திங்கள், 28 ஏப்ரல், 2014

பேனாக்களும் நானும்


பேனாக்கள் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம். நான் அப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேனே தவிர அப்படி எழுதுபவர்களைப் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. மற்ற தேசங்களில் எப்படி எழுதினார்க்ள என்பதற்கு ஒரு ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். அந்த ஆசை எனக்கு இப்போது இல்லை.


நான் ஒரு முறை காரைக்குடிக்குப் போயிருந்தபோது அங்கு செட்டிநாட்டு பழம் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். பல கலைநயம் பொருந்திய பழங்காலத்து பொருட்கள் அங்கு இருந்தன. அவை செட்டிநாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள். அதில் ஒரு எழுத்தாணியையும் பார்த்தேன். நான் அதற்கு முன் எழுத்தாணியைப் பார்த்தது இல்லை. அது ஒரு பக்கம் கத்தியும் மற்றொரு பக்கம் ஒரு கூரான ஊசியும் கொண்டு ஒரு பேனாக் கத்தியைப் போல் இருந்தது. இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் இதுதான் எழுத்தாணி என்று சொன்னார்.


உடனே அதன் விலையைக் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். நான் ஒரு கம்பனாக மாறிவிட்டதாக ஒரு கற்பனை தோன்றியது. பழங்காலத்து நாகரிகத்தை பேணிக்காக்கும் ஒரு பெருமிதம் மனதில் உண்டானது. இப்போதும் அதை என் வீட்டு ஷோகேசில் வைத்திருக்கிறேன். பல முறை அதை என் சகதர்மிணி தூக்கிப் போடப் பார்த்தும் என் கவனத்தினால் அது காப்பாற்றப்பட்டு இன்று வரை தமிழனின் நாகரிகச் சின்னமாக, நானும் ஒரு தமிழன் என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடரும்...

வியாழன், 17 ஏப்ரல், 2014

சுற்றுலா போகலாம் வாங்க


இங்கு கொடுத்திருக்கும் லிங்க் பல மாதங்களுக்கு முன் திரு GMB அவர்கள் எனக்கு அனுப்பினது. இதில் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயரை கர்சரால் சொடுக்கினால் ஒரு லிங்க் தோன்றும். அந்த லிங்க்கை சொடுக்கினால் அந்த ஊர்களுக்கு செலவில்லாமல் போய் வரலாம். இல்லை, நான் அந்த மாதிரி ஓசியில் டூர் செல்ல மாட்டேன் என்று நினைப்பவர்கள் தாங்கள் விரும்பும் தொகையை எனக்கோ அல்லது  திரு GMB அவர்களுக்கோ அனுப்பலாம்.



Spectacular Panoramas and 3D Tours.

Enjoy Panoramic Views
...click on any one place and enjoy.. .... what a wonderful way to tour the world from your computer chair!
UN Plaza Hotel, New York, USA   •   Oahu, Hawaii, USA   •   Las Vegas, Nevada, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •   Golden Gate Bridge, USA   •   Statue of Liberty, New York, USA   •   Manhattan, New York, USA   •   Hollywood, California, USA   •   San Juan and Colorado rivers, USA   •   Goosenecks, Utah, USA   •   Mono Lake, California, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •  Chicago, Illinois, USA   •  Los Angeles, California, USA   •   Kiev, Ukraine   •   Ay-Petri, Ukraine   •  Dubai, UAE   •   Dubai, Islands, UAE   •   Palm Jumeirah, Dubai, UAE   •  Bangkok, Thailand   •   Sankt-Moritz, Switzerland   •   Cape Good Hope, South Africa   •   Cape-Town, South Africa   •   Moscow, MSU, Russia   •  Moscow, Kremlin, Bolotnaya Square , Russia   •   Moscow, Russia   •  Moscow Kremlin, Russia   •   55.748765;37.540841, Russia   •   Moscow City, Russia   •   Kremlin, Moscow, Russia   •   Moscow City, Russia   •  Trinity Lavra of Sait Sergius, Russia   •   Saint-Petersburg, Russia  •   New Jerusalem Monastery, Russia   •   Saint Petersburg, Russia   •  Novodevichy Convent. Moscow, Russia   •   Ramenki,Moscow, Russia   •  MKAD, Moscow, Russia   •   Moscow, Russia   •  Moscow, Russia   •  Krokus Expo Center, Moscow, Russia   •   Moscow Region, Russia   •  Moeraki Boulders, New Zealand   •   Fiordland, New Zealand   •   Nepal, Nepal   •   Maldives, Maldives   •  Kuala-Lumpur, Malaysia   •   Grimsvotn, Iceland   •   Amsterdam, Holland   •   Neuschwanstein Castle, Germany   •  Egyptian Pyramids, Egypt   •   Hong Kong, China   •   The Iguassu Falls, Brazil   •  Twelve Apostles Marine National Park, Australia   •   Sydney, Australia   •   Buenos Aires, Argentina   •   .


திங்கள், 14 ஏப்ரல், 2014

புத்தாண்டில் இன்பமாக வாழ்வோம்.


எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிறந்தாலே கூடவே புத்தாண்டு சபதங்களும் வந்து விடும். சபதங்களை காப்பாற்றுகிறோமோ இல்லையோ, அவை நம் மனதின் ஆசைகளை வெளிப்படுத்தும் எண்ணங்களாகும். கடந்த கால வாழ்க்கையில் நாம் தவறென்று கருதுபவைகளை மாற்ற விரும்பும் நம் ஆழ்மனதின் வெளிப்பாடே ஆகும்.

நாம் மாறவேண்டும் என்று நினைப்பதே நாம் முன்னேறுவதற்கான முதல் படி. இந்த முயற்சிகளில் நாம் இன்பமாக வாழவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். நான் என் அனுபவத்தால் உணர்ந்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

கடனில்லா வாழ்வே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடிப்படைத்தேவை. பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் கடன் இல்லாமல் இருப்பதே ஆனந்தம். தான் சம்பாதிக்கும் வருமானத்திற்குள் வாழ்வதே புத்திசாலித்தனம்.

எல்லோரும் புத்தாண்டில் கடனற்ற இன்ப வாழ்வு வாழ ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

இது என்ன மாயவேலை?

நான் திருச்சியில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்திக்கச் சென்றது உங்களுக்குத் தெரியும். அப்போது அவர் கேமராவில் நாங்கள் இருவரும் சேர்ந்திருப்பதை படம் எடுத்தார். படம் கீழே காண்க.


இந்தப் படத்தில் திடீரென்று ஒரு மூன்றாவது நபர் நுழைந்திருக்கிறாரே, அவர் யார் என்று என்னைக் கேட்டார். படம் பார்க்க.


படம் அவருடைய கேமராவினால் எடுக்கப்பட்டது. என்னால் இது எப்படி நடந்தது என்று சொல்ல முடியவில்லை. யாராவது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம் அல்லது ஏதாவது கம்ப்யூட்டர் வைரஸ் செய்த வேலையாயிருக்கலாம். நண்பர்களே, உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

திங்கள், 7 ஏப்ரல், 2014

திருச்சியில் ஒரு இளைஞர்


இந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.

திருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

பல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.

இப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.

நானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது "வைகோ" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.


ஆண்டார் தெரு ஆரம்பம்

இந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.


வைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்

காரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக  பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.

இங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.

நான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.


வைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்

பின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
நான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே "வாங்கோ வாங்கோ" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

லிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.


வைகோ தம்பதியினர்

குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.


இரு "பிரபல" பதிவர்கள்

கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.

நான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கால முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.


வைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை

வைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு  விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

நான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.

http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

என்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.

வைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஒரு அவசர (அவசிய) பதிவு

                                             
என் பதிவைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

என்னுடைய கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் 500 GB  கொண்டது. இதில் C,D,E ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.

நான் பாட்டுகள், மகாபாரத விடியோக்கள், கதைகள், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி போன்ற கட்டுரைகள், சமையல் குறிப்புகள், பிரயாணக் கட்டுரைகள் என்று பலவற்றை டவுன்லோடு செய்து வைத்துள்ளேன். இந்த வயதிற்குப் பின் (80) என்ன முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இளம் வயதில் இந்தக் கட்டுரைகளைப் படித்திருந்தால் நாம் எவ்வளவு முன்னேறியிருப்போம் என்று ஒரு பகல் கனவு காண்பதற்காகத்தான் இவைகளை சேகரிக்கிறேன்.

சமையல் குறிப்புகள் எதற்காக சேமிக்கிறேன் என்றால் இவைகளை என் மனைவி பார்த்து ஒரு நாளாவது அது போல் செய்து கொடுக்க மாட்டார்களா என்ற நப்பாசைதான் காரணம். இரண்டாவது காரணம் இந்தக் குறிப்புகளை யூட்யூப்பில் சொல்லும் சமையல் நிபுணிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

ஹார்டு டிஸ்கின் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்யலாம் என்று வயதானபின் மிகவும் செயல் குறைந்து போன என் மூளையை கசக்கி யோசித்ததில் ஒரு வெளியிலிருந்து செயல்படும் ஹார்டு டிஸ்க் வாங்கிக்கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்குக் காரணம் இன்டர்நெட்டில் பல இடங்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததின் விளைவு..

என் ஆஸ்தான கம்ப்யூட்டர் டாக்டரும் அவ்வாறே அபிப்பிராயப்பட்டார். ஒரு வேகத்தில் நேற்று கம்ப்யூட்டர் கடைக்குப் போய் Seagate 1 TB அளவுள்ள ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். ஒரு அனாமத்து கணக்கில் வந்த ஐயாயிரம் ரூபாய் பாக்கெட்டில் துள்ளிக்கொண்டு இருந்ததும் மற்றொரு காரணம். இதன் விலை 5300 ரூபாய் ஆயிற்று.

ஆக மொத்தம் இன்னொரு வெள்ளை யானையை வாங்கியாயிற்று. இரவு முழுவதும் இந்த யானையை எப்படி பராமரிப்பு செய்வது என்ற கவலையில் தூக்கத்தைத் தொலைத்தேன். (முதலிலேயே தூக்கம் வருவதில்லை என்பது வேறு விஷயம்.)

இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர்கள் உதவுவார்கள் என்கிற என் ஆழ்ந்த நம்பிக்கையின் பேரில் இந்த விஷயத்தை இங்கு பதிவிடுகிறேன். உங்களுக்குத் தெரிந்த யோசனைகளை பின்னூட்டத்தில் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.