற கதை. இந்த சொலவடை ஏன் வந்தது என்றால் ஒரு வேலையை அரைகுறையாக முடிப்பவனுக்காகச் சொல்லப்படுவது.

இந்தக் கதை பாப்பாத்தியம்மாள் கதையாதலால் ஆங்காங்கே அவாள் பாஷை வந்து விட்டது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அய்யர்களே தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது அடுத்தவனை "அந்தப் பாப்பான் எதிர்ல வந்தான் அதனாலதான் அந்தக் காரியம் நடக்கல" என்று பேசிக்கொள்வார்கள். ஆகவே நான் ஒன்றும் பெரிதாகத் தவறு இழைத்து விடவில்லை என்று நம்புகிறேன்..

வலைச்சர ஆசிரியர் பணி முடிந்தவுடன் நான் எழுதிய பிரிவுரையில் இந்தப் பழமொழியைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தக் கதையை ஒரு தனி பதிவாகப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனால்தான் இந்த்ப பதிவு.

திங்கள், 15 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 4

                                                 

                                                    

அய்யப்பன் புலி மீது வருகிறார். நாம் சிங்கத்தின் மீது ஏறி சவாரி செய்வோம்
உங்கள் டேஷ்போர்டு சென்று Template பட்டனை அழுத்தி கீழே தெரியும் ஸ்க்ரீன் வரை வந்து விட்டீர்களா? இது வரை செய்ததெல்லாம் ஜுஜுபி. இனிமேல் செய்யப் போவதுதான் உண்மையில் கம்ப்யூட்டர் மூளையில் கைவைப்பது. கொஞ்சம் கை நடுங்கினாலும் பேஷன்ட் குளோஸ்.



இதில் இருப்பவைகளை எல்லாம் கொஞ்சம் சாவதானமாகப் பார்த்து மனதில் இருத்திக்கொள்ளவும்.

இடது பக்கம் My Blogs என்று இருப்பவைகளுக்கு கீழே இருக்கும் பல பட்டன்களில் Template என்ற பட்டனை அழுத்தி நாம் இந்த ஸ்கிரீனுக்கு வந்திருக்கிறோம்.

இதில் உள்ள Backup/Restore பட்டனை அழுத்திக் கிடைத்த பைலை பத்திரமாக வைத்திருக்கிறோம்.

இப்போது Edit HTML என்ற பட்டனை அழுத்தவும். கீழே பார்க்கும் ஸ்கிரீன் வரும்.


கட்டத்திற்குள் இருப்பவைதான் நம் பிளாக்கின் புரொக்ராம். இந்தக் கட்டாத்திற்கு மேலே பல பட்டன்கள் இருப்பதை நன்றாகக் கவனிக்கவும். முதல் பட்டன்தான் "ஒன் ஸ்டெப் பேக்"  பட்டன். தொடைநடுங்கி வீரர்களுக்கானது. அவர்கள் இந்த பட்டனை அழுத்தினால் வீட்டிற்குப் போய் சுகமாகப் போர்த்திக்கொண்டு தூங்கலாம்.

அடுத்த பட்டன் நம்மைப்போன்ற சிங்கங்களுக்கானது. டெம்ப்ளேட்டுக்குள் நம் வேலை முடிந்ததும் இந்த Save Template  பட்டனை அழுத்தினால் கொஞ்ச நேரம் கழித்து எல்லாம் நார்மலுக்கு வந்து விடும். அவ்வளவுதான் ஆபரேஈன் சக்சஸ் பாடவேண்டியதுதான்.

ஆபரேஷனைப் பார்ப்போமா. இந்த கட்டத்திற்குள் உங்கள் கர்சரைக் கொண்டு போய் ஒரு லெஃப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் இந்த டெம்ப்ளேட் பெட்டிக்குள் இருக்கிறது. ஒரு சின்ன வேலை செய்து பார்ப்போமா?

இப்போது Ctrl + F  இரண்டு கீ களையும் ஒன்றாக அழுத்தவும். இப்போது இந்த செம்ப்ளேட்டின் வலது மேல் மூலையில் ஒரு சிறிய நீள் சதுரக் கட்டம் தெரிகிறதல்லவா? அதற்குள்   line-height என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். இப்போது டெம்ப்ளேடில் 398 வது லைன் தெரிகிறதா? அந்த லைனில்  line-height:   என்கிற வார்த்தை கொஞ்சம் மாறுபட்ட கலரில் தெரிகிறதா? அதற்கு வலது பக்கம்  1.2 என்று தெரிகிறதா? தெரிந்தால் நீங்கள் பாஸ். அதை ஒன்றும் செய்யவேண்டாம். இப்போது வலது மேல் மூலையில் உள்ள கட்டத்திற்கு கர்சரைக் கொண்டு போய் வைத்து அந்த  line-height என்கிற வார்த்தையை அழியுங்கள்.

அந்த இடத்தில் கீழ்க்கண்ட வரியைக் காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/>
பிறகு என்டரைத் தட்டவும். இப்போது இந்த வரி அதாவது 10 வது லைன் ஹைலைட் ஆகி உங்களுக்குத் தெரியும். அந்த லைனின் கடைசியில் கர்சரைக்கொண்டு போய் வைத்து லெஃப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் அந்த இடத்தில் கண்ண்டித்துக் (Blinking) கொண்டிருக்கும்.
இப்போது என்டரைத் தட்டவும். உடனே ஒரு புது லைன் உருவாகும். அதற்கு 11 என்ற எண் இருக்கும். கர்சர் இந்த லைனின் ஆரம்பத்தில் இருக்கும்.
இப்போது கீழே கொடுத்துள்ளதைக் காப்பி செய்யவும். (Ctrl +c)

<link expr:href="data:blog.canonicalUrl" rel="canonical"/>
<script type="text/javascript">
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
if (str1.indexOf('/')=='-1') {
var str2=str1;
}
else {
var str2=str1.substring(0,str1.indexOf('/')+1);
}
window.location.href =window.location.href.toString().replace(str2,'.blogspot.com/ncr/');
}
</script>

பிறகு டெம்ப்ளேட்டுக்குள் சென்று பார்க்கவும். கர்சர் அதே இடத்தில் (அதாவது 11 ம் லைனின் ஆரம்பத்தில்) இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். இப்போது பேஸ்ட் செய்யவும். (Ctrl +v)
அவ்வளவுதான். ஆபரேஷன் முடிந்தது. கர்சரைக் கொண்டு போய் இந்த டெம்ப்ளேட் கட்டத்திற்கு மேலே ஆரஞ்சு வர்ணத்தில் இருக்கும்
என்ற பட்டனை அழுத்தவும். கொஞ்ச நேரம் ஆகும். பொறுமையாக காத்திருக்கவும். சேவ் செய்யும்போது ஏதாவது மாற்றுச்செய்தி வந்தால் டெம்ப்ளேட் மேல் உள்ள 




என்ற பட்டனை அழுத்தி  "எஸ்" ஆகிவிடலாம். நான் சொல்லியவற்றை மாற்றமில்லாமல் செய்திருந்தால் அந்த இக்கட்டு வராது.
அவ்வளவுதான். உங்கள் பிளாக்கில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை ஜோராக வேலை செய்யும். ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.
உங்களை கடவுளும் பழனி. கந்தசாமியும் கட்டாயம் காப்பாற்றுவார்கள். வெற்றி நமதே.
                                             

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

அமேசான் கிண்டிலும் டேப்ளெட்டுகளும்

       

                          டேப்ளெட்                                   அமேசான் கிண்டில்

நான் ஒரு அமேஸான் கிண்டில் வாங்கினதைப் பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு எழுதியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் தெரியாதவர்கள் இங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.

அதில் தமிழ் இளங்கோ கிண்டிலுக்கும் டேப்ளெட்டுக்கும் பயன்பாட்டில் என்ன வித்தியாசம் என்று எழுதுங்களேன் என்று கேட்டிருந்தார். பதிவு எழுத டாபிக் கிடைக்காமல் காய்ந்து கொண்டிருப்பவனுக்கு இது போதாதா? அதனால்தான் இந்தப் பதிவு.

இரண்டும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் அவைகளின் பயன்பாடுகள் வெவ்வேறு. டேப்ளட் ஒரு மினி கம்ப்யூட்டர். கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இதில் செய்யலாம். இன்டெர்நெட் மேயலாம். கூடுதலாக போன் மாதிரியும் கேமரா மாதிரியும் பயன்படுத்தலாம். பாட்டுக் கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். இன்னும் எத்தனையோ ...லாம், ...லாம். ஆனால் கொள்ளளவு (Capacity) கம்மி. பேட்டரி லைஃப் கம்மி.

டேப்ளெட்டுகள் எத்தனையோ கம்பெனிகள் தயாரிக்கின்றன. ஆனால் கிண்டில் அமேசான் மட்டுமே தயாரிக்கிறது.

அமேசான் கிண்டில் என்பது அமேசான்காரனின் விளம்பரக் கருவி.முக்கியமாக புக் ரீடர் மட்டுமே. கண்களுக்கு சோர்வு வராமல் புத்தகங்களைப் படிக்கலாம். கேம்ஸ் விளையாடலாம். பாட்டுக் கேட்கலாம். வை-பை மூலம் மட்டுமே இன்டர்நெட் தொடர்பு கிடைக்கும். போன் இல்லை. கேமரா இல்லை. பேட்டரி லைஃப் நீங்கள் உபயோகிப்பதைப் பொறுத்து சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை தாங்கும்.

நான் இதை வாங்கியது புத்தகங்கள் படிக்க மட்டுமே.

 பத்திரிகைகளில் விளம்பரம் வருவது மாதிரி இதில் அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று விளம்பரங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும். இது அமேசான்காரனின் விளம்பர உத்தி.

மொத்தத்தில் டேப்ளெட் குடும்ப்பப் பெண். கிண்டில் விலைமாது.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழ் மணம் ஓட்டுப்பட்டை - பாகம் 3


                                   

இந்த தொடர் பதிவு, பதிவுலகில் உள்ள தைரியசாலிகளுக்கு மட்டுமே.

தெரு நாயைக் கண்டு ஓட்டம் பிடிப்பவர்களும்,  கரப்பான் பூச்சியைக் கொல்ல முடியாதவர்களும், பெண்டாட்டிக்குப் பயப்படுகிறவர்களும் (தாய்க்குலம் என்னை மன்னிக்கவும். ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது) வேறு வேலை ஏதாவது இருந்தால் பார்க்கவும்.

சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். மற்றவர்கள் "ஒன் ஸ்டெப் பேக்".

ஆனால் நான் சொல்லிக் கொடுப்பதை பொறுமையுடன் ஒழுங்காகப் படிப்பவர்கள் கண்டிப்பாக சிங்கத்தின் மேல் ஏறி சவாரி செய்யலாம்.

முதலில் நம் பிளாக்கர் எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். பிளாக்கருக்குள் நுழைந்தவுடன் நாம் பார்ப்பது



இதைத்தான் பிளாக்கர்  "டேஷ்போர்டு" என்று சொல்கிறார்கள். இதில் என்னுடைய மன அலைகள் என்பதற்கு வலது புறமாக ஒரு ஆரஞ்சு வர்ணப் பட்டை தெரிகிறதா. அதற்கு வலப்புறம் சின்னதாக ஒரு பட்டன்   தெரிகிறதல்லவா?   

இதைச் சொடுக்கினால் கீழ்க்கண்ட ஸ்க்ரீன் தெரியும்.


இதெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே, இதைச்சொல்லி எதற்கு போர் அடிக்கிறீர்கள் என்று சொல்லுவது காது கேட்கிறது. எனக்கு அது நன்றாகத் தெரியும். கணக்கு சொல்லிக்கொடுக்கும்போது கணக்கு வாத்தியார் ஸ்டெப் ஸ்டெப்பாகப் போவார். அதில் பல ஸ்டெப்கள் நமக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஏன் அந்த ஸ்டெப்களைப் போடுகிறார் என்றால் நம் மரமண்டையில் நன்றாகப் பதிவதற்காகவே. இப்போது புரிந்ததா, நான் ஏன் இந்த விவரங்களை எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன் என்று? 

இந்த நம் பதிவுகளின் லிஸ்ட் கொண்ட ஸ்கிரீனை தினமும் பார்த்தாலும் அதில் உள்ள சில நுட்பமான விஷயங்களை நாம் கவனிப்பதில்லை.
இடது பக்கம் உள்ள இந்த மெனுவை நீங்கள் கவனிப்பதுண்டா? அதில் Template என்று ஒன்று இருப்பதைக் கவனித்ததுண்டா? இந்த விவரங்களை ஒரு முறை உங்கள் பிளாக்கிற்கு சென்று கவனித்து விட்டுப் பிறகு தொடர்ந்து படியுங்கள். இந்த  Template  ஐ சொடுக்கினால் உங்களுக்கு கீழ்க்கண்ட ஸ்கிரீன் கிடைக்கும்.



இதில் வலது மேல் மூலையில் Backup/Restore  என்று ஒரு இடம் இருக்கிறது பாருங்கள். அதைச்சுட்டுங்கள். கீழ்க்கண்ட ஸ்கிரீன் வரும்.





இதில் ஆரஞ்சு கலரில் உள்ள Download Full Template என்ற பட்டனை அழுத்தவும்.

உங்களுடைய டெம்ப்ளேட் டவுன்லோடு ஆகி வழக்கமாக நீங்கள் டவுன்லோடுகளை எங்கே சேமிப்பீர்களோ அங்கு சேமித்து விடும். நான் வழக்கமாக டெஸ்க்டாப்பில் சேமிப்பேன். அந்த சேமித்த பைலைக் காணுங்கள்.


உங்கள் டெம்ப்ளேட் சேமிக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்.


தைரியமாக இந்தப் பைலை கிளிக் செய்து திறந்து பாருங்கள். கொசகொசவென்று என்னென்னமோ நமக்குப் புரியாத சமாச்சாரங்கள் இருக்கும். கொஞ்சநேரம் பார்த்து விட்டு பைலை மூடி விடுங்கள்.



இது வரை நான் சொல்லியவற்றை நீங்கள் செய்து பார்க்கவும். நீங்கள் இவற்றில் என்ன தவறு செய்தாலும் உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தினருக்கோ, உங்கள் கம்ப்யூட்டருக்கோ, உங்கள் பதிவுகளுக்கோ எந்த வித ஆபத்தும் நேராது என்று நான் உறுதியளிக்கிறேன். 

இந்த விபரங்கள் உங்கள் உடலுக்குள் சென்று ஜீரணமாவதற்கு ஒரு வாரம் ஆகலாம். அது வரை நீங்களும் வேறு வேலை பாருங்கள். நானும் வேறு வேலை பார்க்கிறேன். 

அடுத்த வாரம் இந்தத் தொடரின் 4 வது பாகம் வெளி வரும்போது அநேகமாக இந்தத் தொடரைப் படிக்க ஒருவரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் இந்தத் தொடரை என் நினைவுக்காக கட்டாயம் பதிவு செய்வேன். 

இந்த ஸ்டெப்களை தினந்தோறும் ஒரு முறை செய்து பார்க்கவும்.