புதன், 30 செப்டம்பர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு திருவிழா – சில குறிப்புகள்.

                    Image result for விழாக்கள்
எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை இங்கே, விழா அமைப்பாளர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

       1.  வரவேற்பும் தங்குவதற்கு ஏற்பாடும்:

இது பற்றி தீவிரமாக சிந்திக்கப்பட்டு விழாக் குழுவினர் வழிமுறைகளை வகுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வெளியூரிலிருந்து வருபவர்கள் யார் யாருக்கு தனி அறை வேண்டும் என்பதைக் கேட்டறிந்து அந்த மாதிரி அறைகள் ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன் என்ன மாதிரி அறைகள் கிடைக்கும் என்று தெரிவிப்பது அவசியம். தவிர, புதுக்கோட்டை வந்து சேர்ந்ததும் தொடர்பு கொள்ளவேண்டிய விழா குழுவினரின் பெயரும் கைபேசி எண்ணும் கொடுத்தல் பயனுள்ளதாக இருக்கும்.

   2.   பதிவர்களின் கைப்பைகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

வெளியூர் பதிவர்கள் கொண்டு வரும் பைகளை விழா மண்டபத்தில் யாராவது வாங்கி ஒரு இடத்தில் வைத்திருந்து அவர்கள் போகும்போது திருப்பிக் கொடுக்கலாம். இல்லாவிடில் அவர்கள் அந்தப் பைகளை தங்களுடனேயே தூக்கிக்கொண்டு விழா முடிவு வரை அலையவேண்டும்.

3. உணவு ஏற்பாடுகள்.

தலை வாழை இலை போட்டு பதினெட்டு வகை பலகாரங்கள் பரிமாறுவது என்பது தமிழர் பண்பாடாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கூட்டங்களில் அந்த மாதிரி பரிமாறுவது கஷ்டமான காரியம். இப்பொழுது பஃபே முறை சகஜமாகி விட்டது. அவரவர்களுக்குத் பிடித்தமானவற்றை தேவையான அளவு வாங்கிச் சாப்பிடுவது எளிது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரே இடத்தில் உணவு வகைகளை வைத்து விட்டு எல்லோரையும் வரிசையில் போய் வாங்கவேண்டுமாறு ஏற்பாடு செய்தால் வரிசை நீண்டு நிற்க வேண்டிய நேரம் அதிகமாகும்.

இரண்டு அல்லது மூன்று இடங்களில் உணவுகளை வைத்து விட்டால் கூட்டம் பிரிந்து நெரிசலைத் தவிர்க்கலாம். இதற்கு கூடுதல் பாத்திரங்கள் தேவைப்படும். உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். காரணம் இந்த ஏற்பாட்டில் கூடுதல் பாத்திரம் மற்றும் ஆள் செலவு பிடிக்கும்.அவரை முதலிலேயே இந்த நிபந்தனைகளுக்கு தயார் செய்வது அவசியம்.

தவிர ஒப்பந்ததாரர் மூலம் உணவு ஏற்பாடு செய்திருந்தால் அவர் சொல்லியிருந்த நபர்களை விட 25 சதம் குறைவாகத்தான் உணவு கொண்டு வருவார். கடைசியில் சாப்பிடுபவர்களுக்கு உணவு இருக்காது. தவிர ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவே உணவு கொடுப்பார். இந்த நுணுக்கங்களை கவனித்து சரி செய்யவேண்டும்.
ஆங்காங்கே நாற்காலிகள் போடப்பட்டிருந்தால் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இருக்கும். தவிர பதிவர்கள் சிறு சிறு குழுக்களாக உணவு உண்டு கொண்டே பேசி மகிழவும் ஏதுவாக இருக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பஃபே முறைக்கு ஏற்ற மாதிரி உணவுகள் இருக்கவேண்டும். சாதம் தனியாகவும் சாம்பார், ரசம், தயிர் தனியாகவும் இருந்தால் அவைகளைப் பிசைந்து சாப்பிட முடியாது. ஆகவே கலந்த சாதங்களாக இருந்தால் நல்லது. கூடுமானவரை சாப்பிடுவதற்கு எளிதான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். “டிரைஉணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டியவை.

    4.   வரவுப்பதிகை:

இதை நண்பர் திரு ரமணி அவர்கள் கூறியபடி மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் ஏற்பாடு செய்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    5.   நேரம் பகிர்வு

எந்த விழாவாக இருந்தாலும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதிய உணவிற்கு முன்னால் வைத்தால்தான் சோபிக்கும். உணவு இடைவேளை 2 மணிக்கு வைத்தாலும் நல்லதுதான். அதற்குப் பிறகு நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் மக்கள் ஆழமாக கவனிக்க மாட்டார்கள். இந்த உண்மையை விழா அமைப்பாளர்கள் மனதில் கொள்ளவேண்டும். குறிப்பாக பதிவர் அறிமுகங்கள் உணவு இடைவேளைக்கு அப்புறம் இருந்தால் பதிவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை.


நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளர்கள் இந்தக் குறிப்புகளை ஏற்கெனவே அறிந்து, கடைப்பிடித்திருக்கலாம். அப்படியென்றால் சந்தோஷம். இல்லையென்றால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலலாம்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

மாலைகளும் மரியாதையும்.

                                                  Image result for Flower Decorated Indian Deities
கடவுள் விக்கிரகங்களுக்கு மாலைகளால் அலங்காரம் பண்ணுவது காலம் காலமாய் வந்த பழக்கம். ஒவ்வொரு அர்ச்சகருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. சிலர் செய்த அலங்காரத்தினால் அந்த விக்கிரகத்திற்கே அழகி கூடும். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும். அநுத மாதிரி அலங்காரம் செய்யக்கூடியவர்கள் வெகு சிலரே.

எப்படி அலங்காரம் செய்திருந்தாலும் அது ஒரு நாள் மட்டுமே. அடுத்த நாள் அதை நீக்கித்தான் ஆகவேண்டும். அப்படி நீக்கப்பட்ட அலங்காரப் பூக்களை கோயில்களில் என்ன செய்கிறார்கள் என்று நான் பார்த்ததில்லை. அனேகமாக குப்பைகளோடுதான் சேர்த்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

கடவுள் விக்கிரகங்களுக்குப் போட்ட மாலை புனிதமானது என்று கருதுகிறோம். அதில் கடவுளின் அருள் இறங்கியிருக்கிறது என்றும் நம்புகிறோம். அதனால்தான் அர்ச்சகர் பெரிய பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு இந்த சாமியின் மேல் உள்ள மாலைகளில் ஒன்றை எடுத்து அவர் கழுத்தில் போடுவார்கள்.

மாலை யாரோ வழிபாட்டுக்காகக் கொடுத்தது. அடுத்த நாள் எப்படியும் குப்பைக்குத்தான் போகப்போகிறது. அதை இன்று ஒரு மனிதனுக்குப் போட்டால் தனக்கு ஏதோ ஒரு வகையில் ஆதாயம் கிடைக்கும் என்றுதான்  அந்த அர்ச்சகர் அந்த மாலையை அவருக்குப் போடுகிறார். இது வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அந்த முக்கிய பிரமுகர் அந்த மாலை கழுத்தில் போட்ட பிறகு என்ன செய்கிறார் என்றால் அதைக் கழட்டி தன் உதவியாளரிடம் கொடுக்கிறார். அவர் அதை அந்த பிரமுகர் வந்திருக்கும் காருக்கு அணிவிக்கிறார். அடுத்த நாள் அந்த காரைத்துடைக்கும் ஆள் அதை எடுத்து குப்பையில் வீசுவார். எப்படியும் அந்த மாலை குப்பைக்குத்தான் போகப்போகிறது.

இந்த நிகழ்வில் உள்ள தாத்பரியம் ஒன்றே. அந்தப் பிரமுகர் கொஞ்சநேரம் தனக்கு ஏதோ பெரிய கௌரவம் வந்து விட்டதாக நினைக்கிளார்.  இது ஒரு பெரிய மாயை. நானும் சில சமயம் கோவில்களுக்குப் போகும்போது அந்த அர்ச்சகர் சாமியின் மேல் இருக்கும் மாலைகளில் ஒன்றைக் கழட்டி எனக்கு கொடுக்க முற்படுவார். நான் அதை மறுத்து விடுவேன்.

காரணம் அந்த மாலையை என் கழுத்தில் போடுவதால் அர்ச்கருக்கு கூட பத்து ரூபாய் காணிக்கை கிடைக்கும் என்பதைத்தவிர, எனக்கு கடவுளின் அருள் ஸ்பெஷலாக க் கிடைத்து விட்டது என்று நான் கருதுவதில்லை. தவிர முக்கியமான பிரச்சினை என்னவென்றால் என் கழுத்தில் போடப்பட்ட அந்த மாலையை அப்புறம் என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினை.

அதில் கடவுளின் அருள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது புனிதமான ஒன்று ஆகி விடுகிறது. அப்படிக் கருதும்போது அதை குப்பையில் போட்டால் கடவுளுக்கு கோபம் வந்து அந்த அருளை திருப்பி எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்ற பயம் வருகிறது. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. என் அருளை நீ இவ்வாறு அவமதிக்கிறாயா என்று ஏதாவது தண்டனை கொடுத்தாலும் கொடுக்கலாம். இந்த வம்புகளெல்லாம் வேண்டாமென்று நான் இந்த மாலை மரியாதைகளைத் தவிர்த்து விடுவேன்.

இப்போது எங்கள் ஊரில் ஒரு புது கலாச்சாரம் சில கோவில்களில் பரவி வருகிறது. ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் அந்த சாமி விக்கிரகத்திற்கு ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டி சாத்துகிறார்கள். இந்த மாலைகளையும் பூ மாலைகளைப் போல் அடுத்த நாள் குப்பையில் போடுவார்களா என்பது தெரியவில்லை. அநேகமாக அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இதே போல் மனிதர்களைக் கௌரவிக்க மேடைகளில் மாலை போடுகிறார்கள். சில சமயங்களில் மாலைகள் போறாவிட்டால் ஒருவருக்குப் போட்டதையே இன்னொருவருக்கும் போடுவது உண்டு. இந்த மாலைகளின் ஆயுள் சில மணித்துளிகளே. அவை எவ்வளவு விலை உயர்ந்த மாலைகளாயிருந்தாலும் இதை கதிதான். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அந்த மாலைகளை உடனடியாகக் குப்பைக்குப் போய்விடும். சில சமயம் அவைகளுக்கு அந்தப் பெரிய மனிதர்களின் காரை அலங்கரிக்கும் பேறு கிடைக்கலாம்.

சில சமயம் பூ மாலைகளுக்குப் பதிலாக சந்தன் மாலை அல்லது வேறு செயற்கை மாலைகளை அணிவிக்கிறார்கள். இவை பூ மாலை போல் வாடாது. அதனால் அதை வீட்டிற்கு கொண்டு போய் வைத்துக்கொள்ளலாமே என்ற ஆசை பலருக்கும் வருவதுண்டு. அப்படி வீட்டிற்கு கொண்டு போகப்படும் மாலைகளை என்ன எய்வது, எத்தனை நாள் வைத்துக்கொள்வமு என்பது பிரச்சினைகளே.

எனக்கும் என் மனைவிக்கும்  சமீபத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மாதிரி சந்தன மாலைகளை போட்டு விட்டார்கள். அவைகளின் விலை அநேகமாக ஜோடி 500 ரூபாய்க்குக் குறையாமலிருக்கும். அவைகளை வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு ஜன்னலில் மாட்டியிருக்கிறோம். நான் அல்ல, என் மனைவி மாட்டி வைத்திருக்கிறாள். எத்தனை நாளைக்கு அதை வைத்திருப்பாள் என்று தெரியவில்லை. எப்படியும் ஒரு நாள் அது குப்பைக்குப் போகவேண்டியதுதான்.


இந்த சந்தன மாலைகள் எவ்வளவு விலை உயர்ந்த தாக இருந்தாலும் அதை இன்னொரு தடவை உபயோகிக்க முடியமா? ஒருவருக்குப் போட்ட மாலையை இன்னொருவருக்கு போடக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இந்த மாலையை என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துகளைக்கூறலாம்.

இதே போல் திருமண மாலைகைள ஆற்றிலோ குளத்திலோ அல்லது வேறு நீர் நிலைகளிலோதான் போடவேண்டும் என்று ஐதிகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். பிள்ளையார்கள்க் கரைத்தே நீர் நிலைகளை எல்லாம் மாசடைந்து கிடக்கின்றன. அதன்கூட இதுவும் சேர வேண்டுமா?

இந்த சிந்தனைகள் ஏன் உதித்தன என்றால், எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைப் பார்க்கப்போக வேண்டியிருக்கிறது. அவர் எனக்கு சந்தன மாலை வாங்கி வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை வாங்கி பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து இப்போது தொங்கும் இரண்டு மாலைகளுக்குத் துணையாக அதையும் தொங்க விடலாமா அல்லது அவருக்கு நாசூக்காகச் சொல்லி இந்த விபரீத முடிவை ரத்து செய்யச்சொல்ல லாமா என்று தீவிர ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன்.

சனி, 26 செப்டம்பர், 2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

                                   Image result for போஸ்

இந்தப் பெயர் இந்தியா சுதந்திரம் வாங்கிய காலத்தில் ஒவ்வொரு இந்தியனாலும் பெருமை பொங்கப் பேசப்பட்ட ஒரு பெயர். போஸ் இந்திய சுதந்திரத்தை வாங்க ஒரு போராட்ட முறையைக் கடைப்பிடித்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இரண்டாம் உலக யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதும், பிரிட்டிஷ்காரர்கள் இந்தயாவிற்கு சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

அப்போது இருந்த இந்தியத் தலைவர்களில் மூத்தவர்கள் காந்தியும் நேருவும் ஆவார்கள். ஆனால் இந்த இருவருக்கும் போஸ் ஒரு பெரும் தலைவராக இந்தியாவிற்குள் வருவதை விரும்பவில்லை. அப்படி வந்திருந்தால் நேருவிற்கும் போஸுக்கும் யார் பெரியவர் என்பதில் ஒரு சிக்கல் உருவாகியிருக்கும்.

போஸ் இறந்து விட்டார் என்ற தகவல் வெளியானதும் இவர்கள் இருவரும் பெருத்த ஆறுதல் அடைந்திருப்பார்கள். போஸ் இறக்கவில்லை என்று பாமர மக்கள், குறிப்பாக பெங்காளிகள் நம்பினார்கள். இது வழக்கமாக பெரும் தலைவர்கள் மறையும்போது ஏற்படும் உணர்வுதான்.

அவர் இறந்து ஏறக்குறைய 80 வருடங்கள் கழித்து இப்பொழுது எதற்கு இந்தப் பிரச்சினையை தூசி தட்டி உயிர் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. நேரு, காந்தி இவர்களையே நாம் மறந்து வெகு காலம் ஆகிறது. இந்திய அரசியலில் அதிகம் அறியப்படாத போஸை இப்பொழுது யாருக்கோ ஆதாயமிருப்பதால் உயிர்ப்பித்திருக்கிறார்கள். 

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படும் நீர் வளங்கள்.

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டிக்கான கட்டுரை.

ஆசிரியர்: பழனி. கந்தசாமி

இயற்கை வளங்கள் நமக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட செல்வங்கள். இதை நாம் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர அதை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. நாம் பெற்ற அனைத்து இயற்கை செல்வங்களையும் நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே கொடுப்பதற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் அவ்வாறு செய்யத் தவறி விடுகிறோம். இது ஒரு பெரும் குற்றம். இப்படி இயற்கை வளங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் மனித இனமே அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நமது நாடு விவசாய நாடு. விவசாயத்திற்கு ஆதாரம் நீர். நீரின்றி இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் கூறிப் போனார். ஆனால் இந்த நீர் வளங்களை நாம் எவ்வளவு மோசமாகக் கையாள்கிறோம் என்று பாருங்கள்.

நாம் பெற்ற இயற்கை வளங்களில் மிக முக்கியமானது நீர் வளம். இந்த நீர்வளத்திற்கு ஆதாரம் மழையே. ஆனால் இந்த மழையின் அளவைக் குறைக்க நாம் செய்யும் செயல்களைப் பற்றி யாராவது சிந்திக்கிறோமா? மலையிலுள்ள காடுகள்தான் மழைக்கு மிக முக்கியமாகத் தேவை. மழை பெய்வதற்கும் பெய்த மழை நீரை சேமித்து வைத்து அதை ஆற்று நீராக்கி கொடுப்பதுவும் இந்த மலைக்காடுகள்தான்.

ஆனால் இன்று இந்த மலைக்காடுகளை அழித்து மரங்களை தொழிற்சாலைகளுக்கும் வீடுகளுக்கும் உபயோகப்படுத்தி மழையின் அளவைக் குறைத்து விட்டோம். இப்போது பெய்யும் மழையும் காடுகளில் சேமித்து வைக்கப்படாமல் ஒரேயடியாக சமவெளிகளில் வெள்ளமாகப் பாய்ந்து வீணாவதோடு நிற்காமல் பல சேதங்களையும் ஏற்படுத்துகிறது.

தவிர, இருக்கும் ஆறுகளையும் நாம் சரி வரப் பராமரிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பினால் நகரங்கள் பெரிதாகி விட்டன. அங்கிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களும் அதிகரித்து விட்டன. இவைகளுடன் கூட பல தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. இந்த கழிவுகளை எல்லாம் நல்ல முறையில் மேலாண்மை செய்யாமல் ஆறு, குளங்களில் விட்டு விடுகிறோம். கங்கை ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி பணம் செவழித்தும் எதிர்பார்க்கும் பலன் கிட்டுவதில்லை.

இதற்கு பல நகரங்களின் ஆட்சியாளர்களும் பொறுப்பாவார்கள். நாம் இயற்கை நமக்கு அளித்த வளத்தைப் பாழாக்குகிறோமே என்ற உணர்வு அற்றுப்போய் நகர கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுகிறார்கள்.
ஆற்று நீரை அசுத்தப்படுத்த முற்படும் ஒவ்வொருவரும் தேசத்துரோகிகள் ஆவார்கள். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் அல்லவா? பொதுச் சொத்து என்றால் மட்டும் ஏன் இந்த மாதிரி உணர்வுகள் வரவில்லை. இந்தக் கலாச்சாரம் வளராதவரை நாட்டை முன்னேற்றுவது கடினம் அல்லவா? இது மக்களின் அறியாமையா அல்லது கலாச்சாரமா என்று தெரியவில்லை. எதுவாயினும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடமை.

அடுத்த நீர் நிலை ஆதாரம் ஏரி, குளங்கள் ஆகியவை. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அந்த உபரி நீரைச் சேமித்து வைத்து மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்த நம் முன்னோர்கள் கண்டு பிடித்த அருமையான திட்டம். இந்த திட்டம் பல நூற்றாண்டு காலம் பயனுள்ளதாக செயல்பட்டு வந்தது. ஆனால் நாட்டின் ஜனத்தொகை பெருகப் பெருக மக்களின் இருப்பிடத்தேவை பெருகிக்கொண்டு வந்தது. வாழ்க்கையின் அடித்தள மக்களுக்கு இந்த ஏரி, குளங்களின் கரைகள் வசதியாகப் போயின.

ஏரி குளங்களின் கரைகளில் குடிசைகள் போட்டுக் குடியிருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இவர்களினால் உண்டாக்கப்படும் கழிவுகள் அந்த ஏரி குளங்களின் நீரில்தான் கலக்கின்றன. ஆடுமாடுகள் மற்றும் மனிதர்கள் உபயோகப்படுத்தி வந்த நிலை மாறி இந்த நீர்கள் கழிவு நீராக மாறி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது.

இது தவிர இத்தகைய ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குளத்திற்குள்ளேயே சென்று விடுகிறார்கள். மழைக் காலத்தில் குளத்திற்கு நீர் வரும்போது இவர்கள் குடிசைக்குள்ளும் நீர் வந்து விடும். அதைத் தவிர்ப்பதற்காக இவர்கள் செய்யும் காரியங்கள் சொல்லத்தகாத அக்கிரமம் ஆகும். குளத்தின் கரைகளையே உடைத்து நீர் வெளியேறும்படி செய்து விடுகிறார்கள். இதைப்போல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் வேறு யாரும் கிடையாது.

அடுத்ததாக நிலத்தடி நீர். இது நிலத்தின் கீழ் பல அடி ஆழத்தில் இருப்பதால் இதை அதிகமாக மாசு பண்ண முடிவதில்லை. ஆனால் இதை பேராசைப்பட்டு உறிஞ்சியே தீர்த்து விட்டோம். சில நூறு அடிகளுக்குள் கிடைத்துக் கொண்டிருந்த நிலத்தடி நீர் இன்று ஆயிரம் அடிகளுக்கு கீழ் போய்விட்டது.

நிலத்தடி நீர் வங்கி கணக்கு மாதிரி. நாம் எவ்வளவு பணம் போட்டிருக்கிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்க முடியும். நிலத்தடி நீரும் அப்படித்தான். மழை நீர் எவ்வளவு மண்ணிற்கு கீழ் போய் சேமிப்பாகிதோ அந்த அளவுதான் எடுக்க வேண்டும். ஆனால் மனிதனின் பேராசைக்கு அளவே இல்லை. எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சி விட்டான்.

பல இடங்களில் இப்போது நிலத்தடி நீரே இல்லை என்ற அளவிற்குப் போய்விட்டது. இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்படவேண்டும். நிலத்தின் அடியில் இருக்கும் நீர் தனி மனிதனின் உரிமையல்ல. அது சமூகத்தின் சொத்து. தன மனிதன் தனது அதிக பலத்தால் எல்லோருக்கும் பொதுவான நிலத்தடி நீரை தான் மட்டும் உறிஞ்சி விடுகிறான். இது ஏறக்குறைய அடுத்தவன் வீட்டில் கன்னம் போட்டு திருடுவதற்கு ஒப்பாகும்.

இந்த உணர்வு ஒருவருக்கும் ஏற்படுவது இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலை ஆகும். பொதுச் சொத்து என்றால் அது யாருக்கும் சொந்தமல்ல. அதை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்கிற உணர்வு மக்களிடையே இருந்து மறைந்தால்தான் ஒரு நாடு முன்னேறும். பொது சொத்து என்பது நம்முடையது. நாம் கட்டும் பல்வேறு வகையான வரிகளால் வாங்கப்பட்டது. அதைக் காப்பாற்றுவது நம் கடமை என்று உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படவேண்டும்

இம்மாதிரியான கடமை உணர்வை ஒவ்வொருவரிடத்திலும் தோற்றுவிப்பதுதான் இன்றுள்ள தலையாய பணி. இதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று ஆராய்ந்து சரியான திட்டங்கள் தீட்ட வேண்டும்.
இம்மாதிரி செயல்களை அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன் வந்து நடத்தவேண்டும். அதற்கான செயல் திட்டங்களை அரசே முன் நின்று விவாதங்கள் நடத்தி முடிவு செய்யலாம்.

நமது பள்ளிகளில் இத்தகைய சுற்றுச் சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் அவைகளைத் தடுப்பது பற்றியும் விரிவான பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். தவிர நகராட்சி அமைப்புகள், தொழிற்சாலை நிர்வாகிகள் ஆகியோருக்கும் இந்த சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையாள்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நம் சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை முதலில் தனி மனிதன் உணரவேண்டும். பிறகு அத்தகையவர்களை குழுவாகச் சேர்த்து சரியானபடி வழி நடத்தவேண்டும். இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் கொடுத்து வழி காட்டவேண்டும்.

இது மக்களின் நல வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒரு செயல் திட்டமாகும். மனித இனத்தின் எதிர்காலம் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில்தான் இணைந்திருக்கிறது. இதை அனைவரும் உணர்ந்து தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றினால்தான் இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறும்.

உறுதி மொழிகள்:

(1) இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன். 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும் உறுதிமொழி கூறுகிறேன்.

(3) இந்தப் படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல. இப்போட்டியின் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதி கூறுகிறேன். .



திங்கள், 21 செப்டம்பர், 2015

நானும்ம்ம்ம்ம்... புதுக்கோட்டை வருகிறேன்.

                                   

மதுரை பதிவர் விழாவிற்கு ரயில் பயணத்தில் ஏற்பட்ட ஒரு குளறுபடியால் போக முடியவில்லை. புதுக்கோட்டை பதிவர் திருவிழா அறிவிப்பு வெளியானவுடனேயே இரண்டு வேலைகளை உடனடியாகச் செய்தேன். ஒன்று நன்கொடை அனுப்பியது. இரண்டு ரயில் பயண டிக்கெட்டுகள் சரியானபடி திட்டமிட்டு வாங்கியது.

பழைய காலமாக இருந்தால் ஒருவருக்கு பணம் அனுப்பவேண்டுமென்றால் தபால் நிலையத்திற்குச் சென்று மணிஆர்டர் செய்யலாம். அல்லது பேங்கிற்குச் சென்று மெயில் டிரான்ஸ்பர் பண்ணலாம். அல்லது டிடி (திண்டுக்கல் தனபாலன் அல்ல) எடுத்து அனுப்பலாம். அதே போல ரயில் டிக்கட் வாங்க ரயில் நிலையத்திற்குச் சென்று வரிசையில் சில மணி நேரங்கள் நின்று டிக்கட் வாங்கவேண்டும். இந்த வேலைகள் எல்லாம் சள்ளை பிடித்த வேலைகள். நிறைய நேரமும் சிரமமும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்போதைய இணைய உலகில் இந்த இரண்டு வேலைகளையும் என் வீட்டில் என் வழக்கமான இருக்கையில் இருந்து கொண்டே அரை மணி நேரத்தில் முடித்துவிட்டேன். நவீன தொழில் நுட்பத்தின் ஆற்றல் என்னை மிகவும் அதிசயிக்க வைக்கிறது. ஆனால் இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு 81 வயது கிழவன் இந்த அளவு தொழில் நுட்பம் கற்று வைத்திருப்பதை நீங்கள் கவனிக்க மறந்து விடக்கூடாது.

11-10-2015 ஞாயிற்றுக்கிழமை பதிவர் சந்திப்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அறியாதது என்னவென்றால் எவ்வளவு பேர் திருவிழாவிற்கு வருவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள்? அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக வருவார்களா மாட்டார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க்கவேண்டும்.

திரு தமிழ் இளங்கோ சொன்ன மாதிரி பதிவர்களுக்கு வெட்கம் மிக அதிகமாக இருப்பதாக அறிகிறேன். பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பெரும்பாலானவர்கள் வெட்கப்படுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் திரு. முத்து நிலவன் பதிவர் கையேடு வெளியிட்டே தீர்வது என்ற முடிவுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, என்னைப் பல கவலைகள் இப்போது பீடித்து விட்டன. நான் முதல் நாள் சனிக்கிழமையே புறப்பட்டு திருச்சியில் பிரபல பதிவர் கோபுவிடம் சில வரவு செலவு விவகாரங்களை முடித்து விட்டு, அன்று மாலை, அதாவது சனிக்கிழமை மாலையே புதுக்கோட்டை சேர்ந்து விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் அன்று இரவு அங்கே விழா நடக்கும் கல்யாண மண்டபம் அல்லது ஏதாவது ஒரு திண்ணையில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்ளலாமா அல்லது ஏதாவது ஒரு நல்ல லாட்ஜில் தங்கிக்கொள்ளலாமா என்பதுதான். இந்தக் கவலையினால் நான் இப்போது இரவில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடிவதில்லை. புது பல் செட் வைத்துக்கொண்டு சாப்பிட முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கேட்பவர்கள் தேசத்துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதற்கு விழாக் குழுவினரின் அறிவுரைகளைக் கேட்க ஆவலாய் உள்ளேன். புதுக்கோட்டை சமஸ்தானம் விருந்தோம்பலுக்கு பெயர் போனது. அந்த வழி வந்தவர்கள் அந்தப் பண்புகளை இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். மற்ற பதிவர்களும் தங்கள் தங்கள் அறிவுரைகளைக் கூறலாம்.

 நிற்க, வேறு பல கவலைகளும் சேர்ந்து விட்டன. ஒருக்கால் நம்மை மேடையில் ஏற்றி, பேசச்சொல்லி விடுவார்களோ என்ற கவலை பெருங்கவலையாய் என்னை அலைக் கழிக்கிறது. அப்படிச் செய்யமாட்டோம் என்று எழுத்து பூர்வமாக திரு முத்துநிலவன் உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்காவிட்டால் என் பயணத்தை ரத்து செய்யலாமா என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். அநியாயமாக ஒரு மூத்த பதிவரை பதிவர் திருவிழாவிலிருந்து விலக்கி வைக்கும் பாவத்தை அவர் செய்யமாட்டார் என்று எதிர் பார்க்கிறேன்.

இது போக புதுக்கோட்டை கொசுக்களெல்லாம் இந்த பதிவர் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். புது ரத்தம் அதிக ருசியாக இருக்கும் என்றும் அதை ருசிக்க அவை காத்துக்கொண்டிருப்பதாகவும் காற்று வாக்கில் செய்திகள் வந்து என் வீட்டுக் கொசுக்கள் பேசிக்கொண்டிருந்ததை நானே என் செவிட்டுக் காதால் கேட்டேன்.இதற்கும் ஏதாவது தடுப்பு உபாயம் விழாக் கமிட்டியார் கண்டிப்பாய் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தவிர ரயில் பயணத்திற்கான வழக்கமாக வரும் கவலைகளும் சேர்ந்து கொண்டன. பிரயாணத்தின்போது என் உடமைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது என்பது வழக்கமாக வரும் கவலை. குறிப்பாக சமீபத்தில்தான் 999 ரூபாய் கொடுத்து ஒரு புது பேட்டா செருப்பு வாங்கினேன். அதை போட்டுக்கொண்டு வந்தால் யாராவது அதை தேட்டை போட்டு விட்டால் அப்புறம் பதிவர் மகாநாட்டு விருந்தை அனுபவித்து சாப்பிட முடியாதே என்ற கவலை. இதற்காக ஒரு விலை மலிவான செருப்பு ஒன்று வாங்கிக்கொள்ளலாமா என்றும் ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் நாள் இருக்கிறது. பார்ப்போம். பதிவர்களின் ஆலோசனை தேவை.

தவிர, ஒரு சில பதிவர்கள் செய்யும் துரோகத்தை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. பதிவர் சந்திப்பு என்றால் அதற்கு சில வரை முறைகள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்த பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது பதிவர்களாகிய நம் தலையாய கடமை. இதற்கு எதிராக கருத்துகள் கூறிய பதிவர்களை உடனே கழுவிலேற்ற ஆணை பிறப்பிக்கிறேன். அதாவது அசைவ உணவு வேண்டாம் என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள். இது மகா அநியாயம் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த சமயத்தில் இன்னும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விழாக் குழுவினர் இன்னும் விழா ஏற்பாடுகளைப் பற்றிய முழுத் தகவல்களையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்க்ள. ஏன் என்று தெரியவில்லை. ஒருக்கால் பாகிஸ்தான் உளவுப் படைக்குத் தெரிந்து விட்டால் ஏதேனும் சதி செய்து விழாவை நடத்த விடாமல் பண்ணி விடுவார்களோ என்ற பயம் இருக்கலாம்.

விழா நடவடிக்கைகளில் எனக்குத் தெரிய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்களை மட்டும் எனக்குத் தனியாகச் சொல்லி விட்டால் நான் அந்த ரகசியத்தை வெளியில் விடாமல் காப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

1. விழா அன்று  விழா மண்டபத்தில் காலை டிபன் உண்டா? ஏனெனில் வெளியில் காசு செலவழித்து டிபன் சாப்பிட்டு வந்த பிறகு, விழா மண்டபத்தில் இலவச டிபன் விநியோகம் நடந்து கொண்டிருந்தால் என் போன்றவர்களின் இளகிய மனது சுக்கு நூறாக உடைந்து விடும். தவிர காலை இலவச டிபனில் இட்லியும் கோழிக் குருமாவும் உண்டு என்பது தெரிந்தால் இரவு டிபன் சாப்பிடாமல் இருந்து விடலாம். அந்த செலவும் மிச்சமாகும்.

2. வெளியூரில் இருந்து வரும் பதிவர்களுக்கு அன்று இரவு வழியில் சாப்பிடுவதற்கு இட்லி, கெட்டிச் சட்னி கட்டிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த விருந்தோம்பலை ஆயுளுக்கும் பதிவர்கள் மறக்க மாட்டார்கள். ஆளுக்கு எட்டு இட்லி போதும்.

3. மதியம் விருந்து கட்டாயம் பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னைப் போன்றவர்கள் மதிய உணவிற்குப் பிறகு சிறிது கட்டையைக் கிடத்துவது பழக்கம். அதற்கு ஏதாவது ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. அப்படி ஏற்பாடு செய்திருந்தால் மதிய ஓய்வு முடிந்து எழுந்தவுடன் நாலு வெங்காய பஜ்ஜியும் (தேங்காய் சட்னி அவசியம்), ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியும் மட்டும் கொடுத்தால் போதும்.

இன்னும் ஒன்று இருக்கிறது. அதை பப்ளிக்காக சொல்ல முடியாது. அது எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம்தான். விழாக் குழுவினர் அதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே விழாக்குழுவினர் அனைத்துப் பதிவர்களின் அபிலாக்ஷைகளையும் செவ்வனே நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புதுக்கோட்டை வருகிறேன்.

திங்கள், 14 செப்டம்பர், 2015

பட்டறிவு இல்லையே, ஏன்?

                                           Image result for knowledge symbol

அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று உயிரினங்களுக்கு இயற்கையாக இருக்கும் அறிவு. இன்னொன்று அனுபவத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவு. மனிதனும் உயிரினங்களில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே. குழந்தை கொஞ்சம் பெரிதானதும் நடக்க ஆரம்பிக்கிறது. அப்படி நடக்க ஆரம்பிக்கும்போது அது நிலை தடுமாறி பல தடவை கீழே விழும். பிறகுதான் கீழே விழாமல் நடக்கப் பழகி விடுகிறது.

இதுதான் பட்டறிவு. தானே பட்டு அதாவது அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளும் அறிவு. ஒவ்வொரு அனுபவத்தையும் தானே அனுபவித்துத் தெரிந்து கொள்வது என்பது ஒரு முட்டாளின் செயல். மற்றவர்களின் அனுபவத்திலுருந்தும் பாடம் கற்றுக்கொள்பவனே புத்திசாலி. இந்த ஞானம் இயற்கையாகவே இருக்கவேண்டும்.

தன்னுடைய அனுபவத்திலிருந்தே பாடம் கற்றுக் கொள்ளாதவர்களை எதில் சேர்த்துவது? மிகவும் கஷ்டமான காரியம்தான்.

சரி, இந்த பீடிகை எல்லாம் எதற்காக என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. காது கொஞ்சம் தகறாருதான். இருந்தாலும் இதெல்லாம் துல்லியமாகக் கேட்டுவிடும்.

தினமும் செய்தித்தாள்களில் சாலை விபத்துச் செய்திகளைப்பற்றிப் படித்து   சலித்து விட்டது. வாகனம் ஓட்டும் அனைவரும் இச்செய்திகளைப் படிக்கிறார்கள். ஆனாலும் விபத்துகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொருவரும் இச்செய்திகளைப் படிக்கும்போது, தான் மிகவும் தேர்ச்சி பெற்றவன், நான் இப்படிப்பட்ட விபத்துகளை ஏற்படுத்த மாட்டேன் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்.

நான் பல நண்பர்களுக்கு இரு சக்கர, நாற்சக்கர வாகனங்கள் ஓட்டக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். கற்றல் முடிந்த பிறகு அவர்களுக்கு நான் கடைசியாகச் சொல்லும் அறிவுரை என்னவென்றால்-

நீங்கள் ஓட்டுவது ஒரு சக்தி வாய்ந்த இயந்திரம். அதை கவனமாக ஓட்டினால் அதற்கு நீங்கள் எஜமானர். கொஞ்சம் கவனம் தப்பினால் கூட அது உங்களுக்கு எஜமானனாகி விடும். அது எஜமானனாகும்போது என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. உங்கள் உயிருக்கே கூட ஆபத்து விளையலாம். ஆகவே வாகனம் ஓட்டும்போது முழுக் கவனமும் வாகனம் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டும்.

இதுதான் என் முடிவான அறிவுரையாக அமையும்.

ஆனால் இப்போது செய்தித்தாள்களில் வெளிவரும் பெரும்பான்மையான விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவினாலேயே ஏற்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம்.

சென்னையில் இருக்கும் ஒரு வியாபாரி திருநெல்வேலியில் இருக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்குப்போகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த உறவினர் இவர் மாதிரி வியாபாரத்தில் இருக்கும் எல்லோருடைய சௌகரியத்திற்காகவும் அந்த விசேஷத்தை ஞாயிற்றுக்கிழமை வைத்திருக்கிறார்.

சென்னை வியாபாரி என்ன திட்டம் போடுகிறார் என்றால், சனிக்கிழமை வியாபாரத்தை மாலை 10 மணிக்கு முடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு கிளம்பினால் காலை 7 அல்லது 8 மணிக்கு திருநெல்வேலி போய்விடலாம். அன்று பகல் முழுவதும் விசேஷ வீட்டில் இருந்து விட்டு மாலை சாப்பிட்டுவிட்டு 8 மணிக்கு கிளம்பினால் திங்கட்கிழமை விடிவதற்குள் சென்னை வந்து விடலாம். திங்கள் காலை 10 மணிக்கி வியாபாரத்தைக் கவனிக்க சென்று விடலாம்.

அவருடைய கார் ஓட்டுனர் இந்த திட்டத்தை ஆமோதிப்பார். எனக்கு இரவு நேரங்களில் கார் ஓட்டும் அனுபவம் நன்றாக இருக்கிறது. இது ஒன்றும் கஷ்டமேயில்லை. மாலையில் திருநெல்வேலி போனதும் நான் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். நிங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள். அன்று இரவு புறப்படுவதற்குள் நான் முழு ஓய்வு எடுத்துவிடுவேன். அதனால் திரும்பும்போது நான் புத்துணர்ச்சியுடன் இருப்பேன் என்று தைரியம் சொல்லி விடுவார்.

கார் முப்பது லட்சம் போட்டு வாங்கினது. ஆக்சலரேட்டரில் கால் வைத்தால் வண்டி 100 கிமீ வேகத்தில்தான் புறப்படும். நெடுஞ்சாலையில் சர்வ சாதாரணமாக 150 கிமீ வேகத்தில் போகும்.  ஓட்டுனர் நியாயமாக சனிக்கிழமை பகல் முழுவதும் ஓய்வு எடுத்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருக்கமாட்டார். பகலில் முதலாளி கொடுக்கும் சல்லரை வேலைகளைக் கவனித்திருப்பார். இரவு 11 மணிக்குப் புறப்பட்டுப் போகும்போது காலை 5 மணிக்கு அவரை அறியமால் கண் சொருகி வரும். அப்போது கொஞ்ச நேரம் நிறுத்தி ஓய்வு எடுப்பாரா? மாட்டார். அப்படி ஓய்வு எடுத்தால் அந்த ஓட்டனரின் தன்மானம் என்ன ஆவது?

ஆகவே அப்படியே சமாளித்துக்கொண்டு ஓட்டுவார். ரோடு எங்கே போகிறது, வண்டியின் வேகம் என்ன என்ற உணர்வுகள் அற்ற மோன நிலையில் அவர் அப்போது இருப்பார். வண்டியில் சவாரி செய்யும் முதலாளியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். ஓட்டுனரின் நிலைமையைப் புரிந்து கொள்ள யாரும் விழித்திருக்கமாட்டார்கள்.

ஓட்டுனர் ஒரு நொடி கண்ணயர்ந்து விட்டால் 150 கிமீ வேகத்தில் போகும் வாகனம் சுமார்  40 மீட்டர் ஓட்டுனரின் கவனமில்லாமல் சென்று விடும். அந்த தூரத்திற்குள் ஏதாவது லாரி நின்று கொண்டிருக்கலாம். அல்லது ரோடு வளைவு இருக்கலாம். இதனால் விபத்து ஏற்படலாம். 150 கிமீ வேகத்தில் போகும் ஒரு வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்யும் எவ்வளவு பேர் மிஞ்சுவார்கள் என்று யோசியுங்கள்?

ஏன் இவ்வளவு ஆபத்தை ஒவ்வொருவரும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது எனக்குப் புரியாத ஒன்று. விபத்துகள் என்பது அடுத்தவர்களுக்கு ஏற்படுவது. நமக்கு விபத்து என்றும் ஏற்படாது என்று ஒவ்வொருவரும் நினைப்பதுதான் இதற்குக் காரணம்.

வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் எந்த நொடியும் விபத்து ஏற்படலாம் என்ற ஜாக்கிரதை உணர்வுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும், எப்போது அவர் எனக்கு விபத்து ஏற்படாது என்று நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் வாகனத்திற்கு விபத்து ஏற்படும்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

சினிமா நடிகர்கள் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம்

                                          Image result for cine actor cutout worship
நான் சிறுவனாக இருந்தபோது சினிமா நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ரசிகர்களும் இருந்தார்கள். அந்தந்த ரசிகர்களுக்குப் பிடித்த நடிகர்கள் நடித்த படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது போல் தொழில் நுட்பக் கருவிகள் கண்டு பிடிக்கப்படாத காலம்.

தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பல முறை, சிலர் தினமுமே பார்த்த காலம் அது. படங்கள் நல்ல முறையில் நல்ல கம்பெனிகள் தயாரித்தன. இன்று போல் கோடிக்கணக்கில் செலவு செய்தவர்கள் யாரும் இல்லை. சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் தாங்கள் போடும் முதலீட்டுக்கும் உழைப்பிற்கும் தகுந்த லாபம் பெற்று வந்தார்கள். ஏதோ ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் தங்கள் முதலை இழந்து ஓட்டாண்டிகளானார்கள்.

குறிப்பாக சில சினிமா நடிகர்கள், தாங்கள் நடித்த படங்கள் நல்ல வசூலைத் தருவது கண்டு பேராசைப்பட்டு சினிமா எடுக்கத் துணிந்து சினிமா எடுத்தார்கள். அப்படி சினிமா எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை இழந்ததுமல்லாமல் தங்கள் மார்க்கெட்டையும் இழந்தார்கள்.

பிற்காலத்தில் நடிக்கவந்தவர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றவர்கள் இந்தத் தவறை செய்யாமல் தாங்கள் சம்பாதித்ததை நல்ல முதலீடுகளில் போட்டார்கள். அவர்களும் பிற்காலத்தில் சினிமா எடுக்கத் துணிந்தார்கள். சில படங்கள் வெற்றியளித்தன. ஆனாலும் அவர்கள் நல்ல முதலீடுகளில் பணம் போட்டிருந்ததால் சில தோல்விகள் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படியும் சிலர் தங்கள் கடைசி காலத்தில் வறுமைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இந்தக் காலகட்டம் வரையில் சினிமா நடிகர்களுக்கென்று யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ரஜனிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முன்னணிக்கு வந்து கொண்டிருந்தபோது அவர்கள் பழைய நடிகர்களை போட்டியில் வென்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோதுதான் இந்த ரசிகர் மன்றம் அமைப்பதைப் பற்றி யாரோ ஒருவரின் மூளையில் உதித்திருக்கிறது.

இவர்கள் ஆரம்பித்து வைத்த ரசிகர் மன்ற கலாச்சாரம் இன்று அருகுபோல் வேறூன்றி ஆல்போல் தழைத்து நிற்கிறது. இந்த நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் தினத்தன்று அந்தந்த தியேட்டர்களின் முதல் காட்சியின் மொத்த டிக்கெட்டுகளும் இந்த ரசிகர் மன்றங்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இந்த ரசிகர் மன்றங்கள்தான் அந்தப் படத்திற்கு தாரை தப்பட்டைகளுடன் விளம்பரம் செய்கிறார்கள். தியேட்டரில் வைத்திருக்கும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த முதல் காட்சியின்போது இவர்கள் தியேட்டருக்குள் செய்யும் அக்கிரமங்களை எழுத்தில் சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த ரசிகர் மன்றங்கள் அந்தந்த நடிகர்களின் அனுமதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வாழ்க ரசிகர் மன்றம். வாழ்க நடிகர்கள்.