திங்கள், 11 அக்டோபர், 2010

பத்ரிநாதரின் முதல் தரிசனம்



ரூமில் காப்பி வைத்துக் குடித்தவுடன் நேரம் இருந்ததால் கோவிலுக்குச் சென்றுவரலாம் என்று புறப்பட்டோம். நாங்கள் தங்குமிடத்திலிருந்து கோவில் சுமார் அரைக் கிலோ தூரம்தான் இருக்கும். நடந்தே போகலாம் என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம். மாலை ஐந்தரை மணிதான் இருக்கும். ஆனால் குளிர் நடுங்க வைத்தது. பக்கம்தானே, சீக்கிரம் போய்வந்து விடலாம் என்று போனோம். கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு நதி ஓடுகின்றது. மந்தாகினி என்று பெயர். கங்கை நதியின் ஒரு உபநதி.

கோவில் பார்ப்பதற்கு கொஞ்சம் பரவாயில்லை. நல்ல பெயின்ட் அடித்திருந்தார்கள். தமிழ் நாட்டு சிறபக்கலை சில இடங்களில் தெரிந்தது. கோவில் ஒரு மலைச்சரிவில் அமைத்திருக்கிறார்கள். ஆகவே நிறைய படிகள் ஏற வேண்டியிருந்தது. கோவிலில் அதிகமாகக் கூட்டம் இல்லை. உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தோம். மொத்தம் ஐந்து சாமிகள் இருந்தன. நடுவில் பத்ரிநாதர். ஒரு புரம் லக்ஷ்மி, இன்னொரு புரம் கிருஷ்ணர், அப்புறம் மற்ற இரண்டு சாமிகளயும் அடையாளம் தெரியவில்லை. நம் ஊர் மாதிரி பூஜைகள் காணோம். எல்லா சாமிகளையும் ஜிகு ஜிகுவென்று கலர் ஜிகினாத் துணிகளினால் அலங்கரித்திருந்தார்கள். ஒரு ஐந்து நிமிடம் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தோம்.

நேரம் ஆக ஆக குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கதல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 12000 அடி உயரத்தில் பத்ரிநாத் இருப்பதால் காற்றின் அழுத்தம் குறைவு. அதனால் உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காத்தால் உடல் சோர்வும் மூச்சுத்திணறலும் உண்டாகின்றன. என் தங்கைக்கு நடக்க முடியவில்லை என்று உட்கார்ந்து விட்டாள். இரண்டு பேர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கூட்டிவந்து சூடாக ஒரு டீ வாங்கி குடிக்க வைத்த பின்பே அவளால் ஓரளவிற்கு நடக்க முடிந்தது. ஆஸ்த்மா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பத்ரிநாத் போனால் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். வாங்கி வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதை எவ்வாறு உபயோகிப்பது என்றும் கடைக்காரர்களிடமே கேட்டுத்தெரிந்து கொள்வதும் அவசியம்.


லாட்ஜுக்கு முன்பாக இருந்த ஒரு ஓட்டலில் ஆளுக்கு ஒரு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு ரூமுக்குப்போய் ரஜாயைப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டோம். ரஜாயைப் போர்த்திக் கொண்டதால் குளிர் தெரியவில்லை.

தொடரும்