சனி, 30 ஜனவரி, 2016

இணையமும் புத்தகங்களும்

                                  இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அநேகமாக உங்களில் பலருக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருக்கலாம்.


இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து த.சீனிவாசன் tshrinivasan@gmail.com என்பவர் மின்னஞ்சலாக அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கட்டுரை ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதில் 

கூறப்பட்டுள்ளவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

நான் சிறுவயதில் ஏறக்குறைய என்னுடைய பத்தாவது வயதில் விகடனுக்கு அறிமுகமானேன். பக்கத்து வீட்டில் விகடன் வாங்கினார்கள். அதை ஓசியில் வாங்கிப் படிப்பேன். அப்போது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிய செய்திகள் விகடனில் வந்து கொண்டிருந்தன. 

விகடனை ஒரு உச்சிக்குடுமி முகமாகவும் அந்த யுத்தச் செய்திகளைத் தரும் நிருபரை ஒரு குரங்காகவும் சித்தரித்து படங்கள் போடுவார்கள். இன்றும் அந்த உச்சிக்குடுமி படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போதுதான் குமுதம் பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. அந்தப் பத்திரிக்கையின் கோவை ஏஜன்ட் எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ தூரத்தில் இருந்தார். குமுதம் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டவுடன் கமுதம் வரும் நாளில் அந்த ஏஜன்ட்டின் வீட்டிற்கே காலையில் ஆறரை மணிக்குப் போய்விடுவேன். குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.


அப்போது அவ்வளவு ஆர்வத்துடன் படித்த விகடன் எப்போது உருமாறியதோ அப்போதே அதில் ஆர்வம் போய்விட்டது. குமுத த்தின் பாணியும் மாறி விட்டது. அது தவிர இப்போது வரும் வாரப் பத்திரிக்கைகளில் சினிமா செய்தி தவிர வேறு எதையும் காணோம். இப்போது வாரப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.

கொஞ்ச நாளில் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய/மொழிபெயர்த்த துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போயின. ஜே.ஆர். ரங்கராஜு என்வரும் அப்போது துப்பறியும் நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு பேரின் நாவல்களையும் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் என் வாசிப்பின் வேகம் மணிக்கு நூறு பக்கம். ஒரு நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் அதை கீழே வைக்க மாட்டேன். பள்ளியில் டெஸ்க்குக்கு கீழே வைத்துப் படித்ததும் உண்டு. 


பிற்காலத்தில் ஆங்கில நாவல்களையும் அதே ஆர்வத்துடன் படிப்பேன். வேலையில் சேர்ந்து அதில் மூழ்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் படிக்கும் வழக்கம் குறைந்து போனது. அதுவும் இந்த இணையம் வந்த பிறகு புத்தகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து போனோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையே.

ஆனால் சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. பதிவு எழுதுவதற்கு கற்பனை ஓடமாட்டேனென்கிறது. ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம் வந்துள்ளது. இணையத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவைகளை தரவிறக்கி ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.

அதே போல் நல்ல பாட்டுகளையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு கேட்கிறேன். சமீபத்திய ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. எனக்கு அன்பளிப்பாக க் கிடைத்த "டேப்" பில் புத்தகங்களை சேமித்து வைத்துக் கொண்டு படிக்க வசதியாக இருக்கிறது. அதுவும் அமேசான் காரன் இலவசமாகவும் மிக சலீசான விலையிலும் நிறைய புத்தகங்கள் கொடுக்கிறான். எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். படித்துக்கொண்டும் வருகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை. போட்டி இருந்தால்தானே எதுவும் சோபிக்கும். 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 2

(வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.)

திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் ஒரு தாவரவியல் பேராசிரியர், அவர் படிப்புக்கு ஏற்றாற்போல் பலவிதமான செடிகளும் மரங்களும் அவர் வீட்டைச்சுற்றி இருந்தன. அவர் வீடு ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கிறது. அதில் ஒரு பகுதியில் அவர் தந்தையார் கட்டின வீடு இருக்கிறது. அதற்கும் 100 ஆண்டு வயது இருக்கும். மீதி உள்ள இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள் இருக்கின்றன.

நான் அவரைப் பார்த்த ஆனந்தத்தில் அந்த செடி கொடிகளை போட்டோ எடுக்கத் தவறி விட்டேன். அவர் இந்த செடிகளின் பேரில் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவருடைய மருமகன் டாக்டர் அகஸ்டின் செல்வசீலன் என்னுடைய மாணவர். என்னுடன் ஒரே பிரிவில் பணியாற்றியவர். அவரும் அப்போது அங்கு வந்திருந்தார். என் பயணத்திட்டத்தை இப்படி ஒத்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தோம்.

நாங்கள் மூவரும் அவருடைய தோட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம், ஒவ்வொரு இடத்திலும் உள்ள செடிமொடிகளைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார். மழை நீர் சேகரிப்பிற்கான தொட்டியையும் காண்பித்தார். அங்கு ஒரு விசாலமான பகுதியை மைதானமாக விட்டிருந்தார். வருடத்திற்கொரு முறை அங்கு ஒரு விழா நடக்கும் என்று திரு அகஸ்டின் கூறினார்.

பின்பு நாங்க்ள திரும்பி வந்து தேனீர் அருந்தினோம். பின்பு திரு. டாக்டர் டேனியல் சுந்தரராஜ் தான் செய்து வரும் ஆன்மீகப் பணிகளைப் பற்றிப் பேசினார். வாரம் ஒரு முறை அந்த ஊரில் உள்ள சீனியர் சிடிசன்களை வரவழைத்து அவர்களுக்கான நற்போதனைகள் செய்கிறார்.

வாரத்தில் ஒரு நாள் சிறுவர்களுக்கு அன்னதானமும் நற்போதனைகளும் செய்கிறார். வாரத்தில் மற்றொரு நாள் அந்த ஊரில் உள்ள வயதான பெண்மணிகளை வீட்டிற்கு வரவழைத்து வேதம் ஓதுகிறார்கள். இந்த காரியங்களுக்கெல்லாம் அவருடைய மருமகள் உறுதுணையாய் இருக்கிறார்கள். நான் சென்றிருந்த அன்று கூட இவ்வாறான கூட்டம் ஒன்று நடந்தது.

இது போக மற்ற சமயங்களில் மத சம்பந்தமான புத்தகங்கள் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி வெளியான புத்தகங்களைக் காண்பித்தார். எனக்கும் ஒரு புத்தகத்தில் வாழ்த்துக்கூறி கையெழுத்துப் போட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நான் அவருடைய நினைவாகப் பொக்கிஷம் போல் பாதுகாப்பேன். 


இதையெல்லாம் பார்த்து நான் என் அன்றாட வாழ்க்கையை நினைத்து வெட்கிப்போனேன். உண்பதுவும் உறங்குவதுவும் தவிர நான் ஒன்றும் செய்யவதில்லை என்று நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் வேதனையுற்றது. என்ன செய்வது? நான் ஒரு சோம்பேறியாக வளர்ந்து விட்டேன்.

பிறகு, திரு. அகஸ்டின் அவர்களுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். அந்த ஊரின் முக்கியமான சர்ச்சைப் பார்த்தோம்.

நூறு ஆண்டுகளுக்கும் பழமையான நாசரெத்தின் தபால் நிலையத்தைப் பார்த்தோம்.


பிறகு நாசரெத்தின் பேருந்து நிலையம் பார்த்தோம்.

பின்பு வீட்டிற்கு வந்ததும் மதிய உணவு தயாராக இருந்தது. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களும் அவர்களுடைய இரு மகள்களும் நன்கு உபசரித்தார்கள். என்ன, ஒரு குறை என்றால் என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. 



சாப்பிட்டபின் சற்று ஓய்வெடுக்க மாடியில் உள்ள ஒரு கட்டிலை திரு. அகஸ்டின் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். உண்ட களைப்பு நீங்க, சுமார் ஒரு மணி நேரம் தூங்கினேன். மாலை இரண்டரை மணிக்கு விழிப்பு வந்தது. அங்குள்ள பாத்ரூமில் முகம் கைகால் கழுவிக்கோண்டு வந்தவுடன் சூடாக ஒரு தேனீர் கொடுத்தார்கள். அது தூக்கக் கலக்கத்தை விரட்டியடித்தது.

பிறகு கீழே இறங்கி வந்தேன். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் அந்த ஊரிலுள்ள வயதான பெண்மணிகளை அழைத்து கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். அவரை அதிகம் தொந்திரவு செய்யாமல் விடை பெற்றுக்கொண்டு ரயில் நிலையம் வந்தோம். மூன்றேகாலுக்கு திருநெல்வேலி செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி நாலேகாலுக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தேன்.


திருநெல்வேலி போய்வந்தேன் என்றால் தெரிந்தவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி, இருட்டுக்கடை அல்வா வாங்கினீர்களா என்பதுதான். அதனால் ரயில் நிலையத்திலிருந்து டவுன் பஸ் நிலையம் போய் அங்கிருந்து நெல்லையப்பர் கோவில் சென்றேன். அந்தக் கோவில் வாசலுக்கு எதிரில்தான் இருட்டுக்கடை இருக்கிறது.

நான் போய்ச் சேர்ந்த நேரம் நாலேமுக்கால். அப்போதே சுமார் நூறு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கடைக்கு எந்த விதமான விளம்பரங்களோ, போர்டோ இருக்கவில்லை. கருப்பான சரப் பலகைகள் மட்டும் போட்டு அடைத்திருந்தார்கள். கடை ஐந்து மணிக்குத் திறந்தார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அல்வா வாங்கினார்கள். என்னால் முண்டியடிக்க முடியாததால் அரை மணி நேரம் பொறுமையாக காத்திருந்து ஆறு அரை கிலோ அல்வாப் பொட்டலங்கள் வாங்கினேன்.

வியாபாரம் சுறுசுறுப்பாகவும் கச்சிதமாகவும் நடக்கிறது. பிறகு வந்த வழியே திரும்பி ஓட்டல் அறைக்கு ஆறு மணிக்கு வந்து சேர்ந்தேன். எட்டரை மணிவரை ஓய்வெடுத்தபின் அறையைக் காலி செய்து விட்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். இரவு 9.45 க்கு கோவை செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி என்னுடைய இடத்தில் படுத்துக்கொண்டேன். நீண்ட நாளைய ஆசை நிறைவேறிய திருப்தியில் நன்றாக தூங்கிப்போனேன்.


மறுநாள் காலை 7.45 க்கு கோவை வந்து சேர்ந்தேன். என் உறவுப் பெண் ஒன்றுக்காக கார் வந்திருந்தது. அதில் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

                                         
                                 Image result for பொங்கல் வாழ்த்துக்கள்

எனக்குப் பொங்கல் வாழ்த்து கூறியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.

வியாழன், 14 ஜனவரி, 2016

ஒரு அவசரப் பதிவு.

                                    Image result for ஏர்டெல் 4ஜி

நான் "பிஎஸ்என்எல்" ஐ விட்டு ஜகா வாங்கி ஏர்டெல்லுக்குப் போன கதை யை முன்பே எழுதியுள்ளேன்.

நேற்று ஏர்டெல் ஆபீசிலிருந்து ஒருவர் என் மொபைலில் பேசினார். சார், புதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. நீங்க இப்போ வச்சிருக்கிற பிராட்பேண்ட் ஸ்பீட் 4MBPS. 60 GB வரைக்கும்தான் இந்த ஸ்பீட். அப்புறம் 512 KBPS க்கு குறைஞ்சிடும். இப்போ பதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. அதுல ஸபீட் 16 MBPS. 100 GB வரைக்கும் இந்த ஸ்பீடுலேயே வேலை செய்யும். சார்ஜ் சும்மா ஒரு இருநூறு ரூபாய்தான் அதிகமாகும். நீங்க உபயோகிக்கிற அளவிற்கு இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்.

நானும் சரி, 16 MBPS ஸ்பீட் எப்படியிருக்கும் பார்த்து விடலாம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டேன். இன்று காலை முதல் அந்த 16 MBPS ஸ்பீடில் என் பிராட்பேண்ட் வேலை செய்கிறது. டவுன்லோடு செய்வதெல்லாம் டக் டக்கென்று நடக்கிறது.

போகப்போகப் பார்க்கவேண்டும்.

"என் ஆசிரியர் பாகம் இரண்டு" ஞாபகம் இருக்கிறது. பொங்கல் கழித்து வெளியாகும்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 1






இந்த இரு படங்களிலும் நடுவில் இருப்பவர்தான் என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.டாக்டர் டி. டேனியல் சுந்தரராஜ் அவர்கள். அவர்களுக்கு இப்போது 96 வயதாகிறது. ஆனாலும் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தன் வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். இது தவிர கிறிஸ்தவ பஜனைக் கூட்டங்கள் நடத்துகிறார். ஏழைக்குழந்தைகளுக்கு அன்னதானமும் செய்கிறார். வயதானவர்களை வாரம் ஒரு முறை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு யோசனைகள் சொல்லுகிறார்.

மேலும் பல கிறிஸ்தவ மதபோதனைகள் அடங்கிய புத்தகங்களும் எழுதி வெளியிடுகிறார்.  இவர் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரெத் என்னும் இடம். நாசரெத் என்பது இஸ்ரேலில் உள்ள ஒரு புனித ஊர். அதன் நினைவாக இங்கு வந்த கிறிஸ்தவ மத போதகரான மர்கோஸ்சிஸ் என்பவர் ஒரு ஊரை 18 ம் நூற்றாண்டில் ஸ்தாபித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஆங்கிலத்தில் ஒரு சிறு குறிப்பு.

Canon Arthur Margoschis

He came to Nazareth in 1876 as a youth missionary. He has started an orphanage for children. Rev. Margoschis rendered to not only god’s ministry but also medical services and social services. His period of ministry is called the golden era of Nazareth church. He extended the back portion of the church. He started the scheme “Future provides funds”. He completed twenty five years of service in 1901 and the silver jubilee was celebrated in 1903 according to the wishes of the congregation. In 1903 the government honored him with a medal “Saviour Hindu” for his services. The Bishop of Madras made him one of the honor canons of Madras Diocese praising his devotion and knowledge. People call him “the father of Nazareth for his services to the welfare of Nazareth congregation. According to the census taken in 1901 the members were 1482 in member. He believed that this world exceed 2000 soon. So he decided a new gig church. But that plan could not be fulfilled during his time and it was executed after 20 years. His tomb is in the church premises.

அவரின் நினைவாக கட்டப்பட்ட சர்ச்.


நான் கல்லூரியில் 1953 ல் சேர்ந்த பொழுது, திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் தாவரவியல் உதவிப் பேராசிரியராக இருந்தார்கள். தவிர மாணவர் மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்கள். நீண்ட நெடிய உயரம். ஒரு பார்வையிலேயே பயத்தை உண்டு பண்ணும் பார்வை. மாணவர்களின் ஒழுக்கத்தில் மிகவும் கட்டுப்பாடானவர். அவர் வரும்போது அவர் பாதையில் நாங்கள் எதிர் செல்லாமல் மாற்றுப் பாதையில்தான் செல்வோம். அவ்வளவு பயம் கலந்த மரியாதை.

மாணவர்கள் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டால்தான் அவர்கள் பிற்காலத்தில் நல்ல குடிமகன்களாக விளங்குவார்கள் என்ற ஆழ்ந்த கொள்கையுடையவர். அது உண்மை எனப் பிற்காலத்தில்தான் எங்களுக்கு விளங்கியது. அப்படிப்பட்டவர் ஒரு காலகட்டத்தில் இளகிப் போனார். கண்டிப்பு மாறி கனிவு மேலோங்கியது.

நான் உதவி விடுதிக்காப்பாளனாக இருந்தபோது அவர் என் மேலதிகாரியாக இருந்தார். என் கடமை உணர்வையும் பதவிக்கு விசுவாசமாக இருந்ததையும் பார்த்து என் மேல் மிகுந்த அன்புடன் இருந்தார். நான் சில உதவிகள் கேட்டபோது, அவை கொஞ்சம் நடைமுறைகளுக்கு வித்தியாசமாய் இருந்த போதிலும் எனக்காக அவைகளைச் செய்தார். வேறு யாரும் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.

பிற்காலத்திலும் அவர் எந்தப் பதவியில் இருந்த போதிலும், நான் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கக்கூடிய சலுகையை அளித்திருந்தார்.
அவரைப் பின்பற்றியே நானும் என் ஆசிரியப் பணியில் கட்டுப்பாடுதான் முக்கியம் என்று வலியுறுத்தி வந்தேன்.

கடந்த இரண்டு வருடங்களாகவே அவரைச் சென்று சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதினுள் இருந்து வந்தது. சமீபத்தில் அவருடைய மருமகனும் என்னுடைய மாணவரும், என் கூடப் பணிபுரிந்தவருமான திரு.டாக்டர். அகஸ்டின் செல்வசீலன் தன்னுடைய முகப்புத்தகத்தில் திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களுடைய போட்டோவைப் பகிர்ந்திருந்தார்.

அதைப் பார்த்தவுடன் என் எண்ணம் வலுவடைந்து திரு. அகஸ்டினிடம் கலந்து பேசி, அவரும் நாசரெத் போகும்போது என் வருகையையும் வைத்துக்கொள்ளுமாறு ஒரு தேதியைத் தேர்ந்தெடுத்தோம். 7-1-16 தேதி அவ்வாறு நிச்சயமானது. உடனே ஆன்லைனில் திருநெல்வேலிக்கு போகவர டிக்கட் பதிவு செய்தேன்.



திட்டப்படியே பயணித்து திருநெல்வேலியில் தங்கி அங்கிருந்து  மற்றுமொரு ரயில் பிடித்து நாசரெத்திற்கு போய் சேர்ந்தேன். டாக்டர் அகஸ்டின் வேறொரு இடத்திற்குப் போய் விட்டு வருவதில் கொஞ்சம் லேட் ஆகும் என்றார். நான் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களுடைய விலாசத்தைச் சொன்னேன். ஆட்டோ டிரைவர் சரியாக அவர் வீட்டு வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்.

வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.


நான் திருநெல்வேலியில் தங்கின விடுதி

தொடரும்....

திங்கள், 11 ஜனவரி, 2016

கல்யாணம் பண்ணப் போகும் மகனே

                                      Image result for இளம் தம்பதி

கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.

உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்!!!

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....!!
உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!!


நன்றி: முகநூல்

திங்கள், 4 ஜனவரி, 2016

80 வயதிலும் இளமை !

                                         Image result for tnau campus
நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்ற வருடம் 1956. ஜூன் மாதம் பரீட்சைகள் முடிந்தன. ஜூலை மாதம் முடிவுகள் வந்தன. முடிவுகள் தெரிந்த பதினைந்து நாளில் கவர்ன்மென்ட் வேலைக்கான உத்திரவு வந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வேலைக்கு சேர்ந்தேன். விவசாந ஆராய்ச்சிப் பண்ணையில் ஆய்வு உதவியாளன் என்னும் உத்தியோகம்.

என்ன பெரிய உத்தியோகம்? நான் முதல் மாதம் வாங்கிய சம்பளத்தைச் சொன்னால் என் பேரன் என்னை கேவலமாகப் பார்க்கிறான். ரூ.100 சம்பளம். ரூ. 24 பஞ்சப்படி. மொத்தம் 124 ரூபாய்.

அப்போது கோவையில் நூற்பாலைகளில் பணி புரிந்தவர்கள் மாதம் 150 ரூபாய் சம்பளம் பெற்றார்கள். வருடத்தில் ஆறு மாத போனஸ். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். நான் 16 வருடம் படித்து பட்டம் வாங்கி, அவர்களைவிட குறைவான சம்பளம் வாங்குவது கேவலமாகப் பட்டது. பேசாமல் அந்த வேலைக்கே போய்விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன்.

எப்படியோ விதி வசத்தால் அதே கவர்ன்மென்ட் உத்தியாகத்தில் தொடர்ந்து இருந்து படிப்படியாக உயர்வுகள் பெற்று ஒரு பேராசிரியராகப் பதவி ஓய்வு பெற்றேன். இன்று கணிசமான ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு. நான் விவசாயப் பட்டப்படிப்பில் சேர்ந்த போது, என் வகுப்பில் மொத்தம் 96 பேர் சேர்ந்தோம். மூன்று வருடங்கள் கழித்து 82 பேர் படிப்பு முடிந்து வெளியில் வந்தோம். இதில் சுமார் 45 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்னாடகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது அந்த இரு மாநிலங்களிலும் விவசாயக்கல்லூரிகள் இல்லை.

இந்த 86 பேர்களும் பல வேலைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். ஓரிருவர் மட்டும் சொந்தத் தொழிலில் இருந்தார்கள். இப்படி இருக்கையில் கடந்த 2006 ம் ஆண்டு, எங்களில் ஒருவருக்கு நாம் வகுப்புத்தோழர்கள் எல்லாம் ஒன்று கூடி அளவளாவினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வந்தது. அவர் நான் உட்பட சில நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார். நாங்களும் இந்தக் கருத்துக்கு ஒப்புதல் தரவே, அவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். பெருமுயற்சிக்குப் பின் ஏறக்குறைய 60 நபர்களைத் தேடிக்கண்டு பிடித்து விட்டார்.

மீதி நபர்கள் மேல் லோகத்தில் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த 60 பேருக்கும் செய்தி அனுப்பி, விழா ஏற்பாடு செய்து 2006 ம் ஆண்டில் "பொன் விழா" கொண்டாடினோம். 50 பேர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.



இந்த வருடம், அதாவது 2016 ம் வருடம் நாங்கள் பட்டம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆகவே இந்த ஆண்டில் வைர விழா கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம். சென்னை நண்பர் எங்கள் வகுப்புத் தோழர்களின் கணக்கை எடுத்தார். பொன் விழாவின்போது இருந்தவர்களில் இன்னும் 20 பேர் காணவில்லை. சரி இருக்கும் 40 பேரை வைத்து விழா எடுப்போம் என்றால் அதில் பாதிப்பேர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

எப்படியோ ஒரு 20 பேரைத் தேத்தியிருக்கிறோம். விழா வருகிற பெப்ரவரி மாதம் 27 ம் தேதி கோயமுத்தூர் விவசாயப் பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது. ஏறக்குறைய எல்லோருக்கும் 80 வயதிற்கு மேல் ஆகிறது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் வளர்கிறது.

விழா முடிந்தவுடன் விபரமான கட்டுரை வெளியாகும்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

புது வருட வாழ்த்துகளும் தீர்மானங்களும்.

எல்லோரும் புது வருட வாழ்த்து சொல்லும்போது  நான் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும். அதனால நானும் எல்லோருக்கும் புது வருட வாழ்த்தினைச் சொல்லிக்கொள்கிறேன்.                

                        Image result for new year greetings 2016

இந்த மாதிரி ஒருத்தரைப்பார்த்து ஒருத்தர் செய்வதைத்தான் இங்கிலீஸ்ல Peer Pressure அப்படீங்கறாங்க. ஒலகத்தில தனி மனிதனுக்கு வருகிற துன்பங்களெல்லாம் இந்த சனியனாலதான் வருகிறது என்பது என் அபிப்பிராயம்.

அடுத்த வீட்டுல ஏசி மிஷின் வாங்கீட்டாங்களா? நாமும் வாங்க வேண்டியதுதான். இந்தப் பக்கத்து வீட்டில கார் வாங்கீட்டாங்களா? நாமும் வாங்கோணும். அடித்த வீட்டுப் பையன் கிளாஸ்ல முதல் ரேங்க்கா? நீ ஏண்டா முதல் ரேங்க் வாங்கலேன்னு நம்ம பையனுக்கு அடி அல்லது டோஸ்.

இப்படித்தான் உலகம் போய்க்கொண்டு இருக்கிறது. பையன் அல்லது பெண் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போது அவர்கள் ஒரு மாயா லோகத்தில் வாழ்கிறார்கள். அடுத்தவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்யவேண்டும் என்கிற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தி, நம் தகுதிக்கு ஏற்ப நாம் வாழ்வோம் என்ற கருத்தை ஒவ்வொரு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.

இதுவே நாம் இளைய தலைமுறைக்குச் செய்யும் சேவையாகும்.

                                    Image result for குடும்பம்