சனி, 28 பிப்ரவரி, 2015

இரண்டு உ.கிழங்கு போண்டா விலை 5000 ரூபாய்

                               
                               Image result for heart attack symptoms

நுணலும் தன் வாயால் கெடும். இதை ஆரம்பப் பள்ளியிலேயே படித்திருக்கிறோம். ஆனாலும் வயதான பின்பு ஆரம்பப் பள்ளியில் படித்தவற்றை முற்றிலுமாக மறந்து விடுகிறோம். வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான் அடடா, சின்ன வயசிலேயே படித்தோமே என்று அங்கலாய்க்க முற்படுகிறோம்.

நேற்று காலை என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் சேர்ந்து மூன்றாவது நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் வீட்டிற்குப் போனோம். போகும் வழியில் நாங்கள் வழக்கமாக தேனீர் அருந்தும் கடை வந்தது. சரி, நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு பேசினால் "செவுக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்ற பழமொழியை நடைமுறைப்படுத்தலாமே என்று ஒரு பத்து உ.கிழங்கு போண்டா (அப்போதுதான் சுட்டுக்கொண்டிருந்தார்கள்) வாங்கிக்கொண்டு சென்றோம்.

ஆளுக்கு இரண்டு வீதம் சாப்பிட்டு விட்டு மீதியை நண்பர் வீட்டில் யாராவது சாப்பிடட்டும் என்று வைத்து விட்டோம். மதிய உணவுக்கான நேரம் நெருங்கி விட்டபடியால் அவரவர் வீட்டிற்குத் திரும்பினோம். மதிய உணவு வழக்கம்போல் 1 மணிக்கு பரிமாறப்பட்டது. சாப்பிட உட்கார்ந்தேன். உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் அதாவது நெஞ்சுப் பகுதியில் லேசாக ஏதோ அசௌகரியமாக உணர்ந்தேன்.

சாப்பிடுவதற்கு கஷ்டமாக இருந்தது. எப்படியோ முதலில் போட்ட சாதத்தை குழம்புடன் சேர்த்து சாப்பிட்டேன். மீதியைத் தட்டிலேயே வைத்து விட்டு எழுந்து போய் கையைக் கழுவிவிட்டு படுக்கையில் படுத்துக்கொண்டேன். நெஞ்சில் உள்ள அசௌகரியம் தொடர்ந்து இருந்தது. கற்பனைக் குதிரை இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.

முதல் உதவி வாகனம் வருவது போலவும், அதில் என்னை ஏற்றிக் கொண்டு போய் மருத்துவமனை அவசரப் பகுதியில் சேர்த்து விட்டதாகவும் பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வதாகவும், இவ்வாறாக பல கற்பனைகள். எதற்கும் பார்க்கலாம் என்று எழுந்து வந்து  ஒரு "ஆன்டாசிட்" மாத்திரை சாப்பிடலாம் என்று மனைவியைக் கூப்பிட்டேன். அவள்தான் இந்த மாத்திரையை வழக்கமாக சாப்பிடுவாள்.

நான் சரியாகச் சாப்பிடாமல் படுக்கப் போய்விட்டு, திரும்ப எழுந்து மனைவியைக் கூப்பிட்டவுடன் அவளுக்கு பயம் வந்து விட்டது. அலார மணி அடித்துவிட்டாள். மனைவி, டாக்டருக்குப் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பேரன், டாக்டர் மகள் எல்லோரும் வந்து விட்டார்கள். நான் கேட்ட மாத்திரையை வாங்கி சாப்பிடுவதற்குள் பல கேள்விகள். என்ன செய்கிறது? என்று ஆளாளுக்குக் கேட்டார்கள்.

இங்குதான் "நுணலும் ...." என்கிற பழமொழி வேலை செய்தது. போண்டா சாப்பிட்ட சமாச்சாரத்தைச் சொல்லி விட்டேன். சிக்கிக்கொண்டேன். யார் உங்களை போண்டா வாங்கிச் சாப்பிடச்சொன்னது? வெளியில் போனால் சும்மா வருவதில்லை? வம்பை விலைக்கு வாங்கி வருவதே உங்கள் வேலையாகப் போயிற்று? இத்தியாதி, இத்தியாதி.

இதற்குள் "ஆன்டாசிட்" மாத்திரை வேலை செய்து வயிற்று அசௌகரியம் சரியாகி விட்டது. ஆனாலும் ஒரு இருதய நோய் நிபுணரைப் பார்த்து முழு பரிசோதன் செய்து விடலாம் என்று முடிவாகியது. இது ஒன்றுமில்லை, வெறும் வாயுத் தொந்திரவுதான் என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

சமீபத்தில்தான் பக்கத்து வீட்டு அம்மாள் 5000 ரூபாய் செலவு செய்து இந்த பரிசோதனைகளை முடித்திருந்தார்கள். அந்த டாக்டர் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறார். என் பெண்ணுக்குத் தெரிந்த டாக்டர்தான். அவரிடம் காட்டுவதென்று முடிவாகி விட்டது.

என்னுடைய ஆட்சேபணைகளை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. ஆக மொத்தம் இரண்டு போண்டாக்கள் 5000 ரூபாய் செலவு வைக்கிறது. நான் என்ன செய்ய முடியும். நான் என் சூழ்நிலைக்கு அடிமை. குடும்பத்து அங்கத்தினர்கள் சொல்வதை நிராகரிக்க முடியாது. நாளைக்கு நிஜமாகவே ஏதாவது வந்து விட்டால் நாங்கள் அன்றைக்கே சொன்னோமே என்று சொல்லிச்சொல்லியே என் பிராணனை எடுத்து விடுவார்கள். ஆகவே இந்த பரிசோதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

மருத்துவரிடம் போய்வந்த பிறகு அந்த அனுபவத்தைத் தனியாக எழுதுகிறேன்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

அஜாக்கிரதையால் ஏற்படும் இழப்புகள்.

                                       Image result for கார்

கோவையில் கடந்த வாரம் நடந்த, தினத்தாள்களில் பிரசுரமான ஒரு நிகழ்வைப் பற்றிப் பாருங்கள்.

கோவைக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து ஒரு ஆண், அவனுடைய அக்கா, அவனுடைய தாய் ஆகிய மூவரும் கோவை புறநகர் பகுதியிலுள்ள ஒரு வங்கிக்கு வந்து அங்குள்ள சேமிப்பு அறையிலிருந்து 100 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டார்கள். கூடவே அவர்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாயும் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் குடும்பத்தில் ஏதாவது விசேஷங்கள் வரவிருக்கலாம்.

100 பவுன் நகை குறைந்த பட்சம் 20 லட்சம் மதிப்பு இருக்கும். பணம் 6 லட்சம். மொத்தம் 26 லட்சம். எப்படிப்பட்ட கோடீஸ்வரனுக்கும் இது ஒரு பெரிய தொகையாகும். நகைகளையும் பணத்தையும் ஒரு பையில் போட்டு, அவர்கள் வந்திருந்த காரில் ஏறி நகரத்திற்குள் வருகிறார்கள். நகைகளை மாற்றிச் செய்யவோ அல்லது அவைகளுக்கு மெருகு பூசவோ எதற்கென்று தெரியவில்லை.

வரும் வழியில் ஒரு சந்தடி மிகுந்த ஒரு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக தாங்கள் வந்த காரை நிறுத்திப் பூட்டிவிட்டு உணவகத்திற்குள் சென்று விட்டார்கள். நகைகளும் பணமும் வைத்திருந்த பை காருக்குள்ளேயே இருக்கிறது. பூட்டிய கார்தானே என்ற நினைப்பு.

உணவகத்தில் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது காருக்குள் இருந்த பையைக் காணவில்லை. காரின் கதவுகளை பலவந்தமாக திறந்த தற்கான அறிகுறிகளும் இல்லை. பையை மட்டும் காணவில்லை. பிறகு என்ன? வழக்கமாக நடக்கும் புலம்பல்கள், போலீஸ், இத்தியாதிகள்.

இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் வேதனைகளை அனுபவித்தவர்-களுக்குத்தான் அந்தக் கஷ்டம் புரியும். போலீஸ்காரர்களினால் என்ன செய்ய முடியும்?  இந்த மாதிரி தினம் பத்து திருட்டுகள் நடக்கின்றன. எதையென்று தேடுவது?

இதில் எனக்குப் புரியாதது என்னவென்றால் 26 லட்சம் ரூபாய் என்பது அவர்களுக்கு அவ்வளவு அலட்சியமாகத் தோன்றியதா? இல்லை அது பூட்டிய காரில்தானே இருக்கிறது, என்ன ஆகிவிடும் என்ற அசட்டுத் தைரியமா? என்னவென்று புரியவில்லை. உணவகத்திற்குள் செல்லும்போது இவ்வளவு தொகையைக் காருக்குள் விடக்கூடாது, கையில் எடுத்துக்கொண்டு போகலாம் என்று ஏன் தோன்றவில்லை? கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால்தானே அதனுடைய அருமை தெரியும்.

கோயமுத்தூர்ல ஏதோ பாட்டன் பூட்டன் சம்பாதித்து விட்டுப்போன, "ஒடக்கான் கூட மொட்டு வைக்காத பொட்டல்காடு" எல்லாம் இன்றைக்கு ஒரு ஏக்கர் பல கோடிகளுக்கு விற்பதால் வந்த மமதைதான் இது என்று எனக்குத் தோன்றுகிறது. கார், பங்களா, நகை, நட்டு, பாங்கில் கணக்கு, கணிசமான கையிருப்பு இவையெல்லாம் இந்த பணத்தினால் வந்தவையாக இருக்கும். பத்துப் பதினைந்து லட்சம் ரூபாய் போட்டுக் கார் வாங்கியிருப்பார்கள். இதை யார் எப்படித் திறக்க முடியும் என்ற அதீத நம்பிக்கை.

உங்களுக்கு என்ன தோன்றுமோ, தெரியவில்லை?

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ஆஹா, காதல் வந்திருச்சு

                             Image result for income tax logo

"ஆஹா, காதல் வந்திருச்சு"

இந்தப் பாட்டை கமலஹாசன் பாடுவாரே, அது எந்தப் படமுங்க? இருங்க யோசிக்கிறேன். வயசாயிருச்சுங்களா, சட்டுனு கியாபகம் வரமாட்டேங்கிறது.

வந்திருச்சு "ஜப்பானில் கல்யாணராமன்" அந்தப் படத்தில கமலஹாசன் "ஆஹா காதல் வந்திருச்சு" அப்படீன்னு ஒரு பாடல் பாடுவார். அந்தப் பாடலைக் கேட்டிராதவர்களுக்காக ஒரு லிங்க் -



இப்போ ஏன் அந்த நெனப்பு வந்திருச்சு பெரிசு, எளம திரும்புதாங்காட்டியும்னு ஏசாதீங்க.

மார்ச் மாதம் என்பது மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு எமகண்டம். ஏனெனில் அப்போதுதான் வருடாந்திரக் கணக்குகளைப் பார்த்து வருமானவரி கட்டவேண்டிய நேரம். ரொம்பக் கஷ்டமான சமாச்சாரம். அதுக்காகத்தான் கமலஹாசன்-ஸ்ரீதேவி காதல் பாட்டைப் போட்டேன். எதுக்கும் இன்னொரு முறை அந்தப் பாட்டைக் கேட்டுருங்க. ஏன்னா நான் இனிமேல் சொல்லப்போவது ரொம்பவும் கசப்பான சமாச்சாரங்கள்.

எவ்வளவு கசப்பாக இருந்தாலும் குடித்தே தீரவேண்டிய கஷாயம் இந்த வருமானவரி சமாச்சாரம். இதில் ஒரு விசேஷமான செய்தி என்னவென்றால் வருமான வரியைப் பற்றி நீங்கள் எவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம். நாளைக்கு வருமான வரிக்காரன் என்ன கேட்டாலும் அது எனக்குத் தெரியாதே என்று கூறி விடலாம். இதற்கு முன்னால் பல அரசியல் வாதிகள் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சட்டத்திற்குட்பட்டு  வருமான வரியைக் குறைப்பது.  இரண்டாவது வருமானவரி கட்டாமல் ஏய்ப்பது. உங்களுக்கு எந்த வழி சுலபமாகத் தோன்றுகிறதோ அந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாட்டிக்கொள்ளாத வரையில் இரண்டு வழிகளும் சரியானவைகளே. மாட்டிக்கொண்டால் உங்கள் மாமனார் பிரபல வக்கீல் ஆக இருந்தால் ஒழிய நீங்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ளவேண்டி வரும். அவ்வளவுதான்.

வங்கியில் ஒரு வருடம் இரண்டு வருடம் சேமிக்க டெபாசிட் திட்டங்கள் உண்டு. இவற்றிற்கு 8 முதல் 9 சதம் வரை வட்டி கிடைக்கும். நம்ம பணம், நம்ம வட்டி, உனக்கு எதற்கு வரி என்று கட்டபொம்மன் பாணியில் கேட்டுக்கொண்டு இந்த வட்டியைக் கணக்கில் காட்டாமல் இருந்தீர்களோ, வம்பு அழையா விருந்தாளியாக வந்துவிடும். எல்லாம் "பான்" ( PAN ) எண் உபயம். உங்களுக்குக் கொடுக்கும் வட்டிக்கணக்கையெல்லாம் வங்கிக்காரன் இந்த எண்ணில் ஏற்றிவிடுவான். வருமான வரிக்காரன் இதைப் பார்த்துத்தான் உங்களுக்கு ஆப்பு வைப்பான்.

அநேகமாக நீங்கள் கட்டவேண்டிய வரி 10000 ரூபாய்க்குள் இருந்தால் மொத்த வரியையும் மார்ச் மாதத்தில் கட்டிவிட்டால் போதும். அதற்கு அதிகமாக இருந்தால் செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டியிருக்கவேண்டும். அப்படிக் கட்டாமலிருந்தால், உங்கள் வருமானவரிக் கணக்கை வருமானவரி அதிகாரி தணிக்கைக்கு எடுத்துக் கொண்டால் அபராத வட்டி கட்டவேண்டி வரும்.

இதில் ஒரு நுணுக்கம் என்னவென்றால் நம் போன்ற மாத வருமானக்- காரர்களை வருமான வரித்துறை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நாம் கட்டும் வருமான வரி நமக்குத்தான் பெரிதாகத் தோன்றுகிறதே தவிர அவர்களுக்கு இந்தத் தொகை பிச்சைக்காசுக்கு சமம். லட்சக் கணக்கில் வரி கட்டும் பணக்காரர்கள் இருக்கும் நாடு நம்முடையது. நம் நாட்டு சினிமா நடிகர்கள் வைத்திருக்கும் வரி பாக்கிக் கணக்கைப் பார்த்தால் நம் நாட்டை ஏழை நாடு என்று எவனுக்காவது சொல்லத்தோணுமா?

உலக வங்கிக்காரன் கிட்ட கடன் கேட்கப் போகும்போது இத்தனாம் பெரிய நாட்டில் இத்தனை கோடி ஜனங்கள் இருக்கும் போது ஏன் இவ்வளவு கொஞ்சம் பேர்தான் வருமான வரி கட்டுகிறார்கள் என்று கேட்பான். அதுக்காகத்தான் நம்மை மாதிரி அன்றாடம் காய்ச்சிகளிடமும் வருமான வரி வாங்குகிறார்கள்.

நம் வருமான வரிக் கணக்கை தணிக்கை செய்வதே ஏதோ ஒரு அருவருப்பானதைத் தொடுகிற மாதிரித்தான் நினைக்கிறார்கள். ஆனாலும் உங்கள் ஜாதகப் பிரகாரம் உங்களுக்கு சனி திசை ஆரம்பிக்கிறது என்றால், உங்கள் வருமானவரிக் கணக்கு தணிக்கைக்கு எடுக்கப்பட்டு விடும். ஏனெனில் அவர்களுக்கும் வேலை செய்வதற்கு ஒரு இலக்கு வைத்திருக்கிறார்கள். பிச்சைக்கார வருமான வரிக் கணக்குகளில் இத்தனை கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும் என்ற இலக்கு வைத்திருக்கிறார்கள்.

சாதரணமாக ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு வருமான வரி நிபுணர் இருப்பார். அவரை ஒழுங்காகக் கவனிக்க வேண்டிய முறையில் கவனித்தால் அவர் உங்கள் வருமான வரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விடுவார். இல்லையென்றால் நீங்கள் உங்கள் தலை விதியை நம்பி, சீட்டுக் குலுக்கிப் போட்டு எது உங்களுக்கு சௌகரியமோ அந்த மாதிரி செய்து கொள்ளலாம். விதி வலிது. விதியை யாரால் மாற்ற முடியும்?

ஒரு கொசுறு தகவல் - மும்பையில் வருமான வரி கட்டும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள் என்று கேள்வி.  நம்மைப் போன்ற பிச்சைக்காரர்கள் இல்லை. நிஜப் பிச்சைக்காரர்கள்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எது சுகம் ?

                                         
                                           Image result for வெங்காய பஜ்ஜி

திருவள்ளுவர் அன்றே சொல்லி விட்டுப் போனார்.

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்டொடி கண்ணே உள

இந்தக் குறளின் பதவுரை, பொழிப்புரை எல்லாம் நமக்கு இப்போது தேவையில்லை. இதன் கருத்துரை என்னவென்றால் மனிதனுக்குள்ள ஐந்து புலன்களும் ஒரே சமயத்தில் தங்களுக்குண்டான இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதான். அதுதான் சுகம் என்கிறார் வள்ளுவர்.

இன்று காலை, மன்னிக்கவும் அதிகாலை, காலை 2 மணியை எப்படிச் சொல்வது? ஏதோ ஒன்று. 2 மணிக்கு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது (எப்பத்தான் தூக்கம் வருது? எப்பவும்தான் முளிச்சிட்டு இருக்கறீங்க- இது என்னுடைய ஆசைப் பொண்டாட்டி) இந்தக் குறள் நினைவிற்கு வந்தது.

எனது கற்பனைக் குதிரையைத் தட்டியெழுப்பி, எது சுகம் என்று ஒரு குட்டி ஆராய்ச்சி செய்தேன். அந்த ஆராய்ச்சியின் முடிவுகள்தான் இந்தப் பதிவு.

 கண்ணுக்கு சுகம் பல இருந்தாலும் நான் அனுபவிப்பது நல்ல புத்தகங்கள் படிப்பது. இது கண்ணுக்கும் மனதிற்கும் ஒரு சேர இன்பம் பயப்பது ஆகும். ஆனால் ஒரு நிபந்தனை. படுக்கையில் தலைக்கு ஒரு மூன்று தலையணை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக் கொண்டு படிக்கவேண்டும்.

படுக்கையில் மூன்று தலையணை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்துக்கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. அந்த அனந்த சயன பாவத்தில் இந்தப் புத்தகத்தை கண்ணுக்கு வாகாக கையில் வைத்துக்கொண்டு படிப்பதில்தான் கஷ்டமே இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் கை வலிக்க ஆரம்பிக்கிறது.

இதற்கு ஏதாவது புத்தக-தாங்கியை யாராவது கண்டு பிடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது கண்டுபிடித்திருந்தால் அது எங்கு கிடைக்கும் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும். அதை வாங்கி இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு செய்யலாம்.

அடுத்ததாக செவிக்கு இன்பம். நல்ல இசையைக் கேட்பது இன்பம் என்று அனைவரும் ஒத்துக்கொள்வீர்கள். இந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க இந்த உடல் அனுமதிப்பதில்லை. மூன்று நிமிடம் இசையைக் கேட்டவுடன் தூக்கம் வந்து விடுகின்றது.

இதற்கும் யாராவது ஒரு கருவி கண்டு பிடித்தால் நல்லது. அதாவது அந்தக் கருவி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு தரம் நம்மைத் தட்டி எழுப்பிக்கொண்டு இருக்கவேண்டும். எங்கு கிடைக்கும் என்று இணையத்தில் விசாரிக்க வேண்டும்.

அடுத்து நாசிக்கு இன்பம். இது இக்காலத்தில் மிகவும் சுலபமாகக் கிடைக்கிறது. உங்களுக்கு எந்த வாசனை பிடிக்குமோ அந்த வாசனை கொண்ட பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. திரவ கொசு பத்தி மாதிரி பல சாதனங்கள் கிடைக்கின்றன. இதில் ஒரு கஷ்டமும் இல்லை.

அடுத்து மெய்யின்பம். அதாவது உடலுக்கு இதமாக இருப்பது. உண்மையைச் சொன்னால் தாய்க்குலம் பொங்கியெழும். ஆகவே அது வேண்டாம். ஒரு நல்ல மின் விசிறியை மாட்டி விட்டால் அதன் காற்று மெதுவாக உடலை வருடிக்கொடுக்கும். இதுவும் சிரமமில்லாத வேலைதான்.

கடைசியாக, மிக முக்கியமானது நாவிற்கு இன்பம் கொடுப்பது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தின்பண்டம் இன்பத்தைத் தரும். எனக்கு மிகவும் பிடித்தது வெங்காய பஜ்ஜியும் அதற்குத் தொட்டுக் கொள்ள நல்ல தேங்காய்ச் சட்டினியும். அனுதினமும் மூன்று வேளையும் கொடுத்தாலும் சாப்பிடுவேன்.

வெங்காய பஜ்ஜி சாப்பிடுவது ஒரு தனிக்கலை. வெங்காய பஜ்ஜி சூடாக சாப்பிட்டால்தான் சுகம். வெங்காய பஜ்ஜியைக் கையால் பிய்த்தால் வெங்காயம் தனியாகவும் வெந்த கடலை மாவு  தனியாகவும் வந்து விடும் அதைச் சாப்பிட்டால் வெங்காய பஜ்ஜி சாப்பிட்ட திருப்தி கிடைக்காது.

சூடாக இருக்கும் வெங்காய பஜ்ஜியை அப்படியே வாயில் போட்டுக் கொண்டால் வாலை விட்டு ஆப்பை எடுத்த குரங்கின் கதைதான். சூடாக இருக்கும் பஜ்ஜியை மெல்லவும் முடியாது. வாயில் வைத்திருக்கவும் முடியாது. துப்பவும் முடியாது.

இது தவிர தேங்காய்ச் சட்னி முழு பஜ்ஜியில் சரியாக ஒட்டவும் ஒட்டாது. இதற்காக நான் என் ஆராய்ச்சி மூளையைப் பயன்படுத்தி ஒரு செயல்முறை கண்டுபிடித்திருக்கிறேன். சும்மா வேலையில்லாமலா "பிஎச்டி" படித்தேன்.

பஜ்ஜி சுட ஆரம்பித்தவுடனே ஒரு நல்ல கத்தி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். வாணலியிலிருந்து பஜ்ஜியை எடுத்து தட்டில் போட்டவுடன் அவைகளை நடுவில் கத்தியால் வெட்டி இரு துண்டங்களாகப் பண்ணவும். இந்தத் துண்டங்கள் அரை வட்ட வடிவில் இருக்கும். வெங்காயம் தனியாகப் போய்விடாதபடி வெட்டவேண்டும். இதற்கு கத்தியை முதலிலேயே நன்றாகத் தீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

இப்படி வெட்டப்பட்ட அரை வட்ட வடிவில் இருக்கும் வெங்காய பஜ்ஜியை எடுத்து அந்த வெட்டுப்பட்ட பகுதியை சிறிது பெரிது பண்ணி அதற்குள் தேங்காய்ச் சட்னியை ஒரு தேக்கரண்டியில் எடுத்து அளவாகப் போடவேண்டும், அப்படியே பஜ்ஜியை வாயில் போடவேண்டியதுதான். இதுதான் சுகம். இதையே, அதாவது பஜ்ஜியை வெட்டி சட்னி உள்ளே வைத்துத் தரும் வேலையை வேறு யாராவது செய்து கொடுத்து நீங்கள் சாப்பிட்டால், அதுதான் சுகமோ சுகம்.

இப்படியாக நீங்கள் படுக்கையில் மூன்று தலையணை வைத்துப் படுத்துக்கொண்டு, ஒரு புத்தகத்தாங்கியில் புத்தகத்தை படிப்பதற்கு வாகாக வைத்துக்கொண்டு, மின் விசிறியை ஓடவிட்டு, சங்கீதம் ஒலித்துக் கொண்டு, நல்ல வாசனைத் திரவியம் வாசனை அளிக்க, வெங்காய பஜ்ஜி சாப்பிடும் சுகம் இருக்கிறதே அதுதாங்க திருவள்ளுவர் சொன்ன ஐம்புலன்களும் நுகரும் இன்பமுங்க.

வாழ் நாளில் இந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் பெரிய துர்ப்பாக்கியசாலிகளே. 

சனி, 21 பிப்ரவரி, 2015

மனவலிமை

                                  Image result for mind

உடல் வலிமை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அந்த அளவிற்கு மன வலிமை பற்றி பெரும்பாலானோர் சிந்தித்திருக்க மாட்டார்கள்.

மனவலிமை இயற்கையாக ஒருவனுக்கு வருவதில்லை. அவன் பிறந்த, வளர்ந்த சூழ்நிலைகளே அவனுக்கு மனவலிமையைக் கொடுக்கிறது. அவன் வளர்ந்த பிறகு தகுந்த பயிற்சிகளின் மூலம் மனவலிமையை அதிகரித்துக் கொள்ளலாம்.

மன வலிமை என்றால் என்ன? பாய்ந்து வரும் சிங்கத்தின் முன் நிற்பது மனவலிமையாகாது. அது முட்டாள்தனம். வாழ்வில் ஒரு மனிதன் சிக்கல்களைச் சந்திக்கும்போது அந்தச் சிக்கல்களினால் மனதைக் கலங்க விடாமல் வைத்துக்கொண்டு, அந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பவனே மனவலிமை கொண்டவனாகும்.

இப்படி செய்யப்படும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் மனது கலங்காமல் வாழ்க்கையை தொடர்பவனே மனவலிமை கொண்டவனாவான். இந்த நிலைக்கு ஒருவன் தன்னைத் தயார் செய்தி கொள்வதே வாழ்க்கையில் அனுபவம் பெற்றதற்கு அடையாளம்.


வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பதிவுகளில் பக்கங்களை அமைப்பது


                                 Image result for a typical printed page

நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது கடிதங்கள் எழுதுவது பற்றி சில சட்டங்கள் இருந்தன. ஒரு காகிதத்தை எடுத்தால் அதில் உள்ள எல்லா வெற்றிடத்திலும் காலி விடாமல் எழுதக் கூடாது என்பது முதல் பாடம்.

மேலும் கீழும் போதுமான இடம் விடவேண்டும். இடது பக்கம் இரண்டு விரற்கடை அளவு "மார்ஜின்" (Margin) விடவேண்டும். வலது பக்கத்திலும் குறைந்தது ஒரு விரற்கடை அளவாவது இடம் விடவேண்டும். இவையெல்லாம் அந்த கடிதத்தை சிரமமில்லாமல் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

பள்ளிக்குழந்தைகளுக்கு இந்த தத்துவத்தை மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவேதான் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் மார்ஜின் கோடுகள் போடப்படுகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் தட்டச்சு செய்தாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும் ஒரு அச்சிட்ட பக்கத்தில் மேல், கீழ், இடது, வலது ஆகிய நான்கு பக்கங்களிலும் போதுமான இடம் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

புத்தகங்கள் அச்சிடும்போதும் இதே விதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. நான் முதுகலைப் படிப்பு படிக்கும்போது எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இந்த விதி கடுமையாக கவனிக்கப்படும். இந்த விதிகளுக்குப் புறம்பாக இருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

அதே போல் வரிகளுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இவையெல்லாம் படிப்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிகள். ஒரு வரி இவ்வளவு அகலம்தான் இருக்கலாம் என்றும் கணக்குண்டு. ஏனெனில் ஒரு வரியைப் படித்த பின் அடுத்த வரிக்கு வரும்போது வரிகளைத் தெளிவாக அறியும்படி இருக்கவேண்டும்.

பதிவுலகில் எழுதும் பதிவர்கள் தாங்கள் மட்டுமே படிப்பதற்காக எழுதுவதில்லை என்று நம்புகிறேன். அப்படி இல்லாமல் மற்றவர்களும் படிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்களாயின் இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கடைப்பிடித்தால் படிப்பவர்கள் சிரமமில்லாமல் படிப்பார்கள்.

இந்தப்படத்தைப் பார்க்கவும்.



இப்படிக் கொச கொசவென்று எழுதினால் படிப்பதற்குள் கண் வலி வந்து விடும்.

இன்னொரு தளம் பாருங்கள்.




ஒரு வரியைப் படித்து விட்டு அடுத்த வரி வருவதற்குள் வரி மாறி விடுகிறது. கொஞ்சம் அகலத்தைக் குறைத்தால் என்ன? கூகுள்காரன் இலவசமாக இடம் கொடுக்கிறான் அதில் கொஞ்சம் தாராளம் காட்டினால் என்ன?

தளம் முழுவதும் இடமிருந்து வலமாக முழு கணினி திரையையும் நிரப்பவேண்டுமா, என்ன?

நான் ஒரு பழமைவாதி. என்னால் இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

புதன், 18 பிப்ரவரி, 2015

ஒரு அசாதாரண நிகழ்ச்சி

இங்கே கொடுத்திருக்கும் ஒரு விடியோ தொடர்பை சொடுக்கிப் பார்க்கவும். இது ஒரு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். எனக்கு தற்காலத்திய சினிமாக்கள் அதிகம் பரிச்சயம் இல்லாத தினால் இது எந்தப் படத்தில் வந்தது என்று சொல்லத் தெரியவில்லை.

       

இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அந்த ஊரில் இந்த படப்பிடிப்பை ஒரு பெரிய விஷயமாகக் கருதி எந்த விதமான கூட்டமும் சேரவில்லை என்பதுதான். நம் ஊரில் இப்படி ஒரு படப்பிடிப்பு நடத்த முடியுமா?

நேற்று நான் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தேன். விழா ஒரு பிரபல ஓட்டலில் நடை பெற்றது. பிறந்த நாள் கேக் வெட்டியபிறகு விருந்து நடைபெற்றது. விருந்து தாங்களே எடுத்துக்கொள்ளும் ரகம். இம்மாதிரி விருந்துகளில் உணவை எடுத்துக்கொண்ட பிறகு அந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளிப்போய் நின்று சாப்பிடவேண்டும். அப்போதுதான் அடுத்து வருபவர்கள் உணவை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த அடிப்படைத் தத்துவத்தைக் கூட நம் ஆட்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. உணவு மேஜைகளைச் சுற்றியே பெருங்கூட்டமாக நின்று கொண்டு அடுத்து வருபவர்களுக்கு பெரும் இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எப்போது பண்பைக் கற்றுக்கொள்வார்கள்?

                                          Image result for buffet dinner party

திங்கள், 16 பிப்ரவரி, 2015

எங்க ஊர் பைரவ சேனை

                                           
                                       Image result for street dogs

எங்கள் ஊரில் பைரவர் சேனை மிகவும் கட்டுப்பாடாக செயல்பட்டு வருகிறது. (வாழ்க மனேகா காந்தி - அவர்கள்தானே பைரவர்களைக் காப்பாற்ற உச்ச நீதி மன்றத்தில் ஆணை வாங்கினார்கள்).

நான் தினமும் நடைப் பயிற்சிக்காக செல்லும்போது இவர்கள் தங்களுடைய பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணி என்னவென்றால் தங்கள் தங்கள் பிரதேசத்தை பிறருடைய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பது.  இவர்களுடைய கட்டுக்கோப்பு அமைப்பு மிகவும் பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது.

இந்த சேனை பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பகுதியை எல்லையாக அமைத்திருக்கிறார்கள். பொதுவாக இது ஒரு வீதியாகும். ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள். ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில் பொதுப் பகுதி ஒன்று இருக்கும். அதில் எந்தக் குழுவும் உரிமை கொண்டாடக்கூடாது.

ஒரு குழுவிலிருந்து ஒருவர் அடுத்த குழுவின் எல்லையில் பிரவேசித்து விட்டால் போர் மூண்டு விடும். ஆஹா போர் என்றால் இதுதான் போர். இந்தப் போர் நடக்கும்போது அனல் பறக்கும். அதைத் தூரத்திலிருந்தே பார்த்து கவனித்து நீங்கள் இந்தப் பகுதியை விட்டு அடுத்த பகுதியில் உங்கள் நடைப் பயிற்சியைத் தொடர வேண்டும்.

இல்லையென்றால் நீங்கள் அடுத்த பத்து நிமிடத்தில் உங்கள் ஊரின் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள். இந்தப் போரில் ஒரு விசேடம் என்னவென்றால் பைரவர்களில் ஒருவருக்கும் எந்த விதமான ஊறும் விளையாது. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டுதான் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும்.

இப்படி ஒரு அரை மணி நேரம் நடந்த பிறகு ஏதாவது ஒரு குழுவிற்கு சோர்வு வந்து  விடும். அதன்பிறகு நடப்பதுதான் போரின் உச்சகட்டம். ஒரு குழு சோர்வடைந்து விட்டது என்பதை அடுத்த குழு எப்படியோ உணர்ந்து கொள்ளும். பிறகு அந்தக் குழு எதிர்க்குழுவைத் தாக்குவது போல் ஓடும். எதிர்க்குழு உறுப்பினர்கள் தங்கள் தங்கள் வாலைக் கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு புறமுதுகிட்டு ஓடுவார்கள்.

பைரவர் வாலைத் தன் பின்னங்கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டார் என்றால் அது பயமும் தோல்வியும் அடைந்ததற்கு அடையாளம்.  தோல்வியுற்று பின்வாங்கும் கொழுவை தங்கள் எல்லையிலிருந்து வெகு தூரம் விரட்டி விட்டு அங்கே நின்று கொசுறுக்கு கொஞ்ச நேரம் வசை பாடிவிட்டு தங்கள் எல்லைக்குத் திரும்புவார்கள்.

இந்த நுணுக்கங்களை எல்லாம் அறிந்து இருந்தால் ஒழிய நீங்கள் தடைப் பயிற்சிக்குச் செல்லக்கூடாது. இந்தப் பயத்தானால் ஒவ்வொருவர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பைரவர்களைத் தங்கள் கூட நடைப் பயிற்சிக்கு அழைத்து வருவார்கள். இந்தச் செல்லப் பைரவர்களை காவல் பைரவர் குழு நடத்துவதே ஒரு பெரிய நாடகம் போல் இருக்கும்.

தூரமாக நின்று கொண்டு இந்தக் குழு அந்த வீட்டுப் பைரவருக்கு சவால் விடும். இதைக் கண்ட வீட்டுப் பைரவர் ஆக்ரோஷத்துடன் அந்தக் குழுவின் மேல் பாயத்துடிக்கும். இதைத் தடுக்க அந்த வீட்டுப் பைரவரின் வளர்ப்பாளர் படும் பாடு இருக்கிறதே, அது ஒரு காணக்கிடைக்காத காட்சி.

தப்பித்தவறி அவர் தன்னுடைய பிடியை விட்டு விட்டால் அப்புறம் நடப்பது ஒரு அரிய போராகும். இதில் பெரும்பாலும் வீட்டுப் பைரவர் தோற்றுப்போவார். அப்புறம் அவரை மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் பார்ப்பார்கள்.

நான் இந்த நுணுங்கங்களை நன்கு அறிந்திருப்பதால் இது வரை மருத்துவ மனைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். நடைப் பயிற்சி மேற்கொள்ளும் பதிவுலக நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: பைரவர் என்றால் யார் என்று நண்பர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களை "நாய்" என்று யாராவது சொன்னால் அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

சனி, 14 பிப்ரவரி, 2015

அதிசயம் ஆனால் உண்மை

                                                        Tamil Blogs Traffic Ranking

பதிவுகள் இல்லாமலேயே நீங்கள் தமிழ்மணம் தரவரிசை எண் ஒன்றைப் பிடிக்கவேண்டுமா? இதோ பாருங்கள் அந்தத் தளத்தை.


வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

பூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு !

                       

வைகோபாலகிருஷ்ணனின் சிறுகதைகளை சில நாட்களாக மறந்து விட்டேன். அவருடைய சிறுகதைப் போட்டியின் 16 வது கதை இது. இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையைப் படிக்கு முன் என் விமர்சனத்தைப் படித்து விட்டுச் செல்லவும்.  ஒரு வேண்டுகோள். கதையைப் படிக்குமுன் உங்கள் மனதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும்.

விமர்சனம்

VGK 16 - ஜா தி ப் பூ 

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html

ஒரு சிறு சம்பவம் எப்படி ஒரு சிறுகதை ஆகிறது என்பதை இக்கதையில் காண்கிறோம். பாட்டியும் பேத்தியும் வியாபாரத்தில் போட்டி போடப் போக அது எவ்வாறு திருமணத்தில் முடிகிறது என்பதுதான் கதை.


கோதுமை அல்வா சாப்பிட்டால் அது எப்படி தொண்டையில் வழுக்கிக்கொண்டு ஓடுமோ அந்த மாதிரி கதை எவ்வித பிசிறும் இல்லாமல் பயணிக்கிறது. இம்மாதிரி கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் மனத்திருப்தி பெரிய திருப்பங்களுடன் எழுதப்படும் கதைகளைப் படிக்கும்போது ஏற்படுவதில்லை.

கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

 பழனி.கந்தசாமி

புதன், 11 பிப்ரவரி, 2015

மாமியாரும் மருமகளும்

                                         

ஒரு ஊர்ல ஒரு வீட்டில ஒரு மாமியாரும் மருமகளும் இருந்தார்கள். அப்பனையும் மகனையும் விட்டு விடுவோம். அவர்கள் சும்மா ஒப்புக்குச் சப்பாணிதானே.

அந்த வீட்ல மாமியார் வச்சதுதான் சட்டம். எதுவானாலும் அந்தம்மாவைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும்.

அந்த வீதியில் தினமும் ஒரு பிச்சைக்காரன் பிச்சையெடுக்க வருவான். இந்த வீட்டு வாசலிலும் நின்று "அம்மா பிச்சை" என்று கூவுவான். தினமும் அந்த மாமியாரும் "பிச்சை இல்லை போ" என்று சொல்லி விடுவாள். பிச்சைக்காரன் போய்விடுவான்.

ஒரு நாள் இந்த மாமியார் கோவிலுக்குப் போய்விட்டாள். அப்போது பார்த்து இந்தப் பிச்சைக்காரன் வந்து வழக்கம்போல் "அம்மா பிச்சை" என்று சத்தம் கொடுத்தான். மருமகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்தாள். தினமும் மாமியார் அவனுக்கு பிச்சை இல்லை என்றுதானே சொல்கிறாள், நாமும் அதையே சொல்லிவிடுவோம் என்று நினைத்து "பிச்சை இல்லை போ" என்று சொல்லிவிட்டாள். பிச்சைக்காரனும் அடுத்த வீட்டுக்குப் பிச்சை கேட்கப் போய்விட்டான்.

இந்தச் சமயம் பார்த்து மாமியார் கோவிலிலிருந்து திரும்பி வந்து விட்டாள். அவளுக்கு  மருமகள் ஏதாவது பிச்சை போட்டு விட்டாளோ என்று சந்தேகம்.
நாலு வீடு தள்ளிப்போயிருந்த பிச்சைக்காரனை கை தட்டி கூப்பிட்டாள். பிச்சைக்காரன் ஓஹோ இன்னைக்கு இந்த அம்மா ஏதோ பிச்சை போடப்போகிறது போலிருக்கிறது என்று ஆவலுடன் வந்தான்.

அவனிடம் என் மருமகள் ஏதாவது பிச்சை போட்டாளா என்று கேட்டாள். அதற்கு அவன் அந்த அம்மாவும் பிச்சை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்றான். அதற்கு அந்த மாமியார் மருகளுக்கு அவ்வளவு பவிசு ஆகி விட்டதா. இந்த வீட்டில் யார் பண்ணாட்டு நடக்கிறதென்று உனக்குத் தெரியாதா, அவள் என்ன உனக்குப் பிச்சை இல்லையென்று சொல்வதற்கு? இனிமேல் நீ என்னிடம்தான் பிச்சை கேட்கவேண்டும், நான்தான் பதில் சொல்வேன், அவள் என்ன பதில் சொல்வது, இப்போது சொல்கிறேன் கேள், பிச்சை இல்லை, நீ போகலாம் என்றாள்.

பிச்சைக்காரன் மனது மிகவும் நொந்து போய் அடுத்த வீட்டிற்குப் போனான்.

இந்தக் கதையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். திடீரென்று இந்தக் கிழவன் இந்தக் கதையை எதற்குச் சொல்கிறான் என்று விழிக்கவேண்டாம். காரணம் சொல்கிறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்பு அல்லது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நமது கருணை மிகுந்த அரசு இயந்திர வாகனங்களின் அடையாள எண் பட்டையில் சில மாறுதல்களைச் செய்ய முடிவு செய்தது. அதாவது வாகனங்களைப் பலர் வாகன எண்களை மாற்றி வைத்துவிட்டு அந்த வாகனங்களைப் பல கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்திவிட்டு திரும்பவும் வாகன எண்ணை பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஆகவே குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே நாங்கள் அதாவது அரசு ஒரு புது விதமான எண் பட்டை கொண்டு வரப்போகிறோம். எல்லோரும் அந்தப் பட்டையைத்தான் பயன்படுத்த வேண்டும். அதில் அந்த வாகனத்தின் முழு ஜாதகமும் ஒரு சிறிய வில்லையில் பதிவு செய்திருப்போம். ஒரு கருவியின் மூலமாக அந்த வாகனத்தின் முழு விவரங்களையும் போக்குவரத்துத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நொடியில் கண்டு பிடிக்கலாம். இதனால் வாகனங்களை குற்றங்களுக்காகப் பயன்படுத்துவது அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும் என்றார்கள்

இந்த எண் பட்டையின் மாதிரிகள் எல்லாம் பிரசுரமாகின. என் போன்ற மடையன்களும்  ஆஹா, அரசு மக்களின் பாதுகாப்பிற்காக என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளுகிறது, அரசென்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் என்று நம்பிக்கொண்டு இருந்தோம்.

வருடங்கள் ஓடினவே தவிர இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவது தாமதாகிக்கொண்டே போனது. நம் இந்திய மக்கள் என்ன சாமானியமானவர்களா என்ன? பார்த்தார்கள். ஆஹா, சீக்கிரம் காசு பார்க்க நல்ல வழி என்று அரசு வெளியிட்ட மாதிரிப் பட்டைகளைப் போலவே தாங்களாகவே செய்து வாகன உரிமையாளர்களின் தலையில் மிளகாய் அரைத்தார்கள்.

இது ஏறக்குறைய ஓரிரு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. திடீரென்று அரசிற்கு ஞானோதயம் உதித்தது. மாமியாரான நாம் அல்லவா இந்த எண் பட்டைகளைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக ஒப்பந்தங்கள் சிலபல பேருக்கு கொடுக்கலாம் என்றிருந்தோமே, இப்படி மருமகள்கள் நம்மை மீறி எப்படி இந்த எண் பட்டைகளைத் தயார் செய்யலாம்? கூப்பிடு காவல் துறையை, இப்படி எண் பட்டை அணிந்திருக்கும் வாகனங்களை எல்லாம் பிடியுங்கள், அபராதம் போடுங்கள், வருமானத்தைப் பெருக்குங்கள் (யாருடைய வருமானம் என்பது வேறு விஷயம்) என்று அதிரடியாக ஆணைகள் பிறப்பித்தார்கள்.

பட்டைகளை வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனமே தயார் செய்து அவர்கள் விற்கும் வாகனங்களுக்கு மாட்டி நல்ல காசு பார்த்தார்கள். அவர்களைக் காவல்துறை கண்டு கொள்ளவில்லை. விவரம் தெரியாமல் வாகனம் வாங்கியவர்கள்தான் மாட்டினார்கள். குறைந்தது 100 ரூபாய் அபராதம்.

அதற்குள் சில மகானுபாவர்கள் நீதி மன்றத்தில் முறையிட்டார்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் காவல் துறையை இத்தனை நாளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் என்ற செய்தி தினப் பத்திரிக்கைகளில் வெளி வந்தது.

நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்று நான் இன்று போய் என் புது மகிழ்வுந்தின் எண் பட்டையை மாற்றி என் மகிழ்வு மாறாமலிருக்க வழி செய்தேன்.

ஆகவே இந்த நவீன கணினி யுகத்திலும் மாமியாரின் நாட்டாண்மைதான் செல்லுபடியாகும் என்பது நிரூபணமாகிறது. 

திங்கள், 9 பிப்ரவரி, 2015

பழனியில் பழனி.கந்தசாமி செய்த மடத்தனம்

                               

நான் ஒரு தானியங்கி பல்சக்கர மாற்றி (அதாங்க Auto Gear Change - நான் இனி பதிவில் முடிந்தவரை தமிழில் எழுதலாம் என்று சபதம் மேற்கொண்டுள்ளேன்.) கொண்ட சொகுசு உந்து (car) வாங்கிய விபரம் ஏற்கெனவே நண்பர்களுக்குத் தெரியும். அந்த சொகுசு உந்தில் பழனிக்குப் போய்வரலாம் என்று என் மனைவி வேண்டுகோள் விடுத்தாள்.

நான் அந்த வேண்டுகோளை பல காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டேன். முதல் காரணம் -அந்த சொகுசு உந்து வாங்கி ஒரு மாதத்தில் ஒரு இலவச பராமரிப்பு செய்யவேண்டும். அந்த காலக் கெடுவிற்குள் கொஞ்சமாவது அந்த சொகுசு உந்தை ஓட்டியிருந்தால்தானே அதில் ஏதாவது சில்லறைக் கோளாறுகள் இருப்பது தெரியும். அப்போதுதானே அதை முதல் பராமரிப்பில் இலவசமாக சரி செய்து கொள்ளலாம். பழனி போய் வருவது இதற்குத் தோதாக அமையும் என்று நினைத்தேன். (இந்த யோசனைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக என் மூளையில் உதிக்கும். இதற்கெல்லாம் விடுதி அறை -  Hotel Room போட்டு யோசிக்கவேண்டியதில்லை)

இரண்டாவது காரணம் எங்கள் சொந்த ஊரில் இருந்து எங்கள் உறவினர்கள் தைப்பூசத்திற்காக பழனிக்கு காவடி எடுப்பது வழக்கம். இதற்காக ஒரு அமைப்பைத் தோற்றுவித்து கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நானும் சேர்ந்திருக்கிறேன். அந்த அமைப்பின் சார்பில் இரண்டு நாள் பழனியில் பூசை நடக்கும். ஒரு கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து ஆட்கள் வைத்து சமையல் செய்து தடபுடலாக சிற்றுண்டி, பேருண்டி முதலானவை தரப்படும்.

அவ்வப்போது நாங்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வோம். அந்த வழக்கப்படி இந்த வருடம் கலந்து கொள்ளலாமே என்றபடியால் பழனி போகும் என் மனையாளின் வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

மூன்றாவது காரணம் இந்த புது சொகுசு உந்தின் குணநலன்களை நன்கு புரிந்து கொண்டால்தானே அதனுடன் வாழ்க்கை நடத்த முடியும். இவ்வாறாக பல காரணங்களை உத்தேசித்து பழனி போவதென்று முடிவு செய்தேன்.

இரண்டு நாள் தங்குவதற்கான மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டிக்கொண்டு ஒரு நல்ல நேரம் பார்த்து பழனிக்குக் கிளம்பினோம். வழியில் ஏதும் பிரச்சினை இல்லாமல் பழனி போய்ச் சேர்ந்து ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். பழனியில் தைப்பூசத்திற்காக ஏறக்குறைய தமிழ் நாட்டின் பாதி மக்கள் - ஸ்ரீரங்கம் தொகுதி நீங்கலாக - வந்திருந்தார்கள். வீதியில் மக்கள் மேல் மோதாமல் நடக்கமுடியாது.

இதைப் பார்த்த நாங்கள் இரண்டு நாள் தங்கும் யோசனையைக் கைவிட்டோம். மறுநாள் காலையில் முருகனைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தோம். அதன்படியே மறுநாள் காலையில் சென்று கயிற்றுந்தில் - Rope Car - மேலே சென்று 200 ரூபாய் சீட்டு வாங்கி சிறப்பு வழியில் சென்றோம். நாங்கள் முன்கூட்டியே முருகனிடம் சந்திக்கும் நேரம் பற்றி முன்பதிவு செய்யாததினால் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாய்ப் போயிற்று.

நேரில் பார்த்தபோது என்னப்பா இப்படிப் பண்ணி விட்டாய் என்று கேட்டதற்கு ஆமாம் இன்று எத்தனை ஆயிரம் பேர் என்னைப் பார்க்க வரப்போகிறார்கள் தெரியுமா, அதற்குத் தகுந்தாற்போல் நான் அலங்காரம் செய்து கொள்ளவேண்டாமா என்றான். இது நியாயமாகப் பட்டதால் நான் அவனைக் கோபித்துக்கொள்ள முடியவில்லை.

பேட்டியை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தோம். பிறகு கல்யாண மண்டபத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டோம். அப்போது அங்கு வந்திருந்த என் பெரியம்மா பையன் தானும் எங்களுடன் கோவை வருகிறேன் என்றான். சொகுசு உந்தில்தான் இடம் இருக்கிறதே என்று நான் சரி என்று ஒத்துக்கொண்டேன். அவன் பின்னால் திருவாளர் சனி பகவான் ஒளிந்து கொண்டு இருந்ததை நான் கவனிக்கவில்லை.

அவன் தன்னுடைய உடமைகளைக் கையோடு எடுத்து வந்திருந்தான். நான், என் மனைவி, அவன் ஆகிய மூவரும் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். என் சொகுசு உந்தின் சாவி என் கையில் இருந்தது. சொகுசு உந்தின் பின்புறம் சாமான்கள் வைக்கும் பகுதியைத் திறந்தேன். அந்த இடத்திற்கு மேல் ஒரு தட்டு இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். என் பெரியம்மா பையனின் பையை இரண்டு கைகளாலும் வாங்கவேண்டி இருந்ததால் சாவியை அந்தத் தட்டில் வைத்து விட்டு பையை வாங்கி உள்ளே வைத்தேன்.

சாமான் வைக்கும் பகுதிக் கதவைச் சாத்தினேன். அது பூட்டிக்கொண்டு விட்டது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த திரு. சனி பகவான் சிரிக்கும் சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்ததில் சாவியை நான் எடுக்காமல் கதவைச் சாத்திப் பூட்டி விட்ட மடத்தனம் மூளையில் பட்டது.

ஆகா, முருகன் நம்மைச் சோதிக்கிறான் என்று புரிந்தது. அங்கு சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். சொகுசு உந்தின் கதவில் இருக்கும் ரப்பர் பட்டையை எடுத்துவிட்டு ஒரு அடிக்கோலால் உள்ளே தள்ளினால் கதவு திறந்து விடும் என்றார்கள். அப்படி செய்து பார்த்ததில் அடிக்கோல் உடைந்ததே தவிர பலன் ஒன்றுமில்லை.

வாழ்க்கையில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால் எந்த சோதனைக்கும் முருகன் ஒரு தீர்வை வைத்திருப்பான் என்று நம்பினேன். அப்படியே முருகன் ஒரு வழி காட்டினான். விறுவிறுவென்று விடுதியை வெளியில் வந்தேன். வரிசையாக முச்சக்கர வாடகை உந்துகள் நின்றிருந்தன. அதில் ஒன்றின் ஓட்டுனரைக் கூப்பிட்டு என் பிரச்சினையை ச் சுருக்கமாகச் சொல்லி, இதைத் தீர்ப்பதற்கு ஒரு நல்ல ஆள் வேண்டுமே என்றேன்.

உந்தில் ஏறுங்கள் என்று சொல்லி அங்குமிங்கும் அலைந்து ஒரு ஆளைப் பிடித்தோம். அந்த ஆள் எங்கள் பின்னாலேயே வந்தார். என் சொகுசு உந்தைப் பார்த்தார். ஐயா, நீங்கள்தான் இந்த வண்டியின் சொந்தக்காரரா என்று கேட்டார். ஆமாம் தம்பி, இப்பத்தான் சுளையாக நாலேமுக்கால் லட்சம் போட்டு வாங்கினேன் என்று சொன்னேன். சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அப்படியா என்று கேட்டு விட்டு கதவு சந்தில் நான் கொண்டு வந்திருந்த இரும்பு அடிக்கோலை விட்டு ஏதோ செய்தார். மந்திரம் போட்டது போல் கதவு திறந்து கொண்டது. இரண்டே நிமிடம்தான் ஆயிற்று. ஆடற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. சரி, தம்பி, எவ்வளவு வேண்டும் என்றேன். அவர் தன்னுடைய முதலாளிக்குப் போன் போட்டுப் பேசினார் பிறகு 200 ரூபாய் கேட்டார்.

அப்போதுதான் நான் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட விசயம் உறைத்தது. இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் அவர் கேட்ட ரூபாயைக் கொடுத்தேன். முச்சக்கர உந்தின் ஓட்டுனரிடம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டேன். அவர் சளைத்தவரா என்ன? 100 ரூபாய் வேண்டும் என்றார். பேசாமல் அதையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் திரு. சனி பகவான் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான். மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். மறுநாள் இலவச பராமரிப்புக்காக பணிமனையில் விட்டேன். அங்கு வழக்கமான என் வண்டியைப் பராமரிக்கும் பணியாளர் பிரிந்து கிடக்கும் ரப்பர் பட்டைகளைப் பார்த்து விட்டு என்ன நடந்தது என்று கேட்டார்.

நான் நடந்தவைகளைச் சொன்னேன். சரீங்க, இனி மேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ( என் வயது காரணமாக என்ன மடத்தனம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை) என்று சொல்லி விட்டு எல்லா பராமரிப்பு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார். ரப்பர் பட்டைகளை மாற்ற ஆயிரம் ரூபாய் ஆயிற்று. எல்லாம் முருகனின் அருள் என்று எடுத்துக்கொண்டேன்.

இதிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் என்னவென்றால், மடத்தனம் செய்வதில் தவறில்லை, ஆனால் ஒரு மடத்தனம் செய்தவுடன் அதை உணர்ந்து உடனே சரியான ஆளிடம் சென்று விடவேண்டும் என்பதுதான்.
சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் திறமை வெளிப்படும். அந்த வகையில் நான் கெட்டிக்காரன்.