திங்கள், 27 ஜூன், 2016

கடவுள்களுக்கு நோய்கள் வராதா?

                                  Image result for கடவுள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஒரு பெரும் விவாதத்திற்குரிய விஷயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

கடவுளை மனிதன்தான் உருவாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அப்படி கடவுள்களை உண்டாக்கும்போது அந்தக் கடவுள்களை தன் உருவம் மாதிரியே உண்டாக்கினான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில கடவுள்களுக்கு நான்கு தலை, ஆறு தலை, நான்கு கைகள், பனிரெண்டு கைகள் என்று உருவகப்படுத்தினான்.

அத்துடன் நில்லாது கடவுள்களுக்கு தன்னைப்போலவே ஆசா பாசங்களையும் கற்பித்தான். கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டிகள், பலதார மணம், சக்களத்திச் சண்டை, பங்காளிச் சண்டை, கற்பழிப்பு, பிறன் மனை விழைதல் இப்படி எல்லாம் கற்பித்தான். அப்புறம் கடவுள்களுக்கு பசி, தாகத்தையும் உண்டு பண்ணினான்.

கடவுள்களும் இப்படியே ஆசா பாசங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள்கள் இப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது வருகின்றன. அவைகளுக்கு பல காலமாக விடை தேடுகிறேன். அவ்வளவுதான்.

1. கடவுள்கள் காலையில் எழுந்ததும் குளிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். மாலை வந்தால் ஆடல் பாடல்களைக் கண்டு களிக்கிறார்கள், இரவானால் சகதர்மிணியுடன் பள்ளியறை எழுந்தருள்கிறார்கள். இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால் மனிதர்கள் மாதிரி அவர்கள் காலை எழுந்தவுடன் ஏன் பாத்ரூம் போவதில்லை என்று தெரியவில்லை. எந்தக் கோவில்களிலும் கடவுள்களுக்காக பாத் ரூம் கட்டப்படவில்லையே, ஏன்?

2. மனிதர்களில் நோய்வாய்ப் படாதவர்கள் அபூர்வம். அவர்களுக்கு நோய் தீர்க்க தெருவிற்குத் தெரு பல விதமான ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இப்படி கடவுள்களுக்கும் நோய் வராதா? தேவலோகத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே. அவர்களுக்கு நோய் வந்தால் எப்படி அந்த நோயைக் குணப்படுத்திக் கொள்வார்கள்?

பல நாட்களாக இந்த இரண்டு சந்தேகங்களும் என் மண்டையில் புரண்டு கொண்டேயிருக்கின்றன. இந்த சந்தேகங்கள் வந்ததினால் நான் கடவுள்களுக்கு விரோதியாய் விடுவேனோ என்ற சந்தேகமும் இப்போது புதிதாய் முளைத்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நான் உங்களிடம் விடை கேட்கப்போவதில்லை. ஏனெனில் உங்கள் மனம் புண்படலாம். ஆகவே இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு ஸ்னானம் செய்து நீங்கள் இதைப் படித்த பாவத்தைப் போக்கிக்கொள்ளவும்.

எனக்கு நரகம்தான் பலிக்கும் என்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் ஆப்த நண்பர்கள் எல்லோரும் அங்குதான் இருப்பார்களாகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

சனி, 25 ஜூன், 2016

நண்பனைச் சிக்கலில் இருந்து விடுவித்த கதை.

                   
                         Image result for Thief and police

ஒரு நல்ல திருடன்தான் ஒரு நல்ல போலீஸ்காரன் ஆகமுடியும் என்று சொல்வார்கள். அதேபோல் சில தந்திரவாதிகளின் ஏமாற்றுதலில்
இருந்து தப்பிக்க நீங்களும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக இருக்க வேண்டும். ஏமாற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அந்த குயுக்தி முறைகளை அறிந்திருப்பது அவசியம்.

என் நண்பர் ஒருவர் தன் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் குடியிருந்த ஒருவன் இவரிடம் அவ்வப்போது ஆயிரம் இரண்டாயிரம் என்று கைமாத்து வாங்குவான். சொன்ன நாளில் திருப்பிக்கொடுத்து விடுவான். இப்படி சில மாதங்கள் ஆகியவுடன் என் நண்பருக்கு அவன் மீது அபார நம்பிக்கை வந்து விட்டது.

ஒரு நாள் அவன் தன் மனைவியின் வேலையை நிரந்தரமாக்க அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள், கொடுக்கலாமா என்று இவரிடம் கேட்டிருக்கிறான். இவருக்கு அந்தக் கம்பெனியை நன்றாகத் தெரியும். கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு நாள் கழித்து அவன் இவரிடம் வந்து, சார், ஒரு லட்சம் ரூபாய் சேகரித்து விட்டேன். இன்னும் ஒரு லட்சம் வேண்டும். நாளைக்குள் பணம் கட்டவேண்டும் என்கிறார்கள். ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதை விற்றால் ஒரு லட்சம் வரும். வந்தவுடன் கொடுத்து விடுகிறேன். நீங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அழுதிருக்கிறான்.

நண்பருக்கு அப்படியே மனது வெய்யிலில் வைத்த ஐஸ் கட்டியாக உருகிவிட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அவனும் அதை பவ்யமாக வாங்கிக்கொண்டு போய் பணத்தை வாங்கிவிட்டான். இவர் அவனிடம் ஒரு புரோநோட் வேண்டுமென்றிருக்கிறார். அவன் ஸ்டேஷனரி கடையில் விற்கும் ஒரு புரோநோட் பாரத்தை வாங்கி ஒன்றும் எழுதாமல் கீழே மட்டும் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறான். நண்பரும் அதை வாங்கி வைத்துவிட்டார்.

நாலைந்து மாதம் ஆகி விட்டது. பணம் திரும்பி வரவில்லை. இதனிடையில் அவன் வேறு வீட்டிற்கு குடி போய்விட்டான்.  இவர் அவனை நெருக்கியிருக்கிறார். அவன் ஒரு நாள் ஒரு லட்சத்தி நான்காயிரத்திற்கு (நான்காயிரம் வட்டி) இவர்பேரில் ஒரு செக் கொடுத்து விட்டு, சார் இதை உடனே பேங்கில் போடவேண்டாம், ஊரில் இருந்து வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை, வந்தவுடன் நான் சொல்கிறேன், அப்போது இந்த செக்கைப் பேங்கில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

நண்பரும் சரியென்று அந்த செக்கை வாங்கி வைத்துக்கொண்டார்.
ஒரு மாதம் சென்றது. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நண்பர் செக்கை கலெக்ஷனுக்குப் போட்டார். கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்து விட்டது.

இந்த நிலைமையில் நண்பர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். நான், பொறுப்போம், பார்க்கலாம், அவனை எப்படியாவது பிடித்து என்ன விவரம் என்று கேளுங்கள் என்றேன். இரண்டு நாள் கழித்து நண்பர் ஓடோடி வந்தார். இதற்குள் அவர் யாரையோ சிபாரிசு பிடித்து பேங்க் மேனேஜரைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அவர் மூலம் அவன் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டார். இரண்டாயிரம் ரூபாய்தான் இருந்தது. அவன் வருவதாகச் சொன்ன ஒரு லட்சம் ரூபாய் வந்தாலும் மொத்தம் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே இருக்கும், நம் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கு அல்லவா, இது எப்படி பாஸ் ஆகும் என்று புலம்பினார்.

நான் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு. நாளைக்கு பேங்குக்கு வரும்போது உங்கள் செக் புக்கை எடுத்து வாருங்கள், மிச்ச்த்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி அவரை அனுப்பி வைத்தேன். மறுநாள் பேங்க்குக்குப் போனால் நண்பர் காத்துக் கொண்டிருந்தார். அந்த கடன் வாங்கினவனும் கூட இருந்தான். அவனிடம் என்னப்பா இன்றைக்கு செக்கை கலெக்ஷனுக்குப் போட்டு விடலாமா என்று கேட்டேன். அவன் தாரளமாகப் போடலாம் சார் என்றான்.

அவனுடைய எண்ணம் அவன் கணக்கில் வரப்போகும் ஒரு லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம்தானே இருக்கும். நாம் இவர்களுக்குக் கொடுத்தது ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கான செக்கல்லவா? இவர்கள் அந்தச் செக்கை பாஸ் பண்ணமுடியாது என்ற நினைப்பில் சம்மதம் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் கவுன்டர் கிளார்க்கிடம் ஐம்பதாயிரத்திற்கு தனியாக ஒரு செக் கொடுத்து வைத்திருந்தான். இவன் எதிர் பார்க்கும் பணம் வந்தவுடன் அந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுப்பது அவன் திட்டம்.

நானும் நண்பரும் மேனேஜர் ரூமுக்குப் போய் அவருக்கு முன்னால் அமர்ந்தோம். அவர் இன்னும் தபால் வரவில்லை, கொஞ்சம் பொறுங்கள் என்றார். சிறிது நேரத்தில் தபால் வந்தது. எதிர் பார்த்த ஒரு லட்சம் ரூபாயும் வந்திருந்தது. அவர் அந்த கடன்காரனின் கணக்கைப் பார்த்தார். பார்த்துவிட்டு எங்களிடம் சென்னார், இந்தப் பணத்தைப் போட்டாலும் ஒரு லடசத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே வருகிறது. உங்கள் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய் அல்லவா? பாஸ் ஆகாதே என்றார்.

அவரிடம் நான்,  சார் எவ்வளவு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றேன். அவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றார். நான் நண்பரிடம் மேனேஜர் சென்ன தொகைக்கு உங்கள் செக் ஒன்று அந்த திருடன் பெயருக்கு எழுதுங்கள் என்றேன். அப்படியே எழுதிக்கொடுத்தார். மேனேஜரிடம் அந்தச் செக்கைக் கொடுத்து சார் இந்தப் பணத்தை அவன் கணக்கில் சேர்த்து விட்டு பிறகு எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது பாருங்கள் என்றேன். அவர் அப்படியே செய்து விட்டு, சார் உங்கள் செக் இப்போ பாஸ் ஆகிவிடும் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று சொல்லி என் நண்பருடைய  செக்கைப் பாஸ் பண்ண வைத்தேன்.

இரண்டாயிரத்தி ஐந்நூறு செலவில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பணம் வசூலாகி விட்டது. பேங்க் மேனைஜர் அசந்து விட்டார். சார் நீங்கள் பலே கில்லாடியாக இருக்கிறீர்களே என்று பாரட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

அதற்குள் இந்த செக் பாஸான விவரம் கவுன்டர் கிளார்க் மூலம் அந்த கடன்காரனுக்குத் தெரிந்து விட்டது. வெளியில் எங்களைப் பார்த்தவுடன் காச் மூச்சென்று கத்தினான். நான் சொன்னேன், நீ செக்கைப் போடச் சொன்னதினால்தானே நாங்கள் போட்டோம், இப்ப எதற்கு கத்துகிறாய், உன் வேலையைப் பார் என்று சொல்லி அவன் அனுப்பினோம்.

அடுத்த நாள் ஒரு பெரிய பிரியாணி ஒட்டலில் நான் கேட்ட ஐட்டங்கள் எல்லாம் என் நண்பர்  வாங்கிக் கொடுத்தார்.

புதன், 22 ஜூன், 2016

ஒரு பரோபகாரியின் கதை

                                         Image result for இரு நண்பர்கள்
ஒரு ஊரில் இரு நண்பர்கள். ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்ம்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் சென்னையில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் கழித்து இருவருக்கும் மணமானது. இரு குடும்பமும் அன்னியோன்னியமாக இருந்தன.

இந்நிலையில் ஒருவன் வீடு வாங்க ஆசைப்பட்டான். அந்த ஏரியாவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருவாகிக்கொண்டு இருந்தது. அதில் இவன் ஒரு அபார்ட்மென்ட் பதிவு செய்தான். கையிலுருந்த சேமிப்பு பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு பிறகு பேங்க் லோன் அப்ளை பண்ணினான்.

பேங்க்கில் ஒருவர் கேரண்டி போடவேண்டும் என்றார்கள்.
நமது கதாநாயகன் தன் நண்பனைக் கேட்டான். அவன் அதற்கென்ன, கையெழுத்துதானே, போட்டால் போயிற்று என்று பேங்கிற்குப் போய் கையெழுத்து போட்டான்.

அபார்ச்மென்ட் கட்டிடம் வளர்ந்தது. மொத்தம் பதிமூன்று மாடிகள். ஒரு நாள் பெரிய புயல் காற்று, இடியுடன் மழை வந்தது. அந்தக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. அபார்ட்மென்ட் புக் பண்ணினவன் இதைக்கேட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டான்.

இப்போது அந்த பேங்க் கடனுக்கு யார் பொறுப்பு?

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஊர்ல விசேஷமுங்க !

                                Image result for சென்னை நாடார் கடை

திருநெல்வேலியிலிருந்து ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு பையன் வீட்ல கோவிச்சிக்கிட்டு மெட்ராஸுக்கு ரயில் ஏறிட்டான். (வித்அவுட்லதான்). கையில காலணா கிடையாது. ரயில்  சென்னை வந்தது. இவன் ரயிலை விட்டுக் கீழே இறங்கி திருதிருவென்று முளித்துக்கொண்டிருந்தான்.

அதே ரயில்ல வந்த தனபால் நாடார் இந்தப் பையனைப் பார்த்தார். அவரும் இந்த மாதிரி திருநெல்வேலியிலிருந்து ரயில் ஏறி சென்னை வந்தவர்தான். இப்போது அவர் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிபதி. இந்தப்பையனைப் பார்த்ததும் அவருக்கு விவரம் புரிஞ்சு போச்சு. பையனைக் கூப்பிட்டு டிபன்காப்பி வாங்கிக்கொடுத்தார். வா, வீட்டுக்குப் போகலாம் என்று கூட்டிக்கொண்டு போனார்.

அவனுக்கு வீட்டில் இருந்த அவருடைய சின்னப்பையனின் இரண்டு பழைய டிரஸ்ஸைக்கொடுத்து போட்டுக்கொள்ளச்சொல்லி, அவர் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகும்போது அவனையும் கூட்டிச்சென்றார். அங்கிருந்த மேனேஜரிடம் இவனை ஒப்படைத்து வேலையில் பழக்கும்படி சொன்னார்.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு வீடு எடுத்து அங்கேயே சாப்பாடு போட்டு தங்க வைத்திருந்தார்கள். இதுதான் தெற்கத்திக்காரர்களின் வழக்கம். இந்தப் பையனும் அப்படியே அந்த விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான், பையன் மிகவும் சூட்டிக்கை. வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டு வெகு சீக்கிரத்தில் முதலாளியின் அபிமானத்திற்கு உள்ளானான்.

இவன் 25 வயது ஆகும்போது சூப்பர் மார்க்கெட்டின் நெளிவு சுளிவுகள் இவனுக்கு அத்துபடியாய் இருந்தன. முதலாளி இவனை அந்த நிறுவனத்தின் மேனேஜராக பதவி கொடுத்து வைத்திருந்தார். அவருக்கும் வயது ஆகிவிட்டது. முன் போல் சூப்பர் மார்க்கெட்டைக் கவனிக்க முடியவில்லை. பையன் படித்து முடித்து வெளி நாட்டுக்கு வேலயாகப் போய்விட்டான்.

அவருக்கு ஒரு பெண். 20 வயதில் அவள் திருமணத்திற்கு தயாராக இருந்தாள். முதலாளி யோசித்தார். இந்த மேனேஜர் பையன் பல வருடங்களாக நம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். எந்த தப்புத்தண்டாவும் இல்லை. அவனை ஏன் நம் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளக்கூடாது என்று யோசித்தார். மனைவி மற்றும் மகளிடம் கலந்து ஆலோசித்தார். அவர்கள் சம்மதம் தரவே அந்தப்பையனிடம் கேட்டார். அவனும் சம்மதம் தரவே கல்யாணத்தை ஜாம் ஜாமென்று முடித்து, சூப்பர் மார்க்கெட்டை அவன் பெயருக்கே மாற்றி எழுதி விட்டார்.

சில வருடங்கள் கழித்து முதலாளியும் அவர் மனைவியும் காலமாகி விட்டார்கள். இந்தப் புது முதலாளியும் வியாபாரத்தை நன்றாக கவனித்து விருத்தி பண்ணினான். மனைவியையும் நன்றாக வைத்திருந்தான். ஒரு பெண், ஒரு பையன் பிறந்தார்கள். குடும்பம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தது.

இவன் இப்படி நன்றாக இருக்கும்போது ஊரில் இருந்த இவனுடைய பழைய சொந்தங்களைப் பார்த்து உறவுகளைப் புதுப்பித்துக்  கொண்டான். பிறகு ஊரில் நடக்கும் விசேஷங்களுக்கு இவனுக்கு அழைப்பு வைத்தார்கள். இவனும் கெத்தாக போய்வந்து கொண்டிருந்தான்.

இப்படி இருக்கையில் ஊர்ல ஒரு விசேஷம் ஞாயிற்றுக்கிழமை வைத்திருந்தார்கள். இவனும் சனிக்கிழமை மாலை பத்து மணி வரையில் சூப்பர் மார்கெட் விவகாரங்களைப் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்குப்போய் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிக்கு திருநெல்வேலிக்கு தன் காரில் புறப்பட்டான்.

கார் புதிதாக 40 லட்சத்திற்கு வாங்கின சொகுசு கார். ஏக்சலேட்டரை லேசாக அழுத்தினாலே 100 கிமீ ஸ்பீடில் போகும். கொஞ்சம் பலமாக அழுத்தினால் 150 கிமீ ஸ்பீடில் போகும். டிரைவர் நல்ல வாலிபம். 22 வயதுதான் ஆகிறது. முதலாளி டிரைவரிடம் கேட்டார். என்னப்பா, ராத்திரி தூங்காம கார் ஓட்டுவியா? இரண்டு நாள்கூட தூங்காமல் வண்டி ஓட்டுவேன், சார் என்று டிரைவர் பதிலளித்தான்.

குடும்பம் முழுவதும் காரில் ஏறினார்கள். டிரைவரும் 150 கிமீ வேகத்தில் ஓட்டி திருநெல்வேலிக்கு காலை 6 மணிக்கு அவர்ளைக் கொண்டு வந்து சேர்த்தான். ஒரு பெரிய லாட்ஜில் முதலிலேயே ரூம் ரிசர்வ் செய்திருந்தார்கள். அங்கு சென்று காலைக் கடன்கள், குளியல்கள் இத்தியாதிகளை முடித்து விட்டு 8 மணிக்கு விசேஷம் நடக்கும் வீட்டிற்குப் பாய் சேர்ந்தார்கள்.

விசேஷம் நடத்தும் வீட்டுக்காரருக்கு வாயெல்லாம் பல். அண்ணாச்சி, வாங்க, வாங்க என்று தடபுடலான வரவேற்பு. பார்த்தவர்களிடமெல்லாம் "நம்ம அண்ணாச்சி" என்று அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாச்சியைக் கூட்டிக்கொண்டு போய் டிபன் சாப்பிட வைத்தார்கள். விசேஷம் நடந்து முடிந்தது. டிரைவரும் திவ்யமாகச் சாப்பிட்டான். டைம்11 மணி. சாப்பாட்டுப் பந்தி போட்டார்கள். விசேஷம் நடத்தும் வீட்டுக்காரர் அண்ணாச்சியை சாப்பிடாமல் போகக்  கூடாது என்று கூட்டிப்போய் பந்தியில் உட்கார வைத்து விட்டார்.

விருந்தில் பிரியாணி, ஆடு, மாடு, கோழி, பறப்பன, ஊர்வன எல்லாத்தையும் புடிச்சுப் போட்டிருந்தார்கள். அண்ணாச்சி நன்றாகச் சாப்பிட்டார். டிரைவர் வாலிப வயது இல்லையா? அவனும் ஒரு பிடி பிடிச்சான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு 2 மணிக்கு திரும்பப் புறப்பட்டார்கள்.

வரும் வழியில் மதுரை மீனாட்சியம்மன் தரிசனம். திருச்சியைத் தாண்டும்போது நல்ல மாலை வேளை. சூரியன் மறைந்த நேரம். காருக்கு லைட் போட்டு ஓட்டவேண்டிய கட்டம். அப்படி லைட் போட்டவுடன் கண்கள் அந்த லைட்டுக்கு அட்ஜஸ்ட் ஆக கொஞ்ச நேரம் ஆகும். அந்த நேரத்தில் இந்தக் காருக்கு முன்னால் ஒரு லாரி போய்க்கொண்டிருந்தது.

டிரைவர் அந்த லாரியை முந்திப்போக முயன்றான். யாருடைய தவறு என்று தெரியவில்லை. கார் லாரியின் பின் பக்கம் டமார் என்று மோதியது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் திருச்சிக்குப் பக்கத்தில் கார் விபத்தில் ஐந்து பேர் மரணம் என்று செய்தி பிரசுரமானது.

யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
               

எந்தக் கதையானாலும் அதில் ஒரு நீதி சொல்லப்படவேண்டும். இந்தக் கதைக்கு அவரவர்கள் இஷ்டம்போல் நீதி வைத்துக்கொள்ளலாம்.

வெள்ளி, 17 ஜூன், 2016

ஒரு காதல் கதையும் ஒரு கொலையும்

                                   Image result for காதலர்கள் படங்கள்

ஒரே ஒரு ஊர்ல ஒரு இளிச்சவாய விவசாயி. அவனுக்கு ஒரு பொண்டாட்டியும் ஒரு வைப்பாட்டியும். பொண்டாட்டிக்கு ஒரு பையன், ரெண்டு பெண்கள். வைப்பாட்டிக்கு எத்தனைன்னு தெரியலை.  பணம் நெறய பேங்கில போட்டு வச்சிருக்கான். குடும்பத்த ஒரு ஊர்ல விட்டுட்டு இவன் வைப்பாட்டியோட வேற ஊர்ல விவசாயம் பாக்கறான்.

ஆனா எழுதப் படிக்கத் தெரியாது. சரி, பொண்ணாவது நல்லாப் படிக்கட்டும் என்று பொண்ணைப் படிக்க வைக்கிறான். பொண்ணு புத்தகப் படிப்பை விட வாழ்க்கைப் படிப்பை அதிகமாகப் படிக்கிறாள். அவ காலேஜுக்குப் போற வழில ஒரு தெல்லவாரி. எட்டாம்  கிளாசோட படிப்பு போதும்னு நின்னுட்டான். அவன் (வயது 20) நல்லா ஸடைலா டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு இருந்தான்.

நம்ம கதாநாயகி (வயது 18) அவனக்கண்டு மயங்கிட்டாள். அப்பன்காரன் பேங்க் கணக்கிலிருந்து இவதான் பணம் எடுக்குற வழக்கம். கதாநாயகனுக்கு சொந்தமா பைக் இல்லை. இவ அப்பன்காரன் கணக்கில இருந்து அறுபது ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்து அவனை பைக் வாங்கச்சொல்லி இருக்கிறாள்.

அந்த பைக்கில ரெண்டு பேரும் ஊர் சுற்றியிருக்கிறார்கள். இது அப்பன்காரனுக்குத் தெரிஞ்சு போச்சு. பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கிறான்.  பொண்ணோட அம்மா பொண்ணு கட்சி. அம்மாவும் பொண்ணும் யோசனை பண்ணுனாங்க. அப்பன்காரனைப் போட்டுத்   தள்ளினாத்தான் நாம நம்ம இஷ்டம் போல் இருக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

நம்ம கதாநாயகி நம்ம கதாநாயகனைக் கலந்து ஆலோசனை பண்ணினாள். அவன் கொஞ்சம் பணம் கொடுத்தால் நான் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லியிருக்கிறான். கதாநாயகி ஒன்றரை லட்சம் ரூபாய் பேங்கிலிருந்து எடுத்து அவனிடம் கொடுத்தாள். அவன் நன் நணபர்கள் மூன்று பேரைச் சேர்த்துக்கொண்டு அவன் விவசாயம் பார்க்கும் ஊருக்குப்போய் காத்திருந்திருக்கிறார்கள்.

அந்த விவசாயி தன் பண்ணையில் இருக்கும் மாடுகளிலிருந்து பால் கறந்து அதை பால் சொசைட்டியில் ஊற்றுவதற்காக காலை 4 மணிக்கு புறப்பட்டிருக்கிறான். ஒரு மறைவான இடத்தில் இந்த நான்கு பேரும் அவனை வழிமறித்து அருவாட்களால் வெட்டிச் சாய்த்து விட்டு வந்து விட்டார்கள்.

போலீஸ் வந்து பார்த்தது. உடனடியாக ஏதும் துப்புக் கிடைக்கவில்லை. பிணத்தைக் குடும்பத்தார்கள் எடுத்து அடக்கம் செய்து விட்டார்கள். போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே நம் கதாநாயகிக்கு பயம் வந்து விட்டது. கோர்ட்டில் போய் சரண்டைந்து  விட்டாள். பிறகு நம் கதாநாயகனும் அவன் கூட்டாளிகளும் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். எல்லோரும் இப்போது ஜெயில் களி சாப்பிட்டுக்கொண்டு சுகமாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையின் நீதி என்னவென்றால் தன் பணத்தை தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

                               Image result for காதலர்கள் படங்கள்

புதன், 15 ஜூன், 2016

அரசியல் கட்சி ஆரம்பித்து வளர்ப்பது எப்படி?

                           

நான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம் என்று யோசித்தேன். அதற்குக் காரணம் இப்போது இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் அக்-மார்க் சுயநலவாதிகளால் நடத்தப்படுகிறது என்ற எண்ணம் என் மனதினுள் தோன்றியதே. இந்த நாட்டிற்கு நம்மாலான சேவை செய்யாவிட்டால் நாம் பிறந்ததிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று என் மனச்சாட்சி சொல்லியது.

இதற்காக ஒரு ஆராய்ச்சி செய்தேன். அரசியல் கட்சியில் சேர்ந்து வளர்ந்தவர்களின் கதைகளை எல்லாம் விசாரித்து அறிந்தேன். அந்த ஆராய்ச்சியில் நான் அறிந்தவைகளை எல்லோரும் தெரிந்து பயனடையட்டும் என்று இங்கே பதிவு செய்கிறேன்.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் இப்போது இருக்கும் ஏதாவதொரு கட்சியில் தொண்டனாகச் சேரவேண்டும். அப்படி தொண்டனாகச் சேருவதற்கு அந்தக் கட்சியில் இப்போது இருக்கும் ஒரு முக்கியப் புள்ளியிடம் அடியாளாகச் சேரவேண்டும். அடியாள் என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னேரம் புரிந்திருக்க வேண்டும்.

ஓரிரு ஆண்டுகள் இவ்வாறு சேவை புரிந்தபின் நீங்களே ஒரு தலைவனாக மாறவேண்டும். இதற்கான வழி முறைகள் இந்த இரண்டாண்டு அடியாள் பயிற்சியில் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். தலைவன் என்றால் உங்களுக்கு கீழே நாலைந்து அடியாட்கள் இருக்கவேண்டும்.

அடியாட்களுக்கு தினமும் பிரியாணியும் குவார்ட்டரும் சப்ளை செய்யவேண்டும். அதற்கு நிதி வசதி வேண்டும். இந்த நிதி வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சில யுத்திகள் உண்டு. முதலில் உங்கள் மனச்சாட்சியை அழித்து விடவேண்டும். உங்கள் பகுதியில் இருக்கும் வியாபார ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று ஒரு சந்தா வசூலிக்கவேண்டும். அந்தப் பகுதியில் என்ன அடிதடி நடந்தாலும் நீங்கள் அங்கே தவறாமல் ஆஜராகி கட்டைப் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு சொல்லவேண்டும். இதற்கு மாமூல் வசூலிக்கவேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏதாவதொரு கட்சியின் எம்எல்ஏவைப் பிடித்துக்கொள்ளவேண்டும். கட்சி கூட்டங்களுக்கெல்லாம் நீங்கள் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அவருக்குச் செலவு வைக்காமல் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் மூலமாக அப்படியே ஒரு மந்திரியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படி உங்கள் செல்வாக்கு பெருகியவுடன் உள்ளாட்சித் தேர்தல்களில் நின்று கவுன்சலராகி விட வேண்டும்.

அடுத்த படி சட்டசபைத்தேர்தலில் நின்று ஒரு எம்எல்ஏ ஆகிவிடவேண்டும். இதற்குள் உங்களுக்கு உள்ளூரில் ஏகப்பட்ட தொண்டர்களும் அடியாட்களும் சேர்ந்திருப்பார்கள். அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது உங்கள் இனமக்களை வளைத்துப்போட்டு ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து விடுங்கள்.

அவ்வளவுதான். அரசியல் கட்சி ஆரம்பித்தாயிற்று. நீங்கள் தலைவர் ஆகிவிட்டீர்கள். இனி செய்யவேண்டியது ஸ்விஸ் பேங்கில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டியதுதான்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

இந்த உலகத்தின் வாழ்நாள் எவ்வளவு?

Image result for life is beautiful

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்கின்றது. அவைகள் பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. அல்லது இப்படிக்கூறலாம். பிரச்சினைகளை அவை சாதாரணமாக, இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன.

மனிதன் ஒருவன்தான் தன்  சிந்திக்கும் திறனால் இயற்கையுடன் இசைந்து வாழ மறுக்கிறான். இயற்கையை தன் மனதுப்படி வளைக்க எண்ணுகிறான். வளைக்கிறான். இன்றைய பல நவீன உபகரணங்களுக் செயல் சக்திகளும் அதன் விளைவே.

ஆனால் அதனால் சில வேண்டாத விளைவுகளும் ஏற்படுகின்றன. அவைகளைக் களைய மனிதன் முற்படும்போது பல தடங்கல்கள் வருகின்றன. அவைகளில் முக்கியமான ஒன்று மனித இனத்தின் ஜனத்தொகை.

மனிதனின் வியாதிகளைக் கட்டுப்படுத்தி அவன் வாழ்க்கையில் உள்ள இயற்கை எதிர்ப்புகளை நீக்கி விட்டபடியால் மனிதன் அதிக நாள் உயிருடன் இருக்கிறான். மனிதனின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. தவிர அவனுடைய அதீத தேவைகளுக்காக பல இயற்கை வளங்களை அழிக்க நேரிடுகிறது.

இப்படியே ஜனத்தொகை அதிகரித்து, அவனுடைய தேவைகளுக்காக இயற்கை வளங்களையும் அழித்துக்கொண்டே போனால் இந்த உலகம் என்ன ஆகும்? விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனாலும் இயற்கையைக் காப்பி அடித்து ஒரு குண்டுமணி அரிசியைக்கூட நாம் இது வரை பெறவில்லை.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு பிரளயம் வந்து உலகம் அழியும் என்று நம் புராண இதிகாசங்கள் சொல்கின்றன. அது உண்மையாகத்தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

வெள்ளி, 10 ஜூன், 2016

நான் ஒரு பைத்தியக்காரன்


                                  Image result for பைத்தியக்காரன்

எல்லோரும் அநேகமாக தாங்கள் போகும் வழியில் தங்கியிருக்கும் ஏதோவொரு பைத்தியக்காரனைப் பார்த்திருப்பார்கள். அந்த உருவம் உங்கள் கண்களின் வழியே மூளைக்குச் சென்றிருக்குமானால் ஒரு சில விநாடிகள் ஒரு பரிதாபம் உங்களுக்குள் தோன்றியிருக்கும். அதன் பிறகு உங்கள் அன்றாட வாழ்வின் போராட்டங்கள் இந்த நினைவை அழித்திருக்கும்.

அடுத்த தடவை இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தால் ஒரு சில மணித்துளிகள் நின்று அவனைக் கவனியுங்கள். நீங்கள் கவனிப்பதை அவன் பார்த்தால் கூட அதைக் கண்டு கொள்ள மாட்டான். அவன் அருகே மூன்று அல்லது நான்கு சாக்கு மூட்டைகள் இருக்கும். அதில் பலதரப்பட்ட குப்பைகள், தெருவில் கிடக்கும் சாமான்களைச் சேகரித்து வைத்திருப்பான். அவைகள் ஏதோ மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் போன்று அவைகளைப் பாதுகாப்பான்.

உங்களுக்கு அவைகள் வெறும் குப்பைகளாகத்தான் தெரியும். இவன் ஏன் இந்தக் குப்பைகளை இவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கிறான் என்று உங்களுக்குப் புரியாது. அவன் பைத்தியக்காரன்தானே, அப்படித்தான் இருப்பான் என்று உங்கள் மனதைச் சமாதானம் செய்து கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்கள்.

நேற்று நான் நடைப் பயிற்சி சென்றுவிட்டுத் திரும்பும்போது ஒரு போதி மரத்தின் கீழ் சில நொடிகள் நிற்க வேண்டி  வந்தது. அப்போது எனக்கு இந்தப் பைத்தியக்காரனின் சிந்தனை வந்தது. அப்போது திடீரென்று என் மூளியில் ஒரு பொறி தட்டியது. ஆஹா, அந்தப் பைத்தியக்காரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாமும் எவ்வளவு வேண்டாத பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம் என்று தோன்றியது.

வேண்டாத பொருட்கள் என்று நான் குறிப்பிடுவது நாளைக்குத் தேவைப்படலாம் என்று எண்ணி எவ்வளவு பொருட்களை நாம் சேகரிக்கிறோம்? ஆனால் அவைகளை நாம் வருடக்கணக்காக உபயோகப்படுத்தியதே இல்லை. இனி வரும் காலங்களிலாவது அவைகளை உபயோகப்படுத்துவோமா என்றும் தெரியாது. சரி, அவைகளை உபயோகப்படுத்தக்கூடிய யாருக்காவது கொடுக்கலாமே என்றால் அதற்கும் நம் மனது இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் பைத்தியக்காரன் சாக்கு மூட்டைகளைப் பாதுகாத்து வைத்திருப்பது போல் அவைகளை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

 அப்படி நான் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில பொருட்கள்- தேவைக்கு அதிகமான பணம், உபயோகப் படுத்தாத நாட்குறிப்பு ஏடுகள், பேனா, பென்சில், துணிகள், கம்ப்யூட்டர் சிடிக்கள், இன்னும் பல. இப்போது சொல்லுங்கள், நான் பைத்தியக்காரன்தானே!