திங்கள், 29 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ் முடிவு.

 

 
டரங்க் பெட்டியும் தலைப்பார்சலும் கிடைத்த பிறகு போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டது. ஆளவந்தார் வீட்டிலிருந்தும் அவர் வேலை பார்த்த கம்பெனி முதலாளியிடமிருந்தும் ஆளைக்காணவில்லை என்ற புகார் போலீஸுக்கு கிடைத்தது. இருவரையும் கூப்பிட்டு தலையைக் காட்டியதில் இறந்தது ஆளவந்தார்தான் எனபது உறுதியாகியது.

பிறகு என்ன, விசாரணையில் எல்லா விவரங்களும் தெரியவந்தன. வில்லனும் கதாநாயகியும் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற வரையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வெளியாகிக்கொண்டு இருந்தன. இந்தச் செய்திகளை -யெல்லாம் படித்தவுடன் வில்லனுக்கும் கதாநாயகிக்கும் இருப்புக்கொள்ளவில்லை. அதிக நாள் தலை மறைவாக இருக்கமுடியாது எனத்தெரிந்தது. இருவரும் மெட்ராஸ் கோர்ட்டில் வந்து  சரண்டர் ஆகிவிட்டார்கள்.

போலீஸ் விசாரணை எவ்வளவு நாள் நடந்தது என்பது சரியாக நினைவில்லை. விசாரணை முடிந்து கேஸ் கோர்ட்டிற்கு வந்த பிறகுதான் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. 200க்கும் மேற்பட்ட சாக்ஷிகள். 20க்கும் மேற்பட்ட சாதனங்கள். இவைகளையெல்லாம் ஒரு ஆங்கில துப்பறியும் படம் பார்ப்பது போன்று விசாரணை விபரங்கள் பந்திரிக்கைகளில் வெளியாயின. தினத்தந்தியில் வழக்கு விபரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. பத்திரிக்கையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது.

மெட்ராஸ்வாசிகள் அநேகம் பேர் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு கேஸ் விசாரணையைப் பார்க்கப் போனார்கள். கேஸ் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேல் நடந்தது. கடைசியாக கேஸ் விசாரணை முடிந்து வக்கீல்கள் வாதம் முடிந்து கேஸ் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு நாள் விடியற்காலையிலிருந்தே ஹைக்கோர்ட்டில் கூட்டம் கூடிவிட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜட்ஜ் உள்ளே போவதற்கே போலீஸ் உதவி தேவைப்பட்டது. ஜட்ஜ் தீர்ப்பு கூறும் நேரம் வந்துவிட்டது. கோர்ட்டில் மயான அமைதி. தீர்ப்பு படிக்கப்பட்டது. வில்லனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கதாநாயகிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தீர்ப்பு வழங்கப்பட்டது.   



இப்படியாக ஓர் ஆண்டுக்கு மேல் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த கேஸ் முடிவிற்கு வந்தது.

பின் குறிப்பு: தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த இருவரும் மக்கள் சமுத்திரத்தில் மறைந்து போனார்கள்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

கொலைக்கான காரணமும், கொலை நடந்த விவரங்களும்.

 
(எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்களும், பெண்களும், திடமனது இல்லாத ஆண்களும் தயவு செய்து இந்த பதிவைப்படிக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.)

இன்றைக்கு பேப்பரில் கொலைச்செய்திகள் சர்வ சாதாரணமாயப் போய்விட்டன. குறிப்பாக கள்ளக்காதல் விவகாரத்தினால் நடக்கும் கொலைகள். மூன்று பேர் இருப்பார்கள். இரண்டு ஆண், ஒரு பெண் அல்லது இரண்டு பெண், ஒரு ஆண். இதில் இரண்டு பேர் சேர்ந்து மூன்றாவது ஆளைப்போட்டுத் தள்ளுவார்கள். இந்த மாதிரி செய்திகள் சராசரியாக தினம் இரண்டு வருகின்றன. அதை நாம் கண்டுகொள்வதே இல்லை. அது மாமூல் செய்தியாகப்போய்விட்டது. அப்படிப்பட்ட செய்தி வராவிட்டால்தான் ஏன் வரவில்லை என்று யோசிப்போம்.

ஆளவந்தார் கேஸிலும் இதே கதைதான். என்ன, அன்றைக்கு இப்படிப்பட்ட கேஸ்கள் அபூர்வம். ஒரு அழகான பெண் (30 வயசு) தினமும் ஜெம் அண்ட் கோ வழியாக அங்குள்ள ஏதோ ஒரு ஆபீஸுக்கு வேலைக்கு போய்வந்து கொண்டிருந்தது. நம் கதாநாயகர் பார்த்துக்கொண்டே இருந்தார். எப்படியோ அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டார். இந்த மாதிரி கேஸ்களின் வழக்கம்போல், அறிமுகம் முற்றிப்போய் லாட்ஜில் ரூம் போடுமளவிற்கு வளர்ந்து விட்டது. பிறகு லாட்ஜ் செலவை மிச்சப்படுத்துவதற்காக அந்தப்பெண்ணின் வீட்டையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவள் புருஷனுக்கு ( சாரி, முதலிலேயே சொல்ல மறந்துவிட்டேன்-அவளுக்கு கல்யாணமாகிவிட்டது) அடிக்கடி டூர் போகும் வேலை. அதனால் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே பொறாமை. ஒரு நாள் அந்த ஆள் வீட்டில் தனியாக இருக்கும்போது போட்டுக்கொடுத்து விட்டார்கள்.

அன்று அந்தப்பெண் வேலையிலிருந்து வந்தவுடன், இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் நடக்கும் வழக்கமான வாதப்பிரதிவாதங்கள், அடிதடிகள் எல்லாம் முடிந்து ஒரு அமைதி நிலைமைக்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி அடுத்த நாள் பகலில் நம் கதாநாயகனை வீட்டுக்கு வரச்சொல்லி கதாநாயகி அழைப்பு விடுக்கவேண்டும். அவன் வந்தவுடன் மற்ற விஷயங்களை நம் வில்லன் (வில்லன் யார், அந்தப்பெண்ணின் புருஷன்தான்) கவனித்துக்கொள்வார். இப்படியாக முடிவு ஆகியது.

காலையில் வழக்கம்போல் கதாநாயகி வேலைக்குப்போவது போல் சென்று கதாநாயகனுக்கு அழைப்பு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். கதாநாயகனும் சொன்ன நேரத்தில் வந்துவிட்டார். கதவு சாத்தப்பட்டது. கதாநாயகனும் குஷியானார். அப்போது வில்லன் சீனில் பிரவேசித்தார். கதாநாயகனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

பிறகு நடந்ததை அதிகமாக விவரிக்க வேண்டிதில்லை. புருஷனும் மனைவியும் சேர்ந்து ஆளவந்தாரை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதுவரை நடந்தது சாதாரணமாக நடப்பதுதான். அதற்கப்புறம் நடந்தவைதான் கிளைமேக்ஸ். அப்போது பகல் 12 மணி. 

 

இனி இந்த பாடியை என்ன செய்வது? வில்லன் திட்டம் தீட்டினார். சைனாபஜாருக்குப்போய் ஒரு பெரிய டிரங்க் பெட்டி வாங்கினார். ஒரு ரிக்சாவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஆள் இழுக்கும் கை ரிக்சாக்கள்தான் இருந்தன. பெட்டியை வீட்டில் இறக்கி வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு கடையில் ஒரு பெரிய வெட்டுக்கத்தி இரவல் வாங்கி வந்தார். பிறகு கதவைச்சாத்தி லாக் செய்துவிட்டு, போட்டிருந்த சட்டை பேண்ட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு, பாடியை கவனித்தார்(?). முதலில் தலையைத் தனியாக வெட்டி ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தார். பிறகு கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி, டிரங்க் பாக்ஸில் சுற்றிலும் கதாநாயகனின் துணிகளைப்போட்டு நடுவில் முண்டத்தையும் கைகால்களையும் பேக் செய்தார். பெட்டியை நன்றாக மூடி பூட்டுப்போட்டார். இரண்டு பேருமாகச் சேர்ந்து பெட்டியை முன் வராந்தாவில் கொண்டுவந்து வைத்தனர். பிறகு தலையை இன்னும் கொஞ்சம் பேப்பரில் சுற்றி தனியாக வைத்தார். மறக்காமல் இரவல் வாங்கிய கத்தியை திருப்பிக்கொடுத்தார்.
 
பிறகு வில்லனும் கதாநாயகியும் சேர்ந்து வீட்டை முழுவதும் கழுவிவிட்டார்கள். பிறகு வில்லன் குளித்தார். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. வெளியில் போய் எக்மோர் ஸ்டேஷன் போவதற்கு என்று ஒரு ரிக்சா பேசி அழைத்துவந்தார். அந்த ஆளையே பெட்டியை எடுத்து ரிக்சாவில் வைக்கச்சொல்லி, தானும் ஏறிக்கொண்டு எக்மோர் சென்றார்கள். அங்கு ரிக்சாக்காரருக்கு வாடகை கொடுத்துவிட்டு, ஒரு போர்ட்டரைப்பிடித்தார். பெட்டியை கொண்டுபோய்  போட்மெயிலில் ஒரு கம்பார்ட்மென்டில் வைக்கச்சொல்லி, கூலி கொடுத்து போர்ட்டரை அனுப்பி விட்டார். சிறிது நேரம் அங்கே உட்கார்ந்துவிட்டு, பிறகு கிளம்பி வீடுவந்து சேர்ந்தார்.



உடனே அந்த தலைப்பார்சலை எடுத்துக்கொண்டு இன்னொரு ரிக்சா பிடித்து சாந்தோம் பீச்சுக்கு சென்றார். ரிக்சாவை அனுப்பிவிட்டு, கடல் நீருக்குள் சிறிது தூரம் சென்று அந்தப்பார்சலை கடலுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குத்திரும்பினார். மணி 10. உடனே அவசியமான துணிமணிகளை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பிராட்வே பஸ் ஸ்டேண்ட் சென்று பெங்களூருக்கு பஸ் ஏறிவிட்டார்கள்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்.....




வெள்ளி, 26 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ்




சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாக இருந்தது என்பதை என் போன்ற வயதானவர்கள் நினைவு வைத்திருப்பார்கள். அப்போது மெட்ராஸ்ஸிலிருந்து கொழும்பு வரையிலும் நேர் ரயில் போக்குவரத்து இருந்தது. அந்த ரயிலுக்கு “போட் மெயில் என்று பெயர். அது தனுஷ்கோடி வரையில் தரைத்தண்டவாளத்தில் செல்லும். அங்கு அந்த தண்டவாளத்தை ஒட்டி ஒரு கப்பல் நிற்கும். அந்த கப்பலிலும் ரயில் தண்டவாளம் போடப்பட்டிருக்கும். இரு தண்டவாளங்களையும் இணைக்க வசதி உண்டு. அப்படி தண்டவாளங்களை இணைத்து விட்டால் ரயிலை கப்பலுக்குள் ஓட்டிச்செல்லலாம். பிறகு தண்டவாளங்களின் இணைப்பை எடுத்துவிட்டு கப்பல் கடலில் செல்லும். தலைமன்னார் சேர்ந்தவுடன் மறுபடியும் இணைப்பு கொடுத்து ரயில் தரைக்கு வரும். பிறகு அங்கிருந்து கொழும்பு செல்லும். ரயில் கப்பலில் (போட்) செல்வதால் அதற்கு போட்மெயில் என்று பெயர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திரம் வந்த பிறகும் அந்த ரயில் போட்மெயில் என்ற பெயரிலேயே தனுஷ்கோடி வரை நிறைய வருடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.



1952 ல் ஒரு நாள் போட்மெயில் தனுஷ்கோடியில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிப்போய்விட்டார்கள். காலியாக இருந்த ரயிலை பரிசோதித்த ஒரு போலீஸ்காரர் ஒரு கம்பார்ட்மென்டில் ஒரு பெரிய டிரங்க் பெட்டி இருப்பதைப்பார்த்தார். யாரோ பயணி மறந்து விட்டுவிட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது என்று பிளாட்பாரம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். அப்படி யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்பவும் வந்து பெட்டியை அருகில் சென்று பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. பெட்டியில் இருந்து ரத்தம் கசிந்து ஓரத்தில் தேங்கி இருந்தது.

உடனே பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி எல்லோரும் வந்துவிட்டார்கள். பெட்டி மிகுந்த கனமாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. நான்கு பேர் சேர்ந்து பெட்டியை பிளாட்பாரத்தில் இறக்கி பூட்டை உடைத்து பெட்டியைத் திறந்தால் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. உள்ளே ஒரு தலையில்லாத ஒரு ஆணின் உடல். கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு பெட்டியில் பேக் செய்யப்பட்டிருந்தது. உடலில் எந்த உடையும் இல்லை. உடனே தனுஷ்கோடியே அல்லோல கல்லோலப் பட்டது.

சென்னைக்கு தந்தி போயிற்று. டிரங்க்பெட்டி எந்த ஸ்டேஷனில் ஏற்றப்பட்டது என்பது உடனே தெரியவில்லை. மெட்ராஸ் போலீஸ் உடனே சுறுசுறுப்பாக எக்மோர் ஸ்டேஷனில் விசாரித்ததில் ஒரு போர்டர் அந்த மாதிரி பெட்டியை ஒருவர் கொண்டு வந்தார். நான்தான் அதை இன்ன கம்பார்ட்மென்டில் ஏற்றினேன். அதற்குப்பிறகு நான் வேறு கூலி பார்க்கப்போய்விட்டேன் என்று சொன்னார். உடனே பெட்டியையும் உடலையும் தகுந்த முறையில் பக்குவப்படுத்தி மெட்ராஸ் கொண்டுவரவும் என்று தனுஷ்கோடிக்கு தந்தி போயிற்று.

அந்தக்காலத்தில் இந்த மாதிரி கொலைகள் நடப்பது மிகவும் அபூர்வம். இந்த செய்தி உடனே காட்டுத்தீ போல தமிழகமெங்கும் பரவிவிட்டது.
இரண்டு நாள் கழித்து ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்ட மனிதத்தலை பேப்பரெல்லாம் கிழிந்து போய் சாந்தோம் பீச்சில் ஒதுங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. அதை வைத்து கொலை செய்யப்பட்டது யார் என்ற துப்பு துலங்கியது. இறந்தவர் “ஆளவந்தார் என்னும் நபர். சைனாபஜாரில் ஜெம் அண்ட் கோ என்னும் பேனாக்கடையில் சேல்ஸ்மேனாகப் பணியாற்றியவர் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.







கொலைசெய்யப்பட்ட ஆள் யார் என்பது தெரிந்துவிட்டால் கொலையாளியைக்கண்டு பிடிக்க சிரமப்படவேண்டியதில்லை அல்லவா? இரண்டு நாளில் துப்பு துலங்கிவிட்டது. கொலைக்கான காரணம் இன்றைய சுழ்நிலையில் மிக சாதாரணமானது. இந்தக்காரணத்தினால் இன்று சராசரியாக தமிழ்நாட்டில் தினம் இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால் அன்றைக்கு இது மிகவும் அதிசயமாகப்பேசப்பட்டது. அந்தக்காரணம் என்னவென்று நாளை பார்க்கலாமா?












புதன், 24 மார்ச், 2010

நான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 2


(சில பேர் தலைப்பு தப்பு, சரியான தலைப்பு “ஆணி புடுங்க சேர்ந்த கதை ன்னு இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனா நான் கடலை புடுங்கத்தான் போனேன். எது சரின்னு எனக்குத்தெரியலீங்க. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க)


திறந்து பார்த்தால், விவசாய இலாக்கா இயக்குனரிடமிருந்து வேலை நியமன உத்திரவு. இந்த மாதிரி கவர்மெண்ட்டு ஆர்டர்களை நான் முந்தி பிந்தி பாத்ததில்லை. ஒண்ணும் சரியா புரியலே. நாலுபேருகிட்ட காண்பித்த பிறகுதான் முழு விவரமும் புரிஞ்சது. இன்னும் 15 நாட்களுக்குள் ஆனைமலை நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணையில் “நிலக்கடலை ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் சேரவேண்டும் என்று அந்த ஆர்டரில் குறிப்பிட்டிருந்தது.

வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். எனக்கும் நாமும் சம்பாதிக்கப்போகிறோம் என்ற சந்தோஷம் இருந்தது. என்ன, கோயமுத்தூர் சர்வே வேலை கொஞ்சம் பாக்கி. சரி, வேலையில் சேர்ந்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதில்தான் ஒரு சிக்கல் வந்தது. ஆனைமலை எங்கு இருக்கிறதென்பதில் குழப்பம். அது மலைமேல் இருக்கிறது என்று சிலரும், இல்லை இல்லை, அது சமவெளியில் உள்ள ஒரு ஊர்தான் என்று சிலரும் குழப்பினார்கள்.


சரி, எதற்கும் விவசாய காலேஜிலேயே விசாரித்து விடுவோம் என்று காலேஜுக்கே போனேன். அன்று பார்த்து, ஆனைமலையில் நான் வேலைக்கு ரிப்போர்ட் பண்ண வேண்டிய ஆபீசரே வந்திருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் ஆனைமலைக்கு வரும் வழியெல்லாம் சொல்லி, சேரவேண்டிய கடைசி நாளன்று வந்தால் போதும் என்று சொன்னார். சரி என்று வீட்டுக்கு வந்தேன். சேரவேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 16 ம் தேதி (1956 ம் வருடம்).

பொள்ளாச்சியில் எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஏபிடி பஸ் சர்வீசில் கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருந்தார். அதனால் போகும்போது அவரைப்பிடித்துக் கொள்ளலாம் என்று முடிவு ஆகியது. போய் அங்கே தங்குவதற்கு தேவையான தளவாடங்கள் தயார் செய்தேன். ஒரு ஜமக்காளம், ஒரு தலையணை, ஒரு பெட்ஷீட், இருக்கிற சட்டை பேண்ட்டுகள் (போட்டிருந்தது தவிர மூன்று செட்டுகள்), துண்டு, வேட்டி, சோப்பு, சீப்பு, இத்தியாதிகள். இதையெல்லாம் போட்டு எடுத்துக்கொண்டு போக “ஆளவந்தார் பெட்டி சைசில் ஒரு தகரப்பெட்டி. புதுசாய் வாங்கினோம்.





அதென்ன ஆளவந்தார் பெட்டி என்கிறீர்களா? 1940க்கு முன் பிறந்தவர்களுக்கு ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும். அந்தக்காலத்தில் (1952) ல் மிகப்பிரபலமான கேஸ். (இப்போதைய நித்தி கேஸ் மாதிரி). என்ன, நித்தி கேஸ் பத்து நாளில் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆளவந்தார் கேஸ் ஏறக்குறைய ஒரு வருடம் நடந்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கோர்ட்டு விசாரணை விபரங்கள் தினத்தந்தியில் இரண்டு முழு பக்கங்கள் வெளியாகும். கொஞ்சம் நேரங்கழித்து கடைக்குப்போனால் காப்பி தீர்ந்து விடும். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு சற்றும் குறையாத விறுவிறுப்புடன் செய்திகள் வெளியாயின. அந்தக்காலத்தில் இரண்டு பேர் சந்தித்தால் முதலில் பேசுவது ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றித்தான்.

அந்தக்கேஸில் பிரபலமானது ஒரு டிரங்க் பெட்டி. அது மாதிரி ஒரு பெட்டியைத்தான் நான் வாங்கினேன்.

ஆளவந்தார் கேஸ் என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் இருப்பீர்கள். இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்.















சனி, 20 மார்ச், 2010

நான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 1





கடவுளைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை. அதனால் அதைவிட்டுவிட்டு என் சொந்தக்கதையை ஒரு பதிவாக எழுதலாம் என்று இதை எழுதுகிறேன். முதலில் நான் வேலைக்கு சேர்ந்த கதையில் ஆரம்பிப்போம். நண்பர் அரும்பாவூர் அவர்களும் ஆசைப்பட்டார்கள்.

நான் கோயமுத்தூரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலை பார்த்து, ஓய்வு பெற்று, வாழ்ந்து கொண்டிருப்பவன். நான் பிறந்தது சாதாரண, ஏழ்மைக்கு சற்றே மேம்பட்ட குடும்பம். மூன்று வேளை சாப்பாடு, இரண்டு செட் டிரஸ் உண்டு. அதற்கு மேல் ஒன்றும் கிடைக்காது. ஒன்றாம் கிளாஸ் முதல் பிஎச்டி வரை எல்லாம் உள்ளூரிலேயே படித்து முடித்து விட்டேன். காரணம் வெளியூர் படிப்பு என் வீட்டு நிலைமையில் சாத்தியப்படாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இளநிலை பட்டப்படிப்பு வரை படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் படிப்பு செலவு அன்று அதிகம் இல்லை. முனிசிபல் ஆரம்ப பள்ளி, முனிசிபல் ஹைஸ்கூல், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ், கவர்மென்ட் அக்ரி காலேஜ் என்று எல்லாம் சலீசாக இருந்தன. தவிர எல்லாம் வீட்டிலிருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தன. போக்குவரத்து சுலபம். இதைவிட முக்கியமான காரணம், நான் எந்த வகுப்பிலும் பெயில் ஆகாமல் படித்தேன். ஏதாவது ஒரு வகுப்பில் பெயிலாகி இருந்தால் உடனே என் தந்தையார் என்னை ஒரு வொர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டிருப்பார். கோயமுத்தூரில் அப்போது புதிது புதிதாக வொர்க் ஷாப்புகள் தொடங்கிக்கொண்டு இருந்தன. (அப்படி நடந்திருந்தால் ஒருக்கால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனோ என்னவோ? இப்பவும் ஒண்ணும் பெரிசா குறைவில்லை).

மத்த படிப்பையெல்லாம் விவரிக்கவேண்டியதில்லை. கடைசியாகப் படித்த விவசாயப் படிப்புதான் நான் இப்போது ஏதோ ஓரளவுக்கு மானத்துடன் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.

தொழில் கல்வி என்று சொல்லப்படுபவை, அன்றும் இன்றும், நான்கு. மருத்துவம் (5 வருடம்), கால்நடை மருத்துவம், பொறியியல் (இரண்டும் 4 வருடம்), விவசாயம் (3 வருடங்கள்). எத்தனை வருடப் படிப்பு என்பதை வைத்துத்தான் அந்தப் படிப்புக்கு மதிப்பு. அப்படிப் பார்க்கும்போது மருத்துவம்தான் முதல் ரேங்கில் இருந்தது. மேலும் அது உயிர்காக்கும் பணி என்பதால் அது தனி சிறப்புடன் விளங்கியது. அடுத்து பொறியியலும் கால்நடை மருத்துவமும். நான்காண்டுகள் படிப்பதால் அவை இரண்டும் மருத்துவத்திற்கு ஒரு படி கீழாகவும் ஆனால் விவசாயத்தை விட மேலானதாகவும் கருதப்பட்டன. விவசாயப்படிப்பு நாட்டின் முக்கியமான, எல்லோருக்கும் உணவு வழங்கக்கூடிய துறையைச் சார்ந்திருந்தாலும் தொழில் கல்வியில் கடைநிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

விவசாயக்கல்லூரியில் நாங்கள் தோட்டவேலை செய்முறை பயிற்சிக்கு போகும்போது மம்முட்டி (மலையாள நடிகர் மம்முட்டியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) எடுத்துக்கொண்டு போவோம். இதனால் விவசாயக்கல்லூரிக்கு “மம்முட்டி காலேஜ் என்று மற்ற தொழில் கல்லூரி மாணவர்கள் கேலி செய்வதுண்டு. நாங்களும் “மம்முட்டி இல்லைன்னா உங்களுக்கு சோத்துக்கு லாட்டரி என்று பதில் கேலி செய்வோம்.

நான் படித்த கால கட்டம்தான் (1953-56) விவசாயத்தில் பசுமைப்புரட்சியின் ஆரம்ப கட்டநிலை. விவசாயம் நிலைப்பட்டால்தான, நாடு வளமாக இருக்கமுடியும் என்று நேரு தலைமையிலான அரசு, கொள்கை ரீதியில் முடிவு எடுத்து நாடு முழுவதிலும் பல விதமான விவசாய முன்னேற்றத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனால் விவசாய இலாக்காவிற்கு அதிக அளவில் விவசாயப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் நான் விவசாயப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு கோயமுத்தூரை நண்பர்களுடன் சர்வே (J) எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் ரிசல்ட் வந்தது. நான் பாஸ். சரி, அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. திறந்து பார்த்தால்.....(கொஞ்சம் பொறுங்க)





என்னுடைய அன்பு மாணவரும், சக ஆராய்ச்சியாளரும் தற்போதைய விவசாயப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான முனைவர் ப.முருகேச பூபதி அவர்கள்















வியாழன், 18 மார்ச், 2010

மனித சிந்தனையும் கடவுள் நம்பிக்கையும்.

நம் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரம் பல காலமாக பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களினால் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிகம் படித்தவர்கள் இந்த கொள்கைகளை ஒத்துக்கொண்டு இதைப்பரப்ப வேண்டும் என்று இந்த பகுத்தறிவுவாதிகள் படித்தவர்களை வற்புறுத்துகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று எனக்குப்புரியவில்லை.

இதில் முதலில் நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் இவர்கள் எதையெதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள் என்கிற லிஸட்டைத்தான். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கடவுள் நம்பிக்கை- கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இருக்கிறார் என்றால் பார்த்தவர்கள் யார்? எனக்கு காட்டமுடியுமா? நான் பார்த்தால்தான் நம்புவேன். இப்படிப்பட்ட கேள்விகளை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கேட்கிறார்கள்.

ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கைகளின் லிஸ்ட்டில் முதலில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதை திறந்த மனதுடன் பாருங்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்கிற வாதத்துடன் கடவுள் நம்பிக்கையை சம்பந்தப்படுத்தாதீர்கள். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னுடைய சொந்த வாழ்விற்கு கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தேவைப்படுகிறது என்று ஒருவன் சொன்னால், அவனது செயல்களில் அதைக்கடைப்பிடித்தால், என்ன தவறு? அவன் படித்திருந்தால் இதைச்செய்யக்கூடாதா? படித்தவன் என்றால் அவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் நிர்ணயிக்கவேண்டும்?

நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் ஏன் முடிச்சுப்போடுகிறாய்? என்று கேட்கலாம். இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள் அல்ல. ஆனால் நடைமுறை உண்மையைப்புரிந்து கொள்ள மறுத்து ஒரு மாயைக்கொள்கையை பிடித்துக் கொண்டிருப்பதைத்தான் நான் மூடநம்பிக்கை என்று நம்புகிறேன்.

மனிதனுக்கு சில நேரங்களில் சில ஊன்றுகோல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. கடவுளை நம்பகிறவனுக்கு அந்த நம்பிக்கை ஊன்றுகோலாக இருக்கிறது. கடவுளை நம்பாதவனுக்கு அந்த நம்பிக்கையே ஊன்றுகோலாக செயல்படுகிறது. எப்படிப் பார்த்தாலும்
மனிதனுக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அது கடவுள் நம்பிக்கையாகவோ, அல்லது கடவுள் அவநம்பிக்கையாகவோ இருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். சமகாலத்தில் வாழும் மனிதர்கள் அல்ல. ஒரு கருத்து பெரும்பான்மையான மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதே கருத்து சரியில்லை என்றால் அது காலப்போக்கில் அழிந்துவிடும்.

செவ்வாய், 16 மார்ச், 2010

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?






இது காலம் காலமாக விதண்டா வாதக்காரர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப்பதில் கிடையாது. அப்படிச்சொன்னால் “அப்புறம் நீ என்ன பெரிய ஆராய்ச்சி பண்ணறே?” அப்படீன்னு மறு கேள்வி வரும்.

இந்த முன்னுரை எதற்கு என்றால், அடுத்து படிக்கவும்.

என்னுடைய ஒரு பதிவில் கோவி கண்ணன் சொன்னது.

//அடுத்த பதிவு எதை பற்றி கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன் //

“இதற்கு ஹாய் அரும்பாவூர் சொன்னது”

//இது என்ன சார் புது கதை? யார் அவிழ்த்து விட்டார்கள்?

இதை விளக்க பல பதிவுகள் போட வேண்டும். இதற்கு நம் டாக்டர் சார் எதற்கு?

நானே சொல்லிவிடுவேனே?

இதற்கு சிறிதளவு இயற்கையியல் அல்லது உயிரியல்/தாவரவியல்(BOTANY) தெரிந்தால் போதுமே!

அதைப்பற்றி பார்க்கும் முன்னர் ஒருவார்த்தை

இயற்கையினால் உண்டான எதுவும் அந்த இயற்கைக்கு எதிரானது அல்ல, மனிதர்களை தவிர!

கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் மட்டுமல்ல சப்பாத்தி, கள்ளி மற்று பல பாலை தாவரங்கள் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவது உண்மைதான்.

ஆனால் அவைகள் மழைவராமல் தடுக்கும் காரணிகள் அல்ல.

மீண்டும் சந்திப்போம்.//


அரும்பாவூர் ஏறக்குறைய சரியான பதில் சொல்லிவிட்டார். நானும் கொஞ்சம் சொல்லாவிட்டால் என்னுடைய டாக்டர் பட்டத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடுமல்லவா? அதற்காக.



கருவேலமரம், சப்பாத்தி கள்ளி முதலானவை இயற்கையாகவே மழை குறைந்த வறண்ட பிரதேசங்களில் வளரக்கூடியவை. அந்த சூழ்நிலையில் அவை தாக்குப்பிடிக்கத் தேவையான குணங்களைப் பெற்றிருக்கின்றன. அந்த குணங்களில் ஒன்று காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை இலைகள் மூலம் உறிஞ்சிக்கொள்வது. பிராணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் முட்கள். ஆகவே மழை குறைவான பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் வளருகின்றன.


இப்போது தலைப்பை மீண்டும் படியுங்கள். கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?


இல்லே, கோழி வறுவல்தான் முன்னே வந்ததா?

கருவேல மரம் வளர்ந்ததால் மழை குறைந்ததா? மழை குறைந்ததால் கருவேல மரம் வளர்ந்ததா?

திங்கள், 15 மார்ச், 2010

பதின்ம வயது நினைவுகள்.

இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்து என்னை பிரபல பதிவர் தகுதிக்கு உயர்த்திய பதிவர் தருமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பதின்ம வயது என்பது 10 லிருந்து 18 வரை என்று வைத்துக் கொள்ளலாம். என்னுடைய பதின்ம வயது ஆரம்பத்தில் இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. எங்கள் நகரத்தைச்சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மிலிடரி கேம்ப்புகள். சிப்பாய்கள் தங்குவதற்காக வரிசை வரிசையாக பாரக்குகள். எங்கு பார்த்தாலும் மிலிடரி லாரிகளும் ஜீப்புகளும் போய்க்கொண்டே இருக்கும். மிலிடரி லாரி அடித்து யாராவது இறந்து விட்டார்களென்றால் கேள்வி முறை கிடையாது.

காலியாக இருக்கும் இடத்திலெல்லாம் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருந்தார்கள். எதிரி விமானம் வருகிறது என்றால் அபாயச்சங்கு ஊதப்படும், அப்போது ரோட்டில் இருப்பவர்களெல்லாம் இந்த பதுங்கு குழிகளுக்குள் போய் ஒளிந்து கொள்ளவேண்டும். இப்படி நோட்டீஸ் அச்சடித்து வீடுவீடாய் விநியோகித்தார்கள்.

தெரு விளக்குகளுக்கெல்லாம் வெளிச்சம் மேலே செல்லாதபடி கவசம் அணிவித்திருந்தார்கள். எதிரி விமானம் இரவில் வரும்போது கீழே ஊர் இருப்பது தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடு. மேலும் இரவில் அபாயச்சங்கு ஒலித்தால் வீட்டுக்குள் இருக்கும் விளக்குகளையும் அணைத்துவிடவேண்டும். இவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்க ஏ.ஆர்.பி போலீஸ் (Air Raid Prevention) என்று ஒரு தனி போலீஸ் பிரிவு இருந்தது. அவர்களுக்கு சாம்பல் கலரில் ஒரு யூனிபாரம். இருட்டில் தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியாது. அந்த துணி ஏஆர்பி துணி என்ற பெயரில் இன்றும் துணிக்கடைகளில் விற்கப்படுகிறது.



பெண்டு பிள்ளைகளெல்லாம் எங்கேயும் தனியாகச் சென்றால் மிலிடரிக்காரன் தூக்கிக்கொண்டு போய்விடுவான் என்று ஊர் பூராவும் வதந்தி. நிஜமாகவே எங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள ஒரு டாக்டரின் பெண் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பட்டப்பகலில் மிலிடரிக்காரர்கள் அவளைக்கடத்த முயற்சித்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த என்னுடைய ஸ்கூல் ட்ரில் மாஸடர் தடுக்கப்போக, அவரை மிலிடரிக்காரர்கள் அடிக்க, அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அந்தப்பெண் தப்பித்து வீட்டுக்கு ஓடிவிட்டது.

இந்தியாவை ஜப்பான்காரன்தான் தாக்குவான் என்று பலமான வதந்தி. அவன் பர்மாவைப்பிடித்து இந்திய எல்லை வரை வந்துவிட்டான். டில்லியிலிருந்த வெள்ளைக்காரர்களில், பெண்கள், குழந்தைகள், ஆண்களில் அதிக முக்கியமில்லாதவர்கள்- இவர்களையெல்லாம் முன்பேயே இங்கிலாந்திற்கு அனுப்பி விட்டார்கள். ஜப்பான்கார ர்கள் எல்லோரும் அந்தக்காலத்தில் குள்ளமாக இருந்தார்களாம். அதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் “குள்ளர்களை நம்பாதீர்கள்” என்று தீப்பெட்டிகளில் அச்சடித்து விற்றார்கள்.

ஜனங்கள் எங்கு சந்தித்தாலும் பேசுவது யுத்தத்தைப்பற்றித்தான். ஆனந்தவிகடனில் ஒருபக்கம் யுத்தச்செய்திகள் வரும். அப்போது எனக்கு அதன் மூலமாகத்தான் யுத்தத்தைப்பற்றி அறிந்துகொள்வேன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்கள்.

இரவில் நாங்கள் படுத்தபிறகு சில நாட்களில் அபாயச்சங்கு ஒலிக்கும். ஓ, ஜப்பான்காரன் குண்டுபோட வந்துவிட்டான் என்று நினைத்து பயந்து போர்வையை இளுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவோம். விடிந்தபிறகுதான் தெரியும் அது வெறும் ஒத்திகைதான் என்று. நிஜமாகவே 1944 ல் ஜப்பான்காரன் மெட்ராஸுக்கு “எம்டன்” என்கிற கப்பலில் வந்து ஹார்பரின் மேல் குண்டு போட்டான். ஒன்றும் பெரிய சேதமில்லை. ஆனாலும் பாதி மெட்ராஸ் காலி ஆகிவிட்டது.



1945ல் அமெரிக்காக்காரன் ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டவுடன் யுத்தம் முடிவடைந்து விட்டது. அதைக்கொண்டாடும் விதமாக பள்ளிகளுக்கெல்லாம் மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். பிறகுதான் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்து 1947ல் நம் நாடு சுதந்திரம் பெற்றது.

சனி, 13 மார்ச், 2010

ஜோசியம் இருக்கட்டுமா, வேண்டாமா?



எதிர்காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. ஜோசியம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். இனி நடக்கப்போவதைத்தெரிந்து என்ன பிரயோஜனம்? நல்ல எதிர்காலம் என்றால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் அந்த சந்தோஷம் மெதுவாக நீர்த்துப்போய், அந்த சம்பவம் உண்மையாக நடக்கும்போது சந்தோஷம் ரொம்பவும் குறைந்து போய்விடும்.


அதேபோல் துக்கமான எதிர்காலம் வரப்போகிறது என்றால் அன்று முதலே துக்கம் ஆரம்பித்துவிடும். ஒருவனுக்கு 6 மாதத்தில் மரணம் சம்பவிக்கும் என்றால் அவன் அதைக்கேட்ட நாள் முதல் கவலையில் மூழ்கி விடுவான். அவன் இறக்கும் நாள்வரை கவலையிலேயே இருந்து பிறகு இறப்பான்.


ஆகவே ஜோசியத்தினால் ஒருவனுடைய சந்தோஷம் குறைந்து விடுகிறது, துக்கம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே தேவையற்றதுதானே.



ஜோசியம் பொய்யென்றால் பிறகு அதைத் தெரிந்து என்ன பலன்?
ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஜோசியத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எதனால்? ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள். வந்தவர்களின் மனோநிலையை அனுசரித்து உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்வார்கள். ஜாதகப்பிரகாரம் ஒரு கெடுதல் நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை மிக சாமர்த்தியமாக மாற்றி ஒரு குறிப்பாக மட்டும் சொல்லிவிட்டு,எதற்கும் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் என்று சொல்வார்கள். ஜோசியர்களுடைய கணிப்பு என்னவென்றால் ஜாதகப்பிரகாரம் கெட்ட பலன் வருவதாக இருந்தாலும் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் அந்த கெடுதல் நடக்காமலும் போகலாம்.

ஆனால் ஜோசியம் பார்க்க வந்தவர்களுடைய மனது சந்தோஷப்படும்படியான பலன்களைச்சொல்வதனால் அவர்கள் தன்னம்பிக்கையும் புது ஊக்கமும் பெற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். இது ஒரு பெரிய ஆறுதலல்லவா?

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. மனோதைரியம் உள்ளவன் தாழ்வுகளை எதிர்கொண்டு வெற்றி அடைகிறான். மனோபலம் குறைந்தவர்களுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அந்த ஊன்றுகோல் வீட்டுப்பெரியவர்களின் ஆறுதலாக இருக்கலாம், கடவுள் பக்தியாக இருக்கலாம், சாமியார்களின் அருளுரைகளாக இருக்கலாம். நித்தியானந்தரும் அதைத்தான் செய்து வந்தார். அவருடைய விதி ரஞ்சிதா ரூபத்தில் வந்து அவரைப் புரட்டிப்போட்டு விட்டது.

அமெரிக்காவில் வீதிதோறும் மனோதத்துவ நிபுணர்கள் கடை விரித்து வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் செய்யும் கவுன்சிலிங்கை நம்மூர் ஜோசியர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆகவே ஜோசியம் நிஜமா, பொய்யா என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு அதனால் மனித சமுதாயத்திற்கு நன்மை இருந்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே.

வியாழன், 11 மார்ச், 2010

ஜோசியம் உண்மையா, பொய்யா?



கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும் என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம்.


ஜோதிடத்தில் உண்மையாகவே இவ்வாறு சொல்ல முடியுமா, இல்லை இது ஒரு பொய்யான சாஸ்திரமா? இந்த விவாதம் காலங்காலமாக நடக்கிறது. ஜோதிடம் பொய் என்று எந்தவித குழப்பமும் இல்லாமல் நம்புகிறவர்கள் இந்தப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சும்மா இந்த ஆள் என்ன சொல்கிறான் என்று பார்ப்பதற்காக படிப்பதைப்பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.




ஜோதிடம் ஒரு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சைன்ஸ், அதனால் எனக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன், நான் அதை முழுவதுமாக நம்புகிறேன், என்பவர்களும் இந்தப்பதிவை படிக்கவேண்டாம். ஏனென்றால் படித்தால், என்னைப்பற்றி தோன்றும் தாறுமாறான எண்ணங்கள், உங்களுக்கோ எனக்கோ நன்மை பயக்காது.


இந்தப்பதிவு, ஜோசியம் உண்மையாக இருக்குமோ, எவ்வளவு தூரம் நம்பலாம், எவ்வளவு பலிக்கும் அல்லது இது முற்றிலும் ஏமாற்றுக்காரர்களின் பணம் பறிக்கும் தந்திரமோ என்ற மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்காகவே.


இப்படி மனக்குழப்பத்தில் இருப்பவர்களை நம்பித்தான் எல்லா அரைகுறை ஜோசியர்களும் தொழில் நடத்துகிறார்கள். பூரணமாக ஜோசியத்தில் நம்பிக்கை வைத்திருப்பவன் ஜோசியத்தை பூரணமாகக் கற்றவனைத்தெரிந்து வைத்திருப்பான். அவன் அவர்களிடம் போய்விடுவான். அந்த ஜோசியர்களும் அரைகுறை நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஜோசியம் பார்க்க மாட்டார்கள்.


மனக்குழப்பம் உள்ளவனை இந்த அரைவேக்காட்டு ஜோசியர்கள் பார்த்தவுடனே அடையாளம் கண்டு கொள்வார்கள். அவர்கள் முழிக்கும் முழி, காட்டும் தயக்கம், கூட வந்திருக்கும் ஆட்களின் பேச்சுக்கள் இவைகளை வைத்து, ஆஹா, இன்று நம் வலையில் நல்ல பட்சி மாட்டிட்டதையா என்று சந்தோஷப்பட்டு, தடபுடலாக வரவேற்பு கொடுப்பார்கள்.


முதலில் இவர்களுக்கு ஜோசியத்தில் உண்டான ஐயத்தைப்போக்க வேண்டும். அதில் இந்த ஜோசியர்கள் கை தேர்ந்தவர்கள். என்ன சொல்வார்கள் என்றால் -


"பாருங்க, லோகத்திலே ஜோசியத்தையே படிக்காமல் பொய்யாக ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். என்னைக்கூட நீங்கள் அப்படி நினைத்தால் நான் உங்களைத் தவறாக நினைக்கமாட்டேன், ஏனென்றால் இன்றைக்கு உலக்ம அப்படித்தான் இருக்கிறது. அன்றைக்குப் பாருங்கள் ......... (வந்திருப்பவர்களின் ஊருக்குப்பக்கத்து ஊர் பெரியதனக்காரர் - அவர் இவரிடம் ஜோசியம் பார்க்கவே வந்திருக்க மாட்டார், ஆனால் அவர் பெயரை இந்த ஜோசியர் எப்படியோ தெரிந்து வைத்திருப்பார்) எங்கெங்கேயோ போய் ஜோசியம் பார்த்து, பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து பரிகாரங்கள், பூஜைகள் செய்து, பல கோயில்கள் போய் சாமி தரிசனம் எல்லாம் செய்தும் பலன் ஒன்றும் தெரியாமல் சோர்ந்து போய்,யாரோ சொல்லி, கடைசியாக என்னிடம் வந்தார்.அவருக்கு நான் சொன்ன ஜோசியத்தினால்தான் அவர் இன்றைக்கு ஓஹோன்னு இருக்கிறார். நீங்கள் அவரிடம் போய் என்னைப்பற்றி கேளுங்கள், அவருக்கு என்னுடைய ஜோசியத்தைப்பற்றி தெரியும்."


இவ்வாறு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவார். வந்தவர்கள் இவருடைய பேச்சில் மயங்கி ஆஹா, நாம் மிகச்சிறந்த ஒரு ஜோசியரிடம் வந்திருக்கிறோம் என்று நம்பி, அவரிடம் தங்கள் பிரச்சினைகள் பற்றி தேவைக்கு மேல் சொல்லி தங்கள் குடுமியை அவரிடம் கொடுத்து விடுவார்கள்.




பிறகு என்ன வழக்கம்போல் ஜாதகத்தைப்பார்த்து, ராகு கேதுவைப்பார்க்கிறான், கேது சனியைப்பார்க்கிறான், சனி உன்னைப்பார்க்கிறான், நீ என்னைப்பார்க்கிறாய், நான் உன் பர்ஸைப்பார்க்கிறேன், என்று அவனை பைத்தியம் பிடிக்குமளவிற்கு குழப்பி, அவன் பர்ஸை கணிசமாக இளைக்க வைத்து அனுப்பிவிடுவான். இவனும் ஆஹா, ஜோசியர் கெட்டிக்காரர் என்று பேசிக்கொண்டு ஊரில் போய் எல்லாரிடமும் தான் ஜோசியம் பார்த்த பிரலாபத்தைப் பீத்திக்கொள்வான்.


இன்னும் ஒரே பதிவு, ஜோசியத்தை முடித்துக் (விடுகிறேன்) கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

பிரபல பதிவர் ஆனபின்பு.....



என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான் ‘பணம் சம்பாதிப்பது சுலபம், அதை வைத்திருப்பதுதான் கஷ்டம்’ என்று. நான் சிரிப்பேன். பணத்தை வைத்திருப்பதில் என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது என்று நினைத்துக்கொள்வேன். என்னிடமும் கொஞ்சம் பணம் சேர்ந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு பைனான்ஸ் கம்பெனியில் போட்டு, அந்த கம்பெனி திவாலானவுடன் அங்கே ஓடி இங்கே ஓடி, பல வருடங்கள் ஆனபின் ரூபாய்க்கு 50 பைசா வீதம் (5 வருட வட்டி ஹோகயா) செட்டில்மென்ட் முடித்து மீதிப்பணத்தை கையில் வாங்கும்போதுதான் நண்பன் சொன்னது எவ்வளவு சரி என்பதை உணர்ந்தேன்.

அதேபோல் பதிவுலகத்தில் அடியெடுத்து வைத்து சில மாதங்கள் ஆனபின்பு நாமும் பிரபல பதிவர் ஆகமாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் உண்டு. பதிவுலகில் ஏற்பட்ட சில பல சலசலப்புகள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும் பிரபல பதிவர் ஆகும் ஆசை விடவில்லை. பதிவுலக நடவடிக்கைகளை கவனித்து வந்ததில் சில நுணுக்கங்கள் புலப்பட்டன. அவைகளை ஒரு எட்டு பதிவுகளாகப் போட்டேன். ஆனால் அவைகளை நானே கடைப்பிடிக்கவில்லை. மற்றவர்கள் கடைப்பிடித்து பிரபலமானார்களா என்று தெரியவில்லை.

நமது நித்தியானந்தாவின் கடைக்கண் பார்வை என்மீது விழுந்தவுடன் அவர் அருளினால் அவரைப்பற்றி ஒரு நாலைந்து பதிவு போட்டேன். அவருடைய அருளாசியின் மகிமையினால் என்னுடைய வலைப்பதிவு கொஞ்சம் பிரபலமடைந்துள்ளது. ஹிட் லிஸ்ட்டில் நெம்பர் கூடியிருக்கிறது. பின்னூட்டங்கள் அதிகரித்துள்ளன. இப்போது எனக்கு முக்கியமான வேலைகள் என்னவென்றால் :-



1. ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது எழுதியாக வேண்டும்.

2. அதை பிளாக்கில் போட்டவுடன் ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று நம் பதிவைச்சேர்க்க வேண்டும்.

3. ஒரு மணிக்கொரு தடவை பிளாக்குக்குள் போய் எத்தனை ஹிட்ஸ்கள் வந்துள்ளன என்று பார்க்க வேண்டும்.

4. அதே சமயத்தில் எத்தனை பாலோயர்ஸ் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்று செக் செய்யவேண்டும்.

5. நமது பிளாக்குக்கு ஒவ்வொரு திரட்டியிலும் எவ்வளவு ஓட்டு விழுந்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஓட்டுகள் அதிகம் விழுவதற்காக, அம்மா, தாயே, ஓட்டுப்பிச்சை போடுங்கள் என்று ஒவ்வொரு பதிவிலும் கடைசியில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.

6. நமக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை மாடரேட் செய்து நமது பதிவில் ஏற்றவேண்டும். அந்த பின்னூட்டங்களுக்கு பதில்கள் நமது பதிவில் போடவேண்டும். பிறகு அவற்றுக்கு எதிர்வினைகள் வரும். அவற்றுக்கு நாம் பதில் போட, ஒரே தொடர்கதைதான். சில பதிவுகளில் அவர்கள் பதிவு இட்ட சில மணி நேரத்திலேயே 70 – 80 பின்னூட்டங்கள் சேர்ந்துவிடும். இது எப்படி என்று யோசித்து அதற்கு விடையும் கண்டுபிடித்துவிட்டேன். அதை இங்கே எழுத முடியாது.

7. பிறகு நமக்கு பின்னூட்டமிட்டவர்களின் பதிவுகளைத்தேடிப்போய் நாம் பின்னூட்டம் இடவேண்டும். You scratch my back, I scratch your back கதைதான்.

8. அந்தப்பதிவர்கள் நம்முடைய பின்னூட்டங்களை கண்டு கொண்டார்களாவென்று கண்காணிக்கவேண்டும். அப்படி கண்டுகொள்ளாமல் விட்ட பதிவர்களை நம் அடுத்த பதிவில் உண்டு இல்லை என்று ஆக்கிவிடவேண்டும். அந்தப்பதிவில் பின்னூட்டமிடும்போது அங்கு இருக்கும் கட்டங்களில் விளையாட்டாக டிக் செய்து விட்டால். வினை வந்துவிடும். பிறகு நமது மெயில் பாக்சைத் திறந்தால் வரும் மெயில்கள் நம்மை மூச்சு முட்ட செய்துவிடும்.

9. பின்னூட்டம் இடுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல சமயங்களில் நம் பதிவை எடிட் செய்யவேண்டி வரும்.

10. இத்தனைக்கும் நடுவில் நான் காலைக்கடன்களை முடித்து விட்டு குளிக்கவேண்டும், டிபன், சாப்பாடு இத்தியாதிகளை சாப்பிட வேண்டும், சொந்த வெளி வேலைகளை கவனிக்கவேண்டும், வீட்டம்மா சொல்லும் எடுபிடி வேலைகளை முடிக்கவேன்டும், போன் பேசவேண்டும், நண்பர்களைப் பார்க்கவேண்டும், தூங்கவேண்டும்.

அப்பப்பா, என்னால் முடியவில்லை. எனக்கு பிரபல பதிவர் பட்டம் வேண்டாம், வேண்டவே வேண்டாம், என்னை ஆளை விட்டால் போதும் சாமி (நித்தியானந்த சாமி இல்லை, இது நிஜ சாமி.) நான் ஓடி விடுகிறேன்.

கோள்களும் மனிதனின் வாழ்க்கையும்.



கேள்வி: அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- இரண்டாம் பாகம்.

மனிதனின் வாழ்க்கை கோள்களின் நிலையைப்பொருத்து அமையும் என்று பார்த்தோமல்லவா. அப்படியானால் ஒருவனின் முழு எதிர்காலத்தையும் ஜோசியர்கள் முழுவதுமாக கணித்து சொல்லமுடியாதா? முக்காலத்தையும் துல்லியமாக கணித்து எங்களால் சொல்ல முடியும் என்றுதான் பெரும்பாலான ஜோசியர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.


அப்படி ஜோசியர்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மையாக இருந்தால், இந்த உலகில் உள்ள அனைவரும் தங்களுடைய எல்லாக்காரியங்களையும் ஜோசியர்களைக் கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள் அல்லவா? ஆனால் தற்போது நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால்,

1. எல்லோரும் ஜோசியரிடம் போவதில்லை.

2. அப்படி ஜோசியரிடம் போனவர்களின் அனுபவமும் ஜோசியர்களின் வாக்கு முழுவதும் நடந்ததாக கூறவில்லை.


இந்த நிலைக்கு ஜோசியர்கள் பல சமாதானங்கள் கூறுவார்கள். ஜோசியம் நம்புபவர்களுக்குத்தான் பலிக்கும், அவருடைய ஜாதகம் தவறு, அந்த ஜோசியன் அரைகுறையாக படித்தவன் இப்படியெல்லாம் கூறி மக்களை குழப்புவார்கள்.


பொதுவாகவே ஜோசியர்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ வல்லுநர்களாக இருப்பார்கள். வந்த ஆட்களின் சில நிமிடப்பேச்சிலேயே அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், எந்த மாதிரியான பலன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை யூகித்து விடுவார்கள். அதற்குத்தகுந்த மாதிரியான டெக்னிகல் வார்த்தைகளை உபயாகப்படுத்தி வந்தவர்களை ஒருமாதிரியாக பிரெய்ன்வாஷ் பண்ணி முடிந்தமட்டும் வசூல் செய்துவிட்டு அனுப்பி வடுவார்.


அவர் சொன்னமாதிரி நடந்தால் ஜோசியர் கெட்டிக்காரர் என்ற பெயர் வந்துவிடும். இப்படி நாலு பேர் சொன்னால் அந்த ஜோசியருக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு தொழில் கவலை விட்டது.


ஆனால் ஜோசியர் சொன்னமாதிரி கோள்களின் நிலையைப்பொருத்து மனிதனின் வாழ்வு அமைந்துவிடும் என்றால் மனிதன் எந்த முயற்சியையும் எடுக்காமலேயே அவன வாழ்க்கை நடக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லையே? அதற்கு என்ன காரணம்?


இங்குதான் நம் ஆன்மீகம் காரணம் காட்டுகிறது. என்னதான் ஒருவனுடைய கிரக பலன்கள் சாதகமாக இருந்தாலும், ஒவ்வொருவனுக்கும் கர்மவினை என்று ஒன்று இருக்கிறது, அது கிரகபலனை மாற்றக்கூடிய சக்தி படைத்தது, இந்த இரண்டும் ஒரே மாதிரியான பலனைக் கொடுக்கக்கூடிய நிலை இருந்தால்தான் ஜோசியர் சொன்னது முழுவதுமாக நடக்கும். இரண்டும் வெவ்வேறு பலன்களைக்கொடுக்கும் நிலையில் இருந்தால், எது அதிக சக்தியுடன் இருக்கிறதோ, அந்தப் பலன்தான் நடக்கும். இது ஆன்மீகவாதிகளின் விளக்கம். கர்மவினையைப்பற்றி தெரிந்து கொள்ள பகவத்கீதையைப் படிக்கவும்.


அப்படியானால் நம் முயற்சி எதற்கு என்ற கேள்வி எழும். வாழும் மனிதன் ஒவ்வொருவனும் வாழ்வதற்கான முயற்சிகளை செய்துதான் ஆகவேண்டும். அந்த முயற்சிக்குத்தகுந்த பலன்களை நம் கர்ம வினைகளும் கோள்களின் இருப்பும் நமக்குத்தருகின்றன. முயற்சி செய்யாவிடில் மனிதன் அழிந்து விடுவான்.

இன்னும் வரும்..

என்னாலெ முடியல, நான் வெலகிக்கிறேன் - பாகம் 1


நான் பிளாக் எழுத வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. முதல் வருடத்தில் ஏறக்குறைய ஒரு ஐம்பது பதிவுகள் எழுதியிருப்பேன். பல விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பாக ‘பிரபல பதிவர் ஆவது எப்படி?’ எனபதைப்பற்றி எட்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.


எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு-அதாவது நெய்யறவன் கட்டறது கிழிசல்- அப்படீன்னு சொல்வாங்க. நெசவாளி ஊருக்கெல்லாம் புதுத்துணி நெய்து கொடுப்பான், ஆனால் அவனுக்கு உடுத்த முடிவதோ கிழிசல் துணிதான். அந்த மாதிரி நான் மற்றவர்களுக்கெல்லாம் பிரபலமாவது எப்படி என்று உபதேசம் செய்துவிட்டு நான் பிரபலமாகாமலேயே இருந்தேன். ஏன் என்றால் நான் உபதேசம் செய்தவைகளை நான் கடைப்பிடிக்கவில்லை.


ஒரு பதிவு பிரபலமானதா இல்லையா என்று எப்படி அறிவது? அதன் அளவுகோல்களாவன-

1. அந்தப்பதிவின் ஹிட்ஸ் அதிகமாக இருக்கவேண்டும். பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்க வேண்டும். (என்னுடையது 300 ஐத்தாண்டவில்லை).

2. அந்தப்பதிவின் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 100 ஐத்தாண்டியிருக்க வேண்டும். (நான் 5)

3. ஒவ்வொரு பதிவிலும் 50 க்கு குறையாமல் பின்னூட்டங்கள் போட்டிருக்கவேண்டும். அதில் 10 பர்சென்ட் பதிவரைத்திட்டி இருக்கவேண்டும். (முதல் வருடம் பூராவும் 50 பதிவிற்கும் சேர்த்து வந்த பின்னூட்டங்கள் மொத்தமே 10 க்கும் கீழ்)

4.அப்புறம் நம்ம பதிவுக்கு ஐயா, சாமீன்னு எல்லாத்தையும் கெஞ்சி ஓட்டு வாங்கவேண்டும்

5. ஒவ்வொரு பதிவிலும் குறைந்தது பத்து கொலைகளாவது நடந்திருக்க வேண்டும் - அதாவது தமிழ்க்கொலை. – கீழ்க்கண்டவற்றுக்குள் வித்தியாசம் பாராட்டக்கூடாது. எதை எங்கு வேண்டுமென்றாலும் உபயோகிக்கலாம்.

1. ல , ள

2. ர , ற

3. ன , ண , ந

4. எங்கு வேண்டுமானாலும் ‘ஒற்று’ சேர்க்கலாம். உ-ம். பயிற்ச்சி, முயற்ச்சி


இந்த அளவுகோல்களின்படி என்னுடைய பதிவு அடிமட்டத்தில் இருந்தது. நான் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எண்ணுபவன். என்னடா இந்த பதிவுலகத்திலே நாம் பிரபலமாகாமல் இருக்கிறோமே என்ற கவலை என்னைப்பீடித்தது. என் நண்பர்களும் என்னைக்கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.


இந்த சமயத்தில்தான் அதாவது கரெக்டாக 2-3-2010 அன்று மாலை 8.30 மணிக்கு ஆபத்பாந்தவனாக ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த ஸவாமிகள் சன் டிவி மூலமாக தன் கடைக்கண்களை என் பக்கம் திருப்பினார். 8.35 க்கு எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. சரியாக 8.40க்கு ஸ்வாமிகளைப்பற்றிய முதல் பதிவை இட்டேன். அதிலிருந்து நான்கு நாட்கள் தினமும் இரண்டு பதிவுகள் வீதம்(எல்லாம் ஸ்வாமிகளைப்பற்றித்தான்)போட்டேன். கூகுளாண்டவர் எந்த படம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் மகனே என்று அருள் பாலித்தார்.

அந்த வரிசையில்தான் கடைசியாக என்னுடைய பக்தி முற்றிப்போய் ஸ்வாமியின் பிரதம சிஷ்யை ரஞ்சிதா அவர்களின் ஒரு நல்ல படத்தைப்போட்டேன். என்ன, படம் ரொம்ப நன்றாக இருந்து விட்டது. என்னுடைய பதிவின் ஹிட்ஸ், பின்தொடருபவர்கள், பின்னூட்டங்கள் எல்லாம் மளமளவென்று தாறுமாறாக ஏறி, நானும் பிரபல பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.


என்னுடைய இந்த இமாலய வளர்ச்சியைப்பார்த்து பொறாமை கொண்ட ஒரு சில பதிவர்கள் அதெப்படி ஸ்வாமியின் பிரதம சிஷ்யையின் படத்தை நீ மட்டும் போடலாம், நாங்கள் போடலாமென்று இருந்தோமே என்று என்னிடம் சண்டைக்கு வந்தார்கள். (முகுந்த் அம்மா – மன்னிக்கவும்). நான் சண்டை போடும் வயதெல்லாம் தாண்டி (சும்மா 75 தான்) விட்டபடியால் எதற்கு வம்பு என்று அந்த படத்தை எடுத்துவிட்டேன்.


இப்போது நான் பிரபலமாகிவிட்டேன் அல்லவா! அதனால் நான் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

கேள்வி:அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- முதல் பாகம்.


இந்தக் கேள்வி என்னிடம் என் நெருங்கிய உறவினர் ஒருவர் கேட்ட கேள்வி. வழக்கமாக இப்படிப்பட்ட கேள்விகள் ஆன்மீக ஞானிகளிடம் மட்டுமே கேட்கப்படும். என் உறவினர் என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்டாரென்றால், நான் சாதாரண மனிதனுக்குப் புரிகிற மாதிரி பதில் கொடுக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்தான்.

வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவில்தான் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும். அந்த பதில்கள் ஏதோ ஒரு அளவிற்கு அவருடைய மனதிற்கும் மற்ற வாசகர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.




சூரியனும் அதைச்சார்ந்த கிரகங்களும் ஓயாது சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து பல்வேறு வகையான ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தக்கதிர்கள் பல வகைகளில் மனிதனைப் பாதிக்கின்றன என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி வரும் கதிர்களின் வீரியம் அதாவது அவைகளின் சக்தி, அந்த சமயத்தில் சூரியனும் மற்ற கிரகங்களும் ஆகாய ஓடு பாதையில் எங்கு இருக்கின்றன, ஒன்றுக்கொன்று எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதைப்பொருத்து அமையும் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு கிரகத்திலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்ற கிரகத்தின் கதிர்வீச்சுடன் சேர்ந்து அதிக வீரியம் பெறலாம். அல்லது ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்து அந்த கதிர்வீச்சின் வீரியத்தைக்குறைக்கலாம்.

இந்தப்பாராவை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்கவும். அதன் பொருள் முழுவதும் நன்கு மனதில் பதிந்த பிறகு மேற்கொண்டு படிக்கவும்.

இந்துக்கள் எல்லோரும் ஒரு குழந்தை பிறந்தவுடன் செய்யும் முதல் காரியம், அந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிப்பது. ஜாதகம் என்பது அந்த குழந்தை பிறந்தபோது இந்த சூரியன் உட்பட்ட நவகிரகங்களும் ஆகாயவீதியில் எந்தெந்த இடத்தில் இருந்தன என்ற ஒரு குறிப்பு.




அந்த நவக்கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகள் ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பார்த்தோம். இந்த விஞ்ஞான உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே நம் நாட்டு ஞானிகள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அதை ஜோதிட சாஸ்திரமாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

நவக்கிரகங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா, அவைகள் இடம் மாறும்போது அவைகளிடமிருந்து வரும் கதிர்வீச்சுகளும் மாறும் அல்லவா, அப்படி கதிர்வீச்சுகள் மாறும்போது மனிதர்களின் மேல் அவைகள் ஏற்படுத்தும் விளைவுகளும் மாறும் அல்லவா, இந்த சமாசாரங்களைத்தான் ஜோசிய சாஸ்திரம் சொல்கிறது.

இந்த சாஸ்திரத்தை நன்கு கற்றுத்தேர்ந்த பண்டிதனால் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் துல்லியமாக கணித்து சொல்ல இயலும்.



தொடரும்.....

சனி, 6 மார்ச், 2010

அப்பாடா, ஒரு வழியாக நித்திய ஆனந்த சுனாமி ஓய்ந்தது!




பெரியவரின் புண்ணியத்தில் ஒரு வழியாக சன் டிவி சுனாமி ஓய்ந்தது. இன்னும் இரண்டு மூன்று நாளில் மேட்டர் கோர்ட்டுக்கு போய்விடும். பிறகு ஒருவரும் வாயைத்திறக்க முடியாது. அதற்குள் நாம் சில விஷயங்களை யோசிப்போம்.


எப்படி இந்த சாமியார்களுக்கு மவுசு வருகிறது? இன்றைய நிலையில் பெரும்பாலான ஜனங்கள் நல்ல வசதியுடன் இருக்கிறார்கள். பணம், வீடு, வாசல், மனைவி, மக்கள், தோப்பு, துரவு என்று இருந்தாலும் அவர்கள் ஆழ்மனத்தில் ஒரு வெறுமை அல்லது பச்சாதாபம் அல்லது குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. பல காரணங்களினால் அவர்களால் மனைவி மக்களுடன் வெளிப்படையாகவும் மனம்விட்டு பேசமுடிவதில்லை. உறவினர்களுடன் நல்ல முறையில் பழகமுடிவதில்லை. மனம்விட்டு பேசக்கூடிய நண்பர்களை வளர்க்கவில்லை.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்குத் தேவையான மன ஆறுதல் கிடைக்காததால் அதைத்தேடும்போது இந்த சாமியார்கள் அவர்களுக்கு தேவையான ஆறுதலை தருகிறார்கள். சாமியார்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ நிபுணர்கள். இந்த மாதிரி வரும் நபர்களுக்கு எப்படி, எதைச்சொன்னால் அவர்கள் மயங்குவார்கள் என்று நன்றாகத் தெரியும். அந்தந்த பக்தர்களுக்கு அவரவர்கள் தேவைக்கு ஏற்ப அருள் வழங்கி அவர்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைத்துவிடுகிறார்கள். அவர்கள் வலையில் சிக்கியவர்கள் வெளியில் வருவது மிகவும் கடினம்.




இப்படி வலைக்குள் விழுந்தவர்களிடம் அவர்களிடம் இருந்து என்ன கறக்க முடியுமோ அதைக்கறப்பதில் இந்த சாமியார்கள் வல்லவர்கள். பணம் இல்லாதவர்களிடம் உழைப்பைக் கறப்பார்கள். செல்வந்தர்களிடம் பணத்தைக் கறப்பார்கள். இந்த இரண்டிலும் சேராதவர்களிடம் என்ன கறப்பார்கள் என்பதை இந்த நான்கு நாட்களாக மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒளி, ஒலி, எழுத்து, போட்டோ, வீடியோ, இன்டெர்நெட் ஆகிய எல்லா ஊடகங்களின் மூலமாகவும் பார்த்து அனுபவித்தோம்(!).



சாமியார்கள் அப்பாவி மக்களை நம்பவைத்து மோசடி செய்வது காலங்காலமாக நடந்து வந்தாலும், நம் மக்கள் அதிலிருந்து ஒரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. பைனான்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் திரும்ப திரும்ப அங்கே கொண்டுபோய் பணத்தைப் போடுவதும் அவன் ஏமாற்றி ஓடினபிறகு குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஓடுவதும் ஆன இந்த டிராமா 6 மாதத்திற்கு ஒரு முறை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அதே மாதிரி இந்த சாமியார்களின் டிராமாவும் நடந்துகொண்டேதான் இருக்கும்.


நம் ஜனங்கள் திருந்தப்போவதுமில்லை. சாமியார்களின் அட்டூழியங்களும் நிற்கப்போவதுமில்லை.

வியாழன், 4 மார்ச், 2010

ஒரே சவத்தை எத்தனை நாளைக்கி கட்டி எளவெடுக்கறது?

அய்யா பதிவர்மாருங்களே,



நித்யானந்தத்தை கட்டி அழுதது போறுமையா! வேற ஒண்ணும் காத்துக்கிட்டிருக்கையா. அதை மறந்துடாதீங்க? அந்தப்பக்கமும் போலாங்கையா!

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
இந்த பழமொழி யாவரும் அறிந்ததே. இத்துடன் கூட இன்னும் பலவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.




உதாரணத்திற்கு-
அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத்தட்டும். அதனால் அதிர்ஷ்டம் முதல் தடவை கதவைத்தட்டும்போதே கதவைத்திறந்து அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது மறுபடியும் நம் கதவைத்தட்டுவது அரிது.


ஆனால் நேற்றிலிருந்து வலைப் பதிவர்களின் நிலையைப் பாருங்கள். அதிர்ஷ்ட தேவதை அரை மணிக்கொரு தடவை கதவைத்தட்டாமலேயே உள்ளே வந்து உங்களுக்கு அருள் புரிகிறாள். இந்த அருள் பிரவாகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் உங்கள் இல்லம் ஒரே வெள்ளக்காடாகிவிடும். அதற்காகத்தான் இந்த பதிவு.


ஒரே ஆளின் படத்தையே போட்டால் போரடிக்காதா? அதற்காக ஒரு மாறுதல்

புதன், 3 மார்ச், 2010

பதிவுலகத்திற்கு இன்று ஒரு பிளாட்டின நாள்



ஆஹா, 3-3-2010 ஆகிய இன்றைய நாள் பதிவுலகத்திற்கு ஒரு பிளாட்டின நாள். (எத்தனை நாட்களுக்குத்தான் பொன் நாள் என்றே சொல்லிக்கொண்டு இருப்பது). நேற்று இரவு 8.30 மணி சன் நியூஸ் ஒளிபரப்பானதிலிருந்து பதிவர்கள் ஒருவரும் தூங்கவே இல்லை. அவரவர்கள் தங்கள் பதிவுகளை போட்டபின் அடுத்த பதிவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்து, அவர்கள் வேண்டியவர்களாயிருந்தால் ஒரு + ஓட்டும், பின்னூட்டமும் போட்டுவிட்டு உடனே நம்முடைய பதிவில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணிவிட்டு, அப்படி ஏதாவது பின்னூட்டம் வந்திருந்தால் அதற்கு எதிர்வினை போட்டுவிட்டு, பிறகு மற்ற பதிவுகளுக்கு ஓடி, இப்படியாக ராத்திரி பூராவும் முழித்திருந்து ஓவர்டைம் வேலை செய்தார்கள்.

கொஞ்ச நாட்களாகவே பதிவுலகம் மிகவும் டல்லாகிப்போய் விட்டது. டோண்டு, போலி டோண்டு விவகாரம் சுவாரஸ்யமாக பல நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது (டோண்டு ராகவன் மன்னிப்பாராக). அதன் பிறகு ஜ்யோவ்ராம் சுந்தரும் இன்னொருவரும் குஸ்தி பழகி சுந்தர் ஆஸ்பத்திரி போய் வந்ததில் பதிவுலகம் கொஞ்ச நாள் நன்றாக இருந்தது. அப்புறம் நம் ஜோக்கர் பதிவர் அவ்வப்போது வெறும் வாயை மெல்லுவதற்கு அவல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவரையும் சொஞ்ச நாட்களாக காணவில்லை. பதிவுலகம் ரொம்பவுமே டல்லடித்துக்கிடந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக, அநாதரட்சகனாக, அவதார புருஷனாக வந்து கைகொடுத்த நித்திய ஆனந்தனுக்கு பதிவர்கள் எல்லோரும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அவரை நமக்கு அடையாளம் காட்டிய சன்நியூஸ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும் பதிவர்களின் நன்றி என்றும் உரித்தாகுக.




நிற்க, ஒரு சமயம் ஆனந்தர் நம் சகாயத்திற்கு வராமலிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். பதிவிடுவதற்கு இது மாதிரி வேறு விஷயம் கிடைக்குமா? எவ்வளவு பதிவுகள், பின்னூட்டங்கள், எதிர்வினைகள் ? ஒவ்வொரு பதிவரும் நாம் இந்த ரேசில் கலந்து கொள்ளாவிட்டால் நம் ஜன்மம் சாபல்யமடையாது என்ற ஒரே நோக்கத்துடன் பதிவுகள் போட்டுவிட்டார்கள். இன்னும் பதிவு போடாதவர்கள் வெளிநாட்டு பதிவர்களும் பெரும்பான்மையான பெண் பதிவர்களும்தான். நான் நேற்றே 8.30 மணி செய்தி வெளியான சில நிமிடங்களில் 8.40க்கு என் பதிவைப்போட்டுவிட்டேன். அநேகமாக நான்தான் பர்ஸ்ட் ஆக இருக்கலாம். சரி, இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ஏன் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. நமக்கு வழக்கமாக நாலு ரவுண்டு போட்டால்தான் சரிப்படும். இரண்டாவது ரவுண்டு ஆரம்பித்துவிட்டேன். ஜாயின் பண்ணுபவர்கள் ஜாயின் பண்ணலாம்.

ஜோசியர் குடும்பம் விபத்துக்குள்ளான பரிதாபம்




கோவை : குழந்தைக்கு "சோறு ஊட்ட' குருவாயூர் கோவிலுக்கு சென்றபோது, போலீஸ் ஸ்டேஷன் எதிரே நடந்த விபத்தில், மாருதி ஆம்னியில் பயணித்த ஜோதிடர் குடும்பம், நண்பர் குடும்பம் என ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.



பாலக்காடு அருகேயுள்ள மங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்(29); ஜோதிடர். இதே பகுதியைச் சேர்ந்த தீபா(25)வை காதல் திருமணம் செய்துகொண்டார். இரு ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் கோவை வந்தவர், ஆர்.எஸ்.புரத்தில் தங்கி ஜோதிடம் பார்த்து வந்தார். இவரது ஆறுமாத குழந்தை லட்சுமிஸ்ரீக்கு, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், "சோறு ஊட்டல்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நெருங்கிய நண்பரும், பீளமேடு தண்ணீர்பந்தல், விக்னேஷ் நகரில் வசிக்கும் கம்ப்யூட்டர் இன்ஜினியருமான சீனிவாசன் குடும்பத்தினரை மட்டும் அழைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மாருதி ஆம்னி வேனில், தினேஷ் மற்றும் சீனிவாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், குருவாயூர் புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி வேனை கால்டாக்சி டிரைவர் மது ஓட்டினார்.

நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வேன், பாலக்காடு கஸ்பா போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்றபோது, எதிரே பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி மோதியது. விபத்தில், ஜோதிடர் குடும்பம் சென்ற மாருதி ஆம்னி வேன் நொறுங்கியது. வேனில் பயணம் செய்த ஜோதிடர் தினேஷ்(29), இவரது மனைவி தீபா(25), ஆறு மாத குழந்தை லட்சுமிஸ்ரீ, நண்பர் சீனிவாசன்(39), இவரது மனைவி சரிதா(30), இவர்களது மகன் ஹனிஷ்கிருஷ்ணா(6) மற்றும் கார் டிரைவர் மது(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். தகவல் அறிந்த இரு வீட்டாரின் உறவினர்கள் பாலக்காடு புறப்பட்டுச் சென்றனர். பாலக்காடு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நொறுங்கிக் கிடந்த வேனில் இருந்து, இறந்தவர்களின் நசுங்கிய உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இவர்களில், ஜோதிடர் குடும்பத்தினரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின், பாலக்காட்டில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கம்ப்யூட்டர் இன்ஜினியர் சீனிவாசன்,அவரது மனைவி மற்றும் மகன் உடல்கள் நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
நன்றி; தினமலர் கோவைப்பதிப்பு


இந்த விபத்தை மக்களின் அறியாமை என்று சொல்வதா? அல்லது விபத்துக்கள் மற்றவர்களுக்கு ஏற்படுபவை, நான் அதற்கு அப்பாற்பட்டவன் என்ற இறுமாப்பா? அல்லது விதியின் வலிமை என்பதா? அல்லது ஜோசியம் அவரவர்களுக்கு பலிக்காது என்று கொள்வதா?
இந்த விபத்தை எந்த வகையில் சேர்க்கமுடியும்?

செவ்வாய், 2 மார்ச், 2010

சாமியார்களின் லீலைகளும் ஏமாறும் மனிதர்களும்





சாமியார்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். சாதாரண மனிதர்களுக்கு உண்டான அனைத்து ஆசாபாசங்களும் அவர்களுக்கும் இருப்பது இயற்கை. ஆனால் நாம்தான் அவர்களுக்கு அமானுஷ்யமான சக்திகள் இருப்பதாகவும், அவர்கள் உலக ஆசாபாசங்கள் அற்றவர்கள் என்றும், அவர்கள் உலகநடைமுறையிலிருந்து வேறுபட்டவர்கள் என்றும் நம்பி அவர்கள் விரிக்கும் வலையில் விழுகிறோம். தவறு யாருடையது? விளக்கு வெளிச்சத்திற்கு மயங்கி விட்டில் பூச்சி விழுந்து மடிவது விளக்கின் குற்றமா? யோசியுங்கள் !