செவ்வாய், 26 செப்டம்பர், 2017

21. நான் இட்லி சாப்பிட்டேன்.

                                           Image result for ஜெயலலிதா இட்லி
நான் இட்லி சாப்பிட்ட விவகாரம் இப்படி அரசியலாகும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே விடியோ எடுத்து யூட்யீபில் போட்டிருப்பேனே? தெரியாமப் போச்சே!

என் உடன் பிறவா சகோதரியைக் கேட்டால் சொல்லியிருப்பார்களே! இதற்கு ஏன் எல்லோரும் இப்படி வாக்குவாதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

என் அன்பு சகோதரன் பதிவர் கந்தசாமி இப்போதுதான் இந்திர லோகத்திற்கு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரிந்தேன். அந்த சர்வீஸ் ஆரம்பித்த பிறகு நானே ஒரு முறை தமிழ் நாட்டிற்கு வந்து உங்கள் சந்தேகங்களுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கிறேன். அது வரை கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசாமல் இருந்தால் நல்லது.

அதுவரை எல்லோரும் அமைதியாக அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டு பசியாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

20. பணக்காரர்களுடன் பழகுவது எப்படி?

                     Image result for bungalow house
மனிதர்கள் என்றுமே அவர்களின் பொருளாதார ரீதியில்தான் மதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. ஒருவனைப் பார்த்தால் இவனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை அறிந்த பிறகுதான் அவனுக்கு அவன் சொத்திற்குத் தகுந்தாற்போல் மதிப்பு கிடைக்கும்.

இப்போதுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பார்த்தால் கீழ்க்கண்ட வகுப்புகள் இருப்பது தெரியும்.

Poor (including ultra poor), Lower Middle class, Upper Middle class, Rich, Super Rich, Ultra Rich, Aristocrats, Arab Sultans, Top Rich persons like Ambani brothers.

நான்  ஏழையும் அல்லாத மிடில் கிளாசும் அல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து  தற்சமயம் ஒரு  அப்பர் மிடில் கிளாஸ் என்று சொல்லக்கூடிய தகுதியில் இருக்கிறேன். நான் வளர்ந்த சூழ்நிலை எனக்குள் பல குணாதசியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் முக்கியமானது பணக்காரர்களைக் கண்டால் ஒதுங்கிப்போவது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமானது பணக்காரர்கள் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் ஆசாமிகளைப் பிச்சைக் காரர்கள் போல் பார்க்கும் ஒரு குணம். அவர்கள் வீட்டிற்கு சும்மா பார்க்கப்போனாலே, ஏதோ பண உதவி கேட்பதற்காக  வந்திருக்கிறானோ என்று சந்தேகப்பட்டு தூரமாகவே நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.

பல பணக்காரர்களின் வீடுகளில் பல நிலைகள் இருக்கும்.

1. வாசல் கேட்.
2. முன் வாசல்
3. வராந்தா
4. உள் ஹால்

தங்கள் வீட்டிற்கு வருபவர்களை இனம் பிரித்து அந்தந்த நிலைகளில் நிறுத்தி திருப்பி அனுப்பப்   படுவார்கள். இதற்காக பல நிலைகளில் சிப்பந்திகள் இருப்பார்கள். நீங்கள் முக்கியமானவராகத் தெரிந்தால் மட்டுமே உங்களை முன் வராந்தாவில் அமர வைப்பார்கள். இதோ ஐயா வந்து விடுவார் என்ற செய்தியைச் சொல்லி விட்டு உங்களைக் காக்க வைப்பார்கள்.

அந்த வீட்டு ஐயா வந்திருப்பவர் யார், என்ன விபரம் என்று விசாரித்து விட்டு, சாவகாசமாக தன் ஒப்பனைகளை முடித்து விட்டு முன் வராந்தாவிற்கு வருவார். வந்திருப்பவர் தனக்கு முன்பே தெரிந்தவராகவும் தன் தகுதிக்கு ஈடானவராகவும் இருந்தால் உடனே வாங்க, வாங்க என்று வரவேற்று உள் ஹாலுக்கு கூட்டிக்கொண்டு போவார்.

தன்னை விட கொஞ்சம் கீழ்நிலையில் உள்ளவர் என்றால் அங்கேயே அவரை விசாரித்து விட்டு அனுப்பி விடுவார்.

இந்த நடைமுறைகளை நான் நன்கு பார்த்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு பெரும் பணக்காரர்கள் வீட்டிற்குப் போவதென்றால் வெறுப்பு.

நீங்களும் இந்த மாதிரியான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.