திங்கள், 29 பிப்ரவரி, 2016

என் தலைக்கனம் மறைந்தது.


விவசாயக் கல்லூரியில் 1953 முதல் 1956 வரை படித்து பாஸ் செய்து இன்று வரை உயிருடன் இருக்கும் வகுப்புத் தோழர்கள் ஒன்று கூடி நாங்கள் பாஸ் செய்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாட முடிவு செய்தோம் என்கிற விபரம் அன்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

இப்படி விழா ஒன்று கொண்டாடலாம் என்று சென்னையிலிருக்கும் எனது வகுப்புத் தோழர் முனைவர் வசந்தராஜ் டேவிட் என்பவருக்குத்தான் முதலில் ஞானோதயம் தோன்றியது. அதற்குக் காரணம் பத்து வருடங்களுக்கு முன் இதேமாதிரி என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பை அவர்தான் திட்டமிட்டு நடத்தினார்.


இவர்தான் வசந்த்ராஜ் டேவிட்
பிரபல பூச்சி இயல் விஞ்ஞானி

நாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே கொண்டாடலாம் என்று அவர் முடிவு செய்து, என்னைத் தொடர்பு கொண்டார். காரணம் கோயமுத்தூரில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களில் இணைய வசதி வைத்துக்கொண்டு அதை நோண்டிக் கொண்டிருப்பவன் நான் ஒருவன் மட்டும்தான். அவர் கேட்டவுடன் நான் "அதற்கென்ன, கொண்டாடினால் போச்சு" என்று சொல்லிவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும். அப்படியானால் அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்குள் வேறு ஒரு மனிதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டவன். நான் சும்மா இருந்தால் கூட அவன் முந்திரிக்கொட்டை போல இந்த மாதிரி விஷயங்களில் என்ன இழுத்து விட்டு விடுவான். அப்படித்தான் இந்த வேலை என் தலை மேல் ஏறிவிட்டது. அதிலிருந்து எனக்கு ஒரே தலைக்கனம்தான்.

எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. அதாவது தலையில் பொறுப்பு ஏறி விட்டது.
மூன்று மாதமாக அல்லும் பகலும் இதே நினைப்புத்தான். இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை அனுபவித்து வந்தேன். ஒரு பொறுப்பு எடுத்தால் அதை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம்தான் இப்படி ஒருவனை அலைக்கழிக்கும்.

எப்படியோ விழாவிற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து 27-1-2016 அன்று விழாவைக் கொண்டாடிவிட்டோம். எங்கள் ஆசிரியர்களில் நான்கு பேர் தவிர மற்றவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் 97 வயது ஆகிவிட்டாலும் உற்சாகம் குறையாமல் எங்கள் விழாவில் கலந்து கொண்டார். அவர்தான் முனைவர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


நடுவில் பட்டு வேஷ்டியுடன் இருப்பவர்தான் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


விழாவில் ஒரு குறையும் ஏற்படவில்லை. தலையிலிருந்த கனம்  அதாவது தலைக்கனம் மறைந்து விட்டது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள்


டாக்டர் தனபாலன், திரு பார்த்தசாரதி, திரு சிவராமன்



விழாவின் விருந்தினர்கள் அனைவருமாக எடுத்துக்கொண்ட போட்டோ.



சனி, 20 பிப்ரவரி, 2016

நான் எடுத்த உறுதி மொழிகள்


                                 

நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. இந்த மாத செய்தி மடலில் பிரசுரமான ஒரு கேள்வி-பதில் பகுதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி இங்கே பதிகிறேன்.

கேள்வி: முதியோர் வைத்திய நிபுணரிடம் கேட்கப்பட்ட கேள்வி.

எனக்கு வயது 75. கூட்டுக்குடும்பத்தில் நன்றாகவே இருக்கிறேன். பொதுவாக இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இளைஞர்கள்தான் காரணம் என்று சொல்வதை விட, முதியவர்களாகிய நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? உங்களின் நீண்டகால அனுபவம் என்னைப்போன்ற பல முதியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று இக்கடித த்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

பதில்:

இதுவரை யாரும் கேட்காத ஒரு பயனுள்ள கேள்வியைக் கேட்பது உங்கள் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. இதோ, முதியவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கொடுத்துள்ளேன்.

உறுதி மொழி 


  • எனக்கு வயதாகிக்கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே நான் முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்து விடக்கூடாது. குறிப்பாக எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.
  • எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது.எனது அனுபவமும் அறிவும் எனது பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை இறைத்து விடமாட்டேன்.
  • நீள நீளமான வாக்கியங்களைத் தவிர்த்து, ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வரவேண்டும்.
  • என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் பலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை பெற வேண்டும்.
  • எல்லாமே ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் ஞாபகத்தில் இருந்தால் போதும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக்கொள்ளட்டும்.
  • நானும் தவறுகள் செய்யக்கூடிய சாதாரண மனிதப்பிறவிதான் என்ற நினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை அது தவிர்த்து விடும்.
  • எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவர்களின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.

                                                  Image result for flower

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பதிவர் சங்கம் தேவையா?

வியாழன், 15 டிசம்பர், 2011

பல வருடங்களுக்கு முன்பு 2011 ல் நான் எழுதிய ஒரு பதிவு. இப்போது பதிவர் சங்கம் பற்றிய பதிவுகள் வருகின்றபடியால் அதை மீள்பதிவு செய்கிறேன்.



பதிவுலகம் ஒரு மாயாலோகம். இங்கு பெரும்பான்மையோருக்கு நிஜமுகம் கிடையாது. கூகுளாண்டவர் புண்ணியத்தாலே நாம் எல்லோரும் எதையெதையோ எழுதிக்கொண்டிருக்கிறோம். கூகுள் பஸ் புஸ் ஆனதைப்போல பதிவுகளும் நித்திய கண்டம் பூர்ணாயுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, புரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் நமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பு தேவைப் பட்டதால் உருவான அமைப்புகள். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் அவரவர்கள் பாதுகாப்பைக் கருதி சங்கங்கள் உருவாக்கப் பட்டன. கோவையில் நடைப் பயிற்சியாளர்களும் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு நோக்கம் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு பல விதமான பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால் கனவுலகப் பயணிகளான பதிவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு தேவைப்படுகிறது? பதிவர்கள் சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு உருவாக்குவது தேவை. இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஈரோடு பதிவர் சங்கமம் ஒரு நல்ல முன்மாதிரியாக செயல்படுகிறது. நெல்லையில் திரு. சங்கரலிங்கம் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னையில் பதிவர் சந்திப்பு அவ்வப்போது நடக்கிறது என்பது பதிவுகளிலிருந்து தெரிகிறது. அங்குதான் பதிவர்கள் அதிகம் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னைப் பதிவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க முயன்று அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது பல பதிவர்கள் அறிந்ததே.

பதிவர்கள் கலந்துரையாடல்களுக்காக மட்டும், எந்த வித சட்ட கட்டுப்பாடுகளும் இல்லாத அமைப்புகள்தான் வெற்றிகரமாக செயல்படும்.

21 கருத்துகள்:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
    பதிலளிநீக்கு
  2. //நாம் எழுதும் எழுத்துக்கள் விரசமாகவோ, பிரட்சிகரமாகவோ இல்லாத வரை நம்மைக் கேட்பார் இல்லை. இதில் தமக்கு என்ன குறை இருக்கிறது அல்லது வரப்போகிறது என்று யாருக்கும் ஒரு கருத்தும் கிடையாது. இதில் சங்கம் வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை.//

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.
    பதிலளிநீக்கு
  3. V.Radhakrishnan said...

    சங்கம் வைத்தால் இட்லி, வடை, பூரி, பொங்கல், டீ, காபி எல்லாம் கூட்டமாக சாப்பிடலாம்.

    சங்கம் வைத்தால் இதெல்லாம் கிடைக்காது, ராதாகிருஷ்ணன்.
    பதிலளிநீக்கு
  4. தான் தன் சுகம் தன்குடும்பம் என இல்லாது
    பொது நல நோக்கில் சிந்திக்கவும் கருத்துக்களை
    எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியிடவும் செய்கிறவர்கள்
    தங்கள் நலன்களுக்கென அல்லது தங்கள் 
    கருத்துரிமைக்கு எதிராக வரும் விஷயங்களை
    தடுக்கவாவது ஒரு அமைப்பு இருப்பது 
    சரியெனத்தான் எனக்குப் படுகிறது
    த.ம 3
    பதிலளிநீக்கு
  5. ஏன் பதிவர்களுக்காக ஒரு சங்கம் முழுமையாக அமைக்கப் பெறக்கூடாது..?

    http://sattaparvai.blogspot.com/2011/11/100_21.html
    பதிலளிநீக்கு
  6. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  7. பாதுகாப்பு காரணத்தால் அல்ல; அனைத்து பதிவர்களும் ஓரிடத்தில் கூடி கலந்துரையாடலாம்.
    பதிலளிநீக்கு
  8. திருவாரூர் உள்ளிட்ட "தஞ்சை, நாகை மாவட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு" வைத்து மாதநதோறும் சந்திப்புகள் செய்தோம். பெரும் எழுத்தாளர்களை அழைத்து சில ஆண்டு விழாக்கள் நடத்தினோம். சுமார் 12, 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த அமைப்பே இல்லை.
    பதிலளிநீக்கு
  9. Palaniappan Kandaswamy 

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?
    பதிலளிநீக்கு
  10. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...

    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,
    பதிலளிநீக்கு
  11. //ஜோதிஜி திருப்பூர் said...
    Palaniappan Kandaswamy 

    அதென்ன முழுப்பெயராக மாற்றியுள்ளீர்களே? இதற்கு பின்னால் ஏதும் நுண்ணரசியல் உண்டோ?//

    இதுதான் இனடர்நேஷனல் ஸடைல் என்று ஒரு அமெரிக்க அன்பர் எடுத்துக் காட்டினார். நல்ல சாமாசாரம் என்று உடனே எடுத்துக் கொண்டேன். வேறு ஒன்றும் இல்லை. ஜோதிஜி.

    தவிர பதிவுலகில் PhD யாவது DSc யாவது. எல்லாம் எண்ணுதான். எதற்கும் என்னுடைய முந்தைய பதிவையும் பார்த்து விடுங்களேன்.
    பதிலளிநீக்கு
  12. //இராஜராஜேஸ்வரி said...
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம் நாடு...
    கழ(ல)கம் தான் ஆரம்பிக்கக்க்கூடாது,,//

    சென்னையில் போன வருடம் ஒரு சங்கம் ஆரம்பிக்க போட்ட முதல் கூட்டத்திலேயே கலகம் வந்து சங்கம் என்ற சங்கதியையே விட்டுவிட்ட கதை தெரியுமுங்களா?
    பதிலளிநீக்கு
  13. அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    பதிலளிநீக்கு
  14. //cheena (சீனா) said...
    அன்பின் கந்தசாமி அய்யா - சில சட்டப் பிரச்னைகள் வரும்போது - உதவுவதற்கு ஒரு சங்கம் இருப்பின் நலமாக இருக்கும் எனச் சிந்திக்கின்றனர். ஆனால் இணையயத்தில் உலவும் கருத்துகளையும் - பதிவர்களின் எண்ணிக்கையையும் பார்க்கும் போது சட்டச் சிக்கல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதைய நிலைக்குச் சங்கம் தேவை இல்லை. தேவைப்படும் போது அதனைப் பற்றிச் சிந்திக்கலாம். பதிவிற்கு நன்றி அய்யா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    பதிவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பதிவர்களில் பல சட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுகளில் இதைப்பற்றி விழிப்புணர்வு பதிவுகள் போட்டால் பயனுள்ளதாக அமையும்.

    நீங்கள் வலைச்சரம் மூலமாக ஒரு வேண்டுகோள் வைக்க முடியுமானால் நன்றாக இருக்கும்.
    பதிலளிநீக்கு
  15. தவறு இல்லையென்றே நான் கருதுகிறேன்,பின்னாளில்
    பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது போன்ற சூல்நிலைகள் உருவாகின்றது எனவே கருதுகின்றேன்,பதிவர் சங்கமத்தில் கூடி இதை பற்றி அய்யா விவாதியுங்கள்....அங்கு சந்திப்போம் நன்றி!
    பதிலளிநீக்கு
  16. நாம் நன்றாகத் தானே போய்க் கொண்டுள்ளோம். இதில் சங்கம் ஏன்?.சங்கம் வந்து ஊர் இரண்டுபட வேண்டாம்.
    வேதா. இலங்காதிலகம்.
    பதிலளிநீக்கு
  17. நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 


    உங்கள் கருத்துக்காக 

    காதல் - காதல் - காதல்
    பதிலளிநீக்கு
  18. //எனக்கு பிடித்தவை said...
    நான் புதியவள் என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை.. 
    உங்கள் கருத்துக்காக 
    காதல் - காதல் - காதல்//

    புதியவர்களுக்குத்தான் புதுப் புதுக் கருத்துகள் தோன்றுமாமே! ஒன்றும் வேண்டாம், இப்படியான கருத்து ஒன்று பதிவுலகத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் போதும்.
    பதிலளிநீக்கு
  19. கைபுள்ள ரேஞ்ஜில் சங்கம் ஆகிவிட போகிறது.

    ஆணீயே புடுங்க வேணாம். be care full.என்ன சொன்னேன்ங்க !
    பதிலளிநீக்கு

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

சிறந்த பயணம் எப்படி இருக்கவேண்டும்?

                                   

பல பதிவர்களும் பயணங்கள் போகிறார்கள், பயணக் கட்டுரை எழுதுகிறார்கள் (நான் உட்பட).  நானும் பல உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எல்லாப் பயணங்களும் சிரமம் கொண்டவையே. இந்த சிரமங்களையெல்லாம் அனுபவித்த பின்  புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானோதயம் வந்த மாதிரி,  எனக்கும் ஒரு நாள் ஒரு அரச மரத்தடியில் ஞானோதயம் வந்தது.

                                    Image result for அரசமரம்

அரச மரமும் போதி மரமும் ஒன்றுதான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஞானோதயம் வந்த பிறகு எனக்குள் இந்த பயணங்கள் போவதைப் பற்றி நிறைய யோசனைகள் உதயமாயின. என் கற்பனையை ஓடவிட்டேன். இந்த ஓட்டத்தில் நான் அறிந்தவைகளை எல்லோரும் பயன் பெற வேண்டி இங்கே பதிகிறேன்.

இந்த மாதிரி பயணம் செல்ல முதலில் வேண்டியது அனைத்து அரசு வங்கிகளிலும் நிறைய பணமும் ஓவர்டிராப்ட் வசதியும். அனைத்து வங்கிகளின் பண அட்டைகள் கைக்கு வந்தவுடன் பயணம் புறப்படலாம்.

இரண்டாவது தேவை, ஒரு நல்ல டிராவல் ஏஜென்ட்.  உங்கள் விருப்பத்தைச் சொல்லிவிட்டால் பயணத்திட்டம் வகுத்துக் கொடுப்பது அவருடைய வேலை.
முடிந்தவரை விமானப் பயணமே சிறந்தது. அதிலும் பிசினஸ் கிளாஸ்தான் உத்தமம். ஏர் இந்தியா, கிங்க் பிஃஷர், கோஏர்,  ஜெட் ஏர்வேஸ், இந்த மாதிரி லோகல் பிளேன்களைத் தவிர்க்கச் சொல்லி விடவும்.

                                          Image result for japan airlines business class

அடுத்து 5 ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே ரூம் ரிசர்வ் செய்யச் சொல்லவும். அடுத்து பயணத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு இளம் (20 அல்லது 22 வயதுக்கு மேல் போகாமல்) உதவியாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லவும். நல்ல பிரபல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து இதற்கு ஆளைத் தேர்ந்தெடுக்கவும். அவருடைய வேலை என்னவென்றால் உங்கள் பயணத்திற்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும்.
                             
                                    Image result for 5 star hotel

உங்கள் வேலை குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, அந்தந்த ஊரில் இருக்கும் முக்கியமான இடங்களைப் பார்ப்பது, இவ்வளவுதான். உங்கள் துணிமணிகளை எடுத்து வருவது, ரூம் செக்இன் செய்வது, டாக்சி ஏற்பாடு செய்வது முதலானவை உங்கள் உதவியாளர் செய்து விடுவார். நீங்கள் உங்கள் உதவியாளர் தவிர வேறு யாருடனும் பேச வேண்டியதில்லை. உங்கள் உதவியாளர் அவ்வளவு பொறுப்புடனும் சாமர்த்தியத்துடனும் செயல்படவேண்டும். அப்படிப்பட்ட உதவியாளரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டியது டிராவல் ஏஜென்ட் பொறுப்பு. சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை.

                                                    Image result for personal assistant

பயண நாள் வந்து விட்டது. பிளேன் எத்தனை மணிக்கு, நீங்கள் எத்தனை மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும் என்கிற விவரத்தை உங்களை உதவியாளர் காலையிலேயே சொல்லி விடுவார். அந்த நேரத்திற்கு நீங்கள் தயாராகி வீட்டு ஹாலுக்கு வருகிறீர்கள். டாக்சி வருகிறது. பென்ஸ் கார்தான். அதில் ஏறுகிறீர்கள். உதவியாளரும் ஏறிக்கொள்கிறார். ஏர் போர்ட் போகிறீர்கள். செக்இன் நடைமுறைகளை உதவியாளர் பார்த்துக்கொள்கிறார். பிளைனில் ஏறியாகிவிட்டது.

நீங்கள் போகவேண்டிய ஊருக்கு பிளேன் சென்றடைந்தாகிவிட்டது. பிளேனை விட்டு இறங்கி வெளியே வருகிறீர்கள். டாக்சியில் ஏறி ஹோட்டலுக்குப் போகிறீர்கள். உங்கள் உதவியாளர் உங்களை ரூமுக்கு அழைத்துப் போய் விடுகிறார். உங்கள் டிரஸ்களை கழட்டிப்போட்டு விட்டு படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கிறீர்கள். இதுவரை நீங்கள் யாருடனும் பேசவேண்டிய அவசியம் வரவில்லை என்பதைக் கவனிக்கவும்.

                                       Image result for 5 star hotel room images

அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு உங்களுக்கு பெட் காபியும் அன்றைய புரொக்ராம் ஷீட்டும் வருகிறது. நீங்கள் காப்பியைக் குடித்துக்கொண்டே அந்த புரொக்ராமைப் பார்க்கிறீர்கள்.  இன்டர்காமில் உதவியாளரைக் கூப்பிட்டு ஓகே சொல்கிறீர்கள். அன்று காலை முழுவதும் அந்த ஊரில் உள்ள இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்கிறீர்கள். பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ கார். கூட உதவியாளர்.

மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம். மாலை அந்த ஊரில் உள்ள ஒரு மால் விசிட். இரவு சாப்பாடு முடிந்து நல்ல தூக்கம். நடு இரவில் ஒரு புயல் காற்று. இடி மின்னலுடன் பேய் மழை. நடுவில் ஒரு குரல். "சேர்லயே உட்கார்ந்துட்டு என்ன தூக்கம்? எழுந்து போய் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவதுதானே?" அப்படியென்று ஒரு பேய்க்குரல். லேசாக கண் விழித்துப் பார்த்தால் பார்யாள் எதிரே நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள். மணி பிற்பகல் இரண்டு. சாப்பிட்டு விட்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவன் அப்படியே தூங்கிப்போய்விட்டேன். அவ்வளவும் கனவு.

புதன், 10 பிப்ரவரி, 2016

உடலும் மனதும் ஆன்மாவும்!

                                           Image result for ஆத்மா
மக்களுக்கும் மாக்களுக்கும் என்ன வித்தியாசம்? சிந்திப்பவர்கள் மக்கள். சிந்திக்காதவர்கள் மாக்கள். நீங்கள் மக்களாக இருக்க விரும்பினீர்களானால் மேற்கொண்டு படியுங்கள். இல்லை நாங்கள் மாக்களாகவே இருந்து விட்டுப் போகிறோம் என்றால் வேறு தளத்திற்குப் போய்விடுங்கள்.

உடல் ஜடம், மனதுதான் காரணி. அதாவது உடலினால் தானாக எதுவும் செய்ய முடியாது. அதற்கு வேண்டிய உத்திரவுகளை மனது பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் உடல் செயல்படும்.

இது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனாலும் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் இந்த இரண்டையும் ஒன்றாகவே பாவிக்கிறோம். ஏனெனில் உடல் மனது இரண்டும் எப்போதும் இணைந்தே செயல் புரிகின்றன. அவைகளுக்குள் மாறுபாடு என்பதே வருவதில்லை. ஆகவே இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொள்வதில் எந்த சங்கடமும் வராது. இதில் தவறு எதுவும் இல்லை.

ஆனால் இந்த மெத்தப் படித்தவர்கள், அதிலும் கொஞ்சம் ஆன்மீகம் தெரிந்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள்தான், உடல் வேறு, மனது வேறு என்று சொல்லிக்கொண்டு தாங்கள் குழம்புவது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் குழப்புவார்கள். இவர்கள் ஆன்மா என்று மூன்றாவதாக ஒன்றையும் உட்புகுத்தி இருக்கிறார்கள். சரி ஐயா, ஆன்மா என்றால் என்ன என்கிற கேள்விக்கு இது வரை யாரும் பதில் சொல்லவில்லை.

அதனால் ஆன்மாவை விட்டு விடுவோம். நம் ஆராய்ச்சியை உடல், மனது என்ற இரண்டிடம் மட்டும் வைத்துக்கொள்வோம். இந்த உடல் உயிர் இருந்தால்தான் இயங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. உடலில்தான் மனது இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சி இப்போதைக்கு வேண்டாம். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் உடல் இருக்கும் ஆனால் இயங்காது. உயிரற்ற உடலில் மனது இல்லை.

எனக்குப் புரிந்த வகையில் உயிர் என்பதுதான் ஆன்மா. ஆன்மா பிரிந்தது என்றாலும் உயிர் பிரிந்தது என்றாலும் ஒன்றுதான். உடலை விட்டுப் பிரிந்த உயிர் என்னவாகிறது என்பதில்தான் அனைத்துக் குழப்பங்களும் வருகின்றன. அதாவது உடலின் அவயவங்கள் அனைத்தும் தங்கள் திறன் குன்றி, அவைகளின் இயக்கத்தை நிறுத்தி விடுவதைத்தான் உயிர் பிரிந்தது என்கிறோம். அதாவது உடல் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. உயிர் என்று ஒரு பொருள் இருந்தாலல்லவா அது பிரிவதற்கு? அப்படி ஒரு பொருள் இல்லாததினால் ஒருவனுடைய உடல் இயக்கம் நின்று விட்டது என்று சொல்வதுதான் சரியான செய்தியாகும். ஆகவே அந்த உயிர் எங்கே போயிற்று என்று சிந்திக்கவேண்டியதில்லை.

கிராமங்களில் இதைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். "அவன் செத்துப் போய் விட்டான்" என்று எளிமையாகவும் நிதர்சினமாகவும் சொல்கிறார்கள். இந்தப் படித்த மேதாவிகள்தான் அவனுடைய ஆன்மா பிரிந்தது, அவர் பரமபதம் அடைந்தார், இயற்கை எய்தினார், விண்ணுலகம் ஏகினார், இப்படி பல வார்த்தைகள் உபயோகித்து ஒருவனுடைய இறப்பை குழப்புவார்கள்.

மக்களே, குழம்பாதீர்கள், தெளிவாக இருங்கள், மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

என் சதாபிஷேக புராணம்.


எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாயக் குடும்பம். எங்கள் உறவினர்களும் விவசாயிகளே. ஒரு ஐம்பது அறுபது வருஷத்திற்கு முன்பு வரை, நிறையப் பேருக்கு தங்கள் பிறந்த நாள் எது என்றே தெரியாது. என்ன வயசு என்று கேட்டால் பொதுவாக 60, 70 என்று சொல்வார்களே தவிர சரியான வயதைச் சொல்லத் தெரியாது.

இப்படி இருக்கையில் எங்கள் உறவினர்களில் யாரும் பிறந்த நாள் விழா என்று கொண்டாடுவதோ, சஷ்டியப்த பூர்த்தி அல்லது சதாபிஷேகம் என்று கொண்டாடுவதோ வழக்கில் இல்லை. இதைப் பற்றிக் கேட்டாலும் "அப்படியா, பிறந்த நாளா? அப்படீன்னா என்ன" என்று கேட்கும் நிலையில்தான் இருந்தார்கள்.

என் குடும்பம் மட்டும் எங்கள் ஊரை விட்டு புலம் பெயர்ந்து கோயமுத்தூருக்கு நான் பிறப்பதற்கு முன்பே பிழைப்பைத் தேடி வந்து விட்டார்கள். நான் பிறந்தது கோயமுத்தூர் டவுனில்தான். நான் பிறந்து நான்கைந்து வயது ஆனவுடன் என்னை என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில் அடுத்த ரோட்டில் இருந்த முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தார்கள். காசா, பணமா? இலவசக் கல்விதான் அப்போது. இப்படியாக சொந்த ஊரில் இருந்திருந்தால் மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியவன், டவுனில் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

என் வீட்டிற்குப் பக்கத்தில் பெரும்பாலும் அய்யர் குடும்பங்கள். அந்த வீடுகளில் இருக்கும் என் வயதுப் பையன்களை அந்தந்த வீடுகளில் இருக்கும் மாமிகள் "அந்த சூத்திரப் பையனோடு சேராதே, உன் படிப்பு கெட்டுப்போகும்"
என்று சொல்லி விட்டதினால் எனக்கு தோழர்கள் என்று யாரும் கிடையாது. அதனால் படிப்பதைத் தவிர வேறு வழியில்லை. படித்தேன்.

உயர் நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்பு, தொழில் கல்விப் படிப்பு அனைத்தும் என் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்குள்ளேயே கிடைத்தன. வீட்டில் இருந்து கொண்டே படித்துக்கொள்ளலாம். செலவுகளும் அதிகம் இல்லை. தொழில் கல்லூரியில் படித்த காலத்தில் வருடம் ஒன்றுக்கு 300 ரூபாய் செலவாகியது. உயர் நிலைப்பள்ளிக்கு மாதம் 5 ரூபாய் கட்டணம்.

ஆனால் நானும் பெரிய மார்க்கெல்லாம் வாங்காவிட்டாலும், ஒரு வகுப்பிலும் பெயில் ஆகவில்லை. அப்படி பெரில் ஆகியிருந்தால் என்னை உடனே படிப்பை நிறுத்தி விட்டு ஏதாவது தொழிற்கூடத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால் நான் இப்போது ஒரு டாடா அல்லது பிர்லா மாதிரி ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பேன். விதி யாரை விட்டது?

படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தது பற்றியெல்லாம் முன்பே பல பதிவுகளில் கூறியிருக்கிறேன். இப்படியாக நான் அரசு சேவை முடித்து பணி ஓய்வு பெற்றேன். எங்கள் டிபார்ட்மென்டில் பணி ஓய்வு 60 வயது முடிந்தவுடன் கிடைக்கும். நான் பணி ஓய்வு பெற்றது என்னுடைய பள்ளி சர்டிபிகேட்டுகளில் குறிப்பிட்டுள்ள தேதி பிரகாரம் நடந்தது. ஏனெனில் என்னைப் பள்ளிக்குச் சேர்க்கும்போது எனக்கு நான்கு வயதுதான் முடிந்திருந்தது. அந்தப் பள்ளியின் ஹெட்மாஸ்டர், பையனுக்கு ஐந்து வயது முடிந்திருந்தால்தான் பள்ளியில் சேர்ப்போம் என்று சொல்லி விட்டார். என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போனவர்கள், "சரீங்க ஐயா. அப்படியே வயதைப் போட்டுக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். அவரும் அப்படியே ஒரு பிறந்த தேதியைப் போட்டு என்னை ஐந்து வயதுப் பையனாக ஆக்கி பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.

இந்த விபரங்களெல்லாம் பின்னாளில் என் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஒரு துண்டுத்தாளில் எழுதி வைத்திருந்த ஒரு டாகுமென்ட் கிடைத்து நானாக யூகித்து சேகரித்த விபரங்கள். இந்த விபரங்கள் தெரியும்போது இதனால் என்ன கெட்டுப்போச்சு என்றுதான் இருந்தேன். அரசுப்பணியில் இருந்த போது இந்த பிறந்த தேதியை மாற்ற முடியும் என்ற விபரம் தெரிந்த போது எனக்கு இந்த துண்டுக் காகிதத்தைத் தவிர வேறு முறையாக எழுதப்பட்ட ஜாதகம் இல்லாததினால் பிறந்த தேதியை மாற்ற நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஆகவே நான் பணி ஓய்வு பெற்றபோது என் வயது 59 மட்டுமே. இப்படி இருக்கையில் என் நண்பன் ஒருவன் (என்னைவிட ஆறு மாதம் பெரியவன்) திருக்கடையூர் சென்று சதாபிஷேகம் செய்து விட்டு வந்ததாகக் கூறினான். நாம் எல்லோருமே செம்மறி ஆட்டுக்கூட்டம்தானே. முன்னால் செல்லும் ஆடு ஒரு கிணற்றில் விழுந்தால் அத்தனை ஆடுகளும் கிணற்றில் விழுமாம்.

என் நண்பனிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டு எனக்கு ஜாதகப்பிரகாரம் 60 வயது முடியும்போது திருக்கடையூர் சென்று சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து வந்தேன். நான், என் மனைவி, என் இரண்டு பெண்கள் இவ்வளவுதான் கல்யாணக்கூட்டம். திரு. அமிர்த கடேசக்குருக்கள் என்பவர் இந்த சடங்கை நடத்திக்கொடுத்தார்.

ஆண்டவன் கிருபையினால் அதற்குப் பிறகு 80 வயது வரை உயிருடன் இருந்து விட்டேன். இதற்குக் காரணம் அமிர்த கடேஸ்வரரின் அருள்தான் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் பேரிலும், சதாபிஷேகமும் செய்தால் கனகாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிட்டும் என்று செவி வழி செய்திகள் கேட்டதினாலும் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன்.


சரி, திருக்கடையூரிலேயே செய்து கொள்ளலாம் என்றால் குடும்பத்தினர் எல்லோரையும் அவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு போய் வருவது சிரமம் ஆதலால் வேறு வழி என்ன என்று யோசித்தோம். அப்போதுதான் திருக்கடையூருக்கு ஏறக்குறைய சமமான ஒரு கோயில் இங்கேயே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதைக் கண்டுபிடித்தோம். திருக்கடையூரில் சாபம் பெற்ற எமன் இந்த ஊரில்தான் சாப விமோசனம் பெற்றான் என்பது ஸ்தல வரலாறு.

எமன் சந்தோஷப்பட்ட ஊரில் ஒரு சாந்தி செய்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டு நம் பக்கம் கொஞ்ச நாளைக்கு திரும்பிப் பார்க்கமாட்டான் என்பது நம்பிக்கை. ஆகவே இங்கேயே என் சதாபிஷேகத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். எப்படி நடத்துவது என்று பல முறை பல மாற்றங்களை செய்து கடைசியில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஆப்த நண்பர்களை மட்டும் அழைத்து விழாவை நடத்துவது என்று முடிவானது.

அதன் பிரகாரம் ஒரு நாள் குறித்து, அது தவறிப்போன செய்தி நீங்கள் அறிந்ததே. கடைசியாக 5-2-2016 அன்று என்னுடைய சதாபிஷேகம் நடந்தது. உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்து ஆசி பெற்றார்கள். என்னைவிட ஒரே ஒரு நண்பர் மட்டும் மூத்தவர். அவரிடம் நான் ஆசி பெற்றுக்கொண்டேன்.
எல்லோருக்கும் விருந்தும் அன்பளிப்புகளும் ஆசிகளும் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் நான் ஒரு புனர் ஜன்மம் எடுத்தேன் என்றே சொல்லலாம். எப்படியென்றால் வைபவம் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தது. ஆயுஷ் ஹோமம், ம்ருத்யஞ்சய ஹோமம் ஆகியவை நடந்தன. அப்போது பல கலசங்கள் வைத்து  அந்த ஹோமங்கள் முடிந்த பின் அந்த கலச நீரால் தம்பதியருக்கு அபிஷேகம் செய்யும் வழக்கம் உண்டல்லவா. அந்த கலசங்கள் முதல் நாள் இரவே நீரால் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இதுவோ குளிர்காலம் நேரமோ அதி காலை.


எங்களை உட்காரவைத்து அந்தக் கலசங்களில் உள்ள நீரை அதற்கென்று உள்ள ஒரு ஜல்லடையில் வழியாக எல்லா உறவினர்களும் எங்களுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். ஆஹா, அந்த அனுபவம் இருக்கிறதே, அதை அனுபவித்தால்தான் தெரியும். நான் வேஷ்டி மட்டுமே அணிந்து மேல் துணி எதுவும் போடவில்லை. முதல் கலச நீரை ஊற்றினதுமே உடல் நடுங்க ஆரம்பித்தது. அடுத்தடுத்த கலச நீர்களை ஊற்றும்போது இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் காலன் கருணை புரியப் போகிறான் என்ற நிலை வந்து விட்டது.

ஆனால் கால காலேஸ்வரர் கோயிலிலேயே காலன் கருணை புரிய தைரியம் வரவில்லை போலிருக்கிறது. மீண்டும் புனர் ஜன்மம் எடுத்தேன். நம் பதிவர்கள் சஷடியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்து கொள்ளப்போகிறவர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படியாக என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது.

இந்தப் புராணப்பதிவை படிப்பவர்களும் படிக்கக் கேட்டவர்களும் தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகிய வைபவங்களைக் கொண்டாடவும் அவைகளில் நான் கலந்து கொள்ளவும் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரரும் கோவில்பாளையம் கருணாகரவல்லி சமேத காலகாலேஸ்வரரும் அருள் புரிய பிரார்த்திக்கறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிகளையும் உரித்தாக்குகிறேன். எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




சனி, 6 பிப்ரவரி, 2016

சதாபிஷேகம்

5-2-2016 அன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள். அன்றுதான் என் சதாபிஷேக வைபவம் நடந்தேறியது. மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர்.

போட்டோக்களை மட்டும் இப்போது பதிவிடுகிறேன். விழா நிகழ்வுகளைப் பற்றி சாவகாசமாக எழுதுகிறேன்.