வியாழன், 4 ஏப்ரல், 2019

ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்?

கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் வரவில்லை. கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் ஆச்சு. சரி, இப்ப என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்காக முன்னெச்சரிக்கையாக இதோ பதில்.

எனக்கு அதிகார பூர்வ வயசு 85. ஜாதக பூர்வமாக வயசு 84. இது எப்படி நேர்ந்தது என்பதை வேறொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். இப்ப விஷயத்திற்கு வருவோம். இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நானும் இந்த விதிக்குள்தான் வருவேன் போலத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. உடலில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நெஞ்சில் லேசாக வலி தோன்றியது. என் டாக்டர் பெண்ணிடம் கூறினேன். அவள் உடனடியாக என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் அங்குள்ள இருதய நோய் நிபுணரிடம் விட்டாள்.


அவர் வழக்கமாகச் செய்யும் ECG, Echo Cardiogram எல்லாம் செய்து விட்டு, ஒரு  Angiogram செய்து பார்த்துடலாமே என்றார். என் பெண் அப்படியே செய்யுங்கள் என்று கூறி விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை இப்படி ஒரு சூழ்நிலையில் ஏன்ஜியோ செய்கிறேன் என்று டாக்டர் சொன்னபோது நான் சொன்னேன். இப்படி முதலில் ஏன்ஜியோ செய்கிறேன் என்பீர்கள், அப்புறம் இரண்டு அடைப்பு இருக்கிறது, ஒரு சின்ன (?) ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்பீர்கள். எனக்கு இந்த வித்தை எல்லாம் வேண்டாம், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து அனுப்புங்கள் என்று கறாராகச் சொல்லி மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண்ணோ பட்டு லேசாக நெஞ்சில் அவ்வப்போது வலி வர ஆரம்பித்தது. எனக்கும் வயதாகி விட்டபடியால், சரி உடல்நிலை எப்படியிருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்று தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசை வந்தது. அதனால்தான் என் பெண்ணிடம் கூறி இப்படி இந்த டாக்டரிடம் செல்ல வேண்டியதாகப் போயிற்று.

சரி, அதையும் பார்த்து விடுங்கள் என்றேன். ஒரு இரண்டு மணி நேரம் என்னென்னமோ செய்து ஒரு வழியாக ஏன்ஜியோ செய்து முடித்தார்கள். என்னைக் கொண்டு போய் தனியாகப் படுக்க வைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஒரு ரூம் கொடுத்து இன்று இரவு இங்குதான் தங்க வேண்டும் என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டுப் புளிய மரத்திற்குப் பயப்பட முடியுமா? எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன்.

மறுநாள் காலையில் என் பெண்ணும் வந்த பிறகு டாக்டர் அறையில் ஏன்ஜியோ ரிசல்டைப் பரிசீலித்தோம், இருதயத்திலுள்ள முக்கிய மூன்று இரத்தக் குழாய்களில் இரண்டில் 90 சத அடைப்பு இருக்கிறது. மீதி ஒரு ரத்தக்குழாயினாலும் புதிதாக உண்டான subsidiary ரத்தக்குழாய்களினாலும் இருதயம் ஓரளவு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இப்போதைய நிலை என்று டாக்டர் சொன்னார்.

இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று மகள் கேட்டாள். ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யலாம், ஆனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது என்றார். அப்படி சர்ஜரி செய்தால் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும் என்று கேட்டதற்கு அவர் சுமார் 10 % முன்னேற்றம் இருக்கும் என்றார்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான் சொன்னேன். டாக்டர், எனக்கு 84 வயது ஆகிவிட்டது, இந்த ஆபரேஷனில் ரிஸ்க் அதிகம் என்று நீங்களே சொல்லுகிறீர்கள், தவிர ஆபரேஷனுக்குப் பிறகு வரும் முன்னேற்றமும் கணிசமாக இல்லை. இந்த நிலையில் இந்த ஆபரேஷனைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளினால் நான் சிரமப்படாத அளவிற்கு என்னைத் தயார் செய்தால் போதும், நானும் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுகிறேனே என்று சொன்னேன்.

டாக்டர் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். உங்கள் நிலையில் நீங்கள் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்று ஒரு சர்டிபிகேட்டும் கொடுத்து விட்டார். ஆகவே மக்களே, டாக்டர்கள் சொல்லுகிறார்களே என்று எந்த ஆபரேஷனுக்கும் சம்மதித்து விடாதீர்கள். அந்த ஆபரேஷன் உங்களுக்கு அவசியம்தானா, அதனால் உங்கள் உடல்நிலை மேம்படுமா என்பதையெல்லாம் தீர யோசித்து அப்புறம் முடிவு எடுங்கள்.

மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை.