செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பதிவர் சங்கம் தேவையா?

வியாழன், 15 டிசம்பர், 2011

பல வருடங்களுக்கு முன்பு 2011 ல் நான் எழுதிய ஒரு பதிவு. இப்போது பதிவர் சங்கம் பற்றிய பதிவுகள் வருகின்றபடியால் அதை மீள்பதிவு செய்கிறேன்.



பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

21 கருத்துகள்:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
    பதிலளிநீக்கு
  2. //நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
    பதிலளிநீக்கு
  3. V.Radhakrishnan said...

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.

    சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
    பதிலளிநீக்கு
  4. தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
    பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
    எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
    தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள் 
    கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
    தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது 
    சரியெனத்தான் எனக்குப் படுகிறது
    த.ம 3
    பதிலளிநீக்கு
  5. ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?

    http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
    பதிலளிநீக்கு
  6. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  7. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  8. திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.
    பதிலளிநீக்கு
  9. Palaniappan Kandaswamy 

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
    பதிலளிநீக்கு
  10. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...

    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
    பதிலளிநீக்கு
  11. //ஜோதிஜி திருப்பூர் said...
    Palaniappan Kandaswamy 

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//

    இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.

    தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
    பதிலளிநீக்கு
  12. //இராஜராஜேஸ்வரி said...
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//

    சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
    பதிலளிநீக்கு
  13. அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    பதிலளிநீக்கு
  14. //cheena (சீனா) said...
    அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.

    நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
    பதிலளிநீக்கு
  15. தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
    பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
    பதிலளிநீக்கு
  16. நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.
    வேதா. இலங்காதிலகம்.
    பதிலளிநீக்கு
  17. நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 


    உங்கள் கருத்துக்காக 

    காதல் - காதல் - காதல்
    பதிலளிநீக்கு
  18. //எனக்கு பிடித்தவை said...
    நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 
    உங்கள் கருத்துக்காக 
    காதல் - காதல் - காதல்//

    புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
    பதிலளிநீக்கு
  19. கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.

    ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
    பதிலளிநீக்கு

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

சிறந்த பயணம் எப்படி இருக்கவேண்டும்?

                                   

பல பதிவர்களும் பயணங்கள் போகிறார்கள், பயணக் கட்டுரை எழுதுகிறார்கள் (நான் உட்பட).  நானும் பல உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எல்லாப் பயணங்களும் சிரமம் கொண்டவையே. இந்த சிரமங்களையெல்லாம் அனுபவித்த பின்  புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானோதயம் வந்த மாதிரி,  எனக்கும் ஒரு நாள் ஒரு அரச மரத்தடியில் ஞானோதயம் வந்தது.

                                    Image result for அரசமரம்

அரச மரமும் போதி மரமும் ஒன்றுதான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஞானோதயம் வந்த பிறகு எனக்குள் இந்த பயணங்கள் போவதைப் பற்றி நிறைய யோசனைகள் உதயமாயின. என் கற்பனையை ஓடவிட்டேன். இந்த ஓட்டத்தில் நான் அறிந்தவைகளை எல்லோரும் பயன் பெற வேண்டி இங்கே பதிகிறேன்.

இந்த மாதிரி பயணம் செல்ல முதலில் வேண்டியது அனைத்து அரசு வங்கிகளிலும் நிறைய பணமும் ஓவர்டிராப்ட் வசதியும். அனைத்து வங்கிகளின் பண அட்டைகள் கைக்கு வந்தவுடன் பயணம் புறப்படலாம்.

இரண்டாவது தேவை, ஒரு நல்ல டிராவல் ஏஜென்ட்.  உங்கள் விருப்பத்தைச் சொல்லிவிட்டால் பயணத்திட்டம் வகுத்துக் கொடுப்பது அவருடைய வேலை.
முடிந்தவரை விமானப் பயணமே சிறந்தது. அதிலும் பிசினஸ் கிளாஸ்தான் உத்தமம். ஏர் இந்தியா, கிங்க் பிஃஷர், கோஏர்,  ஜெட் ஏர்வேஸ், இந்த மாதிரி லோகல் பிளேன்களைத் தவிர்க்கச் சொல்லி விடவும்.

                                          Image result for japan airlines business class

அடுத்து 5 ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே ரூம் ரிசர்வ் செய்யச் சொல்லவும். அடுத்து பயணத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு இளம் (20 அல்லது 22 வயதுக்கு மேல் போகாமல்) உதவியாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லவும். நல்ல பிரபல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து இதற்கு ஆளைத் தேர்ந்தெடுக்கவும். அவருடைய வேலை என்னவென்றால் உங்கள் பயணத்திற்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும்.
                             
                                    Image result for 5 star hotel

உங்கள் வேலை குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, அந்தந்த ஊரில் இருக்கும் முக்கியமான இடங்களைப் பார்ப்பது, இவ்வளவுதான். உங்கள் துணிமணிகளை எடுத்து வருவது, ரூம் செக்இன் செய்வது, டாக்சி ஏற்பாடு செய்வது முதலானவை உங்கள் உதவியாளர் செய்து விடுவார். நீங்கள் உங்கள் உதவியாளர் தவிர வேறு யாருடனும் பேச வேண்டியதில்லை. உங்கள் உதவியாளர் அவ்வளவு பொறுப்புடனும் சாமர்த்தியத்துடனும் செயல்படவேண்டும். அப்படிப்பட்ட உதவியாளரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டியது டிராவல் ஏஜென்ட் பொறுப்பு. சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை.

                                                    Image result for personal assistant

பயண நாள் வந்து விட்டது. பிளேன் எத்தனை மணிக்கு, நீங்கள் எத்தனை மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும் என்கிற விவரத்தை உங்களை உதவியாளர் காலையிலேயே சொல்லி விடுவார். அந்த நேரத்திற்கு நீங்கள் தயாராகி வீட்டு ஹாலுக்கு வருகிறீர்கள். டாக்சி வருகிறது. பென்ஸ் கார்தான். அதில் ஏறுகிறீர்கள். உதவியாளரும் ஏறிக்கொள்கிறார். ஏர் போர்ட் போகிறீர்கள். செக்இன் நடைமுறைகளை உதவியாளர் பார்த்துக்கொள்கிறார். பிளைனில் ஏறியாகிவிட்டது.

நீங்கள் போகவேண்டிய ஊருக்கு பிளேன் சென்றடைந்தாகிவிட்டது. பிளேனை விட்டு இறங்கி வெளியே வருகிறீர்கள். டாக்சியில் ஏறி ஹோட்டலுக்குப் போகிறீர்கள். உங்கள் உதவியாளர் உங்களை ரூமுக்கு அழைத்துப் போய் விடுகிறார். உங்கள் டிரஸ்களை கழட்டிப்போட்டு விட்டு படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கிறீர்கள். இதுவரை நீங்கள் யாருடனும் பேசவேண்டிய அவசியம் வரவில்லை என்பதைக் கவனிக்கவும்.

                                       Image result for 5 star hotel room images

அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு உங்களுக்கு பெட் காபியும் அன்றைய புரொக்ராம் ஷீட்டும் வருகிறது. நீங்கள் காப்பியைக் குடித்துக்கொண்டே அந்த புரொக்ராமைப் பார்க்கிறீர்கள்.  இன்டர்காமில் உதவியாளரைக் கூப்பிட்டு ஓகே சொல்கிறீர்கள். அன்று காலை முழுவதும் அந்த ஊரில் உள்ள இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்கிறீர்கள். பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ கார். கூட உதவியாளர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம். மாலை அந்த ஊரில் உள்ள ஒரு மால் விசிட். இரவு சாப்பாடு முடிந்து நல்ல தூக்கம். நடு இரவில் ஒரு புயல் காற்று. இடி மின்னலுடன் பேய் மழை. நடுவில் ஒரு குரல். "சேர்லயே உட்கார்ந்துட்டு என்ன தூக்கம்? எழுந்து போய் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவதுதானே?" அப்படியென்று ஒரு பேய்க்குரல். லேசாக கண் விழித்துப் பார்த்தால் பார்யாள் எதிரே நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள். மணி பிற்பகல் இரண்டு. சாப்பிட்டு விட்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவன் அப்படியே தூங்கிப்போய்விட்டேன். அவ்வளவும் கனவு.

புதன், 10 பிப்ரவரி, 2016

உடலும் மனதும் ஆன்மாவும்!

                                           Image result for ஆத்மா
மக்களுக்கும் மாக்களுக்கும் என்ன வித்தியாசம்? சிந்திப்பவர்கள் மக்கள். சிந்திக்காதவர்கள் மாக்கள். நீங்கள் மக்களாக இருக்க விரும்பினீர்களானால் மேற்கொண்டு படியுங்கள். இல்லை நாங்கள் மாக்களாகவே இருந்து விட்டுப் போகிறோம் என்றால் வேறு தளத்திற்குப் போய்விடுங்கள்.

உடல் ஜடம், மனதுதான் காரணி. அதாவது உடலினால் தானாக எதுவும் செய்ய முடியாது. அதற்கு வேண்டிய உத்திரவுகளை மனது பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் உடல் செயல்படும்.

இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனாலும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் இந்த இரண்டையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். ஏனெனில் உடல் மனது இரண்டும் எப்போதும் இணைந்தே செயல் புரிகின்றன. அவைகளுக்குள் மாறுபாடு என்பதே வருவதில்லை. ஆகவே இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்வதில் எந்த சங்கடமும் வராது. இதில் தவறு எதுவும் இல்லை.

ஆனால் இந்த மெத்தப் படித்தவர்கள், அதிலும் கொஞ்சம் ஆன்மீகம் தெரிந்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள்தான், உடல் வேறு, மனது வேறு என்று சொல்லிக்கொண்டு தாங்கள் குழம்புவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் குழப்புவார்கள். இவர்கள் ஆன்மா என்று மூன்றாவதாக ஒன்றையும் உட்புகுத்தி இருக்கிறார்கள். சரி ஐயா, ஆன்மா என்றால் என்ன என்கிற கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதனால் ஆன்மாவை விட்டு விடுவோம். நம் ஆராய்ச்சியை உடல், மனது என்ற இரண்டிடம் மட்டும் வைத்துக்கொள்வோம். இந்த உடல் உயிர் இருந்தால்தான் இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. உடலில்தான் மனது இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சி இப்போதைக்கு வேண்டாம். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் உடல் இருக்கும் ஆனால் இயங்காது. உயிரற்ற உடலில் மனது இல்லை.

எனக்குப் புரிந்த வகையில் உயிர் என்பதுதான் ஆன்மா. ஆன்மா பிரிந்தது என்றாலும் உயிர் பிரிந்தது என்றாலும் ஒன்றுதான். உடலை விட்டுப் பிரிந்த உயிர் என்னவாகிறது என்பதில்தான் அனைத்துக் குழப்பங்களும் வருகின்றன. அதாவது உடலின் அவயவங்கள் அனைத்தும் தங்கள் திறன் குன்றி, அவைகளின் இயக்கத்தை நிறுத்தி விடுவதைத்தான் உயிர் பிரிந்தது என்கிறோம். அதாவது உடல் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. உயிர் என்று ஒரு பொருள் இருந்தாலல்லவா அது பிரிவதற்கு? அப்படி ஒரு பொருள் இல்லாததினால் ஒருவனுடைய உடல் இயக்கம் நின்று விட்டது என்று சொல்வதுதான் சரியான செய்தியாகும். ஆகவே அந்த உயிர் எங்கே போயிற்று என்று சிந்திக்கவேண்டியதில்லை.

கிராமங்களில் இதைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். "அவன் செத்துப் போய் விட்டான்" என்று எளிமையாகவும் நிதர்சினமாகவும் சொல்கிறார்கள். இந்தப் படித்த மேதாவிகள்தான் அவனுடைய ஆன்மா பிரிந்தது, அவர் பரமபதம் அடைந்தார், இயற்கை எய்தினார், விண்ணுலகம் ஏகினார், இப்படி பல வார்த்தைகள் உபயோகித்து ஒருவனுடைய இறப்பை குழப்புவார்கள்.

மக்களே, குழம்பாதீர்கள், தெளிவாக இருங்கள், மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

என் சதாபிஷேக புராணம்.


எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாயக் குடும்பம். எங்கள் உறவினர்களும் விவசாயிகளே. ஒரு ஐம்பது அறுபது வருஷத்திற்கு முன்பு வரை, நிறையப் பேருக்கு தங்கள் பிறந்த நாள் எது என்றே தெரியாது. என்ன வயசு என்று கேட்டால் பொதுவாக 60, 70 என்று சொல்வார்களே தவிர சரியான வயதைச் சொல்லத் தெரியாது.

இப்படி இருக்கையில் எங்கள் உறவினர்களில் யாரும் பிறந்த நாள் விழா என்று கொண்டாடுவதோ, சஷ்டியப்த பூர்த்தி அல்லது சதாபிஷேகம் என்று கொண்டாடுவதோ வழக்கில் இல்லை. இதைப் பற்றிக் கேட்டாலும் "அப்படியா, பிறந்த நாளா? அப்படீன்னா என்ன" என்று கேட்கும் நிலையில்தான் இருந்தார்கள்.

என் குடும்பம் மட்டும் எங்கள் ஊரை விட்டு புலம் பெயர்ந்து கோயமுத்தூருக்கு நான் பிறப்பதற்கு முன்பே பிழைப்பைத் தேடி வந்து விட்டார்கள். நான் பிறந்தது கோயமுத்தூர் டவுனில்தான். நான் பிறந்து நான்கைந்து வயது ஆனவுடன் என்னை என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் அடுத்த ரோட்டில் இருந்த முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார்கள். காசா, பணமா? இலவசக் கல்விதான் அப்போது. இப்படியாக சொந்த ஊரில் இருந்திருந்தால் மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியவன், டவுனில் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

என் வீட்டிற்குப் பக்கத்தில் பெரும்பாலும் அய்யர் குடும்பங்கள். அந்த வீடுகளில் இருக்கும் என் வயதுப் பையன்களை அந்தந்த வீடுகளில் இருக்கும் மாமிகள் "அந்த சூத்திரப் பையனோடு சேராதே, உன் படிப்பு கெட்டுப்போகும்"
என்று சொல்லி விட்டதினால் எனக்கு தோழர்கள் என்று யாரும் கிடையாது. அதனால் படிப்பதைத் தவிர வேறு வழியில்லை. படித்தேன்.

உயர் நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்பு, தொழில் கல்விப் படிப்பு அனைத்தும் என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்குள்ளேயே கிடைத்தன. வீட்டில் இருந்து கொண்டே படித்துக்கொள்ளலாம். செலவுகளும் அதிகம் இல்லை. தொழில் கல்லூரியில் படித்த காலத்தில் வருடம் ஒன்றுக்கு 300 ரூபாய் செலவாகியது. உயர் நிலைப்பள்ளிக்கு மாதம் 5 ரூபாய் கட்டணம்.

ஆனால் நானும் பெரிய மார்க்கெல்லாம் வாங்காவிட்டாலும், ஒரு வகுப்பிலும் பெயில் ஆகவில்லை. அப்படி பெரில் ஆகியிருந்தால் என்னை உடனே படிப்பை நிறுத்தி விட்டு ஏதாவது தொழிற்கூடத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால் நான் இப்போது ஒரு டாடா அல்லது பிர்லா மாதிரி ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன். விதி யாரை விட்டது?

படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தது பற்றியெல்லாம் முன்பே பல பதிவுகளில் கூறியிருக்கிறேன். இப்படியாக நான் அரசு சேவை முடித்து பணி ஓய்வு பெற்றேன். எங்கள் டிபார்ட்மென்டில் பணி ஓய்வு 60 வயது முடிந்தவுடன் கிடைக்கும். நான் பணி ஓய்வு பெற்றது என்னுடைய பள்ளி சர்டிபிகேட்டுகளில் குறிப்பிட்டுள்ள தேதி பிரகாரம் நடந்தது. ஏனெனில் என்னைப் பள்ளிக்குச் சேர்க்கும்போது எனக்கு நான்கு வயதுதான் முடிந்திருந்தது. அந்தப் பள்ளியின் ஹெட்மாஸ்டர், பையனுக்கு ஐந்து வயது முடிந்திருந்தால்தான் பள்ளியில் சேர்ப்போம் என்று சொல்லி விட்டார். என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள், "சரீங்க ஐயா. அப்படியே வயதைப் போட்டுக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். அவரும் அப்படியே ஒரு பிறந்த தேதியைப் போட்டு என்னை ஐந்து வயதுப் பையனாக ஆக்கி பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.

இந்த விபரங்களெல்லாம் பின்னாளில் என் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஒரு துண்டுத்தாளில் எழுதி வைத்திருந்த ஒரு டாகுமென்ட் கிடைத்து நானாக யூகித்து சேகரித்த விபரங்கள். இந்த விபரங்கள் தெரியும்போது இதனால் என்ன கெட்டுப்போச்சு என்றுதான் இருந்தேன். அரசுப்பணியில் இருந்த போது இந்த பிறந்த தேதியை மாற்ற முடியும் என்ற விபரம் தெரிந்த போது எனக்கு இந்த துண்டுக் காகிதத்தைத் தவிர வேறு முறையாக எழுதப்பட்ட ஜாதகம் இல்லாததினால் பிறந்த தேதியை மாற்ற நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆகவே நான் பணி ஓய்வு பெற்றபோது என் வயது 59 மட்டுமே. இப்படி இருக்கையில் என் நண்பன் ஒருவன் (என்னைவிட ஆறு மாதம் பெரியவன்) திருக்கடையூர் சென்று சதாபிஷேகம் செய்து விட்டு வந்ததாகக் கூறினான். நாம் எல்லோருமே செம்மறி ஆட்டுக்கூட்டம்தானே. முன்னால் செல்லும் ஆடு ஒரு கிணற்றில் விழுந்தால் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுமாம்.

என் நண்பனிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டு எனக்கு ஜாதகப்பிரகாரம் 60 வயது முடியும்போது திருக்கடையூர் சென்று சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து வந்தேன். நான், என் மனைவி, என் இரண்டு பெண்கள் இவ்வளவுதான் கல்யாணக்கூட்டம். திரு. அமிர்த கடேசக்குருக்கள் என்பவர் இந்த சடங்கை நடத்திக்கொடுத்தார்.

ஆண்டவன் கிருபையினால் அதற்குப் பிறகு 80 வயது வரை உயிருடன் இருந்து விட்டேன். இதற்குக் காரணம் அமிர்த கடேஸ்வரரின் அருள்தான் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் பேரிலும், சதாபிஷேகமும் செய்தால் கனகாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிட்டும் என்று செவி வழி செய்திகள் கேட்டதினாலும் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன்.


சரி, திருக்கடையூரிலேயே செய்து கொள்ளலாம் என்றால் குடும்பத்தினர் எல்லோரையும் அவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு போய் வருவது சிரமம் ஆதலால் வேறு வழி என்ன என்று யோசித்தோம். அப்போதுதான் திருக்கடையூருக்கு ஏறக்குறைய சமமான ஒரு கோயில் இங்கேயே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். திருக்கடையூரில் சாபம் பெற்ற எமன் இந்த ஊரில்தான் சாப விமோசனம் பெற்றான் என்பது ஸ்தல வரலாறு.

எமன் சந்தோஷப்பட்ட ஊரில் ஒரு சாந்தி செய்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டு நம் பக்கம் கொஞ்ச நாளைக்கு திரும்பிப் பார்க்கமாட்டான் என்பது நம்பிக்கை. ஆகவே இங்கேயே என் சதாபிஷேகத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். எப்படி நடத்துவது என்று பல முறை பல மாற்றங்களை செய்து கடைசியில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஆப்த நண்பர்களை மட்டும் அழைத்து விழாவை நடத்துவது என்று முடிவானது.

அதன் பிரகாரம் ஒரு நாள் குறித்து, அது தவறிப்போன செய்தி நீங்கள் அறிந்ததே. கடைசியாக 5-2-2016 அன்று என்னுடைய சதாபிஷேகம் நடந்தது. உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்து ஆசி பெற்றார்கள். என்னைவிட ஒரே ஒரு நண்பர் மட்டும் மூத்தவர். அவரிடம் நான் ஆசி பெற்றுக்கொண்டேன்.
எல்லோருக்கும் விருந்தும் அன்பளிப்புகளும் ஆசிகளும் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் நான் ஒரு புனர் ஜன்மம் எடுத்தேன் என்றே சொல்லலாம். எப்படியென்றால் வைபவம் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தது. ஆயுஷ் ஹோமம், ம்ருத்யஞ்சய ஹோமம் ஆகியவை நடந்தன. அப்போது பல கலசங்கள் வைத்து  அந்த ஹோமங்கள் முடிந்த பின் அந்த கலச நீரால் தம்பதியருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் உண்டல்லவா. அந்த கலசங்கள் முதல் நாள் இரவே நீரால் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இதுவோ குளிர்காலம் நேரமோ அதி காலை.


எங்களை உட்காரவைத்து அந்தக் கலசங்களில் உள்ள நீரை அதற்கென்று உள்ள ஒரு ஜல்லடையில் வழியாக எல்லா உறவினர்களும் எங்களுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். ஆஹா, அந்த அனுபவம் இருக்கிறதே, அதை அனுபவித்தால்தான் தெரியும். நான் வேஷ்டி மட்டுமே அணிந்து மேல் துணி எதுவும் போடவில்லை. முதல் கலச நீரை ஊற்றினதுமே உடல் நடுங்க ஆரம்பித்தது. அடுத்தடுத்த கலச நீர்களை ஊற்றும்போது இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் காலன் கருணை புரியப் போகிறான் என்ற நிலை வந்து விட்டது.

ஆனால் கால காலேஸ்வரர் கோயிலிலேயே காலன் கருணை புரிய தைரியம் வரவில்லை போலிருக்கிறது. மீண்டும் புனர் ஜன்மம் எடுத்தேன். நம் பதிவர்கள் சஷடியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்து கொள்ளப்போகிறவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படியாக என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது.

இந்தப் புராணப்பதிவை படிப்பவர்களும் படிக்கக் கேட்டவர்களும் தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகிய வைபவங்களைக் கொண்டாடவும் அவைகளில் நான் கலந்து கொள்ளவும் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரரும் கோவில்பாளையம் கருணாகரவல்லி சமேத காலகாலேஸ்வரரும் அருள் புரிய பிரார்த்திக்கறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிகளையும் உரித்தாக்குகிறேன். எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




சனி, 6 பிப்ரவரி, 2016

சதாபிஷேகம்

5-2-2016 அன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். அன்றுதான் என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது. மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர்.

போட்டோக்களை மட்டும் இப்போது பதிவிடுகிறேன். விழா நிகழ்வுகளைப் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன்.













புதன், 3 பிப்ரவரி, 2016

போட்டியும் பொறாமையும்

                                Image result for fight
சிறு வயதிலிருந்தே மனிதனாகப் பிறந்தவனுக்கு போட்டியும் பொறாமையும் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட குணங்கள் இருப்பவர்கள் நல்ல பண்பாடு உள்ள மனிதர்கள் இல்லை என்ற கருத்து நம் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும்.  தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது மிச்சம் மீதி இருக்கிற மூளையைக் கொண்டு  நான் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அப்படி யோசித்தபோது தோன்றிய எண்ணங்களை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்கிற பரந்த நோக்கத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.

சில உதாரணங்களை எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பத்துப் பேர் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் பத்து பேரும் போட்டி மனப்பான்மை இல்லாதவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ஓடும்போது என்ன நினைப்பார்கள்? மற்றவர்களில் யாராவது ஜெயிக்கட்டுமே என்று தாராள மனப்பான்மையில் ஓடினால் என்ன ஆகும்? அவரால் தன் முழு சக்தியையும் காட்ட முடியாது. இப்படியே ஒவ்வொருவரும் நினைத்தால் அந்த ஓட்டப் பந்தயம் எப்படி இருக்கும்?

ஓட்டப்பந்தயம் வேறு, வாழ்க்கை வேறு. "வாழ்க்கையில்தான் போட்டி பொறாமை கூடாது என்று சொல்கிறோம்" என்று ஒரு சாரார் வாதம் செய்யலாம். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். கல்லூரியில் ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை அனைவரும் நமக்குள் எந்த வேற்றுமையும் கூடாது. போட்டி, பொறாமையெல்லாம் கெட்ட குணங்கள், ஆகவே நாம் அனைவரும் ஒரே மாதிரியான மார்க்குகள்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியிருக்கும்?

இப்படியே பல வருடங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லோரும் என்ன ஆவார்கள்? ஒரு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? எல்லோருக்கும் ஒரே மாதிரியான மந்த புத்தியே இருக்கும் அல்லவா?

வாழ்க்கைக்கு வருவோம். நாங்கள் அனைவரும் சமம், எல்லோரும் ஒரே மாதிரியான வேலை செய்வோம், ஒரே அளவு சம்பளம் வாங்குவோம் என்று இருந்தால் என்ன ஆகும்? சமூகத்தில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா?

மக்களே, யோசித்துப் பாருங்கள். போட்டி, பொறாமை இருந்தால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட முனைவார்கள். ஏனெனில் இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒரே மாதிரி படைக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமையை வைத்திருக்கிறான். சிலருக்கு தலைமைப் பண்பு இருக்கும். சிலர் சாதாரண வேலைகளைச் செய்யும் அளவிற்கே திறன் இருக்கும்.

அதனால் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருக்கவேண்டும் என்று நினைத்தால் மனித சமூகம் முன்னேறாது. ஆகவே போட்டியும் பொறாமையும் இவ்வுலகில் அவசியம்.  

சனி, 30 ஜனவரி, 2016

இணையமும் புத்தகங்களும்

                                  இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அநேகமாக உங்களில் பலருக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருக்கலாம்.


இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து த.சீனிவாசன் tshrinivasan@gmail.com என்பவர் மின்னஞ்சலாக அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கட்டுரை ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதில் 

கூறப்பட்டுள்ளவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

நான் சிறுவயதில் ஏறக்குறைய என்னுடைய பத்தாவது வயதில் விகடனுக்கு அறிமுகமானேன். பக்கத்து வீட்டில் விகடன் வாங்கினார்கள். அதை ஓசியில் வாங்கிப் படிப்பேன். அப்போது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிய செய்திகள் விகடனில் வந்து கொண்டிருந்தன. 

விகடனை ஒரு உச்சிக்குடுமி முகமாகவும் அந்த யுத்தச் செய்திகளைத் தரும் நிருபரை ஒரு குரங்காகவும் சித்தரித்து படங்கள் போடுவார்கள். இன்றும் அந்த உச்சிக்குடுமி படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போதுதான் குமுதம் பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. அந்தப் பத்திரிக்கையின் கோவை ஏஜன்ட் எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ தூரத்தில் இருந்தார். குமுதம் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டவுடன் கமுதம் வரும் நாளில் அந்த ஏஜன்ட்டின் வீட்டிற்கே காலையில் ஆறரை மணிக்குப் போய்விடுவேன். குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.


அப்போது அவ்வளவு ஆர்வத்துடன் படித்த விகடன் எப்போது உருமாறியதோ அப்போதே அதில் ஆர்வம் போய்விட்டது. குமுத த்தின் பாணியும் மாறி விட்டது. அது தவிர இப்போது வரும் வாரப் பத்திரிக்கைகளில் சினிமா செய்தி தவிர வேறு எதையும் காணோம். இப்போது வாரப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.

கொஞ்ச நாளில் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய/மொழிபெயர்த்த துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போயின. ஜே.ஆர். ரங்கராஜு என்வரும் அப்போது துப்பறியும் நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு பேரின் நாவல்களையும் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் என் வாசிப்பின் வேகம் மணிக்கு நூறு பக்கம். ஒரு நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் அதை கீழே வைக்க மாட்டேன். பள்ளியில் டெஸ்க்குக்கு கீழே வைத்துப் படித்ததும் உண்டு. 


பிற்காலத்தில் ஆங்கில நாவல்களையும் அதே ஆர்வத்துடன் படிப்பேன். வேலையில் சேர்ந்து அதில் மூழ்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் படிக்கும் வழக்கம் குறைந்து போனது. அதுவும் இந்த இணையம் வந்த பிறகு புத்தகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து போனோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையே.

ஆனால் சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. பதிவு எழுதுவதற்கு கற்பனை ஓடமாட்டேனென்கிறது. ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம் வந்துள்ளது. இணையத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவைகளை தரவிறக்கி ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.

அதே போல் நல்ல பாட்டுகளையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு கேட்கிறேன். சமீபத்திய ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. எனக்கு அன்பளிப்பாக க் கிடைத்த "டேப்" பில் புத்தகங்களை சேமித்து வைத்துக் கொண்டு படிக்க வசதியாக இருக்கிறது. அதுவும் அமேசான் காரன் இலவசமாகவும் மிக சலீசான விலையிலும் நிறைய புத்தகங்கள் கொடுக்கிறான். எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். படித்துக்கொண்டும் வருகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை. போட்டி இருந்தால்தானே எதுவும் சோபிக்கும். 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 2

(வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.)

திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் ஒரு தாவரவியல் பேராசிரியர், அவர் படிப்புக்கு ஏற்றாற்போல் பலவிதமான செடிகளும் மரங்களும் அவர் வீட்டைச்சுற்றி இருந்தன. அவர் வீடு ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கிறது. அதில் ஒரு பகுதியில் அவர் தந்தையார் கட்டின வீடு இருக்கிறது. அதற்கும் 100 ஆண்டு வயது இருக்கும். மீதி உள்ள இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள் இருக்கின்றன.

நான் அவரைப் பார்த்த ஆனந்தத்தில் அந்த செடி கொடிகளை போட்டோ எடுக்கத் தவறி விட்டேன். அவர் இந்த செடிகளின் பேரில் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவருடைய மருமகன் டாக்டர் அகஸ்டின் செல்வசீலன் என்னுடைய மாணவர். என்னுடன் ஒரே பிரிவில் பணியாற்றியவர். அவரும் அப்போது அங்கு வந்திருந்தார். என் பயணத்திட்டத்தை இப்படி ஒத்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தோம்.

நாங்கள் மூவரும் அவருடைய தோட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம், ஒவ்வொரு இடத்திலும் உள்ள செடிமொடிகளைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார். மழை நீர் சேகரிப்பிற்கான தொட்டியையும் காண்பித்தார். அங்கு ஒரு விசாலமான பகுதியை மைதானமாக விட்டிருந்தார். வருடத்திற்கொரு முறை அங்கு ஒரு விழா நடக்கும் என்று திரு அகஸ்டின் கூறினார்.

பின்பு நாங்க்ள திரும்பி வந்து தேனீர் அருந்தினோம். பின்பு திரு. டாக்டர் டேனியல் சுந்தரராஜ் தான் செய்து வரும் ஆன்மீகப் பணிகளைப் பற்றிப் பேசினார். வாரம் ஒரு முறை அந்த ஊரில் உள்ள சீனியர் சிடிசன்களை வரவழைத்து அவர்களுக்கான நற்போதனைகள் செய்கிறார்.

வாரத்தில் ஒரு நாள் சிறுவர்களுக்கு அன்னதானமும் நற்போதனைகளும் செய்கிறார். வாரத்தில் மற்றொரு நாள் அந்த ஊரில் உள்ள வயதான பெண்மணிகளை வீட்டிற்கு வரவழைத்து வேதம் ஓதுகிறார்கள். இந்த காரியங்களுக்கெல்லாம் அவருடைய மருமகள் உறுதுணையாய் இருக்கிறார்கள். நான் சென்றிருந்த அன்று கூட இவ்வாறான கூட்டம் ஒன்று நடந்தது.

இது போக மற்ற சமயங்களில் மத சம்பந்தமான புத்தகங்கள் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி வெளியான புத்தகங்களைக் காண்பித்தார். எனக்கும் ஒரு புத்தகத்தில் வாழ்த்துக்கூறி கையெழுத்துப் போட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நான் அவருடைய நினைவாகப் பொக்கிஷம் போல் பாதுகாப்பேன். 


இதையெல்லாம் பார்த்து நான் என் அன்றாட வாழ்க்கையை நினைத்து வெட்கிப்போனேன். உண்பதுவும் உறங்குவதுவும் தவிர நான் ஒன்றும் செய்யவதில்லை என்று நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் வேதனையுற்றது. என்ன செய்வது? நான் ஒரு சோம்பேறியாக வளர்ந்து விட்டேன்.

பிறகு, திரு. அகஸ்டின் அவர்களுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். அந்த ஊரின் முக்கியமான சர்ச்சைப் பார்த்தோம்.

நூறு ஆண்டுகளுக்கும் பழமையான நாசரெத்தின் தபால் நிலையத்தைப் பார்த்தோம்.


பிறகு நாசரெத்தின் பேருந்து நிலையம் பார்த்தோம்.

பின்பு வீட்டிற்கு வந்ததும் மதிய உணவு தயாராக இருந்தது. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களும் அவர்களுடைய இரு மகள்களும் நன்கு உபசரித்தார்கள். என்ன, ஒரு குறை என்றால் என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. 



சாப்பிட்டபின் சற்று ஓய்வெடுக்க மாடியில் உள்ள ஒரு கட்டிலை திரு. அகஸ்டின் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். உண்ட களைப்பு நீங்க, சுமார் ஒரு மணி நேரம் தூங்கினேன். மாலை இரண்டரை மணிக்கு விழிப்பு வந்தது. அங்குள்ள பாத்ரூமில் முகம் கைகால் கழுவிக்கோண்டு வந்தவுடன் சூடாக ஒரு தேனீர் கொடுத்தார்கள். அது தூக்கக் கலக்கத்தை விரட்டியடித்தது.

பிறகு கீழே இறங்கி வந்தேன். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் அந்த ஊரிலுள்ள வயதான பெண்மணிகளை அழைத்து கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். அவரை அதிகம் தொந்திரவு செய்யாமல் விடை பெற்றுக்கொண்டு ரயில் நிலையம் வந்தோம். மூன்றேகாலுக்கு திருநெல்வேலி செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி நாலேகாலுக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தேன்.


திருநெல்வேலி போய்வந்தேன் என்றால் தெரிந்தவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி, இருட்டுக்கடை அல்வா வாங்கினீர்களா என்பதுதான். அதனால் ரயில் நிலையத்திலிருந்து டவுன் பஸ் நிலையம் போய் அங்கிருந்து நெல்லையப்பர் கோவில் சென்றேன். அந்தக் கோவில் வாசலுக்கு எதிரில்தான் இருட்டுக்கடை இருக்கிறது.

நான் போய்ச் சேர்ந்த நேரம் நாலேமுக்கால். அப்போதே சுமார் நூறு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கடைக்கு எந்த விதமான விளம்பரங்களோ, போர்டோ இருக்கவில்லை. கருப்பான சரப் பலகைகள் மட்டும் போட்டு அடைத்திருந்தார்கள். கடை ஐந்து மணிக்குத் திறந்தார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அல்வா வாங்கினார்கள். என்னால் முண்டியடிக்க முடியாததால் அரை மணி நேரம் பொறுமையாக காத்திருந்து ஆறு அரை கிலோ அல்வாப் பொட்டலங்கள் வாங்கினேன்.

வியாபாரம் சுறுசுறுப்பாகவும் கச்சிதமாகவும் நடக்கிறது. பிறகு வந்த வழியே திரும்பி ஓட்டல் அறைக்கு ஆறு மணிக்கு வந்து சேர்ந்தேன். எட்டரை மணிவரை ஓய்வெடுத்தபின் அறையைக் காலி செய்து விட்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். இரவு 9.45 க்கு கோவை செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி என்னுடைய இடத்தில் படுத்துக்கொண்டேன். நீண்ட நாளைய ஆசை நிறைவேறிய திருப்தியில் நன்றாக தூங்கிப்போனேன்.


மறுநாள் காலை 7.45 க்கு கோவை வந்து சேர்ந்தேன். என் உறவுப் பெண் ஒன்றுக்காக கார் வந்திருந்தது. அதில் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

                                         
                                 Image result for பொங்கல் வாழ்த்துக்கள்

எனக்குப் பொங்கல் வாழ்த்து கூறியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

வியாழன், 14 ஜனவரி, 2016

ஒரு அவசரப் பதிவு.

                                    Image result for ஏர்டெல் 4ஜி

நான் "பிஎஸ்என்எல்" ஐ விட்டு ஜகா வாங்கி ஏர்டெல்லுக்குப் போன கதை யை முன்பே எழுதியுள்ளேன்.

நேற்று ஏர்டெல் ஆபீசிலிருந்து ஒருவர் என் மொபைலில் பேசினார். சார், புதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. நீங்க இப்போ வச்சிருக்கிற பிராட்பேண்ட் ஸ்பீட் 4MBPS. 60 GB வரைக்கும்தான் இந்த ஸ்பீட். அப்புறம் 512 KBPS க்கு குறைஞ்சிடும். இப்போ பதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. அதுல ஸபீட் 16 MBPS. 100 GB வரைக்கும் இந்த ஸ்பீடுலேயே வேலை செய்யும். சார்ஜ் சும்மா ஒரு இருநூறு ரூபாய்தான் அதிகமாகும். நீங்க உபயோகிக்கிற அளவிற்கு இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்.

நானும் சரி, 16 MBPS ஸ்பீட் எப்படியிருக்கும் பார்த்து விடலாம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டேன். இன்று காலை முதல் அந்த 16 MBPS ஸ்பீடில் என் பிராட்பேண்ட் வேலை செய்கிறது. டவுன்லோடு செய்வதெல்லாம் டக் டக்கென்று நடக்கிறது.

போகப்போகப் பார்க்கவேண்டும்.

"என் ஆசிரியர் பாகம் இரண்டு" ஞாபகம் இருக்கிறது. பொங்கல் கழித்து வெளியாகும்.