வெள்ளி, 26 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ்




சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாக இருந்தது என்பதை என் போன்ற வயதானவர்கள் நினைவு வைத்திருப்பார்கள். அப்போது மெட்ராஸ்ஸிலிருந்து கொழும்பு வரையிலும் நேர் ரயில் போக்குவரத்து இருந்தது. அந்த ரயிலுக்கு “போட் மெயில் என்று பெயர். அது தனுஷ்கோடி வரையில் தரைத்தண்டவாளத்தில் செல்லும். அங்கு அந்த தண்டவாளத்தை ஒட்டி ஒரு கப்பல் நிற்கும். அந்த கப்பலிலும் ரயில் தண்டவாளம் போடப்பட்டிருக்கும். இரு தண்டவாளங்களையும் இணைக்க வசதி உண்டு. அப்படி தண்டவாளங்களை இணைத்து விட்டால் ரயிலை கப்பலுக்குள் ஓட்டிச்செல்லலாம். பிறகு தண்டவாளங்களின் இணைப்பை எடுத்துவிட்டு கப்பல் கடலில் செல்லும். தலைமன்னார் சேர்ந்தவுடன் மறுபடியும் இணைப்பு கொடுத்து ரயில் தரைக்கு வரும். பிறகு அங்கிருந்து கொழும்பு செல்லும். ரயில் கப்பலில் (போட்) செல்வதால் அதற்கு போட்மெயில் என்று பெயர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திரம் வந்த பிறகும் அந்த ரயில் போட்மெயில் என்ற பெயரிலேயே தனுஷ்கோடி வரை நிறைய வருடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.



1952 ல் ஒரு நாள் போட்மெயில் தனுஷ்கோடியில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிப்போய்விட்டார்கள். காலியாக இருந்த ரயிலை பரிசோதித்த ஒரு போலீஸ்காரர் ஒரு கம்பார்ட்மென்டில் ஒரு பெரிய டிரங்க் பெட்டி இருப்பதைப்பார்த்தார். யாரோ பயணி மறந்து விட்டுவிட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது என்று பிளாட்பாரம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். அப்படி யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்பவும் வந்து பெட்டியை அருகில் சென்று பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. பெட்டியில் இருந்து ரத்தம் கசிந்து ஓரத்தில் தேங்கி இருந்தது.

உடனே பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி எல்லோரும் வந்துவிட்டார்கள். பெட்டி மிகுந்த கனமாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. நான்கு பேர் சேர்ந்து பெட்டியை பிளாட்பாரத்தில் இறக்கி பூட்டை உடைத்து பெட்டியைத் திறந்தால் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. உள்ளே ஒரு தலையில்லாத ஒரு ஆணின் உடல். கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு பெட்டியில் பேக் செய்யப்பட்டிருந்தது. உடலில் எந்த உடையும் இல்லை. உடனே தனுஷ்கோடியே அல்லோல கல்லோலப் பட்டது.

சென்னைக்கு தந்தி போயிற்று. டிரங்க்பெட்டி எந்த ஸ்டேஷனில் ஏற்றப்பட்டது என்பது உடனே தெரியவில்லை. மெட்ராஸ் போலீஸ் உடனே சுறுசுறுப்பாக எக்மோர் ஸ்டேஷனில் விசாரித்ததில் ஒரு போர்டர் அந்த மாதிரி பெட்டியை ஒருவர் கொண்டு வந்தார். நான்தான் அதை இன்ன கம்பார்ட்மென்டில் ஏற்றினேன். அதற்குப்பிறகு நான் வேறு கூலி பார்க்கப்போய்விட்டேன் என்று சொன்னார். உடனே பெட்டியையும் உடலையும் தகுந்த முறையில் பக்குவப்படுத்தி மெட்ராஸ் கொண்டுவரவும் என்று தனுஷ்கோடிக்கு தந்தி போயிற்று.

அந்தக்காலத்தில் இந்த மாதிரி கொலைகள் நடப்பது மிகவும் அபூர்வம். இந்த செய்தி உடனே காட்டுத்தீ போல தமிழகமெங்கும் பரவிவிட்டது.
இரண்டு நாள் கழித்து ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்ட மனிதத்தலை பேப்பரெல்லாம் கிழிந்து போய் சாந்தோம் பீச்சில் ஒதுங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. அதை வைத்து கொலை செய்யப்பட்டது யார் என்ற துப்பு துலங்கியது. இறந்தவர் “ஆளவந்தார் என்னும் நபர். சைனாபஜாரில் ஜெம் அண்ட் கோ என்னும் பேனாக்கடையில் சேல்ஸ்மேனாகப் பணியாற்றியவர் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.







கொலைசெய்யப்பட்ட ஆள் யார் என்பது தெரிந்துவிட்டால் கொலையாளியைக்கண்டு பிடிக்க சிரமப்படவேண்டியதில்லை அல்லவா? இரண்டு நாளில் துப்பு துலங்கிவிட்டது. கொலைக்கான காரணம் இன்றைய சுழ்நிலையில் மிக சாதாரணமானது. இந்தக்காரணத்தினால் இன்று சராசரியாக தமிழ்நாட்டில் தினம் இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால் அன்றைக்கு இது மிகவும் அதிசயமாகப்பேசப்பட்டது. அந்தக்காரணம் என்னவென்று நாளை பார்க்கலாமா?